வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம்

மன்னர்  ஒருவர் ஒரு புத்தகம் எழுதினார். இந்தப் புத்தகம் எப்படி இருந்தது என்று சுருக்கமாக எழுதித்தருமாறு தன் நாட்டிலுள்ள அறிஞர் பெருமக்களிடம் கேட்டுக்கொண்டார். எல்லோரும் புத்தகத்தைப் ஆஹா ஓஹோ என்று புகழந்து தள்ளினர். ஆனால் ஒரே ஒரு அறிஞரின் விமர்சனம் மட்டும் கொஞ்சம் வித்தியாசமானதாக இருந்தது. அவர் இவ்வாறு எழுதியிருந்தார். 'இந்தப் புத்தகம் மன்னரால் எழுதப்பட்டமையால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. இல்லையென்றால் விமர்சனத்திற்குத் தகுதியற்றது' என்று. நம் நாட்டில் மக்களாட்சியின் மன்னர்களும் இப்படிப்பட்டக் கேள்விகளை அவ்வப்போது எழுப்புகிறார்கள். ஆனால் பதிலையும் அவர்களே தீர்மானிக்கின்றனர். விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே தங்களைக் காட்டிக்கொள்கிறார்கள். 

எல்லா எளிய கேள்விகளும்  ஓர் எளிய பதிலைக் கோரி நிற்கின்றன என்று கூற முடியாது. சில கேள்விகள் அறிந்து கொள்வதற்கான ஆவலில் எழுபவை. சில கேள்விகள் அறியாமையிலிருந்து எழுபவை. சில கேள்விகள் எதிராளியைக் கொல்வதற்காக எறியப்படும் ஏவுகணைகள். நாம் எத்தகையவர்கள் என்பதை நாம் எழுப்பும் கேள்விகளைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியும்.

ஒருவர் தனது அதிகாரத்திற்கு கீழ் வருகிறார் என்பதை அவ்வப்போது அந்த நபருக்குத் உறுதிப்படுத்த வேண்டும் என்பதற்காக சிலர் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் அதனைத் தங்களுக்குத் தாங்களே உறுதிப்படுத்திக்கொள்கிறார்கள். பதில் சொல்ல வேண்டியவர் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியிலும், கேள்வி கேட்டவர் பதட்டமடைகிறார். தான் எதிர்பார்க்கும் பதில், தான் எதிர்பார்க்கும் தொனியில் வரவேண்டுமென்று நினைக்கிறார். அந்தப் பதிலுக்காக உண்மை, நீதி, இரக்கம் போன்ற எந்த மதிப்பீடுகளையும் விற்கத் தயாராக இருக்கிறார்கள். இருப்பினும் என்ன பதில் வந்தாலும் சிலரது பதிலில் அவர்களுக்குத் திருப்தி வருவதேயில்லை. அப்படியென்றால் சொல்லுங்கள் உண்மையிலேயே அதிகாரம் யாரிடம் இருக்கிறது? கேள்வி கேட்டவரிடமா? இல்லை பதில் சொல்பவரிடமா?

இயேசு வித்தியாசமான மனிதர். பிறரது பதிலைக் கொண்டு தனது அதிகாரத்தை உறுதி செய்து கொள்ள அவர் விரும்பவில்லை. அவரைக் கொல்ல வந்தவர்களிடம், 'யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார்?' அவர்கள் நாசரேத்து இயேசுவைத் தேடுகிறோம்' என்றார்கள். இயேசு அவர்களின் பதிலால் அச்சமடையவோ, பதற்றமடையவோ இல்லை. அவர் நினைத்திருந்தால் அப்படி யாரும் இங்கு இல்லை என்று சொல்லி கூட தப்பித்திருக்காலம்.  ஆனால் இயேசு, 'நான் தான் என்று உங்களிடம் சொன்னேனே. நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்றால் இவர்களைப் போகவிடுங்கள்' என்று எந்தத் தயக்கமும் இன்றி துணிச்சலாக பதிலளிக்கிறார். (யோவன் 18:7-8)

அதற்கடுத்த நிகழ்விலே 'பிலாத்து இயேசுவிடம் 'நீ எங்கிருந்து வந்தவன்?' என்று கேட்டான். ஆனால் இயேசு அவனுக்குப் பதில் கூறவில்லை. அப்போது பிலாத்து, 'என்னோடு பேசமாட்டாயா? உன்னை விடுதலை செய்யவும் எனக்கு அதிகாரம் உண்டு உன்னை சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்பது உனக்குத் தெரியாதா?' என்றான். (யோவன் 19:9-10). இயேசு குற்றமற்றவர் என்பது பிலாத்துவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. ஆனால் அவனது அக்கறை உண்மையோ, நீதியோ அல்லது இரக்கமோ அல்ல. அதிகாரம். அது ஒன்றுதான் அவனுக்கு எல்லாம். தனது அதிகாரத்தை இயேசுவின் பதிலைக்  கொண்டு உறுதிபடுத்த விரும்பினான். இயேசு பிலாத்து விரும்பியப் பதிலைத் தரவில்லை. பிலாத்துக்கள் விரும்பும் பதிலை இயேசு ஒரு போதும் தரப்போவதில்லை.