ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 2)

அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்!

நீ இறந்து விட்டதாக பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. நான் அதை நம்பவில்லை. நான் ஏன் அதை நம்ப வேண்டும்? எத்தனையோ மாவீர்ர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அலெக்ஸாண்டர், அக்பர், வீர சிவாஜி, சேர, சோழ, பாண்டியன் இவர்கள் எல்லாம் இன்னும் இறக்காமல் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்து வாழ்வது போலவே, நீயும், உனது ஆறு நாள் உறைபனி வாழ்வும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசப்படும் என்று நான் நம்புவததால் நீ இறந்துவிட்டாய் என்ற செய்தியை நான் நம்பவில்லை.

சியாச்சின் மலை உச்சி. இந்த இடம் முதன் முதலாக என் கற்பனைக் கண்ணுக்கு எட்டியது, பேராசிரியர் பெர்னாட்ஷா கூறிய போதுதான். அவரது மகனும் அத்தகைய ஓர் இடத்தில் பணியாற்றுவதைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்ததாக ஓர் ஞாபகம். அப்போது நான் மதுரை அருளானந்தர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். 

மிகவும் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, தெருவிளக்கில் பாடம் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அவர் கல்லூரி பேராசிரியர் ஆகும் வரையிலான அவரது கதைகள் நம்பிக்கையின் ஊற்றுக்கள். மிகவும் எளிமையானவராக, மாணவர்களுக்கு நண்பராக, கனிவோடு பழகுபவர். எனக்குத் தெரிந்து அவர் பெருமை பாராட்டுவதெல்லாம், அவரது மாணவர்களின் வெற்றியைப் பற்றித்தான். குறிப்பாக 'காதல்', 'வழக்கு எண்' போன்ற தமிழகத் திரைப்படங்களின் போக்கினை மாற்றிய படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது மாணவன் என்பதை எந்தப் பாடத்திற்கு இடையிலும் நாசூக்காகச் செருகிவிடுவார். இதை இப்போது உனக்குச் சொல்லக் காரணம் அவரும் உன்னைப் பேலவே ஒரு எளிமையானத் தொடக்கம் கொண்டு வலிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். உன்னைப் போலவே நம்பிக்கைக் கொடுப்பவர். உன் தம்பி, தங்கைகள் மாண்புடன் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, அவர்களைத் தட்டிக்கொடுக்க நிறைய பெர்னாட்ஷாக்களை உன் தாய்நாடு கொண்டிருக்கிறது. என் சகோதரா நீ அமைதியில் இளைப்பாறு!

இன்னும் உன்னோடு பேச விரும்புகிறேன்.

வியாழன், 18 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 1)

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! 
உன்னை எங்கள் சகோதரனாகக் கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு அந்தப் பெருமையைத் தந்து விட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே! நாம் இன்னொரு உலகத்தில் நிச்சயம் சந்திப்போம் என்று நம்புகிறேன். அப்போது உனக்கு எங்கள் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். 

சியாச்சின் மலை உச்சியில் பசி கொண்ட பனிப்பாறைகள் உன்னையும் இன்னும் ஒன்பது வீரர்களையும் விழுங்கி விட்ட செய்தி கேட்டு நாங்களும் உங்களைப் போலவே உறைந்து விட்டோம். ஆறு நாள்களுக்குப் பின்னர், எல்லாம் முடிந்துவிட்டதென்ற அனுமானிக்கப்பட்டச் செய்தி வந்தது. சில மணி நேரத்திலேயே, ஹனுமந்த் மட்டும் இன்னும் தன் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறான் என்றதும் இந்த உலகமே மெய்சிலிர்த்துப் போனது. இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்ற உபரிச் செய்தியினால், இந்தியாவின் உதடுகள் நீ மீண்டு வரவேண்டுமென்று அதற்கு தெரிந்த எல்லா மொழிகளிலும், அதில் இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் இரந்துகொண்டிருந்தது. நிர்பயா என்னும் நம் சகோதரி டில்லியில் வல்லுறவு செய்யப்பட்டு, கயவர்களால் சிதைக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், நாம் கையறு நிலையில் செபம்தான் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நமது நீதிமன்றங்கள் நம்மை ஏமாற்றுவது போலவே, கடவுளின் கருணை மன்றங்களும் நம்மை வஞ்சித்துவிடுகின்றன. பனிப் பாறைகளில் ஆய்வு செய்த அறிஞர்களெல்லாம் என்னென்ன காரணங்கள் சொன்னாலும், 35 அடி ஆழத்தில், சுழியிலிருந்து (-)40 பாகை குறைவான உறைபனியில், ஆறு நாள்கள் உன்னால் உன் உயிரைப் பிடித்து வைத்திருக்க முடிந்ததென்பதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

என்ன நினைத்து கொண்டிருந்தாய் எம் சகோதரா? பனிமலையின் வயிற்றுக்குள் ஆறு நாள்கள் என்று சொல்வதைவிட, பகலேயில்லாத பன்னிரண்டு இரவுகளை அல்லவா நீ உயிரோடு கடந்துவிட்டாய்? நினைத்தாலே மூர்ச்சையாகிவிடுகிறது நெஞ்சம். அந்த நேரத்தில், பனி உருகுவது போல், உயிர் உருகிக்கொண்டிருந்த ரண கணத்தில், சகோதரா யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாய். இந்தியத் தாயின் தலை மிதித்து எதிரிகள் நுழையாமல் நீ மதிலாய் நின்று கொண்டிருந்தாயே! பனிமலைக்குள்ளும் பாரதத்தைக் காக்கும் வேட்கையுள்ள வேங்கையைத் தன் பனிக்குடத்தில் சுமந்த உன் பாசத்தாய்க்கு இதைவிட எந்த பெருமையை நீ பெற்றுத்தர முடியும்! முடியாத இருட்டுக்குள் முடங்கி விடாமல், இதுவும் விடியும் என்று விழித்திருந்தாயே! இந்த நம்பிக்கையைத் தந்த உன் தந்தைக்கு இதுவல்லவோ மணிமகுடம். நீ  விட்டது உன் கட்டுக்குள் வந்துவிட்ட உயிர்தான். பாவம், பிழைத்துக்கொள்ளட்டும் என்று மரணத்திற்கு நீ போட்ட பிச்சைதானே உன் உயிர். உனது சாவே ஒரு சாவின்மைதான் சகோதரா!

உன்னோடு இன்னும் நிறைய நிறைய பேச விரும்புகிறேன். நீ தான் காலத்தை வென்றுவிட்டாயே! பேசுவோம்

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

குமரிமுனை பங்கு கள அனுபவம்

வரவேற்பு
முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கரையில் களப்பணி அனுபவம் பெற மூன்றாமாண்டு இறையியல் மாணவர்கள் நாங்கள் கால் பதித்த நாள் 17.09.2011 இரவு 10.30.  உச்சிவானை தொட்டுவிட்டதோ என எண்ணத்தூண்டுமளவுக்கு உயர்ந்து நின்ற தூய அலங்கார உபகார அன்னையின் ஆலயக்கோபுரம் பங்கு மக்களின் இறைநம்பிக்கைக்கு சான்று பகர்ந்து எம்மை பல எதிர்பார்ப்புகளுக்கு இட்டுச்சென்றது.  பங்குப் பணியாளர் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப் பங்குப்பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் மற்றும் பங்கு மக்கள் சிலர் அன்புடன் எம்மை வரவேற்றனர்.

முதல் நாள்
18.09.2011 ஞாயிரன்று காலைத் திருப்பலியில் பங்குப் பணியாளர் எம்மை இன்சொல் கொண்டு வரவேற்று எமது இருத்தலின் நோக்கத்தை மக்களுக்குத் தெளிவுபடுத்தினார்.  குமூகப் பகுப்பாய்வின் அடிப்படையில் பங்கில் பணித்திட்டம் உருவாக்க உதவும் இந்த கள அனுபவத்தின் தொடக்கமே உயிர்த்துடிப்புடன் அமைந்திருந்தது.

இருபது ஆண்டுகளாக வலுத்துவந்த கூடங்குள அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டம் மக்கள் போராக வெடித்த நிகழ்வுதான் இடிந்தகரை என்னும் இடத்தில் 127 மக்கள் ஐந்து நாட்களாக இருந்த தொடர் உண்ணாவிரதம்.  இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணமும,; தங்களது எதிர்ப்பையும் காட்டும் வண்ணமும் கன்னியாகுமரி பங்கு மக்கள் இதை ஒட்டுமொத்த தமிழனின் வாழ்வாதாரப் பிரச்சனையாகப் பார்த்து போராட்டக் களத்தில் இறங்கினர்

முன்னதாக நடைபெற்ற தயாரிப்புக் கூட்டம் எமக்குத் தந்த அனுபவங்கள் பல.  பங்குப் பணியாளரும் மக்களும் இணைந்து சிந்தித்து, விவாதித்து, திட்டமிட்டு செயல்பட்ட விதம் கூட்டுத் தலைமைத்துவத்தையும், வழிபாடு கடந்து வாழ்க்கைப் போராட்டங்களுக்காக துணிவுடன் போராடுகின்ற வளர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டியது.  'மக்களோடு மக்களாய்' போராட்ட உணர்வை நாங்களும் பெற்று கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றோம்.  அன்றிரவு அன்பிய வழிகாட்டிகள் கூட்டப்பட்டு ஒரு அன்பிய வழிகாட்டிக்கு இரு மாணவர்கள் என்ற முறையில் பிரிக்கப்பட்டு அவர்களின் இல்லங்களுக்கு சென்று வந்தோம்.

மேதா பட்கர்
29.09.2011 திங்களன்று காலையில் முரண்பாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கொண்டுள்ள சமூகத்தைப் பகுப்பாய்வு செய்ய உதவும் வண்ணம் அமைந்திருந்தது அருட்பணி. வில்சன் அவர்களின் கருத்துரை. நண்பகலில் மீண்டும் போராட்டத்தில் பங்கேற்றோம். போராட்டத்தின் முத்தாய்ப்பாய் சமூக ஆர்வலர் மேத்தா பட்கரின் வருகையும், உரையும் எம்மை மேலும் உற்சாகப்படுத்தியது. மாலையில் சுனாமி காலனிக்கு 9 மாணவர்களும் அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கிற்கு 5 மாணவர்களுமாகப் பிரிந்து சென்று 4 சமூகப் பகுப்பாய்வு செய்தோம்.

பங்கேற்பு
20.09.2011 இன்று போராட்டத் தீ கொழுந்துவிட்டு எரிய சமயம் கடந்து போராட்டத்தில் கலந்து கொண்ட மக்களோடு சமூக ஆர்வலர்களுடன் இறையியல் மாணவர்கள் நாங்களும் முழுமையாகப் பங்கேற்றோம். சிற்றுரை ஆற்றி, விழிப்புணர்வுப் பாடல்பாடி மக்களை உற்சாகப்படுத்தினோம். 

தரவுகள்  
22.09.2011 முதல் Ransom Town மற்றும் அஞ்சுக்கூட்டுவிளை பகுதிகளில் குமூகப் பகுப்பாய்வின் மூலம் மக்களின் சமய, அரசியல் சமூக, பொருளாதார நிலையைப் பற்றிய தரவுகளை சேகரித்தோம்.  மீண்டும் 25.09.2011 அன்று மாலை குழுவாக சேர்ந்து அருட்பணி. வில்சன், பங்குப்பணியாளர் மற்றும் அருட்பணி. ராஜா முன்னிலையில் தரவுகளின் அறிக்கையை சமர்ப்பித்தோம். இருவேறு இடங்களில் நடைபெற்ற ஆய்வின் அறிக்கை இயல்பாகவே வேறுபாடுகளைக் கொண்டிருந்தது

சகோதரர்களின் பகிர்விலிருந்து....
அஞ்சுக்கூட்டுவிளை கிளைப்பங்கு  
1875ல் புலம் பெயர்ந்த 5 குடும்பங்களால் உருவானதுதான் இக்கிராமம்.  சிறிய எண்ணிக்கையில் இருந்த இவர்கள் அருகிலிருந்த நிலங்களை விலைக்கு வாங்கி உருவாக்கப்பட்டதுதான் இக்கிராமம்.
மக்கள் தொகை     :  
தொழில்           :  கடைகள், உணவுவிடுதிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள்                                          தங்குகின்ற விடுதிகள் நடத்துதல். 
கட்சி; சார்பு     :  
சாதியம்            :  பெரும்பாலானோர் நாடார் சமூகம்.
கல்வி நிலை    :  மக்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்களாகவும், அரசு வேலையை நோக்கமாகக் கொண்டு படிப்பவர்களாகவும் உள்ளனர்
அடிப்படை வசதிகள்   : பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பதால் அடிப்படைத் வசதிகள் இருக்கின்றன.
வாழ்வாதாரம்  :  கடின உழைப்பும், சிறப்பான திட்டமிடலும்
சமயம்                : பெரும்பான்மையானோர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள். தற்போது பெந்தகோஸ்து சபையின் தாக்கம் பெருமளவில் இருக்கின்றது. பிற சமூகத்தை சார்ந்தவர்களிடம் இவர்கள் வரி வாங்குவது இல்லை. அன்பியங்களில் அவர்களை சேர்த்துக் கொள்வதும் இல்லை. ஒரு சில குடும்பங்கள் இணைந்து பிறரை ஒடுக்குகின்ற சூழலும் உள்ளது. 

Ransom Town
2004 ஆம் ஆண்டு சுனாமி பாதிப்பிற்குப் பின்னர் பாதிப்பிற்குள்ளான 34 வீடுகள் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டன.  பங்குத் தந்தையின் அரிய முயற்சியினாலும் புனித அன்னாள் சபைக் கன்னியர்கள் மற்றும் Salvation Army  போன்ற தொண்டு நிறுவனங்களால் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உருவானதுதான் இப்பகுதி.
  • மக்கள் தொகை :  
  • தொழில்              : மீன்பிடித்தல் மற்றும் அவை சார்ந்த தொழில்கள் 
  • கட்சி சார்பு        : அ.இ.அ.தி.மு.க. அ.தி.மு.க. மற்றும் தே.தி.மு.க. இந்தப்பகுதிக்கென்ற சட்டமன்ற உறுப்பினர் இல்லை.தற்போதைய உள்ளாட்சித் தேர்தலில்தான் போட்டியிடுகின்றனர்.  மேலும்            இப்பகுதியானது  பஞ்சாயத்தை சார்ந்தது.
  • சாதியம்           :   பறவர், முக்குவர் மற்றும் நாவிதர்.
  • கல்வி நிலை  :  பெரியவர்கள் கல்வியறிவு குறைந்தவர்களாக இருந்தாலும் பிள்ளைகள் நன்கு படிக்க வேண்டும் என்ற நோக்குடன் தரமான கல்வி பெறச் செய்கின்றனர்
  • அடிப்படை வசதிகள் :   குடிநீர் வசதி குறைவாகவே உள்ளது.  குப்பைத்       தொட்டிகள் இல்லாததால் ஊர் முழுவதும் நெகிழிக்குப்பைகளால் நிறைந்துள்ளது. அனைத்து     அடிப்படை வசதிகளுக்கும் கன்னியாகுமரியை சார்ந்துள்ளனர்.
  • சமயம்             : அனைவரும் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள்.
இறைநம்பிக்கை
23.09.2011 அன்று காலை அருட்பணி. சகாயராஜ் மக்களின் இறைநம்பிக்கையை மதிப்பீடு செய்ய வழிகாட்டினார்.  சுனாமி எனும் பேரழிவை சந்தித்திருந்தாலும் மக்களின் இறைநம்பிக்கையானது வளர்ந்துள்ளதேயன்றி தளர்ச்சியுறவில்லை என்பதும் வியப்பிற்குரியதாகவே இருந்தது.  இறைமக்களின் ஈடுபாடு ஆலய வழிபாட்டில் மட்டுமில்லாமல் ஊரின் வளர்ச்சிப்பணிகளிலும்  இருக்கின்றது.  அன்பியங்கள் அவர்களின் உறவை வலுப்படுத்துபவையாகவும் அவர்களை ஒருங்கிணைக்கும் சிறந்த ஊடகமாகவும் திகழ்கின்றன.  மரபு ரீதியாக பெற்றுக்கொண்ட புரிதலுடன் புதிய இறையியல் புரிதல்களையும் உள்வாங்கிக்கொண்டு வாழும் இவர்களின் வாழ்வு எமக்கும் தூண்டுதலாக அமைந்தது.

பங்குப் பணியாளர்களின் பகிர்வு
27.09.2011 அன்று மாலையும் 28.09.2011 காலையும் அருட்பணி. லியோ கென்சன் மற்றும் இணைப்பங்குப் பணியாளர் அருட்பணி. அமல்ராஜ் இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.  தனது பத்தாண்டுகால அயராத உழைப்பாலும் இறைவனின் உடனிருப்பாலும் அமைதிப் பூங்காவாக இன்று கன்னியாகுமரி மாறியிருக்கிறது என்பதையும் அதற்கு முன்னதாக இப்பங்கில் இருந்த பல்வேறு ஆதிக்க சக்திகள், அரசியல்கள், போராட்டங்கள், பொருளாதார சிக்கல்கள் போன்றவற்றையும் அதை மாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் போன்றவற்றையும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ளநிகழ்வுகளை மகிழ்வுடன் மக்களும் பகிர்ந்து கொண்டார்கள். இன்று பல்வேறு துறைகளில் வளர்ச்சி கண்டுள்ள நிகழ்வகளை மகிழ்வுடன் மக்களும் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்கள். ஊரைப்பற்றிய தெளிவான புரிதலின் பின்னணியில் மக்களோடு இணைந்து வரைந்த ஆண்டுத்திட்டம், மறையுரை, அரசின் திட்டங்களை முறைப்படிப் பெற்று மக்களுக்கு வழங்கியது போன்றவற்றின் மூலமாக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய அருட்பணியாளரை மக்கள் நன்றியுடன் நினைவுகூர்கின்றனர்.
மேலும் மக்களின் கல்வி, சமய ஈடுபாடு, மற்ற சமயத்தவரோடு கொண்டுள்ள உறவு மற்றும் வளர்ச்சிகள் பற்றிய புரிதல்களை ஆழப்படுத்தும் வண்ணம் அமைந்திருந்தது அமர்வு. 

சிறப்பு அழைப்பாளர்களின் பகிர்விலிருந்து :
  • திரு. ராசையா நாடார் மற்றும் இஸ்லாமிய நண்பர்
சுனாமி குடியிருப்பு பகுதிக்கான நிலம் இவர்களால் மனமுவந்து அளிக்கப்பட்டது. ஆடிதடி, வன்முறை என்றிருந்த இப்பகுதி தற்போதைய அருட்பணியாளர் லியோ கென்சனின் சிறப்பான பணிகளால் அமைதியான நிலையை அடைந்துள்ளதை பகிர்ந்து கொண்டார். இந்து, இஸ்லாம், கிறித்தவ மக்கள் உறவு நல்ல முறையில் அமைந்துள்ளது என்றும் மார்வாடிகள் இந்துத்துவாவின் செயல்பாடுகள் அப்பகுதி வாழ் இந்து மக்களுக்கே விருப்பமில்லாத ஒன்றாக உள்ளதை பகிர்ந்து கொண்டார்கள்.
  • கிராம அலுவலர் மற்றும் பள்ளி ஆசிரியர்
மக்கள் வாழ்நது வந்த அரை கிலோமீட்டர் பகுதி இன்று 5 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. எல்லாவற்றிலும் வளர்ந்துள்ளனர். பள்ளியில் அயரா உழை;பபம் அர்ப்பண உணர்வும் கொண்டவர்களாக ஆசிரியர்கள் உள்ளனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தரமான கல்வி அனைவருக்;கும் வழங்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள், தனித்திறமைகள் நல்லொழுக்கம் போன்றவை மாணவர்களை சிறப்பாக உருவாக்குகின்றன.
  • பக்த சபைகள்
பொது நிலையினர் அதிகமான ஈடுபாட்டுடன் செயல்படுகின்றனர். சிறப்பாக, புதுமையாக, செம்மையாக அனைத்து வழிபாடுகளும் நடைபெறுகிறது. ஆண்களும், பெண்களும் பல பொறுப்புகளை வகித்தாலும் பங்குப் பேரவையில் பெண்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாத நிலையும் உள்ளது. தொழில் தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் இடம் என்பதால் பெண்களுக்கு பங்குப்பேரவை உறுப்பினராகும் தேவை எழவில்லை என்ற காரணம் முன் வைக்கப்படுகிறது.

மதிப்பீடு
30.09.11 இன்று ஒருசிறிய மதிப்பீடு குழுவில் நடைபெற்றது. 14 நாட்கள் கடந்த நிலையில் யாம் பெற்ற அனுபவங்களை திருப்பிப்பார்த்தோம். அனுபவ பகிர்விற்கு அருட்பணி சந்தியாகு ராசா மற்றும் அருட்பணி நார்பர்ட் தாமஸ் வந்திருந்தார்கள். அடுத்த வருடத்திற்கானப் பரிந்துரையாக பணியாளர் வில்சன் அவர்களின் வகுப்பினையும் பணியாளர் ஜஸ்டஸ் அவர்களே எடுத்தால் இன்னும் சிறப்பாக அமையும் என்றக் கருத்தினைப் பதிவு செய்தோம். அவ்வாறு செய்யும் போது பாடமும், பணியும் இன்னும் சிறப்பாக ஒன்றிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கருதினோம்.

கலை இரவு
1-10-11 அன்று மாலையில் உபகார அன்னைத்திடல் நிரம்பி வழிய பறை முழக்கத்துடன் தொடங்கிய கலை நிகழ்ச்சியின் மையக் கருத்தாக சுற்றுப்புறத்தூய்மை என்பது அமைந்தது அனைவரின் அடிமனதிலும் ஓர் மாற்றத்தை உருவாக்கியது. கலைகள் யாவும் வாழ்வோடு பின்னிப்பிணைந்து கிடப்பவை என்பதால் கலை நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக அமைந்திருந்தது அடுத்த நாள் நிகழ்வு.

மரம் வளர்ப்போம் மனம் வளர்ப்போம் 
2-10-11 இன்று காலை Ransom town பகுதியைச் சுற்றி ஆக்கிரமித்திருந்த நெகிழிக்குப்பகைள் மற்றும் கழிவுகளை மாணவர்களுடம் இணைந்து மக்களம் சுத்தம் செய்தனர். அன்பியத்திற்கு ஒரு மரக்கன்று என ஒவ்வொரு அன்பியத்திலும் மரக்கன்றுகள் நடப்பட்டன. மக்கள் அக்கன்றுகளைச் சுற்றி வேலியமைத்து ஊற்;றிய நீர் எங்கள் இதயங்களையும் குளிர்விக்க மாற்றத்திற்கான வித்தை இட்ட மகிழ்வோடும், புதிய பல அனுவங்களை எதிர்காலப் பணிக்கான முன்சுiவையைப் பெற்றுவிட்ட நிறைவோடும் மாலையில் அவரவர் இல்லங்களுக்குத் திரும்பினோம்.

இறுதியாக
கடற்கரை பகுதிவாழ் மக்களின் மத்தியில் வாழ்ந்து பணியாற்றிய அனுபவம் புதியதும், புதுமையானதுமாகக் கருதுகிறோம். இந்த அரிய வாய்ப்பை வழங்கிய கல்லூரிக்கும், வழிகாட்டியாக மட்டுமில்லமால், உடன் வழிநடப்பவராக உற்ற நண்பனாக எங்கள் எல்லாத் தேவைகளிலும் தந்தைக்குரிய வாஞ்சையோடு ஒவ்வொரு நாளும் எங்களை உடனிருந்து உற்சாகப் படுத்திய தந்தை சந்தியாகு ராசா அவர்களுக்கும் எங்கள் நன்றிகள் சமர்ப்பணம். மேலும் அவருக்கு உதவியாக இருந்த ஏனைய அருட்பணியாளர்களான நார்பர்ட் தாமஸ் மற்றும் ஜான்சன் அவர்களுக்கும் எங்கள இதயப்பூர்வமான நன்றிகள். 

செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

ஆண்டவரின் அர்ப்பண நாள்

இன்று ஆண்டவர் இயேசு கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நாள்! அர்ப்பண வாழ்வுக்கு அழைக்கப்பட்டோர் அனைவருக்கும் ஒரு மகத்தான நாள். இயேசுவின் பாதச்சுவடுகளில் தங்கள் பாதங்களைப் பதித்து, பிளவுபடா உள்ளத்தோடு, மற்ற எல்லோரையும் விட மிக நெருக்கமாக இயேசுவைப் பின்பற்ற சிறப்பு அழைப்பும், சிறப்பு அருளும் பெற்றிருக்கும் அனைவரும் மகிழ்வோடு கொண்டாடும் திருநாள். இந்த இனிய நாளை முன்னிட்டே நேற்று மாலை எம் இறையன்னை சபையைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ், பாக்கியராஜ், செபராஜ் என்னும் மூன்று அருட்சகோதரர்கள் கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் என்னும் இறுதி வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து நற்செய்தியின் மகிழ்ச்சியை வாழ்ந்து காட்ட துணிவோடு முன்வந்திருக்கிறார்கள். தாயாம் திருச்சபையும், திருச்சபையில் நற்செய்தியின் மறுமலர்ச்சிக்கு தன்னையே அர்ப்பணித்த புனித லியோனார்தியாரால் பதினாறாம் நூற்றாண்டில் தொடங்கப்பட்ட எம் இறையன்னை சபையும் இந்த மூன்று துறவிகளையும் உச்சி முகர்ந்து பாராட்டுகிறது. இந்நாளையொட்டிய சில நிகழ்வுகள் எழுப்பிய சில சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

உரோமில் எங்கள் சபையின் தலைமையிடத்தில் உள்ள ஆலயத்தில் நேற்று மாலை சிறப்பு மாலை வழிபாடும், இன்று மாலை ஆடம்பர திருப்பலியும் நடைபெற்றது. இந்த இரண்டு நிகழ்வுகளையுமே மேன்மை தாங்கிய கர்தினால்களே தலைமையேற்று நடத்தினார்கள். இது போன்ற சிறப்பு நிகழ்வுகளின் போது கிறிஸ்துவின் சகோதரர்கள் என்னும் குழுமத்திலிருந்து சில அருட்தந்தையர்களும், அருட்சகோதரர்களும் வந்து வழிபாட்டில் உதவி செய்வது வழக்கம். அவர்களில் ஒரு அருட்தந்தையின் தலைமையில் வழிபாட்டின் அனைத்து காரியங்களும்; அச்சு பிறழாமல் ஒழுங்கு செய்யப்படும். நல்ல உயரமான, மிடுக்கான தோற்றத்தோடு, முகத்தில் ஒரு துளியும் பதற்றமின்றி, எவ்வளவு பெரிய வழிபாடு என்றாலும் நேர்த்தியாக நடத்திக் கொடுப்பது அவரது தனிச்சிறப்பு. அவரது பெயர் தெரியவில்லை என்பதால் வளர்ந்த மனிதர் என்று பெயர் வைத்துக் கொள்வோம்.

நேற்று மாலையும் அந்த வளர்ந்த மனிதரும், அவரது சீடர்களும் வந்திருந்தனர். வத்திக்கானில் இருப்பதிலேயே மிகவும் அதிகமாக வழிபாட்டு மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்று அறியப்படும் புர்க் என்னும் கர்தினாலும் குறித்த நேரத்தில் வந்துவிட்டார். எல்லோரும் அவரது கையைப் பிடித்து சிறிது முதுகை வளைத்து முகம் தொடாமல் முத்தம் செய்தனர். அந்த வளர்ந்த மனிதர் முழந்தாள் படியிட்டு கர்தினாலின் மோதிரத்தை முத்தம் செய்தார். பின்னர் தன்னோடு இரண்டு சீடர்களை மட்டும் அழைத்துக் கொண்டு கர்தினால் வழிபாட்டு ஆடைகளோடு ஆயத்தம் செய்ய உதவிகள் செய்தார். அனைத்தும் தயாரான போது வளர்ந்தவர் கடிகாரத்தைப் பார்த்து நேரத்தைச் சரிசெய்யும் வரை திரண்டிருந்த அனைவரும் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தோம். துல்லியமாகக் குறித்த நேரத்தில், தன் திருவாய் திறந்து, மிகவும் தெளிவான குரலில் சில அறிவுறுத்தல்களைக் கூறினார். குறிப்பாக வழிபாட்டில் உதவி செய்யும் தனது சீடர்களும், சபையின் அருட்பணியாளர்களும், கர்தினாலும் பலிமேடையை வணங்கிவிட்டு பீடத்தைச் சுற்றியுள்ள இருக்கைகளுக்கும், மற்றவர்கள் பீடத்திற்கு முன்னால் மக்களுக்கான பகுதியில் முதல் வரிசை இருக்கைகளுக்கும் செல்லுமாறு கூறினார்.

வருகைப் பவனி ஆரம்பமாகியது. பலிபீடத்தை வணங்கி அதற்கு அருகில் போடப்பட்டிருந்த இருக்கையின் ஒன்றில் என்னை நிலைநிறுத்திய பிறகுதான் தெரிந்தது எல்லா அருட்பணியாளர்களும் மக்கள் பகுதியின் முதல் வரிசைக்குப் போயிருந்தனர். சீடர்கள், பங்குத்தந்தை, கர்தினால் மற்றும் நான் மட்டுமே மேலே நின்றுகொண்டிருந்தோம். பாடல் நின்று போயிருந்தது. கர்தினால் வளர்ந்த மனிதரின் உத்தரவுக்காக காத்திருந்தார். மனம் திக்திக்கென்று அடித்துக்கொண்டது. வளர்ந்த மனிதர் எனது இந்த அறியாமையால் என்னைக் கடிந்து கீழே அனுப்பிவிடுவாரோ என்று நாணமாகவும், நடுக்கமாகவும் இருந்தது. அதற்குள் வழிபாட்டைத் தொடங்கியிருந்தார் கர்தினால். 

மேலே இருந்ததால் வளர்ந்த மனிதரின் செயல்பாடுகளை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னைப் பார்த்துவிடாமலும் பார்த்துக்கொண்டேன். அது பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடுமல்லவா? சீடர்கள் தங்கள் தலைவரின் கண்ணசைவைக் கூட மிகச் சரியாகப் புரிந்து கொண்டு துல்லியமாக அனைத்து காரியங்களையும் செய்தனர். வழிபாட்டின் எல்லா செயல்பாடுகளையும், வளர்ந்த மனிதர் அருகில் நின்று கவனித்து கொண்டிருந்தார். மரபுகளுக்கு பெயர் போன கர்தினாலே ஒரு கட்டத்தில் வளர்ந்த மனிதரின் கண் மொழிகளைப் புரிந்துகொண்டு செயல்படக் கற்றுக்கொண்டார். மாலை வழிபாட்டில், மரியாவின் புகழ்ச்சி பாடல் நேரத்தின் போது பீடத்தைச் சுற்றிலும் தூபம் போடும் தருணத்தில்தான் அது நிகழ்ந்தது.

கர்தினால் வழக்கமானத் திருப்பலியில் செய்வது போல பீடத்தின் நடுவில் நின்று திருச்சிலுவைக்கு தூபம் போட கையைத் தூக்கவும், பின்னால் கவனித்துகொண்டே நடந்து வந்த வளர்ந்த மனிதர் 'இல்லைஐஐஐ... முன்னே செல்லுங்கள்...இது மாலை வழிபாடுதான்...திருப்பலி அல்ல' என்று சொல்ல, கர்தினால் கைகளை மெதுவாகத் தாழ்த்திக்கொண்டார். அப்படியே சுற்றி என் அருகில் வளர்ந்தவர் வரும்போது வயிற்றைக் கலக்கிவிட்டது. இறங்கி கீழே போ என்று சொல்வார் எனத் தோன்றியது. என் அருகில் நின்றுகொண்டிருந்த சீடர் என்னிடம் மெதுவாக 'தாங்கள் விரும்பினால் இங்கேயே இருக்கலாம்' என்று சொன்னார். வழிபாடு முடிந்ததும் வளர்ந்தவர் கண்ணிலும், என் அருகில் இருந்த சீடரின் கண்ணிலும் படாமல் ஒருவழியாகத் தப்பிவிட்டேன்.

இன்று மாலைத் திருப்பலிக்கும், நேற்று மாலை போலவே கர்தினால் வருகை, அன்பு முத்தம், ஆடைகள் ஆயத்தம், வளர்ந்தவரின் முன் குறிப்பு போன்ற காட்சிகள் அச்சு பிசகாமல் நடந்தேறியது. நேற்றைய அனுபவத்தின் காரணமாக மக்கள் பகுதியின் முன்வரிசையில் வேகவேகமாகச் சென்று இடம்பிடித்து விட்டேன். இலத்தீன் வழிபாட்டு பாடல்களால் ஆலயமே அதிர்ந்தது. ஒரு பாடலை ஒரு ஏழு பேர் சேர்ந்து ஒரே கட்டையில் (சுதி) பாடுவது நம் ஊர் பாடல். அதே பாடலை ஒரு ஏழு பேர் தொடர்ச்சியாக ஏழு வேறு வேறு நேரத்தில் தொடங்கி, வேறு வேறு கட்டைகளில் பாடி ஒரே நேரத்தில் ஒன்றாக (ஒரு வழியாக) முடித்தால் அது இலத்தீன் பாடல். இப்படித்தான் நான் மிகவும் கடினமான இலத்தீன் பாடல்களை மிகவும் எளிமையாக்கி புரிந்துகொண்டுள்ளேன்.

கர்தினால் பீடத்திற்கு பின்னால் ஒரு பத்து அடி இடைவெளியில் இருந்த தனது இருக்கையின் முன் நின்று திருப்பலியைத் தொடங்க, பூசைப் புத்தகத்தை ஒரு சீடர் அவர் வாசிக்குமாறு பிடித்து கொண்டிருந்தார். கர்தினாலின் உயரத்திற்கு அவர் பிடித்த விதம் சரியாகவே இருந்தது. கர்தினால் பிதா, சுதன்... என்று ஆரம்பிக்கவும், சீடர் தன் தலைவரைப் பார்க்கவும் சரியாக இருந்தது. அடுத்த நொடியில் சீடர் முழந்தாள் படியிட்டு தன் தலை மேல் புத்தகத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். வளர்ந்தவர் சிறிய சிரிப்போ, சிறிய கோபமோ வெளிக்காட்டாமல் நிமிர்ந்து அப்படியே நின்றுகொண்டிருந்தார். 

அவர் மேலே இருந்தாலும் எங்கள் பகுதியையும் கவனித்து, வழிபாட்டை அழகாக்கும் வண்ணம், கீழிறங்கி வந்து முன் வரிசையில் மூன்று பேரும், பின் வரிசையில் மூன்று பேரும் நிற்குமாறு சரிசெய்து விட்டு மீண்டும் மேலே சென்றுவிட்டார். அவர் எங்கே நிற்கிறார் என்பதை அவ்வப்போது பார்த்து, நாம் சரியாகத்தான் நிற்கிறோம் என்பதைச் சரிபார்த்துக்கொண்டேன். திடீரென்று அவரைக் காணவில்லை என்றால் மனது மிகவும் பதட்டமாகிவிடுகிறது. திடீரென்று நம்முன் தோன்றி நமது இருத்தலின், அல்லது நிற்றலின் தவறுகளைக் கடிந்து கொள்வாறோ என்ற அச்சம் தொற்றிக் கொண்டது. அவர் மீண்டும் மேலே தென்படும் போதுதான் மனது அமைதியானது.

நற்கருணை நேரம் வந்தது. அவரது சீடர்கள் முதல் நபர்களாக பீடத்திற்கு முன் வந்து தயாராக நின்றார்கள். முதல் இரண்டு சீடர்கள் எரியும் மெழுகுத் தண்டுகளையும், பின் நின்றவர் கர்தினாலின் செங்கோலையும் தாங்கி நின்று கொண்டிருந்தனர். கர்தினால் நற்கருணையைத் தருவதற்கு வந்து நின்றதும், வளர்ந்தவரின் கண்ணசைவுக்கேற்ப சீடர்கள் மெழுகுவர்த்திகளை ஓரத்தில் வைத்து விட்டு முழந்தாளில் நின்று செவ்வனே நற்கருணை பெற்று கொண்டனர். செங்கோல் வைத்திருந்த சீடருக்கு செங்கோலைப் பிடித்து கொண்டே முழந்தாளிடவும் முடியவில்லை. தன் தலைவரின் கட்டளையை மீறவும் மனம் ஒப்பவில்லை. மிகவும் தர்மச்சங்கடமாகப் போய்விட்டது. முடிந்தவரை குனிந்துகொண்டே நற்கருணை வாங்கிவிட்டார். கர்தினால் உட்பட, ஒரு இருபது பேரை தனது கண்ணசைவில் ஒழுங்குபடுத்திய அந்த வளர்ந்தவரை வியப்பாகப் பார்த்துக்கொண்டேயிருந்தேன்.

திருப்பலி முடிந்து பீடத்தை வணங்கி வளர்ந்தவரின் அறிவுறுத்தலின் படி பவனியாக மக்கள் நடுவில் சென்று கொண்டிருக்கும் போது பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் மக்களைப் பார்க்கலாமா? வேண்டாமா? பார்த்தால் சிரிக்கலாமா? தெரிந்தவர்கள் நின்றால் கைகளைச் சிறிதாக அசைத்து அவர்களை நான் பார்த்துவிட்டேன் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்ளலாமா? என்றெல்லாம் தோன்றினாலும் வளர்ந்தவரின் அருகாமை அனைத்தையும் தடை செய்தது. கடைசி வரிசையில் ஒரு வயதானவர் நின்று கொண்டிருந்தார். அவரை பார்ப்பது மிகவும் எளிதான ஒரு உணர்வைத் தந்தது. அவர் அழுக்கான உடையில் நடுங்கிக் கொண்டே இருந்தார். பக்கத்து இருக்கையில் அவரது உடமைகளைக் கொண்ட ஒரு பொதியை வைத்திருந்தார். அவரது வரிசையில் அவரைத் தவிர வேறு யாருமே இல்லை. சிறிது கூன் விழுந்தவராக பவனியில் வந்து கொண்டிருந்த அருட்பணியாளர்களைப் பார்த்துக்கொண்டேயிருந்தார். நான் அவரை நெருங்கிய போது, அவரது முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். நடுக்கத்தில் அவரது தலை ஆடிக்கொண்டேயிருந்தது. கண்களில் கண்ணீர் திரண்டு விழவா, வேண்டாமா என்று நின்றுகொண்டிருந்தது. என்னால் அதற்கு மேல் அவரைப் பார்க்க முடியவில்லை. 

திருப்பலி முடிந்து நல்ல உணவு ஏற்பாடாகியிருந்தது. கர்தினால் வழிபாட்டு ஆடைகளைக் களைந்து வருவதற்கு சிறிது தாமதமாகிக்கொண்டிருந்தது. இதனால் எரிச்சலடைந்த என் பக்கத்திலிருந்த ஒருவர், தனது தினசரி கால அட்டவணையில் இவ்வாறு பிழைவிடுவது மிகுந்த கவலையளிப்பதாகக் குறைபட்டுக்கொண்டார். பின்னர் சாப்பிட்டுவிட்டு, குளிருக்கு இதமாக வெப்பமூட்டப்பட்ட எனது அறைக்குள் நுழைந்து, படுக்கையில் விழுந்ததும், அந்த அழுக்கு உடையணிந்த பெரியவரும், நடுங்கிய அவரது முகத்தில், கண்ணீரோடு நின்று கொண்டிருந்த அவரது கண்களும் வந்து நிறைய கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தன. 

சில கேள்விகள்:
1. உனது அர்ப்பணத்தின் நோக்கம் என்ன? 
2. ஆன்மீகம் என்றால் தன்னைக் கடப்பது என்று உனக்குத் தெரியுமா?
3. உன்னைப் பற்றிய நினைவை நீ அகற்றாமல் என் போன்றோரை அன்பு செய்ய இயலும் என்று நினைக்கிறாயா?
4. அன்னைத் தெரசாவை உனக்குத் தெரியுமா? 
5. உங்களது இல்லங்களில் பணியாற்றுபவர்கள் உன் போன்றோரால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா?
6. மனிதர்கள் மாண்புடன் நடத்தப்படாத இடத்தில் நீ யார் பக்கமாக நின்றுகொண்டிருக்கிறாய்?
7. நீதியா? இரக்கமா? என்ற சூழ்நிலையில் நீ எதைத் தேர்ந்தெடுப்பாய்?
8. உன் சகோதரனை மன்னிக்காமல், உனக்கு மன்னிப்பு உண்டு என்று எப்படி நம்பிக்கொண்டிருக்கிறாய்?