வெள்ளி, 24 ஏப்ரல், 2020

கொரோனா சவால்கள் (The Challenges of Corona Virus)













                                                                                              




















முன்னுரை
நமது தலைமுறை சந்தித்த மிகப்பெரிய கொள்ளை நோய் கோவிட்-19. கொரோனா என்னும் வைரஸ் மூலம் பரவும் இந்நோய் ஒட்டுமொத்த உலகத்தையே உலுக்கிவிட்டதை நம் கண்கூடாகப் பார்க்கிறோம். உலகப்போர்களின் காலத்தில் மக்கள் அச்சத்தில் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்ததை வரலாற்றுப் புத்தகங்களில் தான் படித்திருக்கிறோம். ஆனால் இப்போதுதான் அதன் உண்மை அர்த்தம் நமக்குப் புரிகிறது. ஆம்! இதுவும் ஒரு அணுவினும் சிறிய உயிர்த்துணுக்கான கொரோனா என்னும் வைரஸ் மனிதகுலத்திற்கு எதிராகத் தொடுக்கும் ஓர் உலகப் போர்தான். மனிதனின் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வின் அனைத்துத் தளங்களையும் தொட்டுப்பார்த்து திணறவைக்கும் கொரோனா விடுக்கும் சவால்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் காண்போம்.

கொரோனா முன்கதைச் சுருக்கம்
1930 ஆம் ஆண்டில் ஆர்தர் ஷால்க் மற்றும் எம்.சி.ஆவ்ன் என்னும் ஆராய்ச்சியாளர்கள் வளர்ப்புக் கோழிகளில் ஏற்படும் ஒருவகை தொற்றுநோயைக் கண்டறிந்தனர். ஆறு ஆண்டுகளுக்குப்பின் ப்ரெட் மற்றும் சார்லஸ் கட்சன் என்பர்களால் அந்நோய்க்கான வைரஸ் கண்டறியப்பட்டது. அத்தோடு எலிகள் மற்றும் இன்னும் சில விலங்குகளைத் தாக்கும் வைரஸ் அடையாளம் காணப்பட்டது. முதன் முதலாக மனிதர்களைத் தாக்கும் இத்தகைய வைரஸானது 1960 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மூலம் கண்டறியப்பட்டது. நிறைய மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் கூட்டு முயற்சியினால் கொரானா என்னும் வைரஸ் உருவாக்கும் தொற்று நோய்கள் பற்றிய அறிவில் நாம் பல படிநிலைகளைக் கடந்திருக்கிறோம். கிரீடம் என்னும் பொருள் தரும் இலத்தீன் சொல்லான கொரோனா மற்றும் கிரேக்க சொல்லான கொரொவ்ன் என்ற சொற்களிலிருந்து 1968 ஆண்டு முதல் இப்புதிய வகை வைரஸ் தொகுப்பானது அழைக்கப்படுகிறது.

கோவிட்-19
சீனாவின் ஊபேய் மகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்நோய்த் தொற்று பரவத்தொடங்கியது. சுவையின்மை, காய்ச்சல், வறட்டு இருமல், மூச்சுத்திணறல் போன்றவை சில பொதுவான அறிகுறிகளாகும். நோய்த்தொற்று ஏற்பட்ட 2 முதல் 14 நாட்களில் ஒருவரிடம் இந்த அறிகுறிகள் வெளிப்படலாம். அறிகுறிகள் இன்னும் வெளிப்படாத நபர்கள் மூலமாகவும் இந்நோய் பரவ முடியும் என்பதும் இந்நோய் அதிகமாகப் பரவக் காரணமாகும். சீனாவில் தொடங்கி இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி தற்சமயம் அமெரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் தன் கோர முகத்தைக் காட்டிவருகிறது கொரோனா வைரஸ். மார்ச் 11, 2020 அன்று உலக சுகாதார நிறுவனம் இதனை உலக பெரும் கொள்ளை நோயாக அறிவித்தது. பூமிப்பந்து முழுவதும் 26 இலட்சத்திற்கும் அதிகமான ஆட்களை பாதித்துள்ள இந்நோயானது இதுவரையிலும் (23-4-2020 மதியம் 2.30 மணி) 1,86,604 பேரை பலிகொண்டுள்ளது. 716,406 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

மருத்துவ சவால்கள்
இந்நோய்க்கு இதுவரையிலும் தடுப்பூசிகள் கண்டறியப்படவில்லை. பல்வேறு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும், முழுமையாக நோயினைத் தடுக்கும் மருந்துகள் இன்னும் பரிசோதனைக் கட்டத்திலேயே இருக்கின்ற என்பதே இதன் முதல் சவால். தனிமைப் படுத்துதல், நல்ல சூழல், சுவாசக் கருவி, மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை ஊக்குவிக்கும் துணை மருந்துகள் மட்டுமே தற்போதைய சிகிச்சையாக உள்ளது. நேரடியாக வைரசைத் தாக்கி அழிக்கும் மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

உபகரணங்களின் தேவை
நோய் தொற்று ஏற்பட்டிருப்பவர்கள் பேசும் போதும், இருமும் போதும் நுண்ணிய எச்சில் துகள்கள் காற்றில் பரவுகின்றன. இதனை சுவாசத்தின் மூலமோ, கைகளால் தொடுவதன் மூலமோ அருகிலிருப்பவருக்கும் இந்நோய் மிக எளிதாக பரவுகிறது. மனிதர்கள் தங்கள் வீடுகளில் அடைபட்டிருப்பது நோய்ப்பரவலைத் தடுப்பதற்கான முதல் வழிமுறையாகும். ஆயினும் அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக, அத்தியாவசியப் பணி நிமித்தமாக வெளியில் வராமல் இருக்கமுடியாது. அந்நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளி விட்டு புழங்க வேண்டும். முகத்தில் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் நேரடியாக நோயாளிகளை அணுகி சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் என்95 என்னும் வகை முகக்கவசம் அணிவது மிகவும் அவசியம். மருத்துவமனைகளில் கடும் மூச்சுத்திணறலோடு அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளோடு தனி அறை, செயற்சை சுவாசக்கருவிகள் அத்தியாவசியத் தேவை. அன்றாடம் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும் சூழலில் இத்தகைய உபகரணங்களை காலம் தாழ்த்தாமல் ஏற்பாடு செய்யவது அரசின் சுகாதாரத் துறையினர்  முன்னிருக்கும் பெரும் சவால் ஆகும்.

கட்டமைப்பு குறைபாடுகள்
உலகில் 210-க்கும் அதிகமான நாடுகளில் தன் நச்சுக்கரங்களால் முடிசூடியிருக்கும் கொரோனா ஏழை, பணக்காரன், இனம், மொழி பாகுபாடின்றி அனைவரையுமே கதிகலங்க வைத்துள்ளது. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் ஏற்கனவே இருக்கும் தரமான உட்கட்டமைப்பு வசதிகளால் நோயாளிகள் சிறந்த முறையில் கவனிக்கப்பட வாய்ப்பிருக்கின்றது. மருத்துவப் பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு கவசங்களால் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் வாய்பிருக்கின்றது. இருப்பினும் இத்தாலி போன்ற உலகின் தலைச்சிறந்த மருத்துவக்கட்டமைப்புள்ள நாட்டிலேயே நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் கொரோனா போரில் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத்துள்ளனர். அப்படியென்றால் இந்தியா, பிரேசில் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள வளரும் நாடுகள், ஆப்ரிக்க நாடுகள் சந்திக்கும், சந்திக்க இருக்கும் சவால்கள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. இந்தியாவிலும் சுகாதாரக் கட்டமைப்புகள் கேரளா, தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்களுக்கும் பீகார், உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. போதிய அளவில் மருத்துவமனைகள் இல்லாமல் இரயில் பெட்டிகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்படுகின்றன. சுத்திகரிப்பு சாதனங்கள், சுத்தமான சூழல், குடிநீர், மின்னணு கருவிகள் போன்றவை மருத்துவமனைகளிலேயே சரியான முறையில் பராமரிக்கப்படாத போது இத்தகைய தற்காலிக ஏற்படுகளின் தரம் கேள்விக்குறியாகவே உள்ளன. மத்திய அரசு நாட்டின் பலவீனமானப் பகுதிகளுக்கு உடனடியாகத் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.

சமூக ஊடக சவால்கள்
காற்றில் நோய் பரவுவதை விட வேகமாக சமூக ஊடகங்கள் நச்சுக்கருத்துக்களைப் பரப்புகின்றன என்பது வேதனையாக உள்ளது. முகநூல் பதிவுகள், வாட்சப் நிலைத் தகவல்கள், குழுப்பகிர்வுகள், யுடியூப் வீடியோக்கள் போன்றவற்றில் பகிரப்படும் போலித் தகவல்கள் சமூகத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பிட்ட மதத்தினரையோ, சமூகத்தினரையோ சுட்டிக்காட்டி அவர்களால் தான் கொரோனா பரவுகிறது என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதன் மூலம் சமூகங்களுக்கிடையே வெறுப்பினை விதைக்கும் நச்சுக்குழுக்களை முறியடிப்பது கொரானாவை விட மிகப்பெரிய சவாலாக உள்ளது. உண்மைத் தன்மையை ஆராயும் சிறிய அக்கறையுமின்றி பரப்பப்படும் தவறானத் தகவல்களால் பல்வேறு மனித உயிர்கள் பறிபோவதையும் பார்த்து சினம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எல்லோரும் மருத்துவராகி எலுமிச்சை, சுக்கு, மிளகு, துளசி, திப்பிலி என்று வாய்க்கு வந்த மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். அப்பொருட்கள் தன்னிலே மருத்துவக் குணங்கள் கொண்டிருப்பினும் அவை கொரோனா தாக்கியிருப்பவரைக் குணப்படுத்தியதாக எந்த நிருபணமும் இல்லை. ஆகவே நோய் அறிகுறியுள்ள ஒருவர் அம்மருந்துகளை வீட்டிலேயே முயற்சித்து மருத்துவமனை செல்லக் காலம் தாழ்த்துவதால் அவர் தனக்கும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் பெரிய ஆபத்தாக மாறுகின்றார். வீட்டிலேயே முடங்கியிருத்தல் மனிதர்களிடம் பல உளவியல் சிக்கல்களையும் அதிகரித்துள்ளது. அளவுக்கதிகமான இணையப் பயன்பாடு, செல்போனுக்கு அடிமையாதல், சிறார், பெண்களுக்கெதிரான வன்முறை அதிகரித்தல் போன்றவையும் கருத்தில் கொள்ளப்படவேண்டிய சவால்களாகும்.

வறியவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
பொருளாதார வளர்ச்சியில் இந்தியா பெருமைப்படும் வகையில் முன்னேறியிருக்கிறது என்பது உண்மையென்றாலும் இன்னும் நம் நாட்டில் 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அன்றாடம் 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வாழ்க்கை நடத்த வேண்டியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்டுள்ள வேலை இழப்பு, கடன் தொல்லை, உணவுத் தட்டுப்பாடு போன்றவற்றை ஏழை, எளிய மக்கள் எதிர்கொண்டு மீண்டு வருவது மிகப்பெரிய சவால் ஆகும். பெருநகரங்களில் கூலிகளாக இருக்கும் உழைக்கும் வரக்கத்தினர் தகுந்த இருப்பிடமோ, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய வழியோ இன்றி, தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றாவது பிழைத்துக்கொள்ள நினைத்தாலும், போக்குவரத்துகள் தடை செய்யப்பட்ட காரணத்தால் நாடு முழுவதும் கொளுத்தும் வெயிலில் கைக்குழந்தைகளோடு நடந்தே கடந்ததை ஆளும் அரசுகள் கண்டுகொள்ளாதது ஒரு வரலாற்று அவமானமாகும். மேலும் டயாலிசிஸ் செய்யப்பட வேண்டிய நோயாளிகள், அன்றாடம் மருந்துகளை எடுத்துக்கொள்ளும் நீரழிவு, இரத்த அழுத்தம், இதய நோயளிகள், பிறரைச் சார்ந்தே வாழும் கட்டாயத்தில் உள்ள உடல் ஊனமுற்றவர்கள், தனித்து வாழும் முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவிகள் சென்று சேர்வதை அரசும், தன்னார்வ அமைப்புகளும் கவனிக்க வேண்டும்.

முடிவுரை
உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின் படி தடுப்பூசிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் அரசு சுகாதாரப் பணியார்களின் அயராத உழைப்பும், அர்ப்பணிப்பும் காலரா, மலேரியா, தொழுநோய், போலியோ போன்ற கொடும் தொற்று நோய்களிலிருந்து நமக்கு விடுதலை அளித்துள்ளது. எயிட்ஸ், யானைக்கால் நோய், காசநோய் போன்ற தடுப்பு பணிகளிலும் மிகுந்த அக்கறை காட்டப்படுகிறது. தகுந்த அறிவியல், பொருளாதார வளர்ச்சியோ, கல்வி விழிப்புணர்வோ இல்லாதிருந்த காலத்திலேயே எண்ணற்றோரின் தியாகத்தால் கடைக்கோடி மனிதருக்கும் சுகாதார வசதிகள் தரப்பட்டுள்ளன. இன்று கொக்கரிக்கும் கொரோனாவின் கொட்டம் அடங்கும் நாள் தொலைவில் இல்லை. அதுவரையிலும் அரசின் அறிவுறுத்தலை மதித்து செயல்படுத்துவோம். தனிமனித சுத்தத்தை, சுகாதாரத்தைப் பேணுவோம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை உணர்ந்து, இல்லாதோருக்கு இயன்றதைப் பகிரந்து, தனித்திருந்தாலும் இதயத்தால் இணைந்திருப்போம்.