சனி, 7 பிப்ரவரி, 2015

சட்டமும் சமூகமும் (Law and Society)

சட்டமும் சமூகமும்

சட்டங்கள் என்றால் என்ன? 

சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட சமூகத்தின், அல்லது நாட்டின் குடிமக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்கும் வகையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்த விதிமுறைகளை யாரேனும் மீறும் போது அங்கு ஏற்பட்டிருக்கும்  சமனற்றத் தன்மையானது தண்டனைச் சட்டங்களின் மூலம் சமன் செய்யப்படுகிறது. ஆகவே சட்டங்களும், தண்டனைகளும் சமூகத்தின் சுமூகமான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். இந்த சட்டங்களினால் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சரி சமம் என்பது தௌ;ள தெளிவாவதோடு, அனைவரின் சட்டத்திற்குட்பட்ட சுதந்திரமும், உரிமைகளும் நிச்சயமாக உறுதி செய்யப்படுகிறது.

சட்டங்களின் தேவைதான் என்ன?

ஒரு கட்டடம் கட்டத் தொடங்குவதற்கு முன்பாக வரையப்படும் கட்டுமான வரைபடத்தைப் போன்றதே ஒரு சமூகத்திற்காக எழுதப்படும் சட்டங்களும். கட்டுமான வரைபடத்தினால் வரும் பயன்பாடு என்ன? அது கட்டட வேலையை எளிதாக்குகிறது. விரைவாக வேலை நடைபெற உதவுகிறது. ஏதேனும் பிழைகள் எற்படுமானால் வரைபடத்தின் மூலம் சரிசெய்வதும் எளிதாகிறது. மொத்தத்தில் கட்டடம் நாம் நினைத்தது போலவே அழகாகவும், வலிமையானதுமாக மாறுகிறது. இதைப்போன்றதுதான் சமூகத்திற்கும், சட்டங்களுக்குமான தொடர்பும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு, அனைவரது பிரதிநிதித்துவ பங்கேற்;போடு ஒரு சமூகத்திற்கானச் சட்டமானது எழுதப்படுகிறது. சில சட்டங்களின் தேவைகள் காலப்போக்கில் மாறும் போது, மீண்டும் அதே பிரதிநிதித்துவ பங்கேற்போடு இச்சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதும் அவசியமானதே. முக்கியமானது என்னவென்றால் சமூகத்தின் அழகிற்கும், நிலைத்தத் தன்மைக்கும் அடிப்படையானது, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டங்களை மதித்து அதன்படி நடப்பதுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

நாம் இந்தியர்கள் என்பதற்காக பெருமைப்படத்தக்க பலவற்றிலும் மிகவும் முக்கியமானதும், முதன்மையானதும் நமது அரசியலமைப்புச்சட்டம் ஆகும். இந்தியா என்ற குடியரசு இந்த அரசியல் அமைப்புச்சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்ட 26 சனவரி 1950 அன்றுதான் உருவானது. இந்தியக் குடியரசின் ஆணிவேராக இருப்பது நமது அரசியலமைப்புச் சட்டமே ஆகும். உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் தான் மிகவும் பெரியதாகும். இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்வேறு நாடுகளிருந்து பெறப்பட்டச் சட்டங்கள், இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மைக்கு ஏற்றதாக மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நமது அரசியலமைப்புச் சட்டமானது பிறநாட்டுச் சட்டங்களில் வெறும் தழுவல் என்று சொல்லிவிட முடியாது. வேறு எந்த நாட்டுச் சட்டங்களையும் விட, தனிச் சிறப்பும், தனி ஆளுமையும் கொண்டதே நமது அரசியலமைப்புச் சட்டமாகும். ஆயிரமாயிரம் மொழிகளையும், சமயங்களையும், இனங்களையும், கலைகளையும், கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்ளும், மதிக்கும், அரவணைக்கும், வளர்த்தெடுக்கும், மிகவும் நுட்பமானப் பணியை 64 ஆண்டுகளாக சுணக்கமின்றி செய்துவருவதிலிருந்தே அதன் சீரியச் சிறப்பானது புலனாகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்க ஜவர்கர்லால் நேரு, அம்தே;கர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல் போன்ற மாபெரும் தலைவர்கள் உட்பட 389 உறுப்பினர்களுடன் டிசம்பர் 9, 1946 அன்று உருவானது இந்;திய அரசியல் நிர்ணயக்குழு. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 299 ஆக மாறியது.  இவர்கள் 13 குழுக்களாகப் பிரிந்து சட்டங்களை உருவாக்கும் பணியினைச் செய்தனர். இந்தக் குழுக்களின் பங்களிப்புகளையெல்லாம் தொகுத்து ஓர் சட்ட வரைவினைத் தயார் செய்யும் மாபெரும் பொறுப்பானது டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான ஏழுபேர் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது இரவு, பகலான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும், இந்தியாவின் பன்மைத் தன்மைக்குச் சிறிதும் பாதிப்பில்லாமல், மாறாக அவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவானது 1948 சனவரியிலேயே வெளியிடப்பட்டது. எட்டுமாதங்கள் இவை மக்களின் பொது விவாதத்திற்கு விடப்பட்டது. மாநிலங்களின் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தகுந்த திருத்தங்களோடு 1949, நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் கையெழுத்திடப்பட்டது. இந்த சட்டத் தொகுப்பே 1950, சனவரி 26 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றளவும் இந்தியக் குடியரசை, மக்களாட்சி முறையில் நிலைநிறுத்தி வருகிறது.

நடைமுறையில் நமது சட்டம்

இதுவரையிலும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டங்களின் தனிச் சிறப்புகளைப் பார்த்தோம். இருப்பினும் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் எந்த அளவு மக்களால் மதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அந்தச் சட்டங்களின் பலனை அனைவரும் அனுபவிக்க முடியும். சட்டம் ஒன்று - .சமூகம் வேறொன்று என்று எந்த சமூகம் இருக்குமோ அங்கு நீதியை நிலைநாட்டுவதில் நாம் பல்வேறு சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உலகின் எத்தனையோ நாடுகளை விட இந்த விசயத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய வகையில் பலவீனமானமாக இருக்கும் ஓர் நாடு நம் பாரத நாடு. இத்தகைய சட்டத்திற்கும், சமூக பழக்கவழக்கங்களுக்குமான முரண்பாடுகள்தான் நம் இந்தியா ஒரு அடி முன்னேறினால் அதனை ஒன்பது அடி பின்னோக்கி இழுக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய முரண்பாடுகளை முன்னின்று களைய வேண்டியது காவல் துறை, நீதித்துறை, மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் அங்கிருப்போரும் இந்த சமூகத்தின் அமைப்புகளிலிருந்தே செல்வதால் அங்கு இத்தகைய முரண்பாடுகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லை. சாலைவிதிகள் பாதசாரிகளுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டுமெனச் சொல்கிறது. ஆனால் வலியவன் வாழ்வான் என்பதுதான் நடைமுறைச் சட்டமாக இருக்கிறது. பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் தண்டனைக்குரியக் குற்றச் செயல் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பதினெட்டு ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலசி ஆராயப்பட்டு , குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் ஒருவர் சிறைசெல்லும் போது பொதுச் சொத்துக்களை அரசே முன்னின்று அடித்து நொறுக்குகிறது. நீதிபதியைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டிகள் என்ன? தீர்மானங்கள் என்ன? சட்டம் ஆட்சி செய்யும் அளவிற்கு நாங்கள் இன்னும் பண்படவில்லை. தனிநபர் அதிகாரமும், காழ்ப்புணர்வுகளும், வெறிச் செயல்களுமே எங்களை ஆட்சிசெய்கின்றது என்று பிறர் நம்மை எள்ளி நகைக்கும் வகையில் பிரகடனப்படுத்தியது அந்ந அறுவறுக்கத் தக்கச் செயல்கள். இன்னும் பொது இடங்களை அசுத்தம் செய்யக் கூடாது என்ற சட்டமானது நமது இந்திய மனங்களில் எழுதப்படவில்லை என்பது நமது மிகப்பெரிய அவமானம். நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுக்க எத்தனையோ சட்டங்களும், அவற்றைக் கண்காணிக்க மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் இருப்பினும் லஞ்சத்தினால் வரையறைகள் தாராளமாக மீறப்படுகின்றன. சாலைகளில் ஒலிமாசுக்கும், புகை மாசுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. போக்குவரத்து காவலர்கள் வரவு செலவு பணியாளர்களாகவேப் பார்க்கப்படுவதனால் எளிதாக ஐம்பதுக்கும், நூறுக்கும் விதிகளை விற்றுவிடுகிறார்கள். திருமணம் செய்வது இருபத்தியொரு வயது நிரம்பிய தனி நபரின் உரிமை. ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலும், கட்டாயத் தலையீடும் இல்லால் இங்கு எந்தத் திருமணமும் நடைபெறுவதில்லை. தீண்டாமை தண்டனைக்குரியக் குற்றம். ஆனால் வெகு சாதாரணமாக இங்கு பொது வாழ்வில் சாதி பேதம் பார்;க்கப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகள் அநீதியானது. நான் வெளிப்படையாக சட்டத்தின் படிதான்; வாழ்வேன் என்று சாலைப் பக்கம் வந்தீர்கள் என்றால் 'சாவுகிராக்கி' என்ற பட்டப்பெயரோடுதான் திரும்பிச் செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான காரியம் இத்தகைய சமூகங்களில் வாழ்வது. எழுதப்பட்டச் சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையானது மீண்டும் மீண்டும் தகர்த்தெரியப்படும் போது அதனை நம்பி செயலில் இறங்குவது உயிருக்கே உலை வைப்பதாகப் போய்விடும். இருப்பினும் சட்டத்திற்கும், சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கும் இருக்கும் இடைவெளியை உடைத்து யாரேனும் ஒருசிலர் மட்டும் வாழ முற்பட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்களாகவோ, அல்லது தீவிரவாதிகளாகவே கருதப்படுகிறார்கள்.

இவ்வாறு பொதுவாழ்வில் சட்டங்களையும், அவற்றின் சமூகப் பங்களிப்பையும் மட்டும் பேசுவது எளிதானதுதான். ஆனால் நமது செயல்படு தளங்களில் நாம் எந்த அளவிற்கு முன்மாதிரியாக சட்டங்களை மதிக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவேத் தொக்கி நிற்கிறது. இன்னும் அதிகமாக சட்ட விழிப்புணர்வுகளை பாமர மக்களின் பார்வைக்குக் கொண்டு சேர்ப்பது இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகவே கருதுகிறேன். சட்டங்கள் இதயத்தில் எழுதப்பட்டு, இயல்பான பழக்கவழக்கமாக மாறும் போதுதான் நம் நாடு பாரத நாடு பண்பட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த விசயத்தில் மேலை நாடுகளை நாம் மிகவும் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று இந்தியாவில் விவாதிக்கப்படும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் தேவைகளையும், விளைவுகளையும் பற்றி இன்னும் கொஞ்சம் சூடாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். நன்றி.

திங்கள், 22 டிசம்பர், 2014

உறவுகள் நிச்சயம் உருவமற்று இருப்பதில்லை (Let's Love and Let's Live)


வாக்கு மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார்  (யோவான் 1:14)

உறவுகள் தான் நமது உலகை வடிவமைக்கின்றன. நல்ல உறவுகள் இருப்பின் நமது உலகம் நல்ல உலகம். பணமும், அதிகாரமும் தராத பாதுகாப்பையும், வாழ்வின் மீதான நம்பிக்கையையும்  மனித உறவுகள் மட்டுமே தர முடியும். இலக்கற்ற பயணங்கள் நம்மை எங்கும் கொண்டு சேர்ப்பதில்லை என்பது தெரிந்தும் ஏதோ ஒன்றை நோக்கி நாம் ஓடுகிறோம். முகம் தெரியாத முகநூலில் புகைப்படங்களோடு நம்மில் பலர் காட்டும் ஆர்வம் தான் என்ன? இணையத்தின் முடிவற்ற பதிவுகளிலோ, தொலைக்காட்சியின் நாடகக் கண்ணீரிலோ, பழைய பாடல்களிலோ, கொடிய குடியிலோ உறங்குவதற்குத் தேவையானக் களைப்பினைச் செயற்கையாக உருவாக்கி இனி முடியாது எனும் பட்சத்தில் பதற்றத்தோடோ படுக்கைக்குச் சுமையாகி ஓய்வின்றி மகிழ்வின்றி, அழகின்றி விடியலாமா நம் அதிகாலை.?

உறவுகள் நிச்சயம் உருவமற்று இருப்பதில்லை. முகவரியற்று இருந்தாலும் முகமற்று ஒருபோதும் இருப்பதில்லை. பார்வை எல்லைகளுக்குப்பால் இருப்பவர்களிடம் காட்டும் ஆர்வத்தில் சிறிதளவையேனும், இடையறாத கவன ஈர்ப்புகளால் உங்களையே சுற்றிவரும் சதையும், இரத்தமுமான மனிதர்களிடம் காட்டமுடியவில்லையென்றால் உடனடியாக ஒருநாள் விடுமறை எடுத்து யோசிப்போமா?

நெடுங்காலமாக நாம் எதிர்கொள்ளாது புறக்கணித்த நம்  மனசாட்சி களைப்பாகி உணர்விழந்து கிடக்கிறது. வலுக்கட்டாயமாக உசுப்பி விட்டு அதன் கேள்விகளை எதிர்கொள்வோம். எத்தனை பேரை அநியாயமாகப் புறக்கணித்து விட்டோம். நமது உருவத்தை அவ்வளவு பெரிதாக்கிக் கொள்வதில் தான் உறவுகளுக்கான இடத்தையும் நம்மை வைத்தே அடைத்துக் கொள்கிறோம். எதார்த்தங்களை நேர்மையாக எதிர்கொள்ள அஞ்சுவதால் எதார்த்தங்களையெல்லாம் மூடி மறைக்கும் ஒரு மிகப் பெரிய பொய்யான உருவத்தைத் தூக்கி சுமந்து கொண்டிருக்கிறோம். நிஜத்தில் நாம் எல்லாம் மிகவும் எளிய மனிதர்கள். அதனால் தான் கடவுள் தாம் இருப்பது போலல்லாமல் நாம் இருப்பது போல் வந்தார். பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போலவே இருந்தார். ஆனால் நாம்தாம் நம்மைப் போல இருப்பதற்கு அஞ்சுகிறோம்.

எடுத்த விடுமுறையை வீணாக்கி விடாமல் அழுதேனும் கரைத்து விடுவோம் கல்லாகிப் போன இதயத்தை. நிறைய வேண்டாம், ஒரு சிறிய புன்னகை போதும். இந்த உலகத்தின் மகிழ்ச்சியில் நீங்கள் பங்கெடுத்த பெருமிதம் கொள்ளலாம். சிலரது நாளை அற்புதமாக்கலாம். உங்கள் குழந்தைக்கு ஓர் அழுத்தமான முத்தத்தைக் கடைசியாக எப்பொழுது கொடுத்தீர்கள்?

தொடுதல் ஒரு அற்புதமான வரம். அதிலும் அழுத்தமான தொடுதலும், அரவணைப்பும் வாழ்வில் இன்னும் ஒருபடி நாம் மேலே செல்லமுடியும் என்பதற்கான உந்து சக்தியைத் தரக்கூடியது. அதனால்தான் விளையாட்டுகளில் வீரர்கள் தோற்றாலும் கட்டிப்பிடித்துக் கொள்கிறார்கள். வென்றாலும் தழுவிக்கொள்கிறார்கள். கரங்கள் இணையும் போது பிறக்கின்ற சக்தி அணுக்கள் பிரியும் போது தோன்றும் சக்தியை விட பன்மடங்கு பலமானது. உலகிலேயே அதிகமான சகோதரனும், சகோதரியும் உள்ள நமது நாட்டில் இந்த தொடுதல் சக்தியை யாரும் பயன்படுத்துவதே இல்லை. உளப்பூர்வமான தொடுதல் மேற்கத்திய நாடுகளோடு ஒப்பிடுகையில் மிகமிகக் குறைவு. ஒரே திசையிலான காந்தங்களைப் போல நாம் விலகியே பழகுகிறோம். சாதி, தீண்டாமை, தீட்டு போன்ற மடத்தனங்களிலிலிருந்து நாம் மீண்டு வந்தாலும் விடாது கறுப்பு என்பது போல தொடுதல் பாவம் என்ற ஆதிநோய் நம்மைப் பீடித்திருக்கிறது. அதனால் தான் காமத்திற்காக மட்டுமே தொடுகிறான். இல்லையென்றால் கற்பழிப்பிற்காகத் தொடுகிறான். நட்பாகத் தழுவுதல், குழந்தைகளாகக் கட்டிப்பிடித்தல் போன்றவற்றில்தான் நாம் முழுமையாக வளர்கிறோம் என்று நினைக்கிறேன். தொடுதல் மிகவும் இயல்பானது. அதற்காக நாம் வலிந்து எதுவும் செய்யத் தேவையில்லை. நல்ல உதாரணம் வெற்றிக்களிப்பில் நம்மை அறியாமல் கட்டிப் புரள்கிறோமே. நம் ஊரில் பூனைக் குட்டிகள் கூட தொட்டுவிளையாடுகின்றன. பொறாமையாக இல்லையா நமக்கு? ஒழுங்கான தொடுதல் இல்லாமல் போனதால்தான் தெருவில் முத்தப் போராட்டங்களெல்லாம் நடக்க ஆரம்பிக்கின்றன. மூட நம்பிக்கைகள் இல்லையென்றால் முத்தப் போராட்டங்களுக்கானத் தேவையே இருந்திருக்காது. அன்றாட வாழ்க்கையில் அதிகமாகத் தொட்டுப்பழகுபோம். பழகியபின் அது இயல்பாக நிகழும்.

கடவுள் மனிதரானார். நம்மிடையே குடிகொண்டார். எல்லோரையும் அவர் கட்டித் தழுவினார். யாவரும் அவரைத் தொடுவதற்கு அவர் அனுமதித்தார். தம்மைத்  தொட்ட இரத்தப் போக்கினால் அவதியுற்றப் பெண்ணிற்கு குணமளித்தார். இறந்து போன மனிதர்களையும் தம் தொடுதலினால் உயிர்ப்பித்தார். பார்வை கொடுத்தார். கேட்கச் செய்தார். மாற்றுத்திறனாளி ஒருவரை தம் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நடக்கச் செய்தார் எல்லாம் தொடுதலின் அற்புதங்கள். இதை ஏன் நாம் நம் சகோதர சகோதரிகளுக்குத் தர மறுக்கிறோம். அல்லது நாமே ஏன் இந்த அற்புதங்களைப் பெற்றுக் கொள்ள தயங்குகிறோம்.?

முதலில் உங்கள் நுரையீரலின் மொட்டை மாடிக்கு மட்டும் மூச்சுவிடுவதை விட்டு  இன்னும் கொஞ்சம் ஆழமாக தரைதளம் வரையிலும் காற்று புக அனுமதியுங்கள். வீணாக்கியவை போகட்டும். இனிவரும் காலம் வாழும் காலமாகட்டும். மலையிலிருந்து விழுதல், தீயைத் தின்னுதல், பல்லிடுக்கில் பாம்பை விடுதல், போன்ற வாழ்விற்கு அப்பாற்பட்ட சாதனைகளில் மிஞ்சுவது எதுவுமில்லை. உண்மையில் அதுவும்ஏதோ ஒரு குறைபாடுதான். நிறைவோடு வாழ்தலே சாதனைதான் என்பதால்வாழ்வோம்;
 அழகான உறவுகளால் நம் உலகை  அணி செய்வோம். வட்ட முகத்தில் பொட்டாக ஒரு மனைவி, கருவிழியாய் குழந்தைகள், மூக்குத்தி, காதணி, முத்து மாலை, ஐம்பொன் வளையல், வெள்ளிக் கொலுசு என்று உங்கள் உறவுகளை எப்போதும் அதே புதுமையுடனும், அதே அழகுடனும் பராமரித்து பாதுகாப்போம்.  வாழ்தல் ஒருமுறைதான் என்பதால் அழகாக வாழ்வோம்!

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

அன்பற்ற அன்பு மொழிகள் (Loving Words without Love??)

அன்பற்ற அன்பு மொழிகள்

'உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்' மத்தேயு 12;:37

'வார்த்தை' என்ற வார்த்தையைப் பற்றி வார்த்தையின் இறைவன் ஓர் அற்புதமானக் கருத்தைதத் தம் சீடர்களுக்கு முன்வைக்கிறார். வெல்லப்பட்ட நாட்டிற்கு  வென்றவன் பொறுப்பு. சொல்லப்பட்ட வார்த்தைக்கு சொன்னவன் பொறுப்பு. நமது சொற்களை நாம் அறிந்து, ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது நமது நலமான வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதைச் சற்று சிந்திப்போமா?

தவறான அல்லது தேவையற்ற வார்த்தைப் பிரயோகம் என்பதை இரு சூழ்நி;லைகளில் நாம் பயன்படுத்தக் கூடும். முதலாவது ஒரு செல்லலைச் சொல்லிவிட்டு அய்யோ இக்கடுஞ்சொல்லை சொல்லிவிட்டேனே என்று வருந்தியிருப்போம். இரண்டாவது உண்மையான அன்பும், அக்கறையுமில்லாமல் இன்னொரு நபரின் பணத்தின் பொருட்டோ, அதிகாரத்தின் பொருட்டோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர்களுக்குப் பிரியமான வார்த்தைகளைப் பேசி பின்னர் அதற்கும் வருந்தியிருக்கலாம்.

முந்தையக் காலங்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் மனிதர்களை நம் தெருக்களில் பாரக்க முடியும். இன்றைய நமது தெருக்களில் நிலவும் ஒருவித அமைதியைப் பார்க்கும் போது மனிதர்கள் எதற்கும் உணர்ச்சிவயப்படுவதில்லை என்று முடிவவெடுத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சண்டைகள் இல்லை. சச்சரவுகள் இல்லை. ஆகவே இன்றைய காலத்தில் கடுஞ் சொல் சொல்லி பின்னர் வருத்தப்படுவோர் குறைவுதான். இப்படடிப்பட்ட வருத்தம் கூட ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் 'நண்பா அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டேன். மனதில் வைத்துக் கொள்ளாதே. இனி இப்படி நிச்சயம் பேசமாட்டேன்' என்று சொல்லிவிட்டால் மீண்டும் பழைய உறவு மலர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இரண்டாவதாகச் சுட்டிக் காட்டப்பட்டச் சூழ்நிலையே இன்னும் ஆபத்தானது. உண்மையற்ற பிரிய மொழிகள். உள்ளத்தில் உண்மையல்ல என்று நன்றாகத் தெரிந்தும் சில 'பெரிய' மனிதர்கள்  செய்யும் தவறான செயல்களுக்கும் தப்புத் தாளம் போடுவது மிகவும் ஆபத்தானது. 'உங்களை விட்டால் வேறு யாரு உண்டு! நீங்க செய்தால் சரியாகத்தான் இருக்கும்' என்று போலி மொழிகளை உதிர்த்து விட்டு பின்பு ஒரு நாள் நீங்கள் வருத்தப்படக் கூடும். தொடரும் அவரது அனைத்து அட்டூழியங்களுக்கும் உங்களது அன்பு மொழியை அல்லது ஒரு செயற்கைச் சிரிப்பாலான அனுமதியையேனும் அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடும். அப்போது முதல் சூழ்நிலையில் சொன்னது போல 'ஐயா! அன்று தெரியாமல் உங்கள் செயலைப் பாராட்டிவிட்டேன். இனிமேல் இப்படி ஒரு போதும் நான் செய்யப் பொவதில்லை? என்று அவ்வளவு எளிதாக நம்மால் சொல்ல முடியாமல் போய்விடும்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்' என்பது போல அந்த 'பெரிய மனிதரும் ஒருநாள் அழிவைச் சந்திப்பார். துதிபாடி, துதிபாடி அடிமையாய் கழிந்த உங்கள் ஆன்மா அப்போது எந்த ஆதாயமுமின்றி துதிபாட பழகியிருக்கும்

இதற்கு ஒப்பான இன்னொரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமென்றால், தகவல் தொடர்பு யுகத்தில் வாழும் யுவன்களும், யுவதிகளும்; பயன்படுத்தும் அன்பற்ற அன்பு மொழிகள், கனிவற்ற கனிவு மொழிகள், அக்கறையற்ற அக்கறை மொழிகள். அன்பும், கனிவும், அக்கறையும் உண்மையாகவே காட்டப்பட வேண்டிய சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களிடடம் மனசாட்சியற்று காட்டப்படும் மவுன மொழிகள். இத்தனைக்குப் பின்னர் எளிதாக இனித்த வார்த்தைககள் சுமத்தும் பொறுப்புகளை ஏற்க இயலாது அழுத்தும் மனச் சுமைகள். உறவு முறிவுகளும், கசப்புகளும் எஞ்சியிருக்க அதை மறைக்க மீண்டும் முதலிலிருந்தே அன்பற்ற அன்பு மொழிகள் என்ற சுமையின் சுழற்சியில் வாழ்க்கையை வீணடிக்கும் கடவுளின் குழந்தைகள். வார்த்தையில் இருக்கிறது வாழ்வு என்பது புரிகிறதா? வாழ்வு தரும் வார்த்தைகளை மட்டுமே பேசுவதென இன்று முதல் முடிவெடுப்போமா?

வியாழன், 18 டிசம்பர், 2014

கடவுளும், காதலும் (God and Love)


கடவுளும், காதலும்

இரண்டாயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற மக்களின் இதய சிம்மாசனத்தில் அரியணை கொண்டு ஆ;ட்சி செய்யும் ஒப்பற்ற அன்புடைய நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவிற்காக தயார் செய்யும் காலம் தான் திருவருககை; காலம். சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையின் வேகத்தில் எங்கு செல்கிறோம் என்ற இலக்கும் மறந்து விடலாம். சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்பதையும் நாம் கவனியாமல் இருந்து விடலாம். சற்று நின்று, இளைப்பாரி, சரிபார்த்து மீண்டும் செல்வதுதானே சரியாக இருக்கும். அவ்வாறு நின்று, பார்த்து, சரிசெய்யும் காலம் தான் இந்த திருவருகைக் காலம்.
திருவருகைக் காலத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பதாகும்.

 காத்திருத்தல் என்பது ஓர் அனுபவம். காத்திருத்தலில் பல வகைகள் உண்டு. காதலியில் வருகையை எதிர்பார்த்து பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் காதலர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றலரந்த மலர் போல பளிச்சென்றிருக்கும் முகம். பரபரக்கும் கண்கள். அத்துமீறி துடிக்கும் இதயம். எப்போது நிகழும் அந்த ஒளி பொருந்தியவளின் வருகை. பார்த்தால் மட்டும் போதும். இந்த நாள் இனிய நாளாகும் என்ற ஏக்கத்தோடு காத்திருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். காத்திருத்தல் என்பது அயற்சியான ஒன்றல்ல. அது பரவசமான பொழுது. அது கவலைக்கும், கண்ணீருக்குமான பொழுது அல்ல. மாறாக நம்பிக்கையின் பொழுது. ஒரு வேளை யாரைப் பார்த்து விட்டு இந்த நாளைத் தொடங்கலாம் என்று காத்திருக்கிறோமோ, அந்த நபர், அந்த அன்பான நபர், ஒளி பொருந்திய அந்த நபர் மாலை வரையிலும் தமது தரிசனத்தைத் தரவில்லையென்றால் என்ன நிகழும், அந்த நபர் மீது எரிச்சல் வரும் என்று நினைக்கிறீர்களா? இனியும் அந்த நபருக்காகக் காத்திருத்தல் வீணானது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் காதல் வயப்படவில்லை என்று அர்த்தம். ஒன்று செய்யுங்கள். உங்கள் இதயத்தின் நான்கு அறைகளிலும் பட்டாம் பூச்சியைப் பறக்கவிடும் எளிய ஒருவரை நிச்சயம் கடவுள் படைத்து அனுப்பியிருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள்.

சொல்ல வந்தகை விட்டுவிட்டு வேறு எதையே பேசுவது போலிருக்கிறதா? இத்தகைய காதல் அனுபவத்தை கடவுளுக்காகக் காத்திருக்கும் அனுபவத்தோடு ஒப்பிட விரும்புகிறேன். இது என்னுடைய விநோதமானக் கண்டுபிடிப்பு அல்ல. உலகின் மூத்த கலாச்சாரங்கள் அனைத்திலுமே கடவுளுக்கும், காதலுக்கும் முடிச்சு போடும் காரியங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி சுடர்கொடியினால் திருமாலவனின் திருமுகம் மலர்ந்த அற்புதமான ஒப்புமையெல்லாம் நம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. 

ஒளிபொருந்திய இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் ஏக்கம் என்பது ஒவ்வொரு இதயத்திற்கும் உண்டு. தாயைக் காணாது தவிக்கும் பச்சிளம் குழந்தையின் ஏக்கத்தைப் போன்றது அது. அனைத்து மாயைகளையும் களைந்து அவரது பிரசன்னத்தில் கரைந்து போகும் ஏக்கம் எல்லோருக்கும் உண்டு. இந்தத் தேடல் என்பது ஒரு பாராமுகம் காட்டும் கடவுளுக்கானத் தேடல் அல்ல. காணாமல் போனவர் கடவுள் அல்ல. நாம் தாம் காணாமல் போய்விட்டோம். நாமே ஏற்படுத்திக் கொண்ட தேவைகளில் நம்மையே நாம் தொலைத்து விட்டோம். நம்மைக் கண்டடையும் தருணத்தில் கடவுளையும் நாம் கண்டடைவோம். ஏனென்றால் மனுவுறுவானக் கடவுளின் பெயர் 'இம்மானுவேல்'. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்மோடு' என்று விவிலியம் சொல்கிறது.

சனி, 1 நவம்பர், 2014

ஞானம்! (Wisdom)

ஒவ்வொரு மொளனங்களும்
ஏதோவொன்றை பேசிக்கொண்டுதானிருக்கின்றன

ஒவ்வொரு கலகங்களும்
அமைதியையே முன்னிறுத்துகின்றன

ஆலய மணிகளுக்குப் பின்னும்
பாவங்கள் ஓலமிடுகின்றன

அறியாமை என்று விரல் நீட்டும் போது
அது நம்மையே குறிக்கலாம்

பன்மையைக் கற்றுக் கொள்வதே
ஞானம்!