வியாழன், 18 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 1)

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! 
உன்னை எங்கள் சகோதரனாகக் கொண்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களுக்கு அந்தப் பெருமையைத் தந்து விட்டு நீ மட்டும் சென்றுவிட்டாயே! நாம் இன்னொரு உலகத்தில் நிச்சயம் சந்திப்போம் என்று நம்புகிறேன். அப்போது உனக்கு எங்கள் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். 

சியாச்சின் மலை உச்சியில் பசி கொண்ட பனிப்பாறைகள் உன்னையும் இன்னும் ஒன்பது வீரர்களையும் விழுங்கி விட்ட செய்தி கேட்டு நாங்களும் உங்களைப் போலவே உறைந்து விட்டோம். ஆறு நாள்களுக்குப் பின்னர், எல்லாம் முடிந்துவிட்டதென்ற அனுமானிக்கப்பட்டச் செய்தி வந்தது. சில மணி நேரத்திலேயே, ஹனுமந்த் மட்டும் இன்னும் தன் உயிரைப் பிடித்து வைத்திருக்கிறான் என்றதும் இந்த உலகமே மெய்சிலிர்த்துப் போனது. இன்னும் அபாயக் கட்டத்தைத் தாண்டவில்லை என்ற உபரிச் செய்தியினால், இந்தியாவின் உதடுகள் நீ மீண்டு வரவேண்டுமென்று அதற்கு தெரிந்த எல்லா மொழிகளிலும், அதில் இருக்கும் எல்லா தெய்வங்களிடமும் இரந்துகொண்டிருந்தது. நிர்பயா என்னும் நம் சகோதரி டில்லியில் வல்லுறவு செய்யப்பட்டு, கயவர்களால் சிதைக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோதும், நாம் கையறு நிலையில் செபம்தான் செய்துகொண்டிருந்தோம். ஆனால் நமது நீதிமன்றங்கள் நம்மை ஏமாற்றுவது போலவே, கடவுளின் கருணை மன்றங்களும் நம்மை வஞ்சித்துவிடுகின்றன. பனிப் பாறைகளில் ஆய்வு செய்த அறிஞர்களெல்லாம் என்னென்ன காரணங்கள் சொன்னாலும், 35 அடி ஆழத்தில், சுழியிலிருந்து (-)40 பாகை குறைவான உறைபனியில், ஆறு நாள்கள் உன்னால் உன் உயிரைப் பிடித்து வைத்திருக்க முடிந்ததென்பதைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

என்ன நினைத்து கொண்டிருந்தாய் எம் சகோதரா? பனிமலையின் வயிற்றுக்குள் ஆறு நாள்கள் என்று சொல்வதைவிட, பகலேயில்லாத பன்னிரண்டு இரவுகளை அல்லவா நீ உயிரோடு கடந்துவிட்டாய்? நினைத்தாலே மூர்ச்சையாகிவிடுகிறது நெஞ்சம். அந்த நேரத்தில், பனி உருகுவது போல், உயிர் உருகிக்கொண்டிருந்த ரண கணத்தில், சகோதரா யாரையெல்லாம் நினைத்துக்கொண்டிருந்தாய். இந்தியத் தாயின் தலை மிதித்து எதிரிகள் நுழையாமல் நீ மதிலாய் நின்று கொண்டிருந்தாயே! பனிமலைக்குள்ளும் பாரதத்தைக் காக்கும் வேட்கையுள்ள வேங்கையைத் தன் பனிக்குடத்தில் சுமந்த உன் பாசத்தாய்க்கு இதைவிட எந்த பெருமையை நீ பெற்றுத்தர முடியும்! முடியாத இருட்டுக்குள் முடங்கி விடாமல், இதுவும் விடியும் என்று விழித்திருந்தாயே! இந்த நம்பிக்கையைத் தந்த உன் தந்தைக்கு இதுவல்லவோ மணிமகுடம். நீ  விட்டது உன் கட்டுக்குள் வந்துவிட்ட உயிர்தான். பாவம், பிழைத்துக்கொள்ளட்டும் என்று மரணத்திற்கு நீ போட்ட பிச்சைதானே உன் உயிர். உனது சாவே ஒரு சாவின்மைதான் சகோதரா!

உன்னோடு இன்னும் நிறைய நிறைய பேச விரும்புகிறேன். நீ தான் காலத்தை வென்றுவிட்டாயே! பேசுவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக