புதன், 22 மார்ச், 2023

இறைவனின் குரல் கேட்டல்

தொடக்கத்தில் வாக்கு இருந்தது

யார் அழைப்பது யார் அழைப்பது யார் குரல் இது

காதருகினில் காதருகினில் ஏன் ஒலிக்குது

போ என அதைத் தான் துரத்திட வாய் மறுக்குது

குரலின் விரலை பிடித்து தொடரத்தான் துடிக்குது

கவிஞர் தாமரை அவர்கள் மாறா என்ற திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடல் வரிகள் இக்கட்டுரைக்கு நல்ல தொடக்கமாக அமையும் என நினைக்கிறேன். ஏதோவொரு குரல்தான் மனிதர்களை இயக்குகிறது. இரும்புத் துகள்களை ஈர்க்கும் காந்தம் போல மனிதர்கள் அக்குரலை நோக்கி செல்கிறார்கள்.

இந்திய தத்துவவியலில் ஸ்ருதி-ஸ்ம்ருதி என்கின்ற கருத்தாக்கம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. ஒலி-எதிரொலி என்று இதனை மிக எளிமைப்படுத்தி புரிந்துகொள்ளலாம். ஸ்ருதி என்பது அனைத்திற்கும் ஆதாரமான ஒலி. அவ்வொலியே காலங்களைக் கடந்தும் இப்பேருலகை இயக்குகிறது. ஸ்ம்ருதி அந்த ஒலியின் விளக்கவுரை போன்றது. மானுட வரலாற்றில் எதிரொலிப்பது. தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது (யோவான் 1:1). அந்த வாக்கு (ஸ்ருதி) மனிதர்களின் மனதில் எதிரொலிக்கும் போது (ஸ்ரும்தி) அன்பாக வெளிப்படுகிறது.

நானும் மயங்கிப் போனேன்

பவுலோ கொயலோவின் அல்கெமிஸ்ட் நாவலில் சந்தியாகு என்னும் சிறுவனைத் தனக்கானப் புதையலைத் தேடிப் பயணிக்க வைத்தது அக்குரலே! ஆபிரகாமை தான் பிறந்து வளர்ந்த சொந்த நாட்டிலிருந்து கண்காணாத ஒரு புதிய நாட்டை நோக்கி செலுத்தியது அந்தக் குரலே! இருக்கின்றவராக இருக்கின்றவர் நானே என்று மோசேயிடம் பேசியது அக்குரலே! ஆண்டவரே பேசும்! உம் அடியான் கேட்கிறேன் என்று சிறுவன் சாமுவேல் பதிலுரைத்தது அக்குரலுக்கே! 'யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்? என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன் என்று எசாயா கூறுவது அக்குரலைப் பற்றியே! 'மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர் என்று அன்னை மரியாவிற்கு நம்பிக்கை அளித்தது அக்குரலே! உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான் என்று தந்தை யோசேப்புவை சரியான முடிவுகளை எடுக்கத் தூண்டியது அக்குரலே! 'சவுலே, சவுலே, ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? என்று திருத்தூதர் பவுலிடம் வினவியது அக்குரலே!. 'யோவானின் மகன் சீமோனே, நீ இவர்களைவிட மிகுதியாக என்மீது அன்பு செலுத்துகிறாயா?' என்று கேட்ட பொழுதில் பேதுரு துயருற்று, 'ஆண்டவரே உமக்கு எல்லாம் தெரியுமே! எனக்கு உம்மீது அன்பு உண்டு என்பது நீர் அறியாத ஒன்றா?' என்று பதிலுரைத்தது அக்குரலுக்கே!

அந்த குரல் அன்பு, இரக்கம், மகிழ்ச்சி, மன்னிப்பு அனைத்தையும் உள்ளடக்கிய தந்தையின் குரல். அதனை ஒருவர் வெறும் காதுகளால் கேட்க முடியாது. நம்பிக்கையுடன் கூடிய இதயத்தின் காதுகளால் நிச்சயம்  உணர முடியும். அது தந்தையின் குரல் என்றாலும் அது தாயின் கருவில் பாதுகாப்பாக இருக்கும் ஒரு குழந்தையின் உணர்வைத் தரவல்லது. மனிதர்கள் தங்களையே அந்த அன்பின் குரல்கேட்டு அர்ப்பணிக்க முன்வருகிறார்கள்.  ஆண்டவரே! நீர் என்னை மயக்கிவிட்டீர். நானும் மயங்கிப் போனேன்! (எரேமியா 20:7).

இறைவனின் குரல்

விருப்பமானப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது போல் இறைவனின் குரலை நாம் தேர்வு செய்ய முடியாது. அக்குரல்தான் நம்மைத் தேர்வு செய்யும். நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை. நான் தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் (யோவான் 15:16).

இக்குரல் சிலரை வானத்து நிலவைப் போல ஒளிவீச அழைக்கிறது. சிலரை காட்டு மலர்களைப் போல மணம் வீச அழைக்கிறது. அக்குரலைக் கேட்டு நம்பிக்கையோடும், துணிச்சலோடும் முன்வரும் போது அக்குரலே வழிகாட்டியாகவும் இருக்கிறது. என் காலடிக்கு உம் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே! உம் சொற்களைப் பற்றிய விளக்கம் ஒளி தருகின்றது. அது பேதைகளுக்கு நுண்ணறிவு ஊட்டுகிறது. உம் திருச்சட்டத்தை விரும்புவோருக்கு மிகுதியான நல்வாழ்வு உண்டு. அவர்களை நிலைகுலையச் செய்வது எதுவுமில்லை (திருப்பாடல் 119).

வானத்து நிலவாக

பராமரிப்பும், பாதுகாப்பும் மிக்க லொரேட்டோ துறவற சபையில் சேரந்து, பள்ளிக்கூட ஆசிரியையாக பணியாற்றிய அன்னைத் தெரசாவிற்கு கடவுளின் குரல் ஒரு இரயில் பயணத்தின் போது கேட்டது. உதவி கேட்டு கண்ணீருடன் நின்ற ஒரு ஏழையின் குரலில் அவர் கடவுளின் அழைப்பை உணர்ந்தார். தான் தேர்ந்துகொண்ட துறவு வாழ்வைத் துறந்து, இறைவன் தன்னைத் தேர்ந்துகொள்ள அனுமதித்தார். கடவுள் அவர் வழியாக மாபெரும் வல்ல செயல்களை ஆற்றினார். வானத்து நிலவாக இன்றும் புனித அன்னை ஒளிவீசுகிறார்.

காட்டு மலராக

திருச்சி தூய பவுல் இறையியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது சுற்றுச்சூழல் இறையியல் பாடத்திற்காக அருட்தந்தை ஜான் பீட்டர் அவர்கள் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துச்சென்றார். காடுகள், வயல்வெளிகள் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள் தானே! ஆனால் நாங்கள் சென்றதோ அருகாமையில் இருக்கும் ஒரு அய்யப்பன் ஆலயத்திற்கு. ஆலயம் ஒரு பள்ளிக்கூடம் போலவும், பள்ளிக்கூடங்கள் ஒரு ஆலயம் போலவும் இருக்க வேண்டும் என்ற கல்வெட்டு ஆலய வாயிலில் நம்மை வரவேற்கின்றது. உள்ளே நுழைந்ததும் அகமும், புறமும் தழுவும் ஆழமான அமைதி. அங்கே ஓரிடத்தில் ஒரு நபர் ஒரு சிறிய ஆர்மோனிய இசைக் கருவியை இசைத்து இறைவனைப் புகழ்ந்து பாடிக்கொண்டிருந்தார். பல நாட்கள் அதன் பிறகு நான் அவ்விடத்திற்கு சென்றிருக்கிறேன். அந்நபர் அதே இடத்தில் பாடிக்கொண்டேயிருப்பார். இன்று நீங்கள் சென்றாலும் அவர் பாடிக்கொண்டுதான் இருப்பார். கவனிப்பாரற்ற இடத்திலும் காட்டுமலர்கள் மணம் வீசுவது போல அவரது அழைத்தல் இறைவனைப் பாடுவது என்று புரிந்துகொள்கிறேன்.

நீ எங்கே இருக்கிறாய்? நீ இங்கே என்ன செய்கிறாய்?

நிகழ்வு 1: மென்காற்று வீசிய பொழுதினிலே, தோட்டத்தில் ஆண்டவராகிய கடவுள் உலவிக்கொண்டிருந்த ஓசை கேட்டு, மனிதனும் அவன் மனைவியும் ஆண்டவராகிய கடவுளின் திருமுன்னிருந்து விலகி, தோட்டத்தின் மரங்களுக்கு இடையே ஒளிந்து கொண்டனர். ஆண்டவராகிய கடவுள் மனிதனைக் கூப்பிட்டு, 'நீ எங்கே இருக்கின்றாய்?' என்று கேட்டார் (தொடக்கநூல் 2:8)

நிகழ்வு 2: பெரும் சுழற்காற்று எழுந்து மலைகளைப் பிளந்து பாறைகளைச் சிதறடித்தது. ஆனால் ஆண்டவர் அந்தக் காற்றில் இல்லை. காற்றுக்குப் பின் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்திலும் ஆண்டவர் இருக்கவில்லை. நிலநடுக்கத்திற்குப் பின் தீ கிளம்பிற்று. தீயிலும் ஆண்டவர் இருக்கவில்லை. தீக்குப்பின் அடக்கமான மெல்லிய ஒலி கேட்டது. அதை எலியா கேட்டவுடன் போர்வையினால் தம் முகத்தை மூடிக்கொண்டு வெளியே வந்து குகையின் வாயிலில் நின்றார். அப்பொழுது, 'எலியா! நீ இங்கே என்ன செய்கிறாய்?' என்று ஒரு குரல் கேட்டது (1 அரசர் 19:11-13)

இரண்டு நிகழ்விலும் இறைவனின் குரல் மென்மையாக ஒலிப்பதையே காண்கிறோம். நீ எங்கே இருக்கிறாய்? நீ இங்கே என்ன செய்கிறாய்? என்ற கேள்விகளை கடவுள் நம்மிடமும் எழுப்புகிறார். தன் உருவிலும், சாயலிலும் உடல்கொடுத்து, தன் மூச்சுக் காற்றினால் உயிர்கொடுத்த இறைவனின் குரலைக் கேட்காமல், பாவத்தின் அடையாளமான பாம்பின் குரல் கேட்டதினால் ஆதாமும், ஏவாளும் மரங்களுக்கிடையே ஒளிந்துகொண்டனர். பாம்பின் குரல்கள் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பணத்தின் மீதான, அதிகாரத்தின் மீதான, அதீத ஊனின்பத்தின் மீதான பாம்பின் குரல்கள் எப்போதும் கீச்சிட்டுக் கொண்டுதானிருக்கின்றன. அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள் (தொடக்கநூல் 3;:6). கண்களுக்குக் களிப்பூட்டும் விளம்பர உலகின் கூச்சல்களுக்கு மத்தியில், கடவுளின் மெல்லியக் குரலைக் கேட்கவும் இறைவனின் உதவி வேண்டும். மனம் குழம்பிய நிலையில் இறைவனின் குரலைக் கேட்பது கடினம். அமைதியில் அக்குரல் தெளிவாக நம்மிடம் பேசும். நாம் கடவுளின் தொடர்பு எல்லைக்கு அருகில் தான் இருக்கிறோமா?   

ஆயினும் அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி

மரியா இலாமிச்சை என்னும் கலப்பற்ற விலையுயர்ந்த நறுமணத்தைலம் ஏறக்குறைய முந்நூற்று இருபது கிராம் கொண்டுவந்து இயேசுவின் காலடிகளில் பூசி, அதனைத் தமது கூந்தலால் துடைத்தார். தைலத்தின் நறுமணம் வீடெங்கும் கமழ்ந்தது (யோவான் 12:3). நம் வாழ்க்கை அந்த நறுமணத் தைலத்தைப் போன்றது தான். சில வேளைகளில் அக்குவளையைக் கவிழ்த்துக் இயேசுவின் காலடிகளில் கொட்டிவிடத் தோன்றுகிறதா? என்னைப் பொறுத்தமட்டில் இறையழைத்தல் என்பது அதுதான். எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள் (பிலிப்பியர் 4:2) பெருந்திரளானப் புனிதர்களும், மறைசாட்சிகளும், துறவு வாழ்விலும், இல்லற வாழ்விலும் புனிதம் கண்டவர்களும் கடவுளின் குரலைக் கேட்டுத் தங்கள் வாழ்வை அக்குரலுக்காக அர்ப்பணிக்க முன்வந்தவர்களே!

பெருங்கடலும் அன்பை அணைக்க முடியாது 

வெள்ளப்பெருக்கும் அதை மூழ்கடிக்க இயலாது

அன்புக்காக ஒருவன் தன் வீட்டுச் செல்வங்களை   

எல்லாம் வாரியிறைக்கலாம்;

ஆயினும் அவன் ஏளனம் செய்யப்படுவது உறுதி!

(இனிமை மிகு பாடல்கள் 8:7)