கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 13 நவம்பர், 2024

புனித கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா (The Presentation of Blessed Virgin Mary in the temple)

இன்று நவம்பர் மாதம் 21 ஆம் நாள். இந்த நாளைத் திரு அவையானது புனிதக் கன்னி மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது.

விவிலியத்தில் நற்செய்தி நூல்களிலோ, அல்லது பவுலடியார் கடிதங்களிலோ அல்லது வேறு எந்த நூலிலோ இந்த விழாவினைக் குறித்த குறிப்புகள் எதுவும் இல்லை. ஆனால் ஆறாம் நூற்றாண்டில் இருந்தே, இவ்விழா கிழக்குத் திரு அவைகளில் கொண்டாடப்பட்டதாக திரு அவை வரலாறு கூறுகின்றது. அப்படி என்றால் இவ்விழாவிற்கான அடிப்படை என்ன என்று பார்ப்போம்.   

புதிய ஏற்பாட்டு நூல்களில் குறிப்புகள் இல்லை என்றாலும் கூட  யிழஉசலிhயட வநஒவ என்று சொல்லப்படும் திருமுறை பட்டியலைச் சேராத நூல்களான யாக்கோபு நற்செய்தி மற்றும் மரியாளின் பிறப்பு நற்செய்தி என்ற நூல்களில் அன்னை மரியாள் எருசலேம் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட நிகழ்வானது குறிப்பிடப்பட்டுள்ளது.

மரியாவின் பெற்றோராகிய புனித சுவக்கின் மற்றும் புனித அன்னா இருவரும் முதிர் வயது வரை குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தனர் ஆயினும் நம்பிக்கையோடு இறைவனிடம் மன்றாடி வந்தனர். வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பு இவர்களுக்கு அறிவிக்கப்பட்டது மரியாளும் பிறந்தார். இதற்கு நன்றியாக குழந்தை மரியாவை எருசலேம் ஆலயத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு அவரை கடவுளுக்கு காணிக்கை ஆக்கினார்கள். அதன் பிறகு மரியாள் தனது 12-வது வயது வரை ஆலயத்தில் இருந்தார் என்று யாக்கோபு எழுதியுள்ளார்.

மரியாளின் மூன்றாம் வயதில் இந்த நிகழ்வு நடந்ததாகவும் மரியாள் ஆலயத்திலேயே கல்வி கற்றதாகவும் இறைவனின் அன்னையாகும் நிலைக்கு அவர் அங்கு தன்னை தயாரித்ததாகவும் மரியாவின் பிறப்பு நற்செய்தி என்ற புத்தகத்தில்  குறிப்பிடப் பட்டுள்ளது.

பைசான்டைன் பேரரசர் முதலாம் ஜஸ்டின் கிபி 543 ஆம் ஆண்டு எருசலேம் ஆலயத்திற்கு அருகில் ஒரு ஆலயத்தை எழுப்பி அதை புனித கன்னி மரியாளுக்கு அர்ப்பணித்தார். அது முதல் இவ்விழா கிழக்கு திரு அவையில் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக ஒன்பதாம் நூற்றாண்டு முதலே மேற்கு திருஅவையிலும், குறிப்பாக இத்தாலியின் தெற்கு பகுதிகளில் கொண்டாடப்பட்டதோடு, 1585 ஆம் ஆண்டு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்டஸ் இவ்விழாவை உரோமை திருவழிபாட்டு நாள்காட்டில் சேர்த்தார்.

அன்னை மரியாள் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்ட விழாவின் வரலாற்றினை பார்த்தோம். விவிலியத்தில் நேரடியாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் அன்னை மரியாளின் சீடத்துவ வாழ்வும், பணியும் அவரது அர்ப்பணத்திற்கு வெள்ளிடை மலை போல சான்று பகர்கின்றன. 

பெரும்பாலும் நமது தாத்தா பாட்டிகளின் பிறந்தநாள் யாருக்கும் தெரிவதில்லை. ஆயினும் அவர்கள் கொடுத்த அன்பையும், தியாகத்தையும் நாம் என்றும் நினைவு கூறுகிறோம் அல்லவா. திருச்சபையின் மரபார்ந்த விழாக்கள் விலியத்தில் எழுதப்படவில்லை என்றாலும், அவை சுட்டிக் காட்டும் வாழ்வியல் மதிப்பீடுகள் உன்னதமானவையே. 

அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக ஒப்பு கொடுக்கப்பட்ட விழாவை கொண்டாடும் நாம் அன்றாட வாழ்வில் செய்ய வேண்டியவை என்ன என்று பார்ப்போம்.

1. இன்றைய நாளினை உலக அடைபட்ட துறவு வாழ்வு தினமாக திருச்சபை கொண்டாடுகின்றது. வாழ்நாள் முழுவதும் இறைவனோடு ஒன்றித்த தியான வாழ்வால் திருச்சபைக்கு ஜெப ஆற்றல் சேர்க்கின்ற துறவியரை நாமும் பின்பற்றலாம். அன்னை மரியாள் அனைத்தையும் தன் இதயத்தில் தியானித்து வந்தாள் என்று விவிலியம் சொல்கிறது. அன்றாடம் நம்மை அலைக்கழிக்கும் காரியங்கள் ஏராளம் ஏராளம். செய்கின்ற தொழில் சார்ந்து வருகின்ற அழுத்தங்கள் போதாது என்று அலைபேசி, அரசியல், சினிமா போன்ற காரியங்களில் நம்மை நாமே சிதற விடுகின்றோம். நமக்குள் இருக்கும் உள்ளம் என்னும் ஆலயத்தை தரிசிக்க மறந்து விடுகின்றோம். ஆகவே அவ்வப்போது புறம் சார்ந்த அனைத்தையும் அடைத்து விட்டு, உள்ளம் என்றும் கோவிலுக்குள் சென்று, அமைதியில் உறையும் இறையை தரிசிப்போம். இறை தரும் இளைப்பாறுதலை சுவைப்போம். வழிகாட்டுதல்களைக் கேட்போம். காபி பிரேக் போல அமைதி பிரேக் இன்றைய காலகட்டத்தில் அத்தியாவசியமாகிறது.

2. இரண்டாவது அன்னை மரியாளின் 'ஆம்' நமதாகட்டும். இது எங்கனம் ஆகும் என்று கப்ரியல் வான தூதரிடம் கேட்ட அன்னை 'இறைவனால் ஆகாதது ஏதுமில்லை' என்று அவர் சொல்ல கேட்டதும் 'ஆம்! நான் ஆண்டவரின் அடிமை! உன் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்று பதிலளித்தார். அதன் பிறகு அவரது வாழ்வு முழுவதும் இல்லை என்பதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இறை விருப்பத்தை நிறைவேற்றினார். சிறியதும் பெரியதுமாக அன்றாடம் நாம் எத்தனையோ முடிவுகளை எடுக்கின்றோம். அவற்றில் இறை விருப்பத்தை நாம் நிறைவேற்றுகின்றோமா என்று சிந்திப்போம். மனிதர்களைப் பிரிக்கும், வெறுக்கும், தீய சூழல் நம்மை அணுக அனுமதியாது தாழ்ச்சியும், அன்பும், உதவி செய்யும் பண்பும் கொண்டவர்களாக வாழ நமக்கு நாமே நினைவூட்டுவோம்.

3. அன்னை மரியாளின் நம்பிக்கை நமதாகட்டும். நமது குடும்ப சூழலிலும் நண்பர்கள் வட்டத்திலும் இணைந்து ஜெபிக்கின்ற பண்பினை ஊக்குவிக்கபவர்களாக மாறுவது முக்கியம். மரபார்ந்த முறையில் மனப்பாடமாக ஒப்புவிப்பது மட்டுமே ஜெபம் அல்ல. அது இளைய தலைமுறையினரை விலகிப் போக செய்து விடும். ஆகவே படைப்பூக்கும் நிறைந்த ஜெபங்களை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். அருகாமையில் இருக்கும் ஆன்மீக இடங்களுக்கு நடைபயணமாக செல்லலாம். குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினரின் நற்பண்புகளை குறிப்பிட்டு அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்லலாம். 

4. நம்மைச் சுற்றிலும் நற்செய்தி மதிப்பீடுகளை வளர்த்தெடுப்பது. மனித உறவுகளிலும் செய்யும் தொழிலிலும் உண்மை நேர்மை நீதி உணர்வு கொண்டிருத்தல். மனசாட்சி என்னும் வெளிச்சத்தை மங்க விடாது பேணுதல். அடையும் வெற்றியில் தாழ்ச்சியோடு இருத்தல், வீழ்ச்சி அடைந்தோரை தீர்ப்பிடாது இரக்கம் காட்டுதல், கரம் கொடுத்து உதவுதல், சினத்தைப் பேணாது, பெருந்தன்மையோடு மன்னித்து கடந்து செல்லுதல்

5. நம்பிக்கை வளர்ச்சிக்கான பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுதல். வாய்ப்புகள் கிடைக்கும் பொழுதெல்லாம் விவிலிய வகுப்புகள் இறையியல் வகுப்புகளில் கலந்து கொள்ளுதல், விவிலிய வாசிப்பு, இறையியல் புத்தகங்கள் வாசிப்பு போன்றவற்றை அன்றாட பழக்கமாக்குதல். கற்பு, ஏழ்மை , கீழ்ப்படிதல் என்னும் வார்த்தை பாடுகள் நம்மை சிறைப் பிடிப்பவை அல்ல நமக்கு சிறகுகள் தருபவை என்பதை உணர்ந்து, அர்ப்பண வாழ்வுக்காக இளையோரை உற்சாகப்படுத்துதல், துறவற பயிற்சி இல்லங்களுக்கு ஆன்மீக, பொருளாதார உதவிகளை தாராளமாகச் செய்தல். 

6. அன்னையின் கரம் பிடித்து நடத்தல்: ஜெபமாலை, உத்தரியம், திரு உருவம் பதித்த மோதிரம் அல்லது கை காப்பு என்று ஏதாவது ஒன்றின் மூலமாக அன்னை மரியாளின் உடன் இருப்பை நாம் எப்போதும் உணர வேண்டும். ஏனென்றால் அவர் தான் நமக்கு வாழ்க்கை என்னும் நெடுஞ்சாலையில் நாம் காணும் ளுழுளு என்னும் ஆபத்து கால உதவி. உண்மையான சீடர் நம்பிக்கை சோதிக்கப்படும் போதும், புடம் போடப்படும் போதும் உறுதியாக இறைவனின் நம்பிக்கை கொள்பவர். அதற்குரிய முதல் எடுத்துக்காட்டு மட்டுமல்ல. நமக்கான வழிகாட்டியும் கூட. 

அனைவருக்கும் அன்னை மரியாள் கோவிலில் காணிக்கையாக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழா வாழ்த்துக்களையும் ஜெபங்களையும் உரித்தாக்கி கொள்கிறேன்! நன்றி


சனி, 9 நவம்பர், 2024

Ricordi di Matera: Amicizia, Fede e Fraternità


Quando ripenso agli anni trascorsi a Roma per il mio licenza in diritto canonico, tra il 2014 e il 2017, il mio cuore si riempie di gratitudine per il calore e l’accoglienza che ho trovato a Matera. Durante le vacanze di Natale, Pasqua e l’estate, passavo quel tempo presso la parrocchia di Nostra Signora Addolorata, dove mi sentivo sempre accolto e amato dalla comunità parrocchiale e dal parroco, Don Michele.

Don Michele mi ha trattato come un fratello, nonostante le nostre differenze di nazionalità: io indiano, lui italiano. Il suo affetto sincero è stato per me una benedizione, specialmente in un momento difficile della mia vita. Dopo essere tornato dalla missione in Indonesia, ho attraversato un periodo di incertezza e difficoltà, ma Don Michele mi ha aperto le porte della sua parrocchia e del suo cuore. Mi ha dato rifugio per quattro mesi, fino a quando ho potuto tornare alla mia comunità religiosa a San Ferdinando di Puglia.

Durante quel tempo, la generosità della gente di Matera ha continuato a stupirmi. I collaboratori parrocchiali e i giovani mi hanno fatto sentire davvero a casa, facendomi scoprire le bellezze della città e accompagnandomi in momenti di gioia e fraternità. Mi portavano a visitare i Sassi di Matera, mi accompagnavano nei ristoranti locali e passeggiavamo insieme per la città. Ho avuto anche l’opportunità di partecipare a visite domiciliari, incontrare gli anziani e i malati: esperienze che mi hanno insegnato il valore della prossimità e del servizio.

Ora che vivo a Roma come viceparroco e consigliere dell’Ordine della Madre di Dio, spesso mi tornano in mente quei giorni. Matera non è stata solo un rifugio, ma un luogo dove ho trovato una famiglia spirituale e amici veri. Mi hanno mostrato cosa significa essere Chiesa: una comunità che accoglie, sostiene e ama senza riserve.

Questi momenti rimangono con me, e li porto nel mio cuore come fonte di ispirazione per il mio servizio pastorale. Il calore della comunità di Matera mi ricorda ogni giorno che la forza della Chiesa si costruisce nelle relazioni e nella solidarietà. Spero di poter restituire, nel mio ministero, almeno un po’ di quell’amore ricevuto, continuando a servire con cuore aperto e disponibile.

Matera sarà sempre una parte importante della mia vita, un simbolo di fede, speranza e amore che mi accompagnerà sempre.

 

 

புதன், 23 அக்டோபர், 2024

இந்த ஏ.ஐ உலகில் நீங்கள் இன்னும் ஏன் கடவுள் நம்பிக்கையாளராக இருக்கிறீர்கள்?

இந்தக் கேள்வியை நீங்கள் எதிர்கொண்டதில்லையா? நான் எதிர்கொண்ட போது என்னில் எழுந்த சில சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அல்லது எனக்கே நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக இருக்கும் என்பதால் பதிவு செய்து வைக்கிறேன். 

அறிவியல் - பெயரிலேயே இருக்கின்றது. அனைத்தையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும். இன்று இல்லையென்றாலும் என்றேனும் ஒருநாள் எல்லா கேள்விகளுக்கும் விடை காணும். எல்லா நோய்களுக்கும் மருந்து தரும். முதுமையின் போதாமை களையும். மரணம் தவிர்க்கும். அல்லது குறைந்தபட்சம் தள்ளிப்போடும். 

ஒரு பெரிய குளம். அதில் ஒரு மணி நேரத்தில் ஒரு பூ பூக்கிறது. அடுத்த ஒரு மணி நேரத்தில் அது இரண்டு பூவாகிறது. பின்னர் ஒரு மணி நேரத்தில் அது நான்கு ஆகிறது. இப்படியே ஆறு மாதத்தில் பாதி குளம் பூக்களால் நிரம்பி விடுகிறது. முழுக்குளமும் பூவாக இன்னும் ஆறுமாதம் தேவைப்படாது தானே? அடுத்த ஒரு மணி நேரத்தில் முழுக்கிணறும் பூவாகப் போகிறது. அந்த ஒரு மணிநேரம் மிகவும் அற்புதமானது.

அப்படிப்பட்ட ஒரு மணி நேரத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை மனிதக் குலம் இலட்சம் ஆண்டுகளில் கண்டடைந்த எல்லாவற்றையும் விட இந்த இருபது ஆண்டுகளில் எட்டியிருக்கும் தூரம் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இணையம் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தியிருக்கிறது. இந்த மாற்றம் நடப்பதைக் காணும் ஒரு மகத்தான யுகத்தில் நாமும் இருக்கிறோம்.

வெற்றிலையில் மை போட்டுப் பார்த்து, காணாமல் போன மாட்டைக் கண்டுபிடித்துத் தரும் மந்திரக்காரர்கள் இன்னும் எங்கள் ஊர்ப்பகுதிகளில் இருக்கிறார்கள். அவர்களது பேரப்பிள்ளைகள் ஸ்பேஸ் எக்ஸ்-இன் 5000 மெட்ரிக் டன் எடைகொண்ட  120 மீட்டர் உயர ராக்கெட், விண்கலத்தை ஏவிவிட்டு பத்திரமாகத் திரும்பிவருவதைத் தங்கள் ஆண்ட்ராய்டு திறன்பேசியில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த இரண்டு தலைமுறைகளையும் நாம் சார்ந்திருக்கிறோம்.

அப்படியென்றால் ஆன்மீகம் என்னவாகும்? கடவுள் என்ன ஆவார்? ஒரு வேளை மரணிக்கா வாழ்வு அமைந்தால் மனிதன் மகிழ்ச்சி அடைந்து விடுவானா? வாழ்வின் அர்த்தம் தான் என்ன? இது போன்ற கேள்விகள் நிறைய பேரிடம் எழுவதைக் காண முடிகிறது. பெரிய வரலாற்று மாற்றங்கள் ஏதுமில்லாத காலத்திலேயே இத்தகையக் கேள்விகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.

அறிவியல் வளர்ச்சி ஏதுமில்லாத இலட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, மாற்றங்கள் இயற்கையாக அமைந்தன. புறச் சூழலுக்கேற்றவாறு உயிரினங்கள் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள நிறைய கால அவகாசம் இருந்தது. அவற்றின் மரபணுக்களிலேயே  சில பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அவற்றைத்தான் பரிணாம வளர்ச்சி என்கிறோம்.

ஆனால் மனிதன் நெருப்பை, சக்கரத்தை, சட்டத்தை, வேளாண்மையை, வியபாரத்தை கண்டடைந்த வேகம் அவனது அகத்தின் ஆழத்தில் பெரிதாக எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்குப் போதுமான கால அவகாசத்தைத் தரவில்லை. அந்த மரபணுவிற்கு இந்த உலகம் புதிது. இணையம் புதிது. ஏ.ஐ புதிது.

பிறந்தக் குழந்தை மறுகணமே தாயிடம் பாலருந்தும் ஞாபகத்தை தன் மரபணுவிலேயே சுமந்து கொண்டு வருகிறது. அது மட்டுமா? ஆதாம், ஏவாளிடம் இருந்த விலக்கப்பட்டக் கனிகளுக்கான வேட்கையையும் சுமந்துகொண்டே வருகிறது. காயின், ஆபேலிடம் இருந்த வெறுப்பையும் சுமந்துகொண்டே வருகிறது. சவுல், தாவீதிடம் இருந்த பொறாமை உணர்வையும் கொண்டிருக்கிறது.

அவனது மனம் ஏதேன் தோட்டத்திற்கு வெளியே எங்கோ அலைந்து கொண்டிருக்கிறது.  அங்கிருந்த தனிமையும், பிரிவும், புறக்கணிக்கப்பும், கையறு நிலையும், மரணபயமும் மனிதனை அலைக்கழித்துக் கொண்டுதான் இருக்கின்றது. 

இவற்றையெல்லாம் நீக்கி மீண்டும் மனிதனை ஏதேன் தோட்டத்திற்குள் கொண்டு செல்ல சாத்தியக் கூறுகள் இருப்பதாக அறிவியல் கட்டியம் கூறுகிறது. உலகில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் வாக்குறுதிகள் அளிக்கின்றன. ஆயினும் பெரும்பாலான மனிதர்கள் இவைகளை நம்புவதை விட, கடவுளை நம்புவதே மேல் என்னும் நிலையில் தான் இன்னும் இருக்கிறார்கள். 

அந்தக் கடவுள் நம்பிக்கையில் மனிதர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். தாங்கள் தனிமையில் இல்லை. கடவுள் எப்போதும் உடனிருக்கிறார். மரணம் முடிவு அல்ல. முடிவில்லா காலத்திற்கானத் தொடக்கம். இறந்து போனவர்கள் இறைவன் தரும் அமைதியில் இளைப்பாறுகிறார்கள் என்பது போன்றக் கருத்துக்கள் இழப்புகளையும், வலிகளையும் எதிர்கொள்ள உதவியாக இருக்கின்றன.

ஒருவர் நம்பலாம். நம்பாமல் இருக்கலாம். அது ஒருவரின் தனிப்பட்டத் தேர்வு. என்னிடம் இப்படி ஒரு தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் போது, நான் ஏன் நம்பிக்கையின்மையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? வெறுமைக்குள் விழ வேண்டும். எதுவுமின்மைக்குள் நான் எதைக் கண்டடையப் போகிறேன். ஆகவே நான் நம்புகிறேன். ஆதனால் இருக்கிறேன். அது மட்டுமல்ல. அதனால்தான் இருக்க விரும்புகிறேன்.

கடவுளின் அன்பை சிந்திக்கும் போது, எனக்கு கீழ் வரும் விவிலிய வார்த்தைகள் சடசடவென நினைவுக்கு வருகின்றன. வாசித்துப் பாருங்களேன். 

தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேன். உன்னைக் காக்கும் கடவுள் உறங்குவதும் இல்லை. கண் அயர்வதும் இல்லை. உன் பெயரை என் வலக்கரத்தில் பொறித்து வைத்திருக்கிறேன். மலைகள் நிலை சாயினும் குன்றுகள் இடம் பெயரினும் உன்மீது நான் கொண்ட பேரன்போ நிலை சாயாது. என் சமாதான உடன்படிக்கையோ அசைவுறாது. தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார்.

இதுபோன்ற ஆயிரம் வார்த்தைகள் எனது அகத்தின் ஆழத்தில், அன்பின் ஊற்றுக்கண்களைத் திறந்துவிடுகின்றன. அறிவியலுக்காகவும், அரசியலுக்காகவும் என் அகத்தில் இருக்கும் கடவுள் தேடலை நான் கைவிடப்போவதில்லை. கல் எனக் கண்டால் கல். கடவுள் எனக் கண்டால் கடவுள். கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்பதால் நான் கடவுளைத் தேர்ந்தெடுக்கிறேன். நான் நம்பிக்கையைத் தேரந்தெடுக்கிறேன்.     

புதன், 3 ஜூலை, 2024

கத்தோலிக்கத் திருஅவையின் நம்பிக்கை அறிக்கையை சிறார்களுக்கு எவ்வாறு விளக்குவது? Profession of faith explained!

ஒரே கடவுளை நம்புகிறேன். 

கிறிஸ்தவர்களுக்கு கடவுள் ஒருவரே. நானோ, பிறரோ, பிரபலமான ஒருவரோ, பணமோ, பதவியோ, அதிகாரமோ எனக்கு கடவுள் அல்ல. கடவுளைத் தவிர யாரையும், எதையும், எதன் பொருட்டும் ஆராதிக்க மாட்டேன்.

விண்ணகமும் மண்ணகமும், காண்பவை, காணாதவை, யாவும் படைத்த 

நம்மைச் சூழ்ந்திருக்கும் அழகு அனைத்தையும் அவை உருவாகும் முன்பே நினைத்தவரும், உருவாக்கியவரும் அவரே. மிகச்சிறிய அணுவும், அகண்ட பிரபஞ்சமும் கடவுளின் மாட்சியைத் தாங்கி நிற்கின்றன. இயற்கையின் அழகில் மெய்மறந்து நின்றிருக்கிறீர்களா? அழகையும் நன்மையையும் தேடும் மனிதர்கள் கண்டடைகிறார்கள். கோள்களும், நட்சத்திரங்களும் கொண்டிருக்கும் துல்லியமான ஒழுங்கும், இயக்கமும் நம்மை வியக்க வைக்கின்றன. எவ்வளவு அதிகமாக மனிதன் கண்டறிகிறானோ, அவ்வளவு அதிகமாக தான் கண்டறியாதது எல்லையற்றதாக இருக்கிறது என்பதை உணர்கிறான்.  

எல்லம் வல்ல தந்தை அவரே.

கடவுள் தந்தை. நாம் அவரது பிள்ளைகள் என்பதால் அவர் நம்மை அன்பு செய்கிறார். நம் மீது கொண்ட அன்பின் நிமித்தம் எதையும் செய்ய வல்லவராக இருக்கிறார். அன்பினால் யாரையும் கட்டாயப்படுத்துபராக இல்லாமல் நமது சுதந்திரத்தை எப்போதும் மதிக்கிறார். ஆனால் எல்லா நன்மைகளும் கொண்ட அவரை ஏற்றுக்கொள்ளாத போது, எல்லா தீமைகளும், சுயநலங்களும் நம்மைச் சூழ வாய்ப்பிருக்கின்றது என்பதை உணர்ந்து நமது செயல்களை கடவுளின் அன்பிற்கு ஏற்றவகையில் அமைத்துக்கொள்ள வேண்டும். 

கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன்.

இயேசு என்றால் கடவுள் மீட்கிறார் என்று பொருள். கிறிஸ்துவை நாம் நம்பி ஏற்றுக்கொள்ளும் போது நம்மில் அன்பு வளர்கின்றது. கடவுள் மேகங்களுக்கு இடையில் தன்னை மறைத்துக்கொள்பவரல்ல. இயேசுவின் மூலம் தன்னை முழுமையாக வெளிப்படுத்துகின்றவர். 

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். 

படைப்பு அனைத்தும் உருவாகும் முன்பே கடவுளோடு இணைந்திருக்கிறார். 

கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப் பட்டவர் அல்லர். தந்தையோடு ஒரே பொருளானவர். 

இயேசு கடவுளால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு படைப்பு அல்ல. கடவுளின் அதே பண்புகளையும், குணங்களையும் கொண்ட ஒரு ஆள். 

இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. 

இப்பூலகில் நாம் காண்பவை அனைத்துமே படைக்கப்பட்டவை. நம் உள்ளும், புறமும் விரிந்திருக்கும் அனைத்திலும் இயேசுவின் சாயல் இருப்பதை உணர்ந்திருக்கிறாயா?

மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இறங்கினார். 

கடவுள் நிலையிலிருந்த இயேசு, நம்மைப் போல மனிதரானது அன்பின் நிமித்தமே. உன்னையே நீ அன்பு செய்வதைக் காட்டிலும் அதிகமான அன்பை, இயேசு உன் மீது கொண்டிருப்பதை உணர்ந்திருக்கிறாயா? நீ மகிழ்ச்சியாக இருப்பதையும், அவரைப் போலவே முழு உள்ளத்தோடு பிறரை அன்பு செய்யவும் இயேசு விரும்புகிறார்.  

தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். 

கடவுள் அவதாரங்களைப் போலவோ, திரையில் காணும் சூப்பர் மேன்களைப் போலவோ தோன்றி, சாகசங்களைச் செய்து மறைந்து விடுபவரல்ல. மாறாக நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களில் ஒருவராக, ஒரு தாயின் மகனாகப் பிறந்து, இன்பம், துன்பம், பசி, களைப்பு, கண்ணீர், நோய், இழப்பு, துயரம், துரோகம் அனைத்தையும் நம்மோடு பகிரந்துகொண்டார். நம்மைக் காட்டிலும் அதிகமாக நம்மை அறிபவர் இயேசு. 

மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டு, பாடுபட்டு, இறந்து அடக்கம் செய்யப்பட்டார். 

நமக்காக என்ற வார்த்தையை நமக்குப் பதிலாக என்றும் புரிந்துகொள்ளலாம். பாவம் தவிர அனைத்திலும் நம்மைப் போலிருந்த அவர், பாவிகள் நமக்குப் பதிலாகப் பலியாக முன்வந்தார். சிலுவை என்னும் பலி மேடையில் அவர் சிந்திய இரத்தத்தால் மானுடம் பாவக் கறையிலிருந்துக் கழுவப்பட்டது. 

மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்லதந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார். 

பாஸ்கா நாளில் இயேசு உயிர்த்தெழுந்தார். அழியும் தன்மை கொண்ட உடல், அழிவிலாத் தன்மைக்கு மாறியது. இத்தனைப் பெரிய அன்பினை அடைத்து வைக்க மரணத்தால் முடியவில்லை. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்? 

வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்குமுடிவு இராது. 

இயேசு ஒருநாள் திரும்பி வருவார். நம்மிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்பார். உன் முழு உள்ளத்தோடு உன்னை அன்றாடம் சந்திக்கும் மனிதர்களை அன்பு செய்தாயா? அன்பு செய்தல் என்றால், அது மன்னித்தல், தியாகம் செய்தல், எல்லா நிகழ்வுகளிலும் இறைத்திட்டத்தைத் தேடுதல் என்று பலவற்றை உள்ளடக்கியதாகும் என்பதை உணர்கிறாயா?

தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும், உயிர்அளிப்பவருமான தூயஆவியாரை நம்புகிறேன். 

தந்தையைப் போலஇ மகனைப் போல, தூய ஆவியானவரும் ஒரே கடவுள் தன்மையைக் கொண்டுள்ளார். ஆள் தன்மையில் மூவராக இருந்தாலும், கடவுள் தன்மையில் ஒரே கடவுளாக இருப்பதால் தான் நாம் மூவொரு கடவுள் என்கிறோம். 

இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதனையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே. 

ஒரே கடவுள் தன்மையைக் கொண்டிருப்பதால் ஒரே ஆராதனையும், ஒரே மாட்சியையும் பெறுகின்றார். இறைவாக்கினர்களை மட்டுமல்லாது, நம்மையும் கடவுளின் திட்டங்களைத் தேர்ந்து தெளிய நம் இதயத்தோடு பேசுகின்றார். கடவுளை அறிந்து கொள்ளவும், அன்பு செய்யவும், ஆராதிக்கவும் நம் உள்ளத்தைத் தூண்டுபவர் தூய ஆவியே. படைப்பிற்கெல்லாம் உயிரளிப்பவராகவும், அகன்று விரிந்த உலகனைத்தையும் இயக்கும் ஆற்றலாகவும் திகழ்பவர் இவரே!  

ஒரே புனித கத்தோலிக்க திருத்தூதர் வழிவரும் திருஅவையை நம்புகிறேன். 

கடவுளை அறிந்து கொள்ள விரும்புகிறாயா? அதை நீ உன் அருகாமையிலிருக்கும் உன் சகோதர, சகோதரியை அன்பு செய்வதிலிருந்து தொடங்க வேண்டும். திருச்சபை ஒரு நிறுவனம் அல்ல. இறைமக்கள் சமூகம். கிறிஸ்து அன்பு செய்யும் மணவாட்டி. அவரது மறைஉடல். தூய ஆவி வாழும் இல்லம். நம் அன்னை. நம்மை தனியாக அல்லளூ மாறாக சமூகமாக மீட்கவே கடவுள் விருப்பம் கொண்டார். பல்வேறுபட்ட மக்களினங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே திருமுழுக்கின் மூலமாக ஒரே திருச்சபையாக இணைக்கப்பட்டுள்றோம். பாவிகளை உள்ளடக்கியதாக இருந்தாலும், அருளடையாளங்களின் மூலம் கடவுளின் நீங்காத உடனிருப்பைக் கொண்டிருப்பதால் புனிதத் திருச்சபையாகின்றோம். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டிருப்பதோடு, திருத்தூதுப் பணியைத் தொடர்ந்து செய்யவும் கடமைப் பட்டுள்ளோம். 

பாவமன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக்கொள்கிறேன். 

திருமுழுக்கின் மூலமாக நாம் கடவுளின் பிள்ளைகளாகிறோம். மீட்பின் பங்காளிகளாகிறோம். இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிக்கக் கடமைப்பட்டுள்ளோம். கடவுளின் மன்னிப்பையும், இரக்கத்தையும் பெறுகின்றோம்.

இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறுஉலகவாழ்வையும் எதிர்பார்க்கிறேன்.

அழியும் தன்மைக் கொண்ட நம் உடல்இ கடவுளின் இரக்கத்தால் அழியாத் தன்மையைப் பெறுவதையே உயிர்ப்பு என்கிறோம். இறப்பிற்கு பிந்தைய உயிர்ப்பே, அதற்கு முந்தைய நம் வாழ்வை பொருள் உள்ளதாக்குகின்றது. உயிர்ப்பு என்ற ஒன்று இல்லையென்றால், நாம் வாழ்வதன் நோக்கம் தான் என்ன? மறுஉலக வாழ்வு என்பது இவ்வுலக வாழ்வைப் போன்றதல்ல. அங்கு இன்பம்-துன்பம், ஒளி-இருள் போன்ற இருமைகள் இல்லை. முற்றிலும் இன்பம். முடிவற்ற ஒளி. அத்தகைய பேரின்ப வாழ்வை எதிர்பார்த்து நம் இன்றைய வாழ்வை இனிமையாக்குவோம். ஆமென். 

தயாரிப்பு

பணி. ஆன்றனி பிரான்சிஸ்

இறையன்னை சபை (OMD)

 

வியாழன், 18 மே, 2023

ஏட்டுக்கல்வி மட்டுமல்ல


முன்னுரை

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்

கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல

பல்வித மாயின சாத்திரத்தின் மணம்

பாரெங்கும் வீசும் தமிழ்நாடு

என்று பெருமிதம் கொள்கிறார் மகாகவி பாரதியார். ஆம்! கல்வியிலும், இலக்கியத்திலும், பண்பாட்டுச் செழுமையிலும் உலகில் யாருக்கும் தாழ்ந்தவர்களல்ல தமிழர்கள் என்பது கண்கூடான உண்மை. மனிதன் ஒரு சமூக விலங்கு என்கிறார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். மனிதனை விலங்கு நிலையிலிருந்து விடுவித்து சமூகத்திற்கு ஏற்ற முழு மனிதனாக மாற்றுவது கல்வியே ஆகும். ஆயினும் பள்ளிக்கூடங்களையேப் பார்த்திராத பல மாமனிதர்களையும், பட்டங்கள் பல பெற்றும் விலங்கினும் கீழாக நடந்து கொள்ளும் நபர்களையும் நாம் அன்றாட வாழ்வில் கடந்து வருகிறோம். கல்வி என்றால் ஏட்டுக்கல்வி மட்டுமல்ல என்பதைப் புரிந்துகொண்டால் இந்த முரண்பாட்டையும் எளிதாக புரிந்துகொள்ளலாம்.

வள்ளுவரும் கல்வியும்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வி, கல்லாமை, கேள்வி, அறிவுடமை போன்ற அதிகாரங்களில் கல்வியின் சிறப்புகளை விதந்தோதுகிறார் திருவள்ளுவர். ஆழ்ந்த பொருளும், அழகும் கொண்ட அக்குறள்கள், அதற்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கனிந்த நம் கல்வி மரபின் சாட்சிகளாக நிற்கின்றன.

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு

கற்றனைத் தூறும் அறிவு (திருக்குறள் 396)

தோண்டத் தோண்ட ஊற்றுநீர் கிடைப்பது போலத் தொடர்ந்து படிக்கப் படிக்க அறிவு பெருகிக் கொண்டே இருக்கும் என்று இக்குளுக்கு விளக்கம் தருகிறார் கலைஞர்.

கல்வி என்ற சொல் கல் என்ற வேர்ச்சொல்லிலிருந்தே பிறக்கிறது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். ஆகவே அறிவு என்னும் ஆயுதம் கொண்டு நம் சிந்தனையின் ஊற்றுக்கண்களைத் திறப்பது கல்வி ஆகும். நம் ஆழ்மனதை மூடியிருக்கும் கட்டுக்கதைகள், மூட நம்பிக்கைகள், பழமைவாத சிந்தனைகள் போன்றவற்றைப் பகுத்து, ஆராய்ந்து, நீக்கி உண்மையைக் காணச் செய்வதே கல்வியின் தலையாயப் பணியாகும்.

கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும் அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை (கலைஞர் விளக்கவுரை) என்னும் பொருளில்,

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு

மாடல்ல மற்றை யவை. (திருக்குறள் 400)

என்கிறார் திருவள்ளுவர். அதனால் தான் பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை.

கல்வி என்பது ஓர் அறிவுச்செயல்பாடு

நான் சிந்திக்கிறேன்; ஆகவே நான் இருக்கிறேன் என்கிறார் மேற்கத்திய மெய்யியலின் தந்தை என்று அழைக்கப்படும் ரெனே டெக்கார்ட். ஒருவர் தன் முன்னிருக்கும் ஒரு எதார்த்தத்தைக் கவனித்து, அது ஏன், எதற்கு என்ற வினாவெழுப்பி, தரவுகளைச் சேகரித்து, ஆய்வுக்குட்படுத்தி, முடிவுகளைக் கோருவதே அறிவியல் செயல்பாடு ஆகும். அறிவியலின் முடிவுகளும் ஆய்வுக்குட்பட்டதே என்பதால் தனது பழைய கருத்துக்களைப் புதுப்பித்துக்கொள்ளவும் அது தவறுவதில்லை. நமது வரலாற்று, சமூக, அரசியல், பொருளாதார. சுற்றுச்சூழல் எதார்த்தங்களை ஆய்வுக்குட்படுத்தி, கேள்விகளை எழுப்பி, மனிதர்கள் வாழ்வை ஒருபடியேனும் முன்னகர்த்த பயன்படுமாயின் அதுவே உண்மையான கல்வியாகும். ஏடுகள் நமக்குள் ஒரு தீப்பொறியைப் பற்றவைக்கலாம். அதனை நம் சிந்தனை மற்றும் செயல்களின் மூலமே பயனுள்ள ஆற்றலாக மாற்றிக் கொள்ள முடியும்.

இன்றைய சூழல் என்ன?

போட்டிகள் நிறைந்த நம் காலத்தில் கல்வி என்றால் அதிக மதிப்பெண்கள் பெறுவது என்று குறுகலாகப் புரிந்துகொள்ளப்படுகின்றது. தேர்வு முடிவுகளை இலக்காகக் கொள்ளும் கல்வி என்பது மாணவர்களிடமிருந்து கற்றல் இன்பத்தை முற்றிலும் பறித்துவிடுவதோடு, அதிகமானப் பதற்றத்தையும், அழுத்தத்தையும் ஏற்படுத்துகின்றது. மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைப் பொறுத்தே அவர்களது மேற்படிப்பிற்கான வாய்ப்புகள் தீர்மானிக்கப்படுவதால் அப்பதற்றம் தவிர்க்க முடியாததாகிறது. பள்ளிகளில் கற்றல் - கற்பித்தலில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது எனினும், பத்தாம் வகுப்பு முடிவிலேயே அவர்கள் தங்கள் கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக பெரிய முடிகளை எடுக்க வேண்டிய சூழலே இருக்கின்றது.

நல்ல மதிப்பெண்கள் எடுத்து மேல்நிலை வகுப்பில் கணிதம் அறிவியல் தேர்வு செய்யும் மாணவர்கள் கடினமான பாடத்திட்டத்தால் பெறும் அழுத்தத்திற்கு உள்ளாவதையும், வரலாறு, வணிகவியல் எடுக்கும் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் துறைக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதை நினைத்து வருந்துவதையும் பெருமளவு பார்க்க முடிகிறது. ஆகவே பாடத்திட்டங்கள் எளிமையாக்கப்பட்டு, மேற்படிப்புக்கான வாய்ப்புகளில் நெகிழ்வுத் தன்மை கொண்ட கல்விமுறைகள் காலத்தின் கட்டாயமாகிறது. அப்போதுதான் மாணவர்கள் கல்வியை ஏட்டுக்கல்வியாக அல்லாமல் வாழ்க்கைக் கல்வியாக அணுக முடியும். எனக்குத் தெரிந்த வரையில் ஐரோப்பிய நாடுகளில் கல்லூரி இளங்கலை முடியும் வரையிலும் ஒருவர் தன் துறையைத் தீர்மானிக்க அவகாசம் தரப்படுகின்றது. அத்தகைய நெகிழ்வுத் தன்மையுள்ள கல்வித்திட்ட மாதிரிகளை அரசு பரிசீலிக்கலாம் என்று வலியுறுத்துகிறேன்.

வாழ்க்கைக் கல்வி

இக்கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போது பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பிற்கானத் தேர்வு முடிவுகள் வந்திருக்கும். நீங்களோ, உங்களுக்கு தெரிந்த யாரோ ஒருவரோ எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் சோர்ந்து போயிருக்கலாம். அல்லது மேற்கொண்டு என்ன படிக்கலாம் என்ற குழப்பத்தில் இருக்கலாம். அல்லது எதிர்பார்த்த படிப்பிற்கான வாய்ப்புகள் கிடைக்காமல் ஏமாற்றத்தில் இருக்கலாம். உங்களுக்கு சொல்ல விரும்புவது ஒன்று மட்டும் தான். மதிப்பெண்கள் மட்டுமே வாழ்க்கை அல்ல. வாழ்வின் ஒரு கட்டத்தில் உங்கள் கற்றல் செயல்பாட்டினை மதிப்பிடும் ஒரு அளவுகோல் தான் மதிப்பெண்கள். வாழ்வு இதைப் போன்ற பல கட்டங்களை உள்ளடக்கியது. பல செயல்பாடுகளை உள்ளடக்கியது. அவை எதற்கும் மதிப்பெண்கள் என்னும் அளவுகோல்கள் இருப்பதில்லை. விடா முயற்சி, தன்னம்பிக்கை, இறை நம்பிக்கை, மகிழ்ச்சியாக இருத்தல், நன்றியுணர்வு கொண்டிருத்தல், நட்பு பேணுதல், உணர்ச்சியுள்ள மனிதராக இருத்தல் போன்ற மதிப்பெண்கள் தரப்படாத பல துறைகளில் நீங்கள் வெற்றியாளர்களாக இருக்கலாம். ஆகவே ஒரு தோல்வியோ, ஒரு ஏமாற்றமோ, ஒருவரின் கேலிச் சொல்லோ, ஒரு அவமானமோ உங்கள் வாழ்க்கையை வரையறுக்க விடாதீர்கள். எழுந்து நடங்கள்! பாதைகள் இல்லாவிடினும் எழுந்து நடங்கள்! உங்கள் பயணங்களில் உலகம் உங்களைப் பின் தொடரும்!