ஞாயிறு, 18 அக்டோபர், 2020

சங்கிகள், தம்பிகள் மற்றும் பெந்தகோஸ்து பிரதர்கள்

தெருவில் விளையாடிய மூன்று சிறுவர்கள் ஒரு மரப்பொந்தில் மூன்று முட்டைகளைப் பார்க்கின்றனர். காவி, பச்சை, வெள்ளை என்று ஒவ்வொன்றும் ஒரு நிறம். அடித்துப்பிடித்து ஒவ்வொருவனும் ஒரு முட்டையை எடுத்துக்கொள்கின்றனர். உடனே உடைத்து வாயில் விட்ட பிறகுதான் தெரிந்தது மூன்றும் கூமுட்டைகள் என்று. நிறம் மட்டும் தான் வேறாகவும், குணம் எல்லாம் ஒன்றாகவும் இருக்கும் மூன்று தரப்பினரைப் பற்றியது தான் இக்கட்டுரை. 

சிறுவயதிலிருந்தே ஒரு நபரைத் தெரியும். ஒரு இந்து நண்பராகத்தான் அறிமுகம்.  ஆனால் மிகுந்த கால இடைவெளியில் தான் அவரை சந்திப்பதுண்டு. குருமடத்திலிருந்து விடுமுறைக்கு வரும்போது எங்கு பார்த்தாலும் நின்று பேசாமல் செல்ல மாட்டார். எப்போதும் ஒருவித ஆச்சர்யத்தோடும், தயக்கத்தோடும் நிறைய கேள்விகள் கேட்பார். அவரது பணிவான உடல்மொழியாலும், நம்மை வானதூதர் அளவுக்கு வைத்துப் பேசுவதையும் தாங்க முடியாமல் அவரைக் கண்டாலே ஓடிவிடுவதுதான் வாடிக்கையாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கும் போது அவரிடம் ஒரு தன்னம்பிக்கை ஒளி தென்பட்டதைக் கவனித்தேன். பழைய சமஸ்கிருதம் - தமிழ் கலந்த (தேவ பாசை) பைபிள் மொழியில் நிறைய வசனங்களைக் கூறி விளக்கம் கேட்டார். எந்தப் பதிலிலும் ஒரு திருப்தியற்று, சரி அதை விடுங்கள், என்று அடுத்தக் கேள்விக்குத் தாவினார். தப்பித்துப் பிழைத்தேன் என்று தான் ஞாபகம். கடந்த வருடம் இன்னும் மாறிவிட்டிருந்தார். வழியில் நிறுத்தி, தம்பி கொஞ்சம் நில்லுங்கள்! கர்த்தர் உங்களை அழைக்கிறார். நீங்கள் உடனே கிறிஸ்தவராக மாறவேண்டும் என்றார். ஒருமாதிரி முழித்தேன். கர்த்தருக்குள் நீங்கள் முழுக்கு ஞானஸ்நானம் பெற வேண்டும். சிலை வழிபாட்டை விட வேண்டும். சாத்தானின் பாதையிலிருந்து விலகி ஆவிக்குள் வர வேண்டும் என்றார். முற்றிலும் மூளைச்சலவை செய்யப்பட்டு வேறொரு ஆளாக நிற்கும்  அந்த மனிதரின் பரிணாம வளர்ச்சியைப் பார்த்து வியந்துவிட்டேன். 

இதே மாற்றத்தை சீமானின் தம்பிகளாக மாறியிருக்கும் சில நண்பர்களிடம் பார்க்கிறேன். எல்லோருக்கும் ஒரு அரசியல் தரப்பு பிடித்தமானதாக இருக்கலாம். எனக்கு திராவிட முன்னேற்றக் கழகம் இருப்பது போல. ஆனால் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் தமிழ் இனத்தின் கட்சி என்றும், மற்றவை எல்லாம் வந்தேறிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், மராத்தியர்கள் கட்சி என்று சொல்வதையும் எப்படி ஏற்றுக் கொள்வது? தமிழகத்திலிருந்து சென்றிருக்கும் 30 எம்.பி.க்களில் 39 பேர் தமிழர் அல்லாதவர் என்று ஒரு படித்த அண்ணன் சொன்னார். தங்கமான மனிதர். தேடிப்போனால் அவரே சமைத்து சாப்பாடு போடாமல் விடமாட்டார். ஏதாவது ஒரு ப்ரூப் காட்டுங்க என்று சீரியசான முகத்தோடு கேட்டேன். வாட்ஸ்-அப்பைத் திறந்து ஒரு அகல விரித்த கையோடு மைக் முன் நிற்கும் சீமானின் முகம் கொண்ட ஒரு மீம் எடுத்துக் காட்டினார். இப்போது அடக்க முடியாமல் சிரித்துவிட்டேன். அவர் முகம் சட்டென்று மாறிவிட்டது. அவரது அரசியல் நிலைப்பாடு நன்றாகத் தெரியும் என்பதால் அவரோடு விவாதிப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தும் சில வேளைகளில் காமெடியாகிப் போய்விடுகிறது. 

இன்னொரு சொந்தக் கார மனிதரும் சில நாட்களாக முகநூலில் சீமானிசத்தில் திளைத்திருப்பதைக் கவனித்தேன். ஒரு நாள் அவர் பகிர்ந்த ஒரு உணர்ச்சிகர மீம்-க்கு கீழே சீமானைச் சிரிதாகக் கலாய்த்துவிட்டேன். வாட்சப்பில் பத்து மெசேஜ் அனுப்பினாலும் வேலைப்பளுவால் பதிலே வராது. ஆனால் அந்தக் கமெண்டுக்கு ஒரு பத்து முழத்திற்கு உணர்ச்சியைக் கொட்டியிருந்தார். அதோடு விட்டிருக்கலாம். நமக்கு சனி. அடுத்த நாளும் சீமானின் இன்னொரு வீடியோவைப் பகிர்ந்திருந்தார். அதில் சீமான் தன் தம்பிகளுக்கு உணர்ச்சிப் பாலூட்டிக்கொண்டிருந்தார். ஒரே இரவில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்த மோடி அவர்களால் (மிகுந்த மரியாதையோடு) ஏன் ஒரே இரவில் சாதி இல்லை என்று அறிவிக்க முடியாது என்பது தான் சாரம். நான் கமென்டில் அது எப்படிங்க சாத்தியம்? வாயைத் திறந்தா பொய்! என்று எழுதினேன். (பிரபாகரன் அனுப்பிய 29 கிலோ ஆமைக்கறி, சீமானின் விருப்ப சாப்பாட்டைத் தெரிந்துகொள்ள பிரபாகரனால் நியமிக்கப்பட்ட ஒரு தனிச்செயலாளர் விடுதலைப் புலி- ஒளிஞ்சி இருந்து பாப்பாரு போல, காளிமுத்து காளிமுத்து-னு கூவும் ஆஸ்திரேலிய கிளி, அரிசி கப்பலைச் சுட்டு சுடப் பழகியது - சத்தியமாக இது எதுவும் எழுதவேயில்லை). கடைசியாக வாய்நிறைய வாங்கிக் கட்டிக் கொண்டது திமுக தலைவர் ஸ்டாலின் தான். சாரி சார். என்னால தானே எல்லாம்!

சீமானின் அரசியல் வரலாறே பத்து சொச்சம் ஆண்டுகள் தான். இதுவரையில் தமிழகத்தில் அவர் அடைந்திருக்கும் அரசியல் வெற்றி ஒரு வார்டு மெம்பர் மட்டுமே. ஆனால் அவர்தான் நாளையத் தமிழகத்தின் விடிவெள்ளி என்ற நம்பிக்கைக்கு ஒரு நபர் வர முடிகிறது என்றால் அதற்கு பின்னால் என்ன இருக்கிறது? உணர்ச்சியைத் தூண்ட வேண்டும். கூசாமல் பொய் சொல்ல வேண்டும்.  

பின்குறிப்பு: சங்கிகளைப் பற்றி நான் புதிதாக எழுத என்ன இருக்கிறது? நீங்களே கனெக்ட் பண்ணிக்கோங்க! 

(அடுத்தக் கட்டுரை - சீமானிசம் என்னும் பொய்க்குவியல்)


புதன், 14 அக்டோபர், 2020

கொஞ்சம் அரசியல் பேசலாமென்று...

ஒவ்வொரு நாளும் எத்தனை பிரச்சனைகள் வந்து நம் தலைமேல் விடிகின்றன. யோசித்துப் பாருங்கள்! ம்! பெருமூச்சு விடுவீர்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நம் இந்திய அரசியல் நிலவரம் ஒரே கலவரமாகவே (களேபரம்?) இருக்கிறது. காங்கிரஸின் கடைசி ஆண்டுகளில் தொடங்கி இன்று வரை ஒரு டைம்-லேப்ஸ் வீடியோ செய்தால் எத்தனை எத்தனை கன்டென்டுகள் கிட்டும்! ஊழல்-ஊழல் என்று அன்னா கசாரே போட்ட கூச்சலில் ஆட்சிக் கட்டிலுக்கு காவி நிறமடிக்கப்பட்டது. கமிஷன் முடிந்ததும் கசாரே கரை ஒதுங்கிவிட்டார். கூடச் சேர்ந்து கூவிய கெசுரிவால் தலைநகரின் தலைவரானார். 2002 இல் நடந்த குஜராத் கலவத்தின் மோடி மாடலை 2020 இல் டில்லியில் பரிசோதித்துப் பார்த்த நல்லவர். உத்திரபிரதேச பூர்வக்குடிச் சிறுமி கழுத்தெலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, பெற்றோருக்கு உடலைக்கூடக் காட்டாமல் உ.பி. அரசு ஏவலர்களால் எரிக்கப்பட்ட நிலையில், ஆறுதல் சொல்லப்போன காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு "இதை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்" என்று அறிவுரை கூறுகிறார். 

காய்ச்சலா? தலைவலியா? எயிட்ஸா? கொரோனாவா? இருக்கவே இருக்கு சர்வரோக நிவாரணி மாட்டு மூத்திரம் என்று உலக அரங்கில் இந்தியான்னா ரெண்டு கொம்பாக்கும் என்று மாடு தட்டி அறிவித்தது இந்த அரசு. அது மட்டுமா? சாட்டிலைட்டில் பிரச்சனை என்று சர்வதேசமும் சஞ்சலமடைந்தாலும் நாம் பாபா ராம் தேவின் கோமணாசனா பொசிசனில் அமர்ந்து சளைக்காமல் சொன்னோம் 'சாணியே மருந்து?. கதிர்வீச்சு என்றால் காளைச்சாணி. கடலுக்கு அந்தப் பக்கம் கோமாதாவின் கறியை ஏற்றுமதி செய்து காசுபார்த்துவிட்டு, உள்ளுர் காரனின் அடுப்பங்கரையில் மாட்டுக்கறி இருந்தது என்று சொல்லி அவனை இழுத்து தெருவில் போட்டு அடித்துக்கொன்றார்கள். அதன் பிறகு இறைச்சிக்கு நடத்தப்பட்ட டி.என்.ஏ பரிசோதனையில் அது அந்தக் கறி "மே..மே.." என்று கத்தியது. அடப்பாவிகளா! 

கறுப்புப் பணத்தைப் பிடிக்கப்போறேன்னு கௌம்பி பெரிய பெரிய பணமான ஆயிரம், ஐநூறு தாள்களை எல்லாம் பிடிங்கிட்டு, கலர் கலரா 2000 நோட்டு அடிச்சி கொடுத்து ஒரு ட்விஸ்ட் வச்சாங்க பாருங்க! வரலாற்றின் சுவர்களில் கறிக்கொட்டையால் எழுதப்பட வேண்டிய அவமானம். காந்தி மகான் கண்ட கண்ணிய பூமியிதுன்னுதான் நமக்கு சொல்லிக்கொடுத்தாங்க! அப்படியே உல்டாவா அவரைக் கொன்ன கோட்சேவுக்கு கோவில் கட்டிட்டாங்க! மாட்டுக்கறி, மூத்திரம், சாணம் பாகிஸ்தான், தேசத் துரோகம், சீனா இப்படி உணர்ச்சியத் தூண்டித் தூண்டியே ஜாலியா பாயிங்களோட பக்ரைன் உட்பட 60 நாடுகளில் போயி  அது-இது-எது மாதிரியான படத்துணுக்குகளில் பெர்பாமன்ஸ் பண்ணிட்டு வந்துட்டார் நம்ம ஜீ. கொரானாவால 8500 கோடிக்கு வாங்குன விமான டயரில் வச்ச லெமன் இன்னும் நசுங்காமலே இருக்கு. சோகத்துல அந்து ஆளு தாடி வச்சிக்கிட்டு அலையுறாரு. அறச்சினத்துல பொங்கி நம்ம மீடியா காரங்க ராகுல் காந்திய பிடிச்சி கேட்டாங்க பாருங்க ஒரு கேள்வி: டிராக்டருக்கு எதுக்கு குசன் வச்சீங்க?

தொடரும்...

திங்கள், 5 அக்டோபர், 2020

யாவரும் கேளிர்!


கடந்த வாரம் புதன் கிழமை! ரோமிலிருந்து செரினோலா வந்து கொண்டிருந்தேன். மாடிப்பேருந்தின் மேல் பகுதியில் இடதுபுறம் ஒரு சன்னலோர இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. மதியம் 4 மணிக்கு பேருந்து திபுர்த்தினா நிலையத்திலிருந்து ஆமை தன் வீட்டைச் சுமந்துகொண்டு செல்வது போல அசைந்து நகரத் தொடங்கியது. கொரோனா காலம் என்பதால் பயணிகள் அமர வேண்டிய இருக்கையில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் வெண்ணிற உறையிட்டிருந்தார்கள். பக்கத்து இருக்கையைக் காலியாக விட்டிருந்தார்கள். 

பேருந்து அவ்வப்போது பெருமூச்சு விட்டுக்கொண்டு முன்னோக்கி விரைந்துகொண்டிருந்தது. அப்பொழுதுதான் கவனித்தேன். எனது முன் இருக்கையில் ஒரு நபர் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தார். அவருக்கு ஒதுக்கப்பட்ட உறையிடப்பட்ட இருக்கையில் அமராமல் சன்னலோரத்தில் சாய்ந்து கொண்டு, இருமும் போது மட்டும் அந்த இடுக்கில் முகத்தை என் பக்கம் திருப்பிக்கொள்வார். பார்ப்பதற்கு பங்களாதேசி போலிருந்தார். அவரிடம் மெதுவாக "ஸ்கூசி, ஸ்கூசி" (மன்னிக்கவும்! மன்னிக்கவும்) என்று பவ்யமாகக் கூப்பிட்டு, வலது பக்கத்தில் உறையிடப்பட்ட இருக்கையில் இருக்குமாறு கூறினேன். முதலில் நான் சொல்வது காதில் விழாதது போல அப்படியே இருந்தார். பிறகு வேகமாக ஒரு யூ-டர்ன் போட்டுத் திரும்பி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு இரு" என்றார். "இல்லை தாங்கள் செய்வது தவறு! நடத்துனர் பார்த்தால் திட்டுவார்" என்றேன். அவர் கண்டுகொள்ளவே இல்லை. 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் கூட விதிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் அது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று என்னுள் ஒரு சினம் எழுந்தது. நடத்துனரிடம் சென்று முறையிடப்போவதாச் சொன்னேன். யாரிடமும் சொல் என்னும் தொனியில் ஒரு சூயிங்கத்தைச் "சவுக், சவுக்"கென்று சவைத்துக்கொண்டே ஒரு ஏளனப்பார்வை பார்த்தார். எழுந்து சென்று படியிறங்கி, கீழே ஓட்டுநரிடம் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டிருந்த நடத்துனரை இடைமறித்து விவரத்தை சொன்னேன். அவரும் வந்தார். அந்த நபரிடம் கடுமையானக் குரலில் இருக்கையை மாற்றி அமருமாரு கூறினார். அதற்கு அவர், "நீங்கள்தான் எனக்கு கட்டளையிட வேண்டும்! அவனல்ல!" என்று திரும்பத் திரும்பக் கூறினார். நடத்துனர் கடுப்பாகி "அவர் செய்தது மிகச்சரி. நீ உடனடியாக இருக்கையை மாற்று! அல்லது இறக்கிவிடப்படுவாய்" என்றார். 

வேறுவழியில்லாமல் இடம் மாறி அமர்ந்துவிட்டு, "இப்ப உனக்கு மகிழ்ச்சியா? நாப்பொலியில் பார்த்துக்கொள்கிறேன்!" என்றார். நாங்கள் நாப்பொலி என்னுமிடத்தில் இறங்கி வேறு பேருந்து மாறவேண்டியிருந்தது. திருட்டு, மிரட்டி பணம் பறித்தல், ரவுடியிசம் போன்றவற்றிற்கு பெயர் போன ஊர் நாப்பொலி. உடனடியாக இரண்டு மூன்று போன் பேசினார். கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எனது கைப்பையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். மணி பர்ஸ் மற்றும் பிற டாக்குமென்டஸ் எல்லாம் லக்கேஜில் இருந்தது. நினைவுபடுத்திக்கொண்டேன்.

சிறிது நேர பயணத்திற்குப் பிறகு திரும்பி என்னிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். "எந்த நாடு" என்றார். நான் பதில் சொல்லவில்லை. "போனில் தமிழில் பேசினாய் என்று நினைக்கிறேன். இலங்கையா?" என்றார். பயத்திலும், பதில் சொல்ல விரும்பாமலும் "ஆமாம்" என்றேன். உடனே அவர் "நானும் இலங்கைதான். ஆனால் தமிழ் இல்லை. நீ இலங்கையில் எந்த இடம்?" என்றார். நான் "கொழும்பு" என்றேன். அவர் ஏதோ ஒரு ஊர் பெயர் சொன்னார். நான் மிகவும் குழம்பிவிட்டேன். பின் "இத்தாலியில் எந்த இடத்தில் இருக்கிறாய்?" என்றார். நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து "உங்களிடம் என் தனிப்பட்ட விசயங்களைச் சொல்ல விரும்பவில்லை" என்றேன். அவர் "பயப்படாதே! பழையதை மறந்துவிடு! நாம் இருவரும் ஒரே நாட்டினர். அதனால்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். என்ன வேலை செய்கிறாய்?" என்றார். "நான் சொல்ல விரும்பவில்லை. உன்னிடம் பணிவாகத்தான் சொன்னேன். ஆனால் உனக்குக் கட்டளையிட்டதாகப் புரிந்துகொண்டு தகராறு பண்ணினாய். ஆகவே உன்னிடம் பேச விரும்பவில்லை" என்றேன். பத்துநிமிடம் பேருந்து ஒரு தேநீர் விடுதியில் நிற்கும் என்று நடத்துனர் அறிவித்தார். 

கீழே இறங்கியதும் வாசலில் எனக்காக அந்த நபர் காத்திருந்தார். "காபி குடிக்கிறாயா?" என்றார். நான் காபி குடிப்பதில்லை என்று முறித்துப் பதில் சொன்னேன். கழிப்பறை பயன்படுத்திவிட்டு வருவதைப் பார்த்து அந்த நபர் "பேருந்திலேயே கழிப்பறை இருக்கிறதே" என்றார். "நான் இல்லை விடுதியில் சுத்தமாக இருக்கும்" என்றேன். அவர் ஆயிரம் பேர் பயன்படுத்தும் இடமா சுத்தமாக இருக்கும்? என்று ஏதேதோ பேச்சிழுத்துக்கொண்டே இருந்தார். நான் முகம் கொடுக்காமல் எனது இருக்கைக்கு வந்தமர்ந்தேன். 

நாப்பொலியில் பேருந்து மாறவேண்டும். கைப்பையை பலமுறை செக் செய்து தோளில் மாட்டிக்கொண்டேன். பேருந்தின் வயிறு திறந்திருந்தது. மறக்காமல் எனது லக்கேஜை எடுத்து, ஸிப் எல்லாம் சரியாக மூடியிருக்கிறதா? என்று செக் செய்து கொண்டு விறுவறுவென்று நடக்க ஆரம்பித்தேன். அந்த நபரும் என் பின்னாலேயே வந்தார். அடுத்த பேருந்தில் கீழறையில் லக்கேஜை வைத்துவிட்டு எனது இருக்கையில் வந்தமர்ந்தேன். இன்னும் இரண்டு மணி நேரப் பயணம். இரவு 9.10 மணிக்கு செரினோலா வந்தடைந்தது. 

மென் துயிலில் திளைத்துக்கொண்டிருந்த என்னை நடத்துனரின் கரகர குரல் எழுப்பிவிட்டது. இரண்டு மூன்று பேர்கள் மட்டும் தான் இந்த நிறுத்தத்தில் இறங்க வேண்டியிருந்தது. சாலையில் மறுபக்கம் என்னை அழைத்துச்செல்ல சகோதரர் லூயிஜி நின்றுகொண்டு, என்னைப் பார்த்துவிட்டார் என்ற அர்த்தத்தில் கையசைத்துக்கொண்டிருந்தார். வேகமாக எழுந்து கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு பேருந்திலிருந்து இறங்கினேன். அந்த நபரிடம் நான் விடைபெறவில்லை. ஒருவித அலட்சியத்தோடும், எரிச்சலோடும் முகத்தைத் திருப்பிக்கொண்டு பிசியான அந்த சாலையை சட்டென்று கடந்து காரில் ஏறிக்கொண்டேன். 

கார் கிளம்பவும் தான் நெஞ்சே அடைத்துவிடும் படி திக்கென்று நினைவுக்கு வந்தது. லக்கேஜ் எடுக்கவில்லை. லூயிஜி காரை நிறுத்தினான். தூரத்தில் பேருந்து இன்னும் நின்றுகொண்டிருப்பதைப் பார்த்து கொஞ்சம் நிம்மதியோடும், மறதியை நினைத்து வெட்கத்தோடும் ஓடினேன். அங்கு பேருந்து எனக்காக காத்திருந்தது. அந்த நபருக்கும், நடத்துனருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது. "இது என் சகோதரனின் பை. அவன் எப்படியும் வந்துவிடுவான். ஒரு நிமிடம் காத்திருங்கள்" என்று சொல்லிக்கொண்டிருந்தான் அந்த பெயர் தெரியாத சகோதரன்.