சனி, 7 பிப்ரவரி, 2015

சட்டமும் சமூகமும் (Law and Society)

சட்டமும் சமூகமும்

சட்டங்கள் என்றால் என்ன? 

சட்டம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட சமூகத்தின், அல்லது நாட்டின் குடிமக்களின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதுகாக்கும் வகையில் அவர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும். இந்த விதிமுறைகளை யாரேனும் மீறும் போது அங்கு ஏற்பட்டிருக்கும்  சமனற்றத் தன்மையானது தண்டனைச் சட்டங்களின் மூலம் சமன் செய்யப்படுகிறது. ஆகவே சட்டங்களும், தண்டனைகளும் சமூகத்தின் சுமூகமான இயக்கத்திற்கு மிகவும் இன்றியமையாதவையாகும். இந்த சட்டங்களினால் சமூகத்தின் உறுப்பினர்கள் அனைவரும் சரி சமம் என்பது தௌ;ள தெளிவாவதோடு, அனைவரின் சட்டத்திற்குட்பட்ட சுதந்திரமும், உரிமைகளும் நிச்சயமாக உறுதி செய்யப்படுகிறது.

சட்டங்களின் தேவைதான் என்ன?

ஒரு கட்டடம் கட்டத் தொடங்குவதற்கு முன்பாக வரையப்படும் கட்டுமான வரைபடத்தைப் போன்றதே ஒரு சமூகத்திற்காக எழுதப்படும் சட்டங்களும். கட்டுமான வரைபடத்தினால் வரும் பயன்பாடு என்ன? அது கட்டட வேலையை எளிதாக்குகிறது. விரைவாக வேலை நடைபெற உதவுகிறது. ஏதேனும் பிழைகள் எற்படுமானால் வரைபடத்தின் மூலம் சரிசெய்வதும் எளிதாகிறது. மொத்தத்தில் கட்டடம் நாம் நினைத்தது போலவே அழகாகவும், வலிமையானதுமாக மாறுகிறது. இதைப்போன்றதுதான் சமூகத்திற்கும், சட்டங்களுக்குமான தொடர்பும். சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் கருத்தில் கொண்டு, அனைவரது பிரதிநிதித்துவ பங்கேற்;போடு ஒரு சமூகத்திற்கானச் சட்டமானது எழுதப்படுகிறது. சில சட்டங்களின் தேவைகள் காலப்போக்கில் மாறும் போது, மீண்டும் அதே பிரதிநிதித்துவ பங்கேற்போடு இச்சட்டங்களில் திருத்தங்களை ஏற்படுத்துவதும் அவசியமானதே. முக்கியமானது என்னவென்றால் சமூகத்தின் அழகிற்கும், நிலைத்தத் தன்மைக்கும் அடிப்படையானது, அதன் குடிமக்கள் அனைவரும் சட்டங்களை மதித்து அதன்படி நடப்பதுதான்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

நாம் இந்தியர்கள் என்பதற்காக பெருமைப்படத்தக்க பலவற்றிலும் மிகவும் முக்கியமானதும், முதன்மையானதும் நமது அரசியலமைப்புச்சட்டம் ஆகும். இந்தியா என்ற குடியரசு இந்த அரசியல் அமைப்புச்சட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்ட 26 சனவரி 1950 அன்றுதான் உருவானது. இந்தியக் குடியரசின் ஆணிவேராக இருப்பது நமது அரசியலமைப்புச் சட்டமே ஆகும். உலகில் உள்ள எழுதப்பட்ட அரசியலமைப்புச் சட்டங்களிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் தான் மிகவும் பெரியதாகும். இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து, ஆஸ்திரேலியா, கனடா போன்ற பல்வேறு நாடுகளிருந்து பெறப்பட்டச் சட்டங்கள், இந்தியாவின் பன்முகக் கலாச்சாரத் தன்மைக்கு ஏற்றதாக மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும், நமது அரசியலமைப்புச் சட்டமானது பிறநாட்டுச் சட்டங்களில் வெறும் தழுவல் என்று சொல்லிவிட முடியாது. வேறு எந்த நாட்டுச் சட்டங்களையும் விட, தனிச் சிறப்பும், தனி ஆளுமையும் கொண்டதே நமது அரசியலமைப்புச் சட்டமாகும். ஆயிரமாயிரம் மொழிகளையும், சமயங்களையும், இனங்களையும், கலைகளையும், கலாச்சாரங்களையும் ஏற்றுக்கொள்ளும், மதிக்கும், அரவணைக்கும், வளர்த்தெடுக்கும், மிகவும் நுட்பமானப் பணியை 64 ஆண்டுகளாக சுணக்கமின்றி செய்துவருவதிலிருந்தே அதன் சீரியச் சிறப்பானது புலனாகிறது. டாக்டர் ராஜேந்திர பிரசாத் தலைமையேற்க ஜவர்கர்லால் நேரு, அம்தே;கர், ராஜாஜி, வல்லபாய் பட்டேல் போன்ற மாபெரும் தலைவர்கள் உட்பட 389 உறுப்பினர்களுடன் டிசம்பர் 9, 1946 அன்று உருவானது இந்;திய அரசியல் நிர்ணயக்குழு. பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின்னர் இந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 299 ஆக மாறியது.  இவர்கள் 13 குழுக்களாகப் பிரிந்து சட்டங்களை உருவாக்கும் பணியினைச் செய்தனர். இந்தக் குழுக்களின் பங்களிப்புகளையெல்லாம் தொகுத்து ஓர் சட்ட வரைவினைத் தயார் செய்யும் மாபெரும் பொறுப்பானது டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான ஏழுபேர் கொண்ட இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இவர்களது இரவு, பகலான உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும், இந்தியாவின் பன்மைத் தன்மைக்குச் சிறிதும் பாதிப்பில்லாமல், மாறாக அவற்றைப் பாதுகாக்கும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவானது 1948 சனவரியிலேயே வெளியிடப்பட்டது. எட்டுமாதங்கள் இவை மக்களின் பொது விவாதத்திற்கு விடப்பட்டது. மாநிலங்களின் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக ஆர்வலர்களின் கருத்துக்கள் பெறப்பட்டு தகுந்த திருத்தங்களோடு 1949, நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களால் கையெழுத்திடப்பட்டது. இந்த சட்டத் தொகுப்பே 1950, சனவரி 26 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு இன்றளவும் இந்தியக் குடியரசை, மக்களாட்சி முறையில் நிலைநிறுத்தி வருகிறது.

நடைமுறையில் நமது சட்டம்

இதுவரையிலும் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டங்களின் தனிச் சிறப்புகளைப் பார்த்தோம். இருப்பினும் இந்தச் சட்டங்கள் நடைமுறையில் எந்த அளவு மக்களால் மதிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே அந்தச் சட்டங்களின் பலனை அனைவரும் அனுபவிக்க முடியும். சட்டம் ஒன்று - .சமூகம் வேறொன்று என்று எந்த சமூகம் இருக்குமோ அங்கு நீதியை நிலைநாட்டுவதில் நாம் பல்வேறு சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கும். உலகின் எத்தனையோ நாடுகளை விட இந்த விசயத்தில் மிகவும் பரிதாபத்திற்குரிய வகையில் பலவீனமானமாக இருக்கும் ஓர் நாடு நம் பாரத நாடு. இத்தகைய சட்டத்திற்கும், சமூக பழக்கவழக்கங்களுக்குமான முரண்பாடுகள்தான் நம் இந்தியா ஒரு அடி முன்னேறினால் அதனை ஒன்பது அடி பின்னோக்கி இழுக்கிறது என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. இத்தகைய முரண்பாடுகளை முன்னின்று களைய வேண்டியது காவல் துறை, நீதித்துறை, மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் அங்கிருப்போரும் இந்த சமூகத்தின் அமைப்புகளிலிருந்தே செல்வதால் அங்கு இத்தகைய முரண்பாடுகளுக்குச் சிறிதும் பஞ்சமில்லை. சாலைவிதிகள் பாதசாரிகளுக்கு முன்னிரிமை அளிக்க வேண்டுமெனச் சொல்கிறது. ஆனால் வலியவன் வாழ்வான் என்பதுதான் நடைமுறைச் சட்டமாக இருக்கிறது. பொதுச் சொத்துக்குச் சேதம் விளைவித்தல் தண்டனைக்குரியக் குற்றச் செயல் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் பதினெட்டு ஆண்டுகள் நீதிமன்றங்களில் அலசி ஆராயப்பட்டு , குற்றம் நிரூபிக்கப்பட்ட ஊழல் வழக்கில் ஒருவர் சிறைசெல்லும் போது பொதுச் சொத்துக்களை அரசே முன்னின்று அடித்து நொறுக்குகிறது. நீதிபதியைக் கொச்சைப்படுத்தி சுவரொட்டிகள் என்ன? தீர்மானங்கள் என்ன? சட்டம் ஆட்சி செய்யும் அளவிற்கு நாங்கள் இன்னும் பண்படவில்லை. தனிநபர் அதிகாரமும், காழ்ப்புணர்வுகளும், வெறிச் செயல்களுமே எங்களை ஆட்சிசெய்கின்றது என்று பிறர் நம்மை எள்ளி நகைக்கும் வகையில் பிரகடனப்படுத்தியது அந்ந அறுவறுக்கத் தக்கச் செயல்கள். இன்னும் பொது இடங்களை அசுத்தம் செய்யக் கூடாது என்ற சட்டமானது நமது இந்திய மனங்களில் எழுதப்படவில்லை என்பது நமது மிகப்பெரிய அவமானம். நிலம், நீர், காற்று மாசுபடாமல் தடுக்க எத்தனையோ சட்டங்களும், அவற்றைக் கண்காணிக்க மக்கள் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளும் இருப்பினும் லஞ்சத்தினால் வரையறைகள் தாராளமாக மீறப்படுகின்றன. சாலைகளில் ஒலிமாசுக்கும், புகை மாசுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. போக்குவரத்து காவலர்கள் வரவு செலவு பணியாளர்களாகவேப் பார்க்கப்படுவதனால் எளிதாக ஐம்பதுக்கும், நூறுக்கும் விதிகளை விற்றுவிடுகிறார்கள். திருமணம் செய்வது இருபத்தியொரு வயது நிரம்பிய தனி நபரின் உரிமை. ஆனால் பெற்றோரின் வற்புறுத்தலும், கட்டாயத் தலையீடும் இல்லால் இங்கு எந்தத் திருமணமும் நடைபெறுவதில்லை. தீண்டாமை தண்டனைக்குரியக் குற்றம். ஆனால் வெகு சாதாரணமாக இங்கு பொது வாழ்வில் சாதி பேதம் பார்;க்கப்படுகிறது. இத்தகைய முரண்பாடுகள் அநீதியானது. நான் வெளிப்படையாக சட்டத்தின் படிதான்; வாழ்வேன் என்று சாலைப் பக்கம் வந்தீர்கள் என்றால் 'சாவுகிராக்கி' என்ற பட்டப்பெயரோடுதான் திரும்பிச் செல்லவேண்டும். மிகவும் ஆபத்தான காரியம் இத்தகைய சமூகங்களில் வாழ்வது. எழுதப்பட்டச் சட்டம் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையானது மீண்டும் மீண்டும் தகர்த்தெரியப்படும் போது அதனை நம்பி செயலில் இறங்குவது உயிருக்கே உலை வைப்பதாகப் போய்விடும். இருப்பினும் சட்டத்திற்கும், சமூகத்தின் பழக்க வழக்கங்களுக்கும் இருக்கும் இடைவெளியை உடைத்து யாரேனும் ஒருசிலர் மட்டும் வாழ முற்பட்டால் அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள். பிழைக்கத் தெரியாதவர்களாகவோ, அல்லது தீவிரவாதிகளாகவே கருதப்படுகிறார்கள்.

இவ்வாறு பொதுவாழ்வில் சட்டங்களையும், அவற்றின் சமூகப் பங்களிப்பையும் மட்டும் பேசுவது எளிதானதுதான். ஆனால் நமது செயல்படு தளங்களில் நாம் எந்த அளவிற்கு முன்மாதிரியாக சட்டங்களை மதிக்கிறோம் என்பது கேள்விக்குறியாகவேத் தொக்கி நிற்கிறது. இன்னும் அதிகமாக சட்ட விழிப்புணர்வுகளை பாமர மக்களின் பார்வைக்குக் கொண்டு சேர்ப்பது இக்கட்டுரையைப் படிக்கும் ஒவ்வொருவரின் கடமையாகவே கருதுகிறேன். சட்டங்கள் இதயத்தில் எழுதப்பட்டு, இயல்பான பழக்கவழக்கமாக மாறும் போதுதான் நம் நாடு பாரத நாடு பண்பட்ட நாடு என்பதை ஏற்றுக்கொள்ள முடியும். இந்த விசயத்தில் மேலை நாடுகளை நாம் மிகவும் அண்ணாந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. இன்று இந்தியாவில் விவாதிக்கப்படும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தின் தேவைகளையும், விளைவுகளையும் பற்றி இன்னும் கொஞ்சம் சூடாக இன்னொரு கட்டுரையில் பார்ப்போம். நன்றி.