திங்கள், 12 மார்ச், 2012

புலவருடன் ஓரு பேட்டி (Its all about our Tamil cinema)

                   புலவருடன் ஓரு பேட்டி

பின்குரல்: சார் நீங்க புதுசா ஒரு கவிதை எழுதியிருக்கீங்களாமே! அதப்பற்றி கொஞ்சம் சொல்லுங்க சார்..

புலவர்: இதுவரை நீங்கள் கேட்டிராத பார்த்திராத, சுவைக்காத சுவாசிக்காத, ஏன் ஐம்புலன்களாலும் அறிய முடியாத, தமிழ் இலக்கிய உலகிற்கு ஓர் புதிய வரவு. அற்புதப் படைப்பு. நான் வாசிக்க, நீங்கள் சுவாசிக்க என்னே ஓர் கவிதானுபவம்..

பின்குரல்: அடேங்கப்பா இவ்வளவு மொக்கையா பில்ட் அப் விடுறீங்களே! எங்கே! அந்தக் கவிதையைக் கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்?

புலவர்: 'ஆடைகட்டி வந்த நிலவோ
 கண்ணில் மேடை கட்டி ஆடும் எழிலோ?
 குளிர் ஓடையில் மிதக்கும்
 மலர் ஜாடையில் சிரிக்கும்
 இவள் காடு விட்டு வந்த மயிலோ?
 கூடு கட்டி வாடும் குயிலோ?...! (2)

பின்குரல்: சார்...சார்.. கொஞ்சம் நிறுத்துங்க! இதே கவிதை 1959இல் அமுதவல்லிங்ற படத்துல     தங்கை.டி.என்.ராமையா தாஸ் என்பவரால எழுதப்பட்டதா சொல்றாங்களே!

புலவர்: ஹா..ஹா..இந்த உலகத்தில் எதுதான் புதியது? நீ சுவாசிக்கும் காற்று, வாசிக்கும் எழுத்து, யோசிக்கும் காதல், நேசிக்கும் நட்பு, பாஷிக்கும் மொழி, போஷிக்கும் தெய்வம்..

பின்குரல்: சார் சார். போதும் சார். போதும் சார். தலையை சுற்றுது. அப்புறம் கவிதையைப் புதுசு அப்புடி இப்புடின்னு ரீல் விட்டீங்க..

புலவர்: ஆம் பழைய இரசத்தை, புதிய பையில் தருகிறேன். வரிகளை இருமுறை வாசித்தேன். மூன்று வரி முடிவில் மூன்று முற்றுப்புள்ளி வைத்தேன் ஆச்சர்யக்குறியோடு கம்பீரமாய் நிற்கிறது என் கவிதை!

பின்குரல்: ஓ இது மூணு புள்ளி கவிதையா? ஆமா நீங்க புதுசா படம் ஒண்ணு இயக்குறதா சொல்றாங்களே! கதை தயாராகி விட்டதா?

புலவர்: கதை எதற்கு? கையில் கதை இருக்க.. வில்லனின் கதை முடிய படம் முடியும் பார்!
ஆயிரம் அரிவாள், முந்நூறு குண்டர்கள், விபத்துக்களில் சிதைந்த வாகனங்கள் இருநூறு, ஒரு கேமரா, கொஞ்சம் பணம். படம் எடுக்க இனியும் என்ன வேண்டும் சொல்லும். முன்னால் வந்து நில்லும்!

பின்குரல்:

தரையில் காண்பதையே
திரையில் காட்டியது போதும்
 புதிதாக படம் செய்யும்!
கொலைக் களம் போதும்
கலை களம்காணச் செய்யும்
 நாளையே மறந்துவிடலாம்
நம் குழந்தைகள்
நாம் தமிழர் என்று
எடும் 
தமிழர் அடையாளங்களை
பதிவு செய்யும் படம்
மறந்துவிட வேண்டாம்
எங்களுக்கும் சிறிது தெரியும் என்று!
புவிஈர்ப்பு விசைக்கு
முரணாக யாரையும்
பறக்க விடுவதை நிறுத்தும்
உணர்வுகள் கதையில் மிதக்கட்டும்
மழைவிட்டப் பிறகும்
 இலையில் சொட்டும் நீராக
 சில புதிர் முடிச்சுக்களை அவிழ்க்கும் பொறுப்பை
 விடும் எங்களிடம்
'விடிந்து விடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா'
முடிந்தால் எடும்
ஓர் ஹைக்கூ திரைப்படம்

நன்றி
பிரான்சிஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக