திங்கள், 12 மார்ச், 2012

மகதலா மரியாவின் தான்மையும், மேன்மையும் (Mary Magdelene, in a Feminist perspective)

               மகதலா மரியாவின் தான்மையும், மேன்மையும்

முன்னுரை

பெண்ணுக்குள்ளே ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடு மீசன்
மண்ணுக்குள் ளேசில மூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்'
என்பது பெண்ணியப் போராளி பாரதியாரின் உண்மை வரிகள். இன்றளவும் பெண் விடுதலையை வெறும் ஏட்டளவிலும், உதட்டளவிலும் மட்டுமே கொண்டுள்ள ஆணாதிக்க, பெண்ணடிமைத் திருச்சபைக்கு புத்தித் தெளிவூட்டும் திறம் கொண்ட வீரப் பெண்ணாக, தான்மைத் தெளிவும், பணி மேன்மையும் கொண்டு, இயேசுவின் உண்மைச் சீடத்தியாக வலம் வந்த மகதலா மரியாவின் வாழ்க்கை என்னுள் ஏராளம் சிந்தனைகளைக் கிளறி விட்டதன் பயனே இக்கட்டுரையாக்கம். பத்தோடு ஒன்று பதினொன்றாக மாறிவிடாமல், இப்பெண்ணின் வாழ்வு நமக்குக் கற்றுத் தரும் பாடங்களைக் நம் அன்றாட வாழ்வில் முழுக் கவனத்தோடு செயல்படுத்தினால் பெண்விடுதலை சாத்தியமாவது எளிதனாகதாகும் என் நம்பிக்கை.

விவிலியத்திலிருந்து

 'பொல்லாத ஆவிகளினின்றும், நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும் ஏழு பேய்கள் நீங்கப் பெற்ற மகதலா மரியாவும்,... மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமைகளைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்துவந்தார்கள்' (லூக்கா 8:2-3).
 'வாரத்தின் முதல் நாளான்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்ளூ' (யோவான் 20:1-2)
 'மகதலா மரியா கல்லறைக்கு வெளியே நின்று அழுதுகொண்டிருந்தார்'(யோவான் 20: 11).
 'இயேசு அவரிடம் 'மரியா' என்றார். மரியா திரும்பிப் பார்த்து 'ரபூனி' என்றார்' (யோவான் 20: 16)
 'மரியா புறப்பட்டுச் சென்று இயேசுபோடு இருந்தவர்களிடம் இதை அறிவித்தார். அவர்கள் துயருற்று அழுதுகொண்டிருந்தார்கள். அவர் உயிரோடு இருக்கிறார் என்றும் மரியா அவரைக் கண்டார் என்றும் கேட்டபோது அவர்கள் நம்பவில்லை.' (மாற்கு 16: 9)

யார் இந்த மகதலா மரியா?

 கலிலேயா கடற்கறையிலுள்ள, திபேரியா என்னும் நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள ஓர் இடத்தின் பெயர்தான் மகதலா என்பதாகும். மரியா இப்பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்ளூ அதன் அடிப்படையிலேயே அவர் இப்பெயரில் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது ஒரு கருத்து. லூக்கா 7: 36 இல், இயேசுவின் காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணம் பூசிய பாவி என்று கூறப்பட்ட அந்தப் பெயர் குறிப்பிடப்படாதப் பெண், யோவான் 11 இல் நாம் காணும், லாசர், மற்றும் மார்த்தாவின் சகோதரியான பெத்தானியாவைச் சார்ந்த மரியா மற்றும் நம் புரட்சிப் பெண் மகதலா மரியா ஆகிய மூவரும் ஒருவரே என்பது கத்தோலிக்கத் திருச்சபையின் பரவலான நம்பிக்கை. ஆயினும் இதைப் பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏன் இந்தக் குழப்பம்?

தெர்த்துல்லியன் லூக்கா 7 இல் காணும் பெயர் குறிப்பிடப்படாத, பாவி என்று கூறப்பட்ட பெண்ணும், யோவான் 12 இல் காணும் லாசரின் சகோதரியான பெத்தானியா மரியாவும் இயேசுவின் காலடிகளைக் கழுவி, கூந்தலால் துடைப்பதால் இருவரும் ஒரே நபராக இருக்கக் கூடும் என்பது தெர்த்துல்லியனின் கருத்து. இருப்பினும் இந்த இரண்டு செயல்பாடுகளும் வௌ;வேறு மனநிலையில், வௌ;வேறு இடங்களில் நடைபெற்றதாக இருப்பதால் இருவரும் ஒரே நபராகக் கொள்ள இயலாது என்று ஒரிஜன் கூறுகின்றார். இது இவ்வாறு இருக்க, பெயர் குறிப்பிடப்படாமல் வெறுமனே பாவி என்று அறியப்பட்ட பெண்ணும், மகதலா மரியாவும், தொடர்ச்சியாக அடுத்தடுத்து ஒருவர் பின் ஒருவராக லூக்கா நற்செய்தியில் இடம் பெறுவதால் இருவரும் ஒரே நபராக இருக்கக் கூடும் என்று பெரிய கிரகோரியார் கருதுகிறார். இதன் அடிப்படையிலேயே கத்தோலிக்கத் திருச்சபை மனம் திருந்துதல் (பாவி என்று அறியப்பட்ட பெண்), இயேசுவின் வார்த்தைக்குச் செவிகொடுத்தல் (பெத்தானியா மரியா), அவருக்கும் அவரது மக்களுக்கும் பணிவிடை புரிதல் (மகதலா மரியா) என்னும் மூன்று விழுமியங்களையும் கொண்ட ஒரே நபராக மகதலா மரியாவை அறிவித்து அவரது விழாவினை ஜுலை 22 ஆம் நாளன்று கொண்டாட அழைப்பு விடுக்கின்றது. இருப்பினும் இக்கருத்தில் எந்த பொருளும் இருப்பதாகக் கருதாத கீழைத் திருச்சபை இம்மூன்று நபர்களையும் தனித்தனியே விழாக் கொண்டாடி சிறப்பு சேர்க்கின்றது.

கிரகோரியாரின் மடலிலிருந்து

 'மதலேனா ஆண்டவரின் கல்லறை காலியாக இருப்பதைக் காண்கிறார். சீடர்களிடம் விரைந்து சென்று அதனை அறிவிக்கிறார். அவர்களும் வந்து பார்;;க்கிறார்கள். ஆனால் 'சீடர்கள் வீடு திரும்பினர். மகதாலா மரியா கல்லறைக்கருகில் வெளியே நின்று அழுது கொண்டிருந்தார்' (யோவா 20: 10-11) இதைப் பற்றிச் சற்றுச் சிந்திப்போம். மற்ற சீடர்கள் போய்விட்டாலும், கல்லறையை விட்டு நீங்காமல் நின்ற இந்தப் பெண்ணின் இதயத்தில் சுரந்த அன்பைப் பாருங்கள். ஆண்டவரைத் தேடியும் காண இயலாத கட்டத்தில் கூடத் தேடிக்கொண்N இருக்கிறார். கண்ணீரும் கம்பலையுமாகத் தேடுகிறார். அன்புத் தீ அவரிடம் பற்றி எரிகிறது. 'அவரை எடுத்துக் கொண்டு போய்விட்டார்களோ' என்று எண்ணிக்கொண்டேத் தேடுகிறார். மற்றெல்லோரும் போய்விடினும் தாம் மட்டும் தங்கியிருந்து தேடியதால் அவர் மட்டுமே ஆண்டவரை முதலில் கண்டு கொண்டார். எந்த ஒரு நற்செயலும் நிறைவேற விடா முயற்சி தேவை. 'இறுதிவரை முயல்பனே மீட்பு பெறுவான்' என்று உண்மையின் ஊற்று உரைத்தாரன்றோ?' என்று திருத்தந்தை தூய பெரிய கிரகோரியார் மகதலா மரியாவைப் பற்றிய விளக்க உரையில் அழகாகக் குறிப்பிடுகின்றார்.

என் பார்வையில்

 நற்செய்திக் குறிப்புகளை வாசித்ததிலிருந்தும், விவிலியக் களஞ்சியங்களின் அடிப்படையிலும், எனது சிந்தனையிலும் பார்க்கும் பொழுது மகதலா மரியவை, பாவியாயிருந்து மனம் திரும்பியப் பெண்ணாகக் கொள்வதும், இயேசுவின் காலடியில் அமர்ந்து தியானித்துக் கொண்டிருந்து பெத்தானியா மரியாவாகக் கொள்வதும் வலுக்கட்டயாமாக இம்மூவரையும் ஒன்றாகச் சேர்த்துத் ஏன் திணிக்க வேண்டும் என்ற வினா எழும்புகிறது.. இக்கருத்து மகதலா மரியாவின் சமூக வாழ்க்கையையும், பாலஸ்தீனத் தெருக்களில், வெயிலிலும் மழையிலும், மக்கள் ஏற்றுக்கொண்ட போதும், எதிர்க்கும் போதும்,  இயேசுவோடு அலைந்து திரிந்து அவரது பணியில் மற்ற (ஆண்) திருத்தூதர்களைப் போலவோ, அல்லது அதைவிடப் பன்மடங்கு அதிகமாகவோ முழுப்பங்கெடுத்ததையும் மறைக்கவும், குறைத்து மதிப்பிடவும், மழுங்கடிக்கவும் மேற்கொள்ளும் முயற்சியாகவேக் கருதுகிறேன். இதை என் சொந்தக் கருத்தாகக் கொள்ளாமல், நற்செய்திச் சான்றுகளோடுப் பொருத்திப் பார்த்தால் மகதலா மரியாவின் பணிச்சிறப்பு நன்கு விளங்கும்.

நம் காலப் பெண்களுக்கு

மீண்டும் பாரதியே நினைவுக்கு வருகிறான்:
'நாணு மச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!'
நீ பெண் என்பதால் மட்டுமே உன் தான்மை அழிக்கப்படும். மேன்மை புறக்கணிக்கப்படும். உன் மாபெறும் வல்ல செயல்கள் மிகவும் சாதாரணமாக அர்த்தம் கொள்ளப்படும். பெண்ணே! என் சகோதரியே! மனம் தளராதே! நம் ஆண்டவர் இயேசுவைப் போல, அக்ரகாரத்தில் முளைத்த முதல் முறுக்கு மீசைக்குச் சொந்தக்காரரானப் பாரதியையைப் போல இன்றும் பல போராளிகள் நம் மத்தியில் உண்டு. உன் பணிகளை, உன் தான்மைகளை வெறுமனே சில முட்டாள்களின் கருத்துக்களுக்கு ஒப்பிட்டு உன்னையேத் தாழ்த்திக்கொள்ளாதே. திருச்சபை உனக்குத் தகுந்த அங்கீகாரம் தரவில்லை என்று புலம்பாதே. அது உண்மையான இயேசுவின் சீடரையும், சீடத்தியையும் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக வரலாறே இல்லை. உன் அங்கீகாரம் இயேசுவிடமிருந்து நேரடியாக வருவததைப் புரிந்து கொள். உன் சேவை இச்சமூகத்திற்குத் தேவை என்பதை ஏற்றுக்கொள்ளும் பலர் இன்னும் நம்மிடையே உள்ளனர். எக்காரணத்திலும் மனம் தளராதே. முன்னேறு. உன்னைச் சுற்றிலும் அறிவிலிகளாக வலம் வரும் உன் சகோதரர்களின்பால் இரக்கம் கொண்டு ஆணும் பெண்ணும் இறைவனின் பார்வையில் சமம் என்னும் முழு உண்மையை நோக்கி முன்னேற்று. உன் சகோதரனின் வாழ்த்துக்கள்.!

உதவிய நூல்கள்:
1. ஆர். எஸ். அமல்ராஜ், புனிதர்களின் பாதையில், (திண்டுக்கல்: வைகறைப் பதிப்பகம், 2001).

2. Aj. Mausolfe, Saint Companions for each day, (Mumbai: St. Paul’s, 2006).
3. New Catholic Encyclopedia, second edition, Vol. 2, (New York: Thomson-Gale Publications, 2003).

புலவருடன் ஓரு பேட்டி (Its all about our Tamil cinema)

                   புலவருடன் ஓரு பேட்டி

பின்குரல்: சார் நீங்க புதுசா ஒரு கவிதை எழுதியிருக்கீங்களாமே! அதப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்..

புலவர்: இதுவரை நீங்கள் கேட்டிராத பார்த்திராத, சுவைக்காத சுவாசிக்காத, ஏன் ஐம்புலன்களாலும் அறிய முடியாத, தமிழ் இலக்கிய உலகிற்கு ஓர் புதிய வரவு. அற்புதப் படைப்பு. நான் வாசிக்க, நீங்கள் சுவாசிக்க என்னே ஓர் கவிதானுபவம்..

பின்குரல்: அடேங்கப்பா இவ்வளவு மொக்கையா பில்ட் அப் விடுறீங்களே! எங்கே! அந்தக் கவிதையைக் கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்?

புலவர்: 'ஆடைகட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
 குளிர் ஓடையில் மிதக்கும்
 மலர் ஜாடையில் சிரிக்கும்
 இவள் காடு விட்டு வந்த மயிலோ?
 கூடு கட்டி வாடும் குயிலோ?...! (2)

பின்குரல்: சார்...சார்.. கொஞ்சம் நிறுத்துங்க! இதே கவிதை 1959இல் அமுதவல்லிங்ற படத்துல     தங்கை.டி.என்.ராமையா தாஸ் என்பவரால எழுதப்பட்டதா சொல்றாங்களே!

புலவர்: ஹா..ஹா..இந்த உலகத்தில் எதுதான் புதியது? நீ சுவாசிக்கும் காற்று, வாசிக்கும் எழுத்து, யோசிக்கும் காதல், நேசிக்கும் நட்பு, பாஷிக்கும் மொழி, போஷிக்கும் தெய்வம்..

பின்குரல்: சார் சார். போதும் சார். போதும் சார். தலையை சுற்றுது. அப்புறம் கவிதையைப் புதுசு அப்புடி இப்புடின்னு ரீல் விட்டீங்க..

புலவர்: ஆம் பழைய இரசத்தை, புதிய பையில் தருகிறேன். வரிகளை இருமுறை வாசித்தேன். மூன்று வரி முடிவில் மூன்று முற்றுப்புள்ளி வைத்தேன் ஆச்சர்யக்குறியோடு கம்பீரமாய் நிற்கிறது என் கவிதை!

பின்குரல்: ஓ இது மூணு புள்ளி கவிதையா? ஆமா நீங்க புதுசா படம் ஒண்ணு இயக்குறதா சொல்றாங்களே! கதை தயாராகி விட்டதா?

புலவர்: கதை எதற்கு? கையில் கதை இருக்க.. வில்லனின் கதை முடிய படம் முடியும் பார்!
ஆயிரம் அரிவாள், முந்நூறு குண்டர்கள், விபத்துக்களில் சிதைந்த வாகனங்கள் இருநூறு, ஒரு கேமரா, கொஞ்சம் பணம். படம் எடுக்க இனியும் என்ன வேண்டும் சொல்லும். முன்னால் வந்து நில்லும்!

பின்குரல்:

தரையில் காண்பதையே
திரையில் காட்டியது போதும்
 புதிதாக படம் செய்யும்!
கொலைக் களம் போதும்
கலை களம்காணச் செய்யும்
 நாளையே மறந்துவிடலாம்
நம் குழந்தைகள்
நாம் தமிழர் என்று
எடும் 
தமிழர் அடையாளங்களை
பதிவு செய்யும் படம்
மறந்துவிட வேண்டாம்
எங்களுக்கும் சிறிது தெரியும் என்று!
புவிஈர்ப்பு விசைக்கு
முரணாக யாரையும்
பறக்க விடுவதை நிறுத்தும்
உணர்வுகள் கதையில் மிதக்கட்டும்
மழைவிட்டப் பிறகும்
 இலையில் சொட்டும் நீராக
 சில புதிர் முடிச்சுக்களை அவிழ்க்கும் பொறுப்பை
 விடும் எங்களிடம்
'விடிந்து விடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா'
முடிந்தால் எடும்
ஓர் ஹைக்கூ திரைப்படம்

நன்றி
பிரான்சிஸ்

சனி, 3 மார்ச், 2012

சுவர்க் கோழியும், கைப்பிடியளவு வெளிச்சமும் (The Death of the Tamilians)

பின்னிரவு முடியும் கருக்கலில்
கைப்பிடியளவு வெளிச்சம் முளைத்து
ஊருக்குள் கூவு என
சுவர்க்கோழியிடம் சொன்னது!

அதிர்ச்சியூட்டும் செய்திகளில்
பாதிக்கப்படுவோர் இருப்பின்
கேட்பதைத் தவிர்ப்பது நலம்
என்றது வெளிச்சம்

அதிர்ச்சியடைந்தது கோழி
இந்த ஊரிலாவது அதிர்ச்சியாவது?

குஸராத்தில் வேண்டாம் என்றான்
கேரளத்தில் விரட்டி விட்டான்
வந்தோரை வரவேற்கும் இந்த ஊரில்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
அணுஉலை வந்தபோது!

பார்க்கும் தூரத்தில்
ஓரினம் ஒழிந்த போது
பழையத்துணி போலக் கிழிந்த போது
உடையோடு உடல் கீறும்
முள்ளிவாய்க்காலின் முனங்கல் கேட்டபோது
யாருக்கும் அதிர்ச்சியில்லை
செத்தவன் தமிழன்தானே!

யாரைக் கொன்றாலும்
கருணைக்கு இடமுண்டு
நீங்கள் தமிழன் இல்லையென்றால்
என்ற முடிவை எதிர்த்து
முத்துக்குமரன் செத்தது போல
தன்னை எரித்துச் செத்தாள் செங்கொடி
என்ற  செய்தி கேட்டும்
யாருக்கும் அதிர்ச்சியில்லை
கேட்டால் யார் அந்த செங்கொடி என்பர்!

எல்லை கடந்த ஆழியின்
சுனாமி என்னும் கொடும்பசியினும்
அதிகமாக பெருகும் இலங்கைப் பினாமிகளின்
குருதியின் மீதானத் தீராப்பசிக்கு
குதறப்பட்ட தமிழ் மீனவர்களின் ஈரசடலங்களில் வீசும்
சவநெடியின் வீச்சமறிந்தும்
இங்கு யாருக்கும் அதிர்ச்சியில்லை
எல்லை கடந்தால் இப்படித்தானென்று எடுத்துக்கொள்வர் போல..

இடிபோல எதிரி இருப்பினும்
இடிச்ச புளி போல இருந்தே
பழகி விட்டோம்
கரகரத்தது சுவர்க்கோழி

புளி, கார திருச்சபையின்
எதிர்வினை பற்றி
விளக்கம் கேட்டது வெளிச்சம்
பேசாமலே இருந்தது சுவர்க்கோழி

எச்சரிக்கை
சுவர்க்கோழியின் செவிகளைச் சுட்ட
கையளவு வெளிச்சத்தின் வெப்பம்
எதிர்வினைகளின்றி சோம்பும்
யாரையும் சுடக்கூடும்!

தமிழனே உனக்கு நுறு சூடு
நல்ல மாட்டுக்கு
மட்டும் தான் ஒரு சூடு

எதையேனும் தின்னும் வெறியைக் கூட்டிக்கொள்ள
தவக்கால ஒடுக்கங்களில்
செயற்கையானக் கொடும்பசிகளில்
மாமிசருசி பெருகும்படியாய் உங்கள்
கோரைப்பற்களைத் தீட்டிக்கொள்பவர்களெனில்
கை நிறைய உப்பை அள்ளித் தின்றுபாருங்கள்
கொஞ்சமேனும் சொரணை வரக்கூடும்

காவிரிநீர், ஈழப்போர்,
அலைக்கற்றை ஊழல்,
முல்லைப்பெரியாறு அணை,
கூடங்குளம் அணுஉலை
ஒன்றிலும் ஒன்றுபடாத இனமே
ஒன்றாக வீசாதக் காற்றை
புயல் என்பவன் மூடன்

ஒன்றுபடக் கூவு சுவர்க்கோழியே
தமிழன் ஒன்றுபடக்கூவு
தின்று விட எண்ணும் பேதைக் கூட்டம்
இன்றே சென்றுவிடக் கூவு

வந்தேறி வாதையெல்லாம்
வெந்துவிடக் கூவு
அழிக்கும் அணுஉலையே
அவிந்துவிடக் கூவு

ஏமாற்றும் அரசுகளை
நீ மாற்றக் கூவு
ஏமாறும் எம்மக்கள்
பாராளக் கூவு...

இறையரசு வேட்கையுடன்
பிரான்சிஸ்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

ஒரு உயரதிகாரியின் நலவிரும்பியாக நீங்கள் விரும்பிய கணத்தில்...!



ஒரு உயரதிகாரியின்
நலவிரும்பியாக
நீங்கள் விரும்பிய கணத்தில்...!
... எச்சரிக்கை
உயரதிகாரியின்
நலவிரும்பி வருகிறான்
என்ற சமிக்ஞைகள் பரவும்

உயரதிகாரியின்
உளம் விரும்பாத படி
எதுவும் நடந்துவிடுவதை
தடுப்பதில் எப்பொழுதும் கவனம்

உயரதிகாரியின் முகவரியோடு
முக வரிகளையும்
வாசிக்கத் தெரிந்திருப்பது அவசியம்
அப்பொழுதுதான்
உங்கள் கண்ணாடி அறையைப்
பார்க்கத் திரும்புமுன்
அவர் முன் நீங்கள் செல்லமுடியும்

உயரதிகாரி நட்பு மனநிலையில்
இருக்கும் போது நட்பாகவும்,
அவரது மற்ற ஏனைய மனநிலைகளின் போதும்
நட்பாகவேயிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும்

இது குறித்து சக அதிகாரிகளின்
ஏளனப் பார்வைகளை
எதிர்கொள்ளும் வாதங்களைத்
தயாராக வைத்திருப்பது நலம்

இல்லையென்றால்
உயரதிகாரியின் நலவிரும்பியாக இருப்பதில்
என்ன திருப்தி கிடைக்கப் போகிறது?

அனைத்திலும் முக்கியம்
உயரதிகாரியின் நலவிரும்பியாக
நீங்கள் விரும்பியக் கணத்திலிருந்து
இடைவிடாமல்
அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்

உயரதிகாரியின்
நலவிரும்பியாக
நீங்கள் விரும்பியக் கணத்தில்
மீண்டும் இதை நன்றாக
மனப்பதியம் செய்வது அவசியம்

அன்புடன்
யாரோ.