வெள்ளி, 30 ஜனவரி, 2026

பூக்குழி - சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது

"பருண்மையல்லாத கருத்துக்களின்மீது நாம் கொண்டிருக்கும் பிடிமானமும் அவற்றைக் காப்பாற்ற எதையும் செய்யத் தயாராக இருக்கும் வெறிநிலையும் என்னை வியப்படையச் செய்கின்றன"-  ஆசிரியர் பெருமாள் முருகன்

கடந்த பதிவின் தொடர்ச்சியாகவும் இதனைக் கருதலாம். சட்டத்தின் ஆட்சி நடைபெறும் குடியரசில், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று கருத வாய்ப்பிருக்கிறது. நமது 2026 ஆம் ஆண்டு குடியரசு தினவிழாவிற்கு அடுத்த நாள் தமிழ் இந்து பத்திரிக்கையில் வாசித்த செய்தி என்ன தெரியுமா?

'காதல் திருமணம் செய்து கொள்பவர்களின் குடும்பத்தைப் புறக்கணிக்க வேண்டும் என மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்'. 'புறக்கணித்தல்' என்பதற்கான விளக்கத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தருகிறார்: 'இளைஞரோ, இளம்பெண்ணோ தங்கள் விருப்பப்படி வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டால் அவர்களை மட்டும் தண்டிக்கக் கூடாது. அவர்களுடைய குடும்பத்தினரை சமூக ரீதியாக புறக் கணிக்க வேண்டும். குறிப்பாக, சமூக நிகழ்ச்சிகளுக்கு அவர்களை அழைக்கக் கூடாது. பால் மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கக் கூடாது. அக்குடும்பத்தினரை யாரும் வேலைக்கு அழைக்கக் கூடாது. அவர்களுடைய நிலத்தில் யாரும் வேலைக்கு செல்லக்கூடாது.  இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கும் அக்குடும்பத்தினருடன் பேசுபவர்களுக்கும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பவர்களுக்கும் கடும் அபராதம் விதிக்கப்படும். அத்துடன் அவர்களும் ஒதுக்கி வைக்கப்படுவார்கள்.'

2013 ஆண்டு காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ஆசிரியர் பெருமாள் முருகன் அவர்கள்  'பூக்குழி' நாவலைச் சமீபத்தில் தான் வாசித்தேன். அப்புத்தகம் தருமபுரி இளவரசனுக்கு சமர்ப்பிக்கப்பட்டது என்று முதல் பக்கத்தில் வாசித்த உடனேயே மனதுக்குள் திக்கென்று இருந்தது. அப்புத்தகம் காதலித்தப் பெண்ணைக் கோவிலில் திருமணம் செய்து தன் சொந்த ஊருக்கு அழைத்து வரும் குமரேசன், அவனது காதல் மனைவி சரோஜா, அவனது அம்மா மாராயி மற்றும் இன்னும் மிகச் சில கதாபாத்திரங்களைக் கொண்டு எழுதப்பட்ட சிறிய நாவல் ஆகும்.  

மாராயி இளம் வயதிலேயே தன் கணவனை இழந்தாலும், காடு, கழனியில் கடுமையாக உழைத்து தன் ஒரே மகன் குமரேசனை வளர்த்தவள். ஊருக்கு வரும் முட்டைக்கார பாய் அவனை நகரத்தில் ஒரு 'கலர்' கம்பெனியில் வேலைக்கு சேர்த்துவிடுகிறார். அங்கு கிடைக்கும் நண்பன் பெரியசாமி மூலம் விரைவில் தொழில் கற்றுவிடுவதோடு அவன் தங்கியிருக்கும் வரிசை வீட்டருகிலேயே சரோஜாவுடன் காதல் மலர்வதோடு, அவளைத் திருமணம் செய்து தன் வீட்டிற்கும் அழைத்துவருகிறான். அதற்கு பிறகு அவர்கள் இருவரும் சந்திக்கும் சவால்களே கதையின் சாரம். இருவரின் அகவாழ்வின் கனிவும், புறவாழ்வின் கசப்பும் கலந்த ஒரு அற்புதமானக் கதை பூக்குழி.

பூக்குழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பினை  Pyre என்ற தலைப்பில் புகழ்பெற்ற பென்குயின் பதிப்பகம் வெளியிட்டது. அப்புத்தகமானது 2023 ஆம் ஆண்டுக்கான புக்கர்  பரிசுக்கான பதிமூன்று புத்தகங்கள் அடங்கிய  நெடும்பட்டியலில் இடம்பெற்றது. இப்புத்தகத்தைக் குறித்து “It’s so tense, it leaves  you gasping for air” என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழ் குறிப்பிடுகிறது. எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் 60 ஆவது அகவை கொண்டாடப்படும் இந்த ஆண்டில் சாதிக்கு எதிரான அவரது எழுத்துக்கள் சமூகத்தில் மாற்றத்தினை ஏற்படுத்த வேண்டும் என்று விழைகிறேன். 

கிராமங்களை எப்போதும் மெய்யழகன் படம் போல பச்சைப் பசேல் என்ற நிலப்பரப்போடும், வெள்ளாந்தியான மனிதர்களோடும் அடையாளப்படுத்தும் அப்பாவி மனிதர்கள் நீங்களென்றால், இப்பூக்குழி இந்தியக் கிராமங்களின் உண்மையானக் கோர முகங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும். அல்லது நியாபகப்படுத்தும். 

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் மட்டுமல்ல எல்லா பிரதேசங்களிலும் சாதியப் புற்று நோய் வேர்விட்டிருக்கிறது. கிறிஸ்தவம் இப்புற்று நோய்க்கு மருந்தாகும் வாய்ப்பினை ஏற்கனவே தவறவிட்டுவிட்டது. வரனை ஏன் இன்னொருவர் பார்க்க வேண்டும் என்பதே இன்னும் புரியாத புதிராக இருக்கும் நிலையில், சொந்த சாதியில் வரன் பாரக்கும் படலம் இல்லாத ஒரு கிறிஸ்தவ பங்கினைக் காட்டுங்களேன். சாதிய அடிப்படையில் பங்குகளைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள். இப்போது மறைமாவட்டத்தையே பிரிக்கும் அளவிற்கு துணிந்துவிட்டார்கள். சாதிய அடிப்படையில் ஆயரை, சபை தலைவர்களை, சாதிய பிரிதிநிதித்துவங்களை மிகச் சாதாரணமாக ஒரு கிறிஸ்தவனால் கடந்து போக முடியுமளவிற்கு தோல் மரத்துவிட்டது. 

இதை எதையுமே வெளிப்படையானத் தரவுகளைக் கொண்டு நிரூபிக்க முடியாதுதான். ஆனால் எங்கள் (முன்னாள்) பங்கினையே எடுத்துக்கொள்ளுங்கள். இராமனாதிச்சன்புதூர் ஒரு மிகச்சிறிய ஊர். எந்த நிர்வாகச் சிக்கல்களும் இல்லாமல் ஒரே ஆலயம் கொண்ட, ஒரே பங்காக இருக்க எல்லாச் சாத்தியக் கூறுகளும் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அருமையான ஊர். ஆனால் முகவரியில் தான் அது ஒரே ஊர். கிறிஸ்தவர்களின் அகவரியில் அது இரண்டு ஊர். இஞ்ஞாசியாருக்கு ஒரு பங்கு. ஆரோக்கிய நாதருக்கு கிளைப்பங்கு. அங்கும் இங்கும் பெரும்பாலும் திருமண கொடுக்கல் வாங்கல் இன்றும் கிடையாது. சரி இதெல்லாம் என்றோ நடந்து விட்ட அவலத்தின் விளைவுதானே என்று கடந்து போக முடியாதபடிக்கு கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ சுவர்கள் இரண்டு பகுதிளுக்கும் இடையில் இருப்பதைத்தான் எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார் திருவள்ளுவர். இட்டார் பெரியார், இடாதோர் இழிகுலத்தார் என்று இரண்டு சாதிகளை மட்டும் அடையாளப்படுத்தினார் அவ்வையார். சாதிகள் இல்லையடி பாப்பா. குலத்தாழ்ச்சி, உயர்ச்சி சொல்லல் பாவம். நீதி, உயர்ந்த மதி, கல்வி - அன்பு நிறைய உடையவர்கள் மேலோர் என்றார் பாரதியார். மனிதர்களைப் பிரிப்பதற்கே சாதி உண்டானது. மனிதர்களை ஒன்றுபடுத்துவதற்காகவே அதை நாம் அழிக்க வேண்டும் என்றார் பெரியார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றார் அறிஞர் அண்ணா. இளைய தலைமுறை சாதிப்பெயரை பெருமையாக அல்ல. வெட்கமாக உணர்வது போல மாற்ற வேண்டும் என்றார் கலைஞர். 

ஆனால் சாதி என்னும் பேய் தூசி போல எங்கும் படிந்திருக்கிறது.


செவ்வாய், 27 ஜனவரி, 2026

குடியரசு தினம் (Republic Day of India)

குடியரசு தினம். நம் நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து நேற்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மக்களாட்சியில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. சட்டங்களும், திட்டங்களும் உருவாகி நடைமுறைக்கு வருவதற்குள் ஒரு ஒளி ஆண்டே முடிந்துவிடும். நத்தை வேக நிர்வாகம், நாடி நரம்பெல்லாம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகள், சுயநலமே கொள்கையாகக் கொண்ட அரசியல் வாதிகள் என்று ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும், மன்னராட்சி, இராணுவ ஆட்சி போன்ற எல்லா சமாச்சாரங்களையும் விட மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் மக்களாட்சியே அனைத்திலும் சிறந்தது என்று வரலாறு நமக்கு துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது. 

அரசியலமைப்பு புத்தகமே ஒரு குடியரசு நாட்டின் பைபிள், குரான், அல்லது பகவத் கீதை எல்லாம். மற்ற அனைத்து அதிகாரங்களும் அதற்குக் கட்டுப்பட்டவையே! மக்கள் நினைத்தால் (அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் மூலம்) அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மக்களாட்சி முறையையோ, மதசார்பின்மையையோ, கூட்டாட்சி அமைப்பையோ பாராளுமன்றமே நினைத்தாலும் மாற்ற முடியாது. பாராளுமன்றம் கொண்டுவரும் திருத்தங்களை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனைச் செய்யலாம். அந்த அதிகாரத்தை நீக்கும்படியாக பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரமுடியாது. அந்த வகையில் மிகவும் 'புனிதத்' தன்மையோடு அணுகி கடைபிடிக்கப் பட வேண்டியது அரசியலமைப்பு நூல். 

உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்பதில் நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அந்நியர்களிமிருந்து விடுதலை வாங்கித்தந்த தலைவர்கள், போராட்டங்களில் இன்னல்கள் அனுபவித்த தியாகிகள் அனைவரையும் கரம் கூப்பி வணங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் செந்நீர் சிந்தி நட்ட மரத்தின் நிழலில்தான் நாம் இன்று இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். அத்தியாகிகளுக்கு இணையாகப் போற்றுதலுக்குரியவர்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அறிஞர் பெருமக்கள். விடுதலைக்குப் பிறகு சூறாவளி சுருட்டிச் சென்ற பருத்திக் காட்டினைப் போலச் சிதறிக் கிடந்தது நம் நாடு. அனத்துத் துண்டுகளையும் பத்திரமாகக் கட்டிச் சேர்த்ததோடு, இன்றளவும் இந்தியர் என்னும் உணர்வை ஊட்டி வளர்ப்பதும் நம் அரசியலமைப்பு நூல்தான். 

காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ஜவஹர் லால் நேரு, ராஜேந்திர பிரசாத், படேல், கோகலே போன்ற தலைவர்களை நவீன இந்தியாவின் பெருமைமிகு சிற்பிகளாகக் கருதுகிறேன். எல்லா மாநிலங்களிலும் அவரகளது கனவுகளுக்கு வடிவம் தந்த தலைவர்கள் எண்ணிலடங்காதவர்கள் உண்டு. சூதும் வாதும் செய்தேனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் அழிவு சக்திகள் இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அவல நிலையிலும், இன்னும் வீழாது நம்மைத் தாங்கிக்கொண்டிருப்பது நமது அரசியலமைப்புச் சட்ட நூல்தான். நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர்களின் கனவுகளைச் சுமந்து நிற்கும் இப்புனித நூலை நாம் பாதுகாக்க வேண்டும். அத்தகைய தகுதியுடையவர்களிடம் மட்டுமே நம் நாட்டை ஆளும் உரிமையை நாம் தரவேண்டும். 


திங்கள், 20 அக்டோபர், 2025

நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

இது இலையுதிர் காலம்

இல்லையா நண்பர்களே!

உதிர்வன இலைகள் மட்டும்தானா?

இரவுகள் உதிர்கின்றன

உறவுகள் உதிர்கின்றன

பகல்கள் உதிர்கின்றன

பருவங்கள் உதிர்கின்றன

பொய்க்கின்ற நம்பிக்கைகளின்

உதிரிச் சருகுகளானதுதானே

பொக்கிஷமாய் நாம் கருதுமிந்த வாழ்க்கை!


தனித்திருக்கும் ஒருத்தி

அர்த்தம் தேட ஆசைப்படுகிறாள்

இராத்திரிகளின் புழுக்கத்தில் 

நித்திரை கொள்ளாது

நீதி வேண்டுகிறாள்!


காலைப்பூசையில் நீங்கள் கேட்ட

கைம்பெண்ணைப் பற்றித்தான் புலம்புகிறேன்

நீதி பரிபாலனைகள் புரியுமிடத்திலிருப்பவர்கள்

இரக்கமின்றி அவளைப் புறக்கணிக்கிறார்கள்

கேட்காதது போல, பார்க்காதது போல

முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்

வரலாறு முழுவதும் கேட்டக் கதைதானே!


சமாரியப் பெண்

சாமானியப் பெண்

சிவந்த குருதிப்போக்கினால் 

சங்கடமாகிப் போனப் பெண்

செல்ல மகனை இழந்த விதவைப் பெண்

எல்லாக் கையிருப்பையும் காணிக்கையிட்டப் பெண்

கண்ணீரினால் கழுவி, தலைமுடியால் துடைத்தப் பெண்

நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை என்றதும்

விசும்பி அழுது திரும்பிச் சென்ற பெண்

இன்றைய விலையில் தங்கம் போன்ற 

ஒரு தைலத்தைக் கவிழ்த்துப் பூசி அன்புசெய்த பெண்

பாலூட்டிய பெண்

பாலுட்டியவள் பேறுபெற்றவள் என்று சொன்ன பெண்

செவிகொடுத்த பெண்

சேவை செய்த பெண்

சிலுவையின் கொடிய பாதையில் 

அச்சமின்றி அவர் முகம் துடைத்த பெண்

சூரியன் உதிக்கும் முன்னே

கல்லறைக்குக் காணச் சென்ற பெண்

இயேசுவின் வாழ்வில்தான் எத்தனைப் பெண்கள்!


நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

எங்கள் ஊரிலும் இருந்தாள்

அவள் இருந்த ஊரையே எரித்தாள்

அவளும் கைம்பெண்தான்!


கொழுந்து இலைபோன்ற சின்னஞ்சிறுமி

நேற்று பெருநகரம் ஒன்றில் வன்புணரப்பட்டாள்

அவளை எரித்த நெருப்பில்

அந்த நகரம் கொதித்தது

நடந்த சேதாரங்களுக்கு நீதிமன்றங்கள்

ஆதாரங்களைக் கேட்கின்றன

ஏதோவெரு மிருகம் இரத்தவேட்கையோடு

சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது


ஆதாரங்களைத் தரவேண்டியவர்கள்

கொரோனா விதிமீறிய குற்றத்திற்காக

அப்பாவிகளின் மலக்குடலில்

லத்திகளைச் செலுத்தி தேடிக்கொண்டிருக்கிறார்கள்!


ஊரை எரித்தேனும் நீதியைப் பெற்ற நம் ஊரில்

என் எதிரியைத் தண்டித்து

எனக்கு நீதி வழங்கும் என்ற அபயக்குரல்

நீதியின் பலிபீடங்களைத் 

தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றன!


திங்கள், 21 ஜூலை, 2025

அவன் ஏழை என்பதாலேயே

வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். நாம் ஏதோவொன்றை நினைத்துக்கொண்டு முகப்புத்தகத்தைத் திறந்தால், அங்கே கவிஞர் மனுஸ் நமக்காக அதே மன ஓட்டத்தை நகலெடுத்து ஒரு கவிதை எழுதி வைத்திருப்பார். அதுபோல கட்டுரையாளர்களிடம் ஒருநாள் யாராவது சொல்வார்கள் என்றால் நானே நம்பியிருக்கமாட்டேன்.

ஆனால் எனக்கு நடந்தது. நேற்று இரவு ஒரு வேகத்தில் ஆசிரியரிடம் ஒரு வாக்குறுதி அளித்துவிட்டேன். எனது ப்ளாக்கில் ஒரு பத்து கட்டுரையாவது எழுதிவிட்டு மீண்டும் வருகிறேன் என்று. 

அனாதிகாலத்துக் கனியான ஆப்பிளின் பதினாறாவது (கூடுதல் வகையறா) அலைபேசியை வாங்கி ஏக்கம் தீர்த்த நான் அடைந்த முதல் ஏமாற்றமே தமிழ் டைப்பிங் தான். யமுனாவின் கைகள் பாபுவின் தலைமயிரைக் கோதிக்கொண்டே 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே?' என்ற கேள்வியின் பரிதாபத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என் ஏமாற்றம். 

இதற்கு முன் வைத்திருந்த ஒரு ஆண்ட்ராய்டு காரன், சங்க காலத்தமிழில் பேசினாலும் துல்லியமாக டைப் செய்துவிடுவான். கெட்டிக்காரன். அவன் ஏழை என்பதாலேயே அவனை அவமரியாதையாக நடத்தியதைக் குறித்து நேற்றிரவு முதல் முறையாக வருத்தப்பட்டு தூங்கிவிட்டேன்.

காலையில் எழுந்து பார்த்தால் வாட்சப் சேனலில் ஆசிரியர் பராமரிப்புக் கலை கட்டுரையைப் பகிர்ந்து மேக் -கின் உன்னதங்களைப் விதந்தோதியிருந்தார். 

ஆசிரியருக்கு ஒரு கேள்வி. தங்கள் அலைப்பேசியும் ஆப்பிள் தானா? அதில் தமிழில் டைப் செய்வது அல்லது குரல் டைப் செய்வது சிரமமாக இல்லையா? அதற்கு ஒழுங்காக செயல்படாத ஜுபோர்டு (கூகுள் ஆள்) தவிர்த்து வேறு எதாவது நல்ல ஆப்பு இருக்கிறதா?

நான் இன்னும் பாரம்பரியமான பாமினி எழுத்துருவைக் கொண்டு, சன்னல் சுவடிகளில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். 

எனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் சிதறாமல் கொட்டி வைக்க வாய்ஸ் டைப் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆப்பிள் போனில் அதை (தமிழில்) செயல்பட வைக்க என்ன ஆப்பு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்களேன்! புண்ணியமாகப் போகும். 


ஞாயிறு, 20 ஜூலை, 2025

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!

வணக்கம். தங்களது அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற இறைவன் உங்களுக்கு நல்ல உடல், உள்ள நலம் தர வேண்டிக்கொள்கிறேன்.

ஒரு பள்ளிக்கூடம். ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர். காலை மாணாக்கர் கூடுகையின் போது, கூச்ச சுவாபமுள்ள ஒரு மாணவனின் பெயரை கூப்பிட்டு 'முன்னாடி வா!' என்று சொன்னால் எப்படி உணர்வான்? அப்படி ஒரு உணர்வை கடந்த 5 ஆம் தியதி தங்களது வாட்சப் வாய்க்காலில் எனது பெயரைக் கண்டதும் உணர்ந்தேன். 'ஆன்டனி ப்ரான்சிஸ், நான் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் விதத்தில் பதிலளிப்-பாராவுக்குக் கேள்விகள் அனுப்பவும். (ஆனால் திங்கள்தான் பதிலளிப்பேன்.)'

எத்தனை முறை அதை வாசித்தேன் என்று தெரியவில்லை. என்னை யாரும் இந்த அளவிற்கு வியக்க வைத்ததில்;லை. அம்மாவின் அளவுகடந்த அன்பைக் குறிந்து வியத்திருக்கிறேன். கலைஞரின் பன்முக ஆற்றலை, திறனை, உழைப்பைக் குறித்து வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வாட்சப் வசதியால் தான் உங்களைப் போன்ற மிகவும் தனித்துவமான மாபெரும் ஆளுமையோடு இவ்வளவு நெருக்கமாக உணர முடிகிறது. 

ஏற்கனவே உங்களிடம் சமயம், இறைநம்பிக்கை குறித்தெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவ்வளவு எழுத்துப்பணிகளுக்கு மத்தியிலும் பதில் வராத கேள்விகளே இல்லை. உங்களது நேரத்தை வீணடிக்கிறேனோ நினைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ ஜெயமோகன் அவர்களின் சோத்துக்கணக்கு கதையில் வரும் கெத்தேல் சாகிப் போல கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். நாங்கள் பெற்றுக்கொண்டேயிருக்கிறோம். அறிவையும், ஆளுமையையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். 'அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும், மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை?' என்ற அக்கதையின் இளைஞனாக என்னை உணர்கிறேன். 

பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்ற இரு மார்க்கங்களில் ஒருவர் இறைவனை அல்லது மகிழ்ச்சியை அடையலாம் என்ற தத்துவத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு கர்ம மார்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. விளைவுகளைப் பற்றி (போற்றல், தூற்றல், லைக், டிஸ்லைக்) எந்த அக்கறையும் இன்றி, செயல் ஒன்றே என்று ஒன்றிப்போகும் பாங்கு எங்களுக்கும் கொஞ்சம் அமையட்டும். 

அன்பிற்கு நன்றி!

ஆன்றனி பிரான்சிஸ்