அவையை அலங்கரித்து அமர்ந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களே! ஆர்வமுடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அன்பு மகளிரே! ஆன்றோரே, சான்றோரே! உங்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தினை உரித்தாக்கிக் கொண்டு எனது உரையைத் தொடங்குகிறேன்!
“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்!” கொன்றை வேந்தன் நூலில் தமிழ் பெரும்புலவர் ஒளவையார் பாடிய இவ்வரிகளே இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு!
பண்டைய தமிழகம் கல்வியைக் கண்ணெனக் கண்டது. அவ்வையாரைப் போலவே வெள்ளிவீதியார், வெண்ணிக்குயத்தியார், காக்கைப்பாடினியார், ஆண்டாள், அள்ளூர் நன்முல்லையார் போன்ற எண்ணற்றக் கவிதாயினிகளால் வண்ணத்தமிழ் வனப்பும், செழிப்பும் கொண்டது.
காலப்போக்கில் ஆரியர்களின் வரவால், மூடநம்பிக்கைகளில் முடங்கிப்போன நம் சமூகத்தில் பெண்களுக்கான கல்வி உரிமை மறுக்கப்பட்டது. “பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற காலம் போய், “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்ற மடமைத் தனத்திற்குள் இவுலகம் தள்ளப்பட்டது.
கல்வியைக் கண்ணுக்கு ஒப்பிட்டார் அவ்வைப்பாட்டி. சூழ்ச்சியினால் கல்வியைக் கைவிட்ட நம் சமூகம் தன் அறிவுக் கண்ணை இழந்து அடிமைத்தனத்துக்குள் அகப்பட்டுக் கொண்டது.
அரசியல் அடிமைத்தனம்,
ஆன்மீக அடிமைத்தனம்,
சாதிய அடிமைத்தனம்,
சடங்குகளின் அடிமைத்தனம்,
என்று கல்விச் சூரியனை இழந்த நம் சமூகத்தினை இருளின் சங்கிலிகள் சூழ்ந்து கொண்டன. பசியிலும், பஞ்சத்திலும் நாம் வீழ்ந்ததை விட, படிப்பின்றி நாம் வீழ்ந்ததே அதிகம் என்பதை உணர்ந்துகொண்ட விடிவெள்ளிகள் நம்மிடையே தோன்றினர்.
தமிழ்த்தாத்தா உ.வே. சுவாமிநாத அய்யர், மறைமலை அடிகள், முத்துலட்சுமி அம்மையார், தந்தை பெரியார், காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி என்று எத்தனையோ விடிவெள்ளிகள் நம் இருண்ட வானத்தை வெளுக்கச் செய்தனர்.
கால்டுவெல், ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்ற இறைப்பணியாளர்கள் இச்சமூகத்தின் அறிவுப் புதையலைத் கண்டெடுத்து அகில உலகமும் அறியச் செய்த அரும்பணியை ஆற்றினர்.
ஆண்-பெண் ஏற்றத்தாழ்வுகளை, சாதி, மத தீண்டாமைக் கொடுமைகளை, போக்குவரத்து, பொருளாதாரத் தடைகளை, இந்தி ஆதிக்க அரசியல் சூழ்ச்சிகளைக் கடந்து நாம் இன்று கல்வி வளர்ச்சியில் எட்டியிருக்கும் சாதனைகள் சாதாரணமானதல்ல!
எண்ணும் எழுத்தும் இயக்கம், இல்லம் தேடிக்கல்வி, பேரா. அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், உலகம் உங்கள் கையில், புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் என்று எத்தனையோ அருமையானத் திட்டங்களின் மூலமாக தமிழ்நாட்டினைக் கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்ற நம் அரசு எடுத்துவரும் முயற்சிகள் இந்தியாவிற்கே முன்உதாரணமாக இருப்பதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
கோயில் இல்லாத ஊரிலே குடியிருக்க வேண்டாம் என்பது பழமொழி.
“கூகுள் இல்லா ஊரிலே குடியிருக்க முடியாது” என்பது புதுமொழி. இணையதள உலகை அசைக்க முடியாத உச்ச நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை போன்ற எத்தனையோ தமிழர்கள் உலகெங்கும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு மிகவும் அடிப்படையானக் காரணம் எண்ணையும், எழுத்தையும் அவர்கள் கண்ணெனக் கொண்டது தான்.
இன்றும் தமிழுக்கு எதிராக, தமிழ்நாட்டிற்கு எதிராக எத்தனையோ சூழ்ச்சிகளை முயற்சித்துப் பார்க்கிறார்கள். இந்திக்கும், சமஸ்கிருதத்திற்கும் செலவிடப்படும் தொகையில் பத்தில் ஒரு பங்கைக் கூட தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒதுக்க மறுக்கிறார்கள். இங்கும் சிலர் “ஆடு, மாடு மேயுங்கள்! அரசு வேலை தருகிறேன்” என்று கல்வி வளர்ச்சியைத் தடுக்கும் அடிப்படைவாதக் கூட்டத்திற்கு கொடிபிடிக்கும் எட்டப்பன் வேலை பார்க்கிறார்கள்.
பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையில் நாட்டிலேயே முதல் மாநிலமாக நாம் இருக்கின்றோம். இந்நிலை இன்னும் தொடர வேண்டும். கல்வி என்னும் ஆயுதமேந்தி, இவ்வுலகை ஆளும் நல்ல தலைவர்கள் நம் மண்ணிலே உருவாக வேண்டும்.
கல்வியின் பொறுப்பை அரசின் கைகளில் மட்டுமே ஒப்படைக்காமல் நம் ஊர்களில் இருக்கும் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கவனிக்கவும், உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு, அவற்றை உடனே சரிசெய்யவும் நமது பங்களிப்பைத் தர வேண்டும்.
வளமான எதிர்காலம் தரமானக் கல்வியால் மட்டுமே உருவாகும் என்று கூறி அமர்கிறேன்!
நன்றி வணக்கம்!


.jpg)

