வியாழன், 14 மே, 2020

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை


பற்பல முறையிலும் பல்வேறு வகையிலும் இறைவாக்கினர் வாயிலாகப் பேசிய கடவுள் 'இவ்விறுதி நாட்களில் தம் ஒரே மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்' (எபி 1:1-2). கடவுளின் வார்த்தையாகிய இயேசு மனித உடலெடுத்து நம்மிடையே குடிகொண்டார் (யோவான் 1, 14). தந்தையாம் கடவுளை இயேசுவைப்போல் வெளிப்படுத்த யாராலும் இயலாது. ஏனெனில் இயேசுக் கிறிஸ்துவைக் காண்பது தந்தையைக் காண்பதாகும் (யோவா 14:9). அன்பின், மன்னிப்பின், இரக்கத்தின் கடவுளை நாம் இயேசுவின் வார்த்தைகளிலும், வாழ்விலும் தான் கண்டுகொண்டோம். இறைவார்த்தையே நம் ஆன்மீக வாழ்வின் அடித்தளமும், உயிர்மூச்சும் ஆகும். அந்த வகையில் இறைவனின் மற்றும் நம் அனைவரின் விண்ணக அன்னையாகிய மரியாளை நோக்கி நாம் செய்யும் புகழ்ச்சி செபமாலையும், இறைவார்த்தையை வாழ்வாக்கவே உதவுகின்றது. எப்படி என்று பார்க்கலாமா?

செபமாலையின் செபங்கள்
செபமாலையில் மொத்தம் மூன்று செபங்கள் முதன்மையாகச் சொல்லப்படுகின்றன. 
1. விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே : எனக்கு செபிக்கத் தெரியாது என்று  சொல்லும் மனிதர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.  தெரியாத பல காரியங்களைத் தேடித்தேடி கற்றுக் கொள்ளும் நாம், செபிப்பதற்கும் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இயேசுவே கற்றுத்தந்த இச்செபத்திற்கு இணையாக எதுவும் இருக்க இயலாது. தந்தையே என்ற சொல்லிலேயே என் உள்ளம் பேரன்பின் பூரிப்பால் நிறைந்துவிடுவதால் என்னால் மேற்கொண்டு செபத்தினைச் சொல்ல இயலாமல் போகின்றது. பல மணிநேரங்கள் அந்த ஒரு வார்த்தையிலேயே மனம் குடிகொள்கின்றது என்று சொல்கின்றார் புனித அவிலா தெரசா.
2. அருள் நிறைந்த மரியே வாழ்க! : மனிதன் எப்போது உயிர் வாழத்தொடங்குகிறான்? நாம் நினைப்பது போல் அவன் பிறக்கும் தருணத்தில் அல்ல. மாறாக தன் அன்னையின் கர்ப்பத்தில் கருவாக உருவாகும் போதே மனித வாழ்வு தொடங்குகிறது. ஆனால் கடவுளின் பார்வையில் அதற்கும் முன்பே அவர் நம்மைத் தெரிந்து வைத்துள்ளார். தேர்ந்து கொள்கின்றார். (எரேமியா 1, 5) அப்படியென்றால் இயேசு அன்னை மரியின் திருவயிற்றில் கருவாக உருவான தருணம் தானே மீட்புத்திட்டத்தின் தொடக்கம். அப்புனிதமான மணித்துளியில் கடவுளின் தூதர் கபிரியேல் பதின்பருவம் முடிவுறாதக் கன்னியாகிய மரியாளிடம் கடவுள் ஒப்படைக்கவிருக்கும் திருவுளத்தை நினைந்து வியந்து போகின்றார். அருள் நிறைந்த மரியே வாழ்க என்று புகழ்கிறார். ஆண்டவர் உம்முடனே! எல்லாப் பெண்களிலும் பேரு பெற்றவள் நீர்! என்று வாழ்த்துகிறார். இறை-மனித சங்கமம் நிகழும் புனித நேரத்தில் கடவுளின் தூதரால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளை நாம் மூச்சுக்கொரு முறை செபித்தாலும் மிகையாகாது தானே!
3. பிதாவுக்கும், சுதனுக்கும், பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக!
தூய தமத்திருத்துவ புகழ்ச்சி செபம் என்று அறியப்படும் இச்செபமானது இறைவனைப் பற்றி நாம் அறிந்து கொள்ள அவசியமான அனைத்து மறைஉண்மைகளையும் தன்னகத்தேக் கொண்டுள்ளது. ஒரே கடவுள் மூன்று ஆட்களாகத் திகழும் தமத்திருத்துவத்தைப் புகழ்ந்து, ஆராதித்து, வணங்கும் இச்சிறிய செபம் மிகுந்த வல்லமையுள்ளதாகத் திருச்சபை வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே அறியப்படுகின்றது. 

செபமாலையின் மறை உண்மைகள்
பாரம்பரியமாக செபமாலையில் மகிழ்ச்சி, துக்கம், மகிமை, ஒளி என்னும் நான்கு மறை உண்மைகள் தியானிக்கப்படுகின்றன. இந்த மறை உண்மைகள் அனைத்துமே இயேசுவின் வாழ்வு, பணி, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்னும் மீட்பின் செய்திகளையே உள்ளடக்கியுள்ளன. வெறுமனே மேற்சொன்ன மூன்று செபங்களைக் கடமைக்குத் திரும்பத்திரும்பச் சொல்வது செபமாலை செபிப்பதன் நோக்கமல்ல. மாறாக செபிக்கும் போது நாம் இறைவனில் இரண்டறக் கலக்க வேண்டும். ஒவ்வொரு மறை உண்மையும், ஒவ்வொரு செபமும் இறைவார்த்தையைத் தாங்கி வருவதால் மிகுந்த கவனத்துடனும், ஆராதனை உணர்வுடனும் செபிக்க வேண்டும். மேலும் இரக்கத்தின் இயேசு, ஆறுதல் தரும் ஆண்டவர், குணப்படுத்தும் கடவுள் என்று  இயேசுவின் பணிவாழ்விலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளைத் தொகுத்து மறைஉண்மைகளாக அவ்வப்போது செபிக்கலாம். ஒவ்வொரு மறை உண்மைக்குப் பின்னரும் அந்நிகழ்வு சுட்டும் இறைவார்த்தையை வாசித்தும் தியானிக்கலாம். 

இறைவார்த்தையை வாழ்வாக்க உதவும் செபமாலை
அன்னை மரியாள் இறைவார்த்தையைக் கருவில் தாங்கிய புதிய உடன்படிக்கைப் பேழையாகத் திகழ்ந்தாள். அந்த இறைவார்த்தையே அவளை அருள் மிகப் பெற்றவள் ஆக்கிற்று. என் ஆன்மா ஆண்டவரை ஏற்றிப் போற்றுகின்றது என்று அவரைப் புகழ்ச்சிப்பண்ணிசைக்க வைத்தது. இறைவன் ஏழை, எளியோரின் சார்பாக நிற்கின்றார். அவர்களைக் கைத்தூக்கி விடுகின்றார் என்று அவர் அனுபவப்பூர்வமாகக் கண்டுணர்கின்றார். தானும் அப்பணியினைச் செய்யும் போது இறைவனின் பணியையேச் செய்கின்றோம் என்னும் எண்ணத்துடன் விரைந்து சென்று முதிர்வயதில் கருவுற்றிருக்கும் எலிசபெத்து என்னும் தன் உறவினருக்கு உதவுகின்றார். மகிழ்ச்சியின் இரசம் தீர்ந்து விட்ட திருமண வாழ்விற்கு, மீண்டும் மகிழ்ச்சியளிக்கத் தம் ஒரே மகனிடம் பரிந்து பேசுகின்றார். உடனிருந்து உணவு பகிர்ந்துண்ட சீடர்களே பயந்து ஓடிவிட, சிலுவையில் குருதியில் நனைந்து செம்மலராகத் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசுவின் பாதங்களைத் தாங்கிக்கொள்கிறாள். யூதர்களுக்குப் பயந்து மூடிய அறையில் முடங்கிக்கிடந்த தொடக்கத் திருச்சபையின் மையமாக அமர்ந்து செபத்தால் அவர்களை உறுதிபடுத்துகிறார். மீண்டும் ஒருமுறை தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகிறார். பாருங்கள்! இறைவார்த்தையால் ஆட்கொள்ளப்பட்டவரின் வாழ்வு எத்தகைய ஆற்றல் மிக்கதாகத் திகழ்கின்றது என்று! மூவொரு கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மீட்பின் பாத்திரமாகிய அன்னை மரியாள் உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகம் எடுத்துக்கொள்ளப்பட்டு, விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டப்பட்டு மீட்கப்பட்டோரின் முன்னோடியாக, பாவிகளுக்காக இடையறாது பரிந்து பேசுகின்றார். செபமாலையில் இறைவார்த்தையைத் தியானிக்கும் போது நாமும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுகின்றோம். கடவுளின் பணியைச் செய்யும் ஆர்வமும், வேட்கையும் நம்மை உயிரோட்டமுள்ள மனிதர்களாக மாற்றுகின்றது. ஆகவே அன்றாடம் செபித்து வாழ்வாக்குவோம் அரிய பொக்கிஷமாகியத் திருச்செபமாலையை!