புதன், 21 செப்டம்பர், 2016

நெகிழி மற்றும் எரிக்கப்படும் டயர்களின் தீமைகள் - ஓர் அலசல் (The hazards Of Plastics and burning tyres)

முன்னுரை

இயற்கையோடு இயைந்த வாழ்வால் வான்புகழ் கொண்டுத் திகழ்ந்தது நம் பண்டையத் தமிழர் இனமாகும். இங்கே உண்பதும், உடுத்துவதும், பக்தியும், பண்டிகையும், இறையும், இலக்கியமும், கலையும், கவிதையும், வீரமும், விளையாட்டும்  என்று யாவுமாகி நின்று அழகு செய்தவள் நம் இயற்கை அன்னையே! சங்க காலத்தில் மட்டுமல்ல. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய உங்கள் கிராமங்களை நினைத்துப் பாருங்கள். பூவரசு இலைகளில் 'பீப்பி', நுங்கு கூந்தலில் தள்ளுவண்டி, பத்து பைசாவுக்கு பம்பர மிட்டாய், வயல் வரப்புகளில் ஓடிப்பிடித்து, வாழைத் தோப்புகளில் திருடன்-போலிஸ் என்று அங்கே விளையாட்டுக்கு கூட இயற்கை இல்லாமலில்லை. பிறந்த குழந்தையின் தொட்டிலிருந்து கடைசியில் கிடத்தும் கட்டில் வரையிலும் இயற்கை என்றிருந்த நிலை மாறி இன்று எங்கும் பிளாஸ்டிக்! எதிலும் பிளாஸ்டிக்! என்றாகிவிட்டது. விலையோ குறைவு. உற்பத்தி செய்வது எளிது. இன்றைய உலகின் அன்றாடத் தேவையை ஈடுசெய்ய இதற்கு மாற்று எதுவுமில்லாத சூழலில் எங்ஙனம் பிளாஸ்டிக் இயற்கையின் பகைவன் ஆனது என்பதையும், இத்தகைய பிளாஸ்டிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட டயர்களை எரிப்பது இயற்கைச் சூழலை எங்ஙனம் பாதிக்கின்றது என்பதையும் இக்கட்டுரையில் காண்போம்.

நெகிழியின் பிறப்பு

தமிழில் நெகிழி என்று அழைக்கப்படும் பிளாஸ்டிக் என்பது 'பிளாஸ்டிக்கோஸ்' என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து வருகிறது. வார்க்கத் தக்க அல்லது பிசைவு கொள்ளத் தக்கப் பொருள் என்று இதனை வரையறுக்கலாம். தொடக்கக் காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள், சில வண்டு, பூச்சிகளில் இருந்து 'செராடின்' என்ற நெகிழியானது செய்யப்பட்டன. பின்னர் எவ்வாறு பிளாஸ்டிக்கானது முழுக்க முழுக்க செயற்கை வேதி மூலங்களிலிருந்து தயாரிகக்கப்படுகின்றன என்பதை கீழ்வரும் காலக்கோடு மூலம் அறிந்து கொள்ளமுடியும்.
  • பிளாஸ்டிக் முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் 'பார்க்ஸ்டைன்' என்ற பெயரிட்டார். 
  • பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற பிளாஸ்டிக் உருவானது. 
  • 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், டுபாண்ட் என்னும் அமெரிக்க நிறுவணம் வெடி பொருள் பிளாஸ்டிக்; தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது.  
  • 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.
நெகிழியின் வகைகளும், பயன்களும்

வெப்பத்தால் எற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. அவை முறையே இளகும் வகை, இறுகும் வகை என்பனவாகும்.

1.வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. அவற்றின்  பெயர்களையும், பயன்பாடுகளையும் இங்கே காண்போம்.
  • செல்லுலாயிட்: எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.
  • பாலி புரோப்பிலின்:  கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள், குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.
  • பாலிவினைல் குளோரைடு:  மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.
  • பாலிவினைல் அசிட்டேட்:  வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.
  • வினைல் : டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.
  • அக்ரிலிக்: நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது. இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்
  • செல்லுலோஸ் அசிட்டேன்: இதனுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.
  • ஈதைல் செல்லுலோஸ்: பொருள்கள் மீது மேல் பூச்சு அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும் பயன்படுகிறது. 
2.இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. அவற்றின் சில எடுத்துக்காட்டுக்களை கீழே காண்போம்.
  • ஆல்கைடு ரெசின் : பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. மின்சாரம் கடத்தாது. உறுதியானது. கடினமானது. ஒளி புகும். எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.
  • மெலமின் ரெசின் : இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.
  • பீனாலிக் ரெசின் : மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகள் செய்யப் பயன்படுகின்றது.
இவ்வாறு விலை மிகவும் மலிவாகவும், அனைவரையும் கவரும் பல வகை நிறங்களிலும், காற்று, நீர், ஈரம் இவற்றால் பாதிக்கப் படாமலும், மின்கசிவு ஏற்படாமலும் இருப்பதால் நெகழியானது நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.

நெகிழியின் தீமைகள்

நாம்  அனைவருமே ஏற்கனவே அறிந்ததுதான். நெகிழிப் பொருள்கள் எளிதில் அழிவதில்லை. சராசரியாக ஒரு பாலித்தீன் பையின் பயன்பாட்டுக் காலம் 12 முதல் 20 நிமிடங்களே என்றும் அவை அழிய 1000 ஆண்டுகளுக்கும் அதிக காலம் பிடிக்கும் என்றும் ஒரு ஆய்வு கூறுகிறது. பயன்பாடற்ற ஒரு நச்சுவேதிப் பொருளின் நெடிய ஆயுட்காலம் என்பது இயற்கையின் நியதிக்கு மிகமிக ஆபத்தான முரண்பாடாகும். அதிலும் நெகிழியின் அதிகப்படியான பயன்பாட்டின் காரணமாக இவை கற்பனைக்கெட்டாத அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எதிர்கால சந்ததிகளையும், மானுடரல்லாத பிற உயிர்களையும், இயற்கைச் சூழலையும் பற்றிய அக்கறையற்ற சுயநலமே இன்றைய நிலையாக இருக்கின்றது. மறுசுழற்சி என்பதும் பெரிதும் பயன்தரப் போவதில்லை. ஏனென்றால் நெகிழிப் பொருட்களில் 10 சதவீதப் பொருள்களே மீண்டும் பயன்படுத்தத் தக்கவையாக இருக்கின்றன. மற்ற 90 சதவீதப் பொருட்களும் வீணே எரிக்கப்பட்டுவிடுகின்றன. 'இன்சினரேசன்' என்னும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.
  • தொழிற்சாலைகளில் இவை மறு சுழற்சி செய்யப்படும் போதும், எரிக்கப்படும் போதும்  வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதாக இருப்பதால், அருகிலுள்ள மக்களின் உடல்நலனாது பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. தோல்நோய், புற்று நோய், ஒவ்வாமை, மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • பாலித்தீன் பைகள் கால்வாய்களில் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. நீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்கள் பரவுகின்றன. நிலத்தடி நீர் பெருகுவதைத் தடுக்கின்றன.
  • மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பைகளைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.
  • கடலில் எறியப்படும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து பல்லுயிர் பெருக்கச் சூழலைப் பெரிதும் பாதிக்கின்றன.
டயர்கள் என்னும் இன்னொரு தலைவலி

வாகனப் பெருக்கம் நாம் நினைத்துக் கூடப் பார்க்க இயலாத அளவிற்கு அதிகரித்துவிட்டது. மக்கள் கல்வி, பணி நிமித்தமாக தினசரி பயணிக்க வேண்டியத் தேவையும், தரமில்லாத பொதுப் போக்குவரத்துச் சேவையும் தனியார் வாகனப் பெருக்கத்தை இன்றியமையாததாகச் செய்துவிடுகின்றன. தமிழகம் முழுவதும் 70 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளன. ஒரு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 100 வாகனங்கள் என வைத்தால், ஒரு நாளைக்கு 7 ஆயிரம் புதிய வாகனங்கள். 20 வேலை நாள்கள் என கணக்கிட்டால் கூட, ஒரு மாதத்தில் 1,40,000 புதிய வாகனங்கள் தமிழகச் சாலைகளில் உலா வரத் துவங்குகின்றன. வாகனப் பெருக்கத்தின் விளைவாக காற்று மாசுபடுவதோடு, புவி வெப்பம் அதிகரிப்பதோடு, இன்னொரு தலைவலியாக பயன்படுத்தப்பட்ட டயர்கள் ஒவ்வொரு நாளும் மலை போலக் குவிந்து விடுகின்றன.

டயர்களும் இயல்பிலேயே அழிவதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்கின்றன. அத்தோடு மறுசுழற்சியும் பெரிய பயன்தருவதற்குப் பதிலாக சுற்றுச்சூழல் மாசு என்னும் தீய விளைவையேக் கொண்டிருக்கின்றன. டயர்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் துத்தநாகம், குரோமியம், ஈயம், செம்பு, கேட்மியம் மற்றும் சல்பர் போன்ற வேதிப் பொருள்கள் மிகவும் நச்சுத் தன்மை வாய்ந்தவையாகும். இவை எரிக்கப்படும்போது காற்று மாசுபடுவதால் தோல் நோய்கள், நுரையீரல் தொடர்பான பிரச்சனைகள், புற்றுநோய் போன்றவைகள் ஏற்படுக் காரணமாகின்றன.

பழைய டயர்கள் பெரும்பாலும் காகிதம், சிமென்ட் போன்ற தொழிற்சாலைகளில் மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தப் படுகின்றன. போகி, தீபாவளி போன்ற பண்டிகைகளின் போதும், கிளர்ச்சி போராட்டங்களின் போது தங்கள் எதிர்ப்பைக் காட்டவும் எரிக்கப்படும் டயர்கள் சுற்றுச்சூழலைப் மிகவும் மாசுபடுத்துகின்றன. பூமியில் புதைக்கப்படும் டயர்கள் நாளடைவில் பல்வேறு ரசாயனங்களை வெளியிடுவதால் நிலத்தடி நீர் மாசுபடுவதோடு, மண்வளத்தையும் கெடுத்துவிடுகின்றன.

சட்டமும் சமூகமும்

அன்றாடப் பயன்பாடு, அதிவேக உற்பத்தி என்ற சுழற்சியில் டயர் மற்றும் பிளாஸ்டிக் பெருக்கமானது கட்டுக்கடங்காது சென்றுகொண்டிருக்கின்றன. பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்புகளின் தீவிர அறிவுறுத்தலின் பேரில் ஒவ்வொரு நாடுகளும், நகரங்களும் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு பல வரைமுறைகளை வகுத்துள்ளன. குறிப்பாக நமது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேஹர் கடந்த மார்ச் மாதத்தில் வெளியிட்ட அரசாணையில் இந்தியா முழுவதும் 50 மைக்ரானுக்கும் குறைவான பிளாஸ்டிக் பயன்பாட்டினை முழுவதுமாகத் தடைசெய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் சமுதாயத்தின் மனப்பூர்வமான சம்மதமின்றி, அரசின் சட்டப்பூர்வமான முயற்சிகள் முழு இலக்கினை அடைய முடியாது. எதிலும் அச்சமயத்திற்கு எளிதான, இலகுவான ஒன்றைத் தேர்ந்தெடுப்பது நமது சாதாரண இயல்பு. ஆனால் பிளாஸ்டிக் விசயத்தில் நாம் மாற்றி யோசிக்க வேண்டும்.
  • கடைக்குச் செல்லும் போதே துணிப்பைகளை எடுத்துச் செல்வதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசே இத்துணிப்பைகளை பெருமளவு உற்பத்தி செய்வதோடு, கடைகளில் பயன்படுத்தப்படுவதைக் கட்டயமாக்க வேண்டும்.  நசிந்துவரும் நெசவுத் தொழிலை மீட்பதற்கும், கிராமப்புற வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் இம்முயற்சியானது சிறந்த பலனளிக்கும்.
  • வீட்டு நல்ல காரியங்களில் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளில் செய்யப்படும் குவளைகள், தட்டுக்களைப் பயன்படுத்தலாம். படித்த இளைஞர்கள் தனியாகவோ, கூட்டு முயற்சியாகவோ இத்தகையத் தொழில்களைச் செய்ய முன்வரலாம். கூட்டுறவுச் சங்கங்கள் வழியாக அரசும் தேவையான உபகரணங்கள் மற்றும் மானியங்கள் வழங்கி அவர்களை ஊக்குவிக்கவேண்டும்.
  • பிளாஸ்டிக் குடங்களுக்குப் பதிலாக, மண்பானைகளைப் பயன்படுத்த வேண்டும். கடந்த 20-9-2016 அன்று தமிழக முதல்வர் அவர்கள் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. வேலையில்லை என்று காத்திருப்பதை விட இத்தகைய முயற்சிகளைச் செய்ய இளைஞர்கள் முன்வரவேண்டும். அரசும், பொது மக்களும் இதற்கு கைகொடுக்க வேண்டும்.
  • மக்கள் போராட்டங்களில் டயர்கள், உருவப்பொம்மைகள் எரித்து சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதற்குப் பதிலாக தீங்கில்லாத மாற்று வழிகளைப் கடைபிடிக்க வேண்டும்.
உயிரன்பு என்னும் அறம்

கிறிஸ்தவர்களுக்கு சிலுவை மரமும், இந்துக்களுக்கு கற்பக மரமும், பௌத்தர்களுக்கு போதி மரமும் வாழ்வின் மரங்களாக இருக்கின்றன. வளரும் பிள்ளைகளுக்கு சமயக் கல்வியில் இயற்கை அன்பையும் கட்டாயம் போதிக்கவேண்டும். இறைவன் படைத்த இயற்கைச்சூழலில் ஒவ்வொரு உயிரும் அற்புதமானவையே. அறிவியல் பூர்வமாக சொல்ல வேண்டுமென்றால் எல்லா உயிர்களுமே ஒன்றையென்று சார்ந்தே இயங்குகின்றன. அவை மலர்ந்தும், மடிந்துமே இந்தப் பூமி தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது. இந்த உயிர்களின் உறவுச் சங்கிலிக்குப் பெரிதும் ஆபத்தான, மரணிக்க மறுக்கும் நெகிழியை நாம் கைவிட்டே ஆகவேண்டும். எழுத்தாளர் ஜெயமோகன் 'யானை டாக்டர்' என்னும் ஒரு சிறுகதையில் நெளியும் ஒரு புழுவைக் கையில் எடுத்து இவ்வாறு வருணனை செய்கிறார். 'குண்டு குண்டாக, மென்மையாக, புசுபுசுவென்று ஆவேசமாக நெளிந்து கொண்டிருக்கும் புழுக்களில் தெரியும் உயிரின் ஆவேசத்தைப் பார்த்துக்கொண்டிருக்கும் மனம் மலைப்புறும். உண் என்ற ஒற்றை ஆணை மட்டுமே கொண்ட உயிர். அந்தத் துளிக்கு உள்ளே இருக்கின்ற சிறகுகள், முட்டைகள். ஒவ்வொரு கணமும் உருவாகும் ஆபத்துக்களை வென்று மேலெழுந்து அழியாமல் வாழும் கற்பனைக்கெட்டாத கூட்டுப்பிரக்ஞை' என்று ஒரு புழுவுக்குள் நெளியும் ஒரு துளி உயிரின் அதிசயத்தைப் பார்த்து வியப்படைகின்றார். உயிர்களின் மீதான அன்பே சிறந்த அறம். அந்த அறமே எல்லாவிதமான இயற்கை விரோதங்களையும் வென்றெடுக்கும்.

செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ராம்குமார் தற்கொலை செய்யப்பட்டார். உண்மையே உன் விலையென்ன? -1

மனம் முழுக்க கோபம். ஒன்றுமே செய்ய இயலாமல் முடக்கிப் போடும் ஆற்றாமை. கையாலாகாத நிலைகண்டு எரிச்சல். கண்ணகி போல போல எரித்துவிடத்தான் ஆசை. குழந்தை போல அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாமை. பட்டப் பகலில் முழுவதும் பாதுகாக்கப்பட்ட ஓர் சிறை அறையில் ராம்குமார் என்னும் விசாரணைக் கைதி 'தற்கொலை செய்யப்பட்டிருக்கிறார்'. 

கேட்பதற்கு நாதியில்லாமலில்லை. தமிழகமே கேட்கிறது. ஏன் இந்த உலகமே கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம். போன உயிர்? எனக்கு என் மகன் வேண்டும் என்று கதறும் தாய்க்கும், தந்தைக்கும், உடன்பிறப்புகளுக்கும் இந்த தமிழ்நாட்டு அரசும், சமூகமும் என்ன செய்துவிட முடியும்? 

இவ்வளவு மோசமான நீதி பரிபாலனை இவ்வுலகத்தின் வேறு எந்த சனநாயக நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை. எத்தனை வழக்குகளில் நீதி என்னும் மழை பொய்த்து மனம் வறண்டு வெடித்துப் போவதென்று தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, மான் வேட்டை வழக்கு, நடைபாதையில் தூங்கியோர் மீதி கார் ஏற்றி ஒருவர் சாவுக்கும், நான்கு பேர் கை, கால் இழப்புக்கும் காரணமாகிய குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு, 257 பேரை பலிகொண்ட 1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு துணைபுரிந்த வழக்கு, கேரளாவில் ஓடும் ரெயிலிலிருந்து இளம் பெண் தள்ளிவிடப்பட்டு பின்னர் வன்புணர்வு செய்யப்பட்டு, தண்டவாளக் கற்களால் தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கு என்று எல்லவற்றிலும் இந்திய நீதி தேவதை பணத்திற்கும், அதிகாரத்திற்கும் மண்டியிடுபவளாக ஒரு விபச்சாரனினும் கேவலமாக மாறிவிடுகிறாள். எல்லா பித்துவாளிகளையும் வரவேற்க ஒரு சனநாயகக் கூட்டம் கேட்க சகிக்காத குரலெழுப்பிக் காத்திருக்கிறது. மொத்தமாக மறுநாள் கோவிலில் காணிக்கை செலுத்திவிட்டு பத்திரிக்கைக்கு அவர்கள் சிரித்த முகத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். செத்துப் போனவனின் இரத்தம் காய்ந்து சில நாட்களிலேயே மறைந்து விடுகிறது. ஊடக வெளிச்சத்தையும் பெறத் தகுதியில்லாமல் இது போல தினசரி எத்தனை வழக்குகளோ? 

ராம்குமார் 'தற்கொலை செய்யப்பட்டதை' 'தி இந்து' தமிழ் இணைய நாளிதழில் வாசித்தேன். கருத்துப் பகிர்வில் ஒரு வாசகர் 'உண்மையே உன் விலையென்ன' என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்தவர் 'உயிர்' என்று எழுதியிருந்தார். இயேசு பிலாத்துவிடம் 'உண்மையை எடுத்துரைப்பதே என் பணி' என்று கூறியபோது, பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறான். அதிகாரப் பசி உண்மையை மறைத்துவிடுகிறது. உண்மை நிராதரவாக சிலுவையில் பலியாகிறது. 

எல்லோரும் செத்து ஒரு நாள் இன்னொரு உலகத்தில் சந்தித்துக் கொண்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பார்ப்பது பலியாடுகளாக கழுத்தறுபட்டவர்களின் முகத்தை? உண்மையைக் கொன்றது அதிகார வர்க்கம் மட்டுமல்ல. அவர்களுக்குத் துதிபாடும் அடிமைக் கூட்டமும் தான். அவர்கள்தான் எங்களுக்கு பரபாசே வேண்டும் என்று கூச்சலிட்டவர்கள். மக்களுக்குத்தான் நல்ல அரசு அமையும். அடிமைகளுக்கு இரத்த தாகம் கொண்ட அரக்கன்களும், அரக்கிகளுமே போதுமானவர்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அடிமைத் தமிழகம். 

ஞாயிறு, 18 செப்டம்பர், 2016

இன்றைய அருட்பணியார்களிடம் இளைஞர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

தூய பவுல் குருத்துவக் கல்லூரியில் இறையியல் படித்துக் கொண்டிருந்த போது இளையோர் மேய்ப்புப் பணி என்ற சிந்தனையில் ஒரு பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. சலேசிய அருட்பணியாளர்களால் வழிநடத்தப் பட்ட அந்நிகழ்விற்கு பங்குகளிலிருந்து இளைஞர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர் அவர்களின் பங்குத்தளங்களில் நடைபெறும் இளையோர் செயல்பாடுகளைப் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். ஒரு இளைஞர் தான் தன்னை வழிநடத்தும் அருட்பணியாளரிடம் எதிர்பார்ப்பது என்ன என்று கவிதை வடிவில் பகிர்ந்து கொண்டார். ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தலையாட்டி பொம்மைகள் போல நாட்கள் புதுமைகளற்றுத் தோன்றும் போது, என்னைத் தூசு தட்டுவதற்கு இக்கவிதையைப் பயன்படுத்துகிறேன். நன்றி நண்பரே! இக்கவிதை பூஞ்சைத் துடைப்பம் அல்ல. நல்ல குச்சி வெளக்குமாறு! மொத்தத்தில் இது ஒரு சுயவிமர்சனமே!

நீங்கள் இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ அழைக்கப்படுகிறீர்கள்
சிதைந்து போய்க்கொண்டிருக்கும் இந்த
மனித சமுதாயத்திற்கு உங்களைப் போன்ற
சீர்திருத்தவாதிகள் அவசியம் தேவைப்படுகிறார்கள்

மக்கள் பணத்தைக் கொண்டு மப்பில் மிதக்கின்ற
மடத்தனமான அரசியல் வாதிகளைப் போல
அடித்தட்டு மக்களின் அவலங்களை
அடையாளம் காட்டி
பணத்தைப் பெற்று பகட்டு வாழ்க்கை வாழும்
பிணந்தின்னிக் குருக்களைப் பார்க்கும் போது
இளைஞர் எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

ஃபாரின் சென்று பட்டப்படிப்புகள் பல முடித்து
பந்தங்களையும் சொந்தங்களையும்
பங்குப்பணத்தில் வாழவைத்துவிட்டு
பாமரர்களின் வயிற்றிலடிக்கும் பணியாளர்களைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

செபமாலை உருட்டியக் கரங்களில் இன்று
செல்போன்கள் விதவிதமாய்
மறைநூல் தவழ்ந்த மடிகள்
இன்று மடிக்கணினிகளின் பிடியில்
திருவிருந்தைச் சிறப்பிக்க திருநிலைப்படுத்தப்பட்டவர்கள்
பெருவிருந்தில் மட்டுமே முன்னிலையில் பங்கெடுப்பு
இது போன்றக் காட்சிகளைப் பார்க்கின்ற போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

கள்ளக் காதலும் காதலித்து கற்பமாக்கிக் கைவிடுதலும் இன்றையக்
கலியுகத்து ஆண்களின் கைவந்தக் கலையாக இருக்கின்ற போது
அருள்பணியாளர்களும் துறவிகளும் இதில்
அளப்பரியச் சாதனை படைத்து வருவதைப் பாரக்கும் போது
இளைஞர்களாகிய எங்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்க முடியும்?

பொன்னும் பொருளும் போதையும் ராதையும்
உங்கள் வாழ்வாகிப் போனால்
இயேசுவின் பாதையில் எம்போன்றோரை
வழிநடத்திச் செல்வது யார்?
சிக்சர் அடிப்பவர்களையும்
சிக்கென பஞ்ச் டயலாக் பேசும்
சினிமா கலைஞர்களையும்
தலைவர்களாய்ப் பாவித்து
தலைவிரிக்கோலமாய் அலைகின்ற
அந்நிய மயமாக்கலால் அலைக்கழிக்கப்பட்டு
ஆன்மீக வாசனையே அற்றுப்போன
தொலைக்காட்சிப் பெட்டிக்குள் தங்களைத் தொலைத்துவிட்ட -இளையோருக்கு
புரட்சியாளர் இயேசுவை எப்படி அடையாளம் காட்டப் போகிறீர்கள்?

அருள் இல்லார்க்கு அவ்வுலகமில்லை -வாழ்வில்
பொருள் இல்லார்க்கு இவ்வுலகமில்லை
அருள்பணி வாழ்வு என்பது இக்காலத்தில்
சந்தி சிரிக்கின்ற பந்தா வாழ்வா - அல்லது
சரித்திரம் பேசும் தரித்திர வாழ்வா
இளையோராகிய எங்களுக்கு எப்படி உணர்த்தப் போகிறீர்கள்?

ஏழைகளின் வாழ்வு மிளிர
சமத்துவ சமுதாயம் மலர
சாதியத்தை ஒழித்து
நீதி தழைக்க
அரிதாரம் பூசியவர்களாக அல்ல
அவதாரம் எடுத்திடுங்கள் இயேசுவாக

இளைஞர்களை வழிநடத்த வாழ்வை உணர்த்த
இளைய குருக்களாகிய நீங்கள் அவசியம் தேவை
இயேசுவைப் போல அல்ல
இயேசுவாக வாழ

வெண்ணிற அங்கியும் அதிகாரமுமல்ல குருக்களின் அடையாளம்
ஏழ்மையும் எளிமையும் உண்மையும் உறுதியுமே உங்கள் உடைமையாகும்
திருநிலைப்படுத்தப் போகும் நீங்கள் முதலில்
உங்கள் மனதை ஒருநிலைப்படுத்துங்கள்
உலக மாயைகளில் உங்களைத் தொலைத்துவிடாமல் இருக்க
இயேசுவின் வார்த்தைகள் உங்கள் இடைக்கச்சையாகட்டும்
இறையன்பும் பிறரன்பும் உங்கள்
அருள்பணியில் படைக்கலனாகட்டும்
நன்னெறி கற்பித்தலும் நல்வழிகாட்டலும்
உங்கள் உன்னதப் பணியாகட்டும் - வெறும்
வார்த்தையால் மட்டுமல்ல - உங்கள்
வாழ்வின் வழியாக

பணத்திற்கும், பதவிக்கும்
பட்டத்திற்கும் சாதிக் கூட்டத்திற்கும்
சமரசம் செய்பவர்களாக அல்ல
உண்மைக்கும் நீதிக்கும்
உயிர் கொடுப்பவர்களாக
அநீதி கண்டு பொங்கி எழுந்த
அன்பர் இயேசுவாக
உங்களைக் காண ஆசைப்படுகின்றோம்

விலையுயர்ந்த ஓட்டல்களை நோக்கி அல்ல உங்கள் பாதங்கள் - வாழ்வில்
நிலைகுலைந்த ஓட்டை வீடுகளை நோக்கிச் செல்லட்டும்
எளியோர்க்கு நற்செய்தி அறிவிக்க
ஒடுக்கப்பட்டோர் உரிமை வாழ்வு பெற
குருத்துப் பணி மக்களின்
மனங்களைச் சீர்படுத்தும் மருத்துவப்பணி - எங்களுக்கு
இந்திய அரசும் வேண்டாம்
தமிழக அரசும் வேண்டாம்
இறையரசு இம்மண்ணில் மலர வேண்டும்

ஏழ்மையும் எளிமையும்
உண்மையும் மனிதத் தன்மையும்
உங்களில் வெளிப்பட
செபவாழ்வும் பணி வாழ்வும் எளியோர்க்குப் பயன்பட
இறையரசை இம்மண்ணில் அமைக்க
இயேசுவைப் பேல அல்ல
இயேசுவாகவே வாழ

இளையோராகிய எங்களின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

வெள்ளி, 9 செப்டம்பர், 2016

ஒரு உன்னதமான மனிதர். - 1

நீங்கள் வெளிநாட்டில் இருக்கும் போது சில சிந்தனைகள் என்று நம் மனதில் பட்ட சில கருத்துக்களைப் பதிவிட்டுக் கொண்டிருந்த வேளையிலே இன்னொரு காரியம் என்னை எழுதச் சொல்லி அடம்பிடித்துக் கொண்டேயிருக்கிறது. மனதில் பட்ட ஒரு கருத்தை, அடுத்தவரைப் புண்படுத்தும் நோக்கமில்லாத ஒரு மொழியில் அவ்வப்போது நம்மால் வெளியிட முடிந்தால் பல பிரச்சனைகளை நாம் தவிர்த்துவிடலாம் என்பதால் இதைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சிலரோடு இருக்கும் போது நேரம் போவதே தெரியாது. நாம் நன்றாக, மிகவும் இயல்பாக உணரும்படி ஜாலியாக பேசுவார்கள். இவை நல்லதுதான். ஆனால் பேசு பொருள் என்பது எப்போதும் மேலோட்டமானதாகவே இருக்குமென்றால் அந்தப் பேச்சினால் எந்தப் பயனும் இல்லை. இளையராஜா, தமிழ் சினிமா, கிரிக்கெட், வடிவேல், அரசியல் அல்லது இன்னொரு மூன்றாம் நபர் என்ற வகையாறாக்களிலே நம் பேச்சு நின்றுவிட்டால் அதற்குப் பெயர்தான் வீண்பேச்சு. ஒருவருக்கொருவர் உண்மையாகவே தாங்கள் என்ன உணர்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது பகிர்ந்து கொள்வதற்கான இயல்பான சுதந்திரமே உண்மையான உறவினையும், நட்பினையும் வளர்த்தெடுக்கும். 

சிலர் தங்கள் தனிப்பட்டப் பிரச்சனைகளை யாரிடமும் பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்று கொள்கை வைத்திருப்பார்கள். கவலை, பயம், பலவீனம், அவமானம், அந்தரங்கம், குடும்பம் போன்ற உள்ளார்ந்த காரியங்களை எக்காரணம் கொண்டும் யாரிடமும் வெளியிடமாட்டார்கள். இந்த மாதிரியானத் தருணங்கள் அனைத்திற்கும் அவர்கள் மௌனமாக இருப்பார்கள். முதல் நாள் 'என்ன ஆச்சு, ஏது ஆச்சு' என்று கேட்ககூட முடியாத படி கடுப்பாக இருப்பார்கள். இரண்டாம் நாள் நாம் அப்படி கேட்டு பதட்டமடைவதை  விரும்புவார்கள். மூன்றாம் நாள் மீண்டும் அதே இளையராஜா, அதே வடிவேல் என்று கலகலப்பாக மாறிவிடுவார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்கு நல்ல அறிமுகம். மிகவும் நல்ல மனிதர். எல்லோராலும் விரும்பப்படுபவர். அவரிடம் எனக்கு எப்போதும் பிடிக்காத ஒரு குணம் உண்டு. நம் மீது கோபம் என்றால் அந்தக் கோபம் தீரும் வரையிலும் நம்மிடம் பேசுவதைத் தவிர்ப்பார். பார்த்தாலும் அமைதியாகச் சென்று விடுவார். எக்காரணம் கொண்டும் காரணத்தைச் சொல்லமாட்டார். உண்மையிலேயே நம்மீது கோபம் இருக்க வேண்டும் என்று கூட அவசியமில்லை. மேற்கூறிய வேறு எந்தப் பிரச்சனையாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். பிறகு இரண்டு மூன்று நாட்களில் எதுவுமே நடவாதது போல மீண்டும் வடிவேல், இளையராஜா என்று ஆரம்பித்துவிடுவார். இது ஒரு சுழற்சி முறையில் அவ்வப்போது வருடக்கணக்கில் நடந்து வருவதால், இதைப்பற்றி நானும் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. 

இன்னொரு வாடிக்கையான விசயம் என்னவென்றால் அவ்வப்போது நாங்கள் ஏதாவது ஒரு வெட்டியானக் கருத்தைப் பற்றி காரசாரமான விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதக்களம் யுத்தக் களம் போல இருக்கும். கருத்து எங்கள் ஊர் அழகா? உங்கள் ஊர் அழகா? பழைய படம் நல்லதா? புதிய படம் நல்லதா? என்ற வகையில் மிகவும் மொக்கையாக இருக்கும். காரசாரத்தின் உச்சியில் கோபதாபங்களும் வரும். பிறகு அதே மௌனப் புரட்சி. மூன்றாம் நாள் மீண்டும் இளையராஜா, அல்லது வடிவேல். இருந்தாலும் மிகவும் நல்ல கரிசனையான மனிதர். நம்மிடம் மட்டுமில்லாது நமது நண்பர்கள் யார் வந்தாலும்  உபசரிப்பிற்குப் பஞ்சமே இருக்காது. என்ன ஏதென்று சொல்லாமல், பேசாமல் இருந்து நம்மைக் கடுப்பேற்றும் இரண்டு நாட்களைத் தவிர்த்துப்  பார்த்தால் ஒரு உன்னதமான மனிதர்.

எல்லாம் நன்றாகத்தான் சென்றுகொண்டிருந்தது வழக்கத்திற்கு மாறாக அந்த இரண்டு நாள் மெளனம் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கும் வரை. அதற்கு பின்னர் தற்செயலான ஒரு சந்திப்பில் வழக்கமான வடிவேல், இளையராஜா கதைகளைத் தொடர்ந்து, கேட்க வேண்டமென்ற எனது முடிவை மீறி கேட்டுவிட்டேன். " என்ன இளவுதான் நடந்துச்சு உங்களுக்கு? இரண்டு வருஷமா உயிரை வாங்குறீங்களே!" என்று கத்தினேன். அவர் குழைந்து குழைந்து சொன்ன விசயம் என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது! மனித வாழ்வில் என்ன வேண்டுமென்றாலும் நடைபெறலாம் தான். ஆனால் நாம் உயர்வாக நினைத்த ஒரு நட்பு இப்படி பரிதாபமாக முடிவுக்கு வரும் என்று என் கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை!

இந்தக் கதை என்ன ஆனது என்பதை நாளைக்கு எழுதுகிறேன். மிகவும் நேரமாகிவிட்டது. எல்லோருக்கும் குட்நைட்.




16-9-2016, 5:6 AM

உன்னதமான மனிதர் 2

ஒரு தனிப்பதிவாக எழுதுவதற்கு இன்னும் நிறைய இருந்தாலும், முடிந்து போன ஒன்றிற்கு முற்றுப்புள்ளி ஒன்றுதான் சரியான முடிவுரை என்பதாலும், இன்னும் சில இங்கிதங்கள் கருதியும் உன்னதமான மனிதரின் இரண்டாம் பகுதியை எழுத மனம் விரும்பவில்லை. சொல்ல வந்த கருத்து இதுதான். உங்கள் மனதில் ஒருவர் மேல் கோபம் இருந்தால் உடனடியாக சொல்லிவிடுவது நல்லது. ஒரு வேளை உங்கள் கோபம் தவறான தகவல்களிலிருந்து வந்திருந்தால் நீங்கள் விளக்கம் பெற்றுக்கொள்ளக் கூடும். அல்லது உங்கள் கோபத்தில் அர்த்தமிருந்தால் அடுத்த நபர் தன்னைத் திருத்திக்கொள்ளக் கூடும். இந்த உடன்பாட்டிற்கு உடன்வராத உறவு எல்லாவிதமான நியாயங்களையும் இழந்து விடுகிறது. இதற்கு மாறாக கூரானக் கத்தியை கக்கத்திற்குள் வைத்துக் கொண்டு அலைவது மிகவும் ஆபத்தானது. 

புதன், 7 செப்டம்பர், 2016

நீங்கள் வேறு நாட்டில் இருக்கும் போது- சில சிந்தனைகள் - 2

இந்தக் கட்டுரை நிச்சயமாக ஒரு ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றியப் பார்வையல்ல. அப்படி ஒரு பார்வையை வைத்துக் கொள்வதே தவறு. அதுவும் எதிர்மறையாக என்றால் மிகவும் தவறு. இருப்பினும் நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது சில தவிர்க்க இயலாத அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். அப்படி சில அனுபவங்களைப் பொதுமைப் படுத்தி எழுதுகிறேன். அவ்வளவுதான்.!

இத்தாலியில் இருக்கும் போது என்னை மிகவும் கோபப்படுத்தியது இந்தியாவைப் பற்றிய அவர்களின் பார்வை. கோபம் என்றால் சாதாரணக் கோபம் அல்ல. கடுங்கோபம். கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு கிணறுதான் உலகம் என்பது போல, அவர்களுக்கு இத்தாலி மட்டும் தான் உலகம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளெல்லாம் பக்கத்துக் கிணறுகள். அவ்வளவுதான். மற்றபடி உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துன்புறும் நாடுகள். உண்பதற்கும், உடுத்துவதற்கும் எதுவுமில்லாத ஏழை நாடுகள். எவ்வளவு பெரிய மூடத்தனம். கோபத்திற்கு காரணம் இந்த அறியாமை மட்டுமல்ல. அவர்களின் இந்த 'அறிவுசுரங்கத்திற்கு' மேல் கொஞ்சம் அதிகமாக அந்த நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள மூர்க்கத்தனமாக மறுக்கிறார்கள்.

முதலில் உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். இரயில் நிலையங்களிலோ, மற்ற பொது இடங்களிலோ ஒரு சிலர் நம்மைப் பார்த்ததும் தங்கள் உடமைகளை பத்திரப்படுத்துகிறார்கள். தங்கள் கைப்பையை கக்கத்திற்குள் இடுக்கிக் கொள்கிறார்கள். நம் கண்களைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாக மறுத்து பிற 'அழகானக்' காட்சிகளுக்கு கடந்து போகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதென்றால், பலமுறை நம் ஊர்க்காரர்கள்தான் தங்கள் உடமைகள் இரயிலிலோ, பேருந்திலே பறிகொடுத்து வெறும் கையாய் வீடுதிரும்புகிறார்கள். சிலர் தங்கள் மடிக்கணிணி, மூக்குக் கண்ணாடி, களவுச்சீட்டு முதலியவற்றைக் களவுகொடுத்து வீடு திரும்பவும் வழியற்றவர்களாகின்றார்கள். வெளிப்படையாகத் தங்கள் வெறுப்பைக் காட்டிக் கொள்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள்தான். அதுவும் உங்களுக்கு எந்தத் தொடர்பும், அறிமுகமும் இல்லாதவர்கள். இதனால் இவை உங்களை அதிகம் பாதிப்பதில்லை. 

தொழில் நிமித்தமாகவோ, அல்லது வேறு நிமித்தங்கள் காரணமாகவோ, உங்களிடம் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. ஆனால் உங்களைப் பார்த்து ஒரு செயற்கையாக வருவித்தச் சிரிப்பும், தங்களுக்குத் தெரிந்த ஒன்றோ இரண்டோ ஆங்கில வார்த்தைகளும் பேசி உங்களை மகிழ்விப்பதாய் நினைத்துக்கொள்வார்கள். உங்களோடு சமத்துவம் பேணிக்கொள்வதாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களின் கருணைக்கு அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. இது இன்னொரு பார்வை. ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே, ஆங்கிலேயர்களால் காலனியாதிக்கத்திற்குட்பட்ட எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் தான் முதன்மை மொழி என்று எண்ணிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் இன்னொரு மூன்றாம் நபர், 'ஓ! அவனுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று உயர்வு நவிற்சி செய்யும் போது, உலக அறிவில் பாண்டித்யம் பெற்ற முன்னவர் இவ்வாறு சொல்வார்: 'அவன் இந்தியா காரனாயிற்றே! அங்கே எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்' என்று. கோபம் வருமா? வராதா?. இது தவறு. நாங்கள் எங்கள் மாநிலத்தின் மொழியைத் தான் பேசுகிறோம். தமிழ் எங்கள் தாய்மொழி. தொன்மையான செம்மொழி என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால், அதற்குள் அவன் வேறு பேச்சுக்குப் போயிருப்பான். சரியான மடச்சாம்பிராணிகள். ஒரு மண்ணும் தெரியாது. அவனுக்கு தெரியவில்லை என்பதற்காக வருத்தப்பட மாட்டான். தெரிந்து கொள்ளும் அளவுக்கு எந்தச் சிறப்பும் நம்மிடம் இருக்க வாய்ப்பில்லை என்பது அவனது கணிப்பு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் 'மதர் தெரசாவும், கல்கத்தா சேரியும்' மட்டும் தான். அதே அன்னை பேசிய வங்க மொழி உலகின் 20 கோடி பேரின் தாய் மொழி என்பதும், தாகூர், தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள், இசை மேதைகள், எழுத்தாளர்கள் எண்ணற்றோரைப் பெற்றெடுத்த செழித்த மொழி என்பதைப் பற்றிய ஒரு துளி அறிவும் கிடையாது. வங்க மொழியும், மலையாள மொழியும் வெறும் ஆயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்டிருப்பினும், அம்மொழிகளில் வெளியாகும் சிறுகதைகளும், நாவல்களும் உலகத் தரம் வாய்ந்தவைகளாகும். இந்தியாவின் மொழிப் பன்மைக்கும், இலக்கிய வரலாற்றுப் பன்மைக்கும் முன் உலகத்தில் எந்த நாட்டை ஒப்பிட முடியும்? 

இன்னொரு வகையினர் இருக்கின்றனர். எளிய மக்கள். அவர்களுக்கும் 'படித்த மேதாவிகளுக்கும்' ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்குமே இந்தியா என்றால் ஏழை நாடு என்பது மட்டும் தான் தெரியும். எளிய மக்கள் கொஞ்சமேனும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். யாரேனும் உண்மையாகவே கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தொல்காப்பியம், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், கல்லணை போன்ற பண்டையச் சிறப்புகள் முதல் கூகுள், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல்  அதிகாரிகள் தமிழர்கள் என்பது வரையிலும் என்னால் முடிந்த அளவு நம் தவிலை நானே வாசித்துக் கொள்கிறேன். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

திங்கள், 5 செப்டம்பர், 2016

நீங்கள் வேறுநாட்டில் இருக்கும் போது - சில சிந்தனைகள் -1

எல்லோருக்கும் வணக்கம். எழுதி நிறைய நாட்கள் ஆகிவிட்டன. எழுத்து என்பது ஒரு திறமை என்பதை விட ஒரு பழக்கவழக்கம் என்பதுதான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். தினமும் எழுதினால் ஒரு சிறிய காரியத்தைக் கூட அழகாக, கோர்வையயாக மிக எளிதாக எழுதிவிட முடிகிறது. ஆனால் எப்போதாவது எழுதினால் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான காரியத்தைக் கூட மனம் விரும்புவது போல எழுத்தில் கொண்டு வர முடிவதில்லை. இந்த நாட்களில் நிறைய சிந்தனைகள் அவ்வப்போது 'எழுது! எழுது!' என்று தூண்டிய போதும் அமர்ந்து எழுத மனம் ஒன்றாமல் பழக்கப்பட்டக் காரியங்களையே செய்யும்படியாகிவிட்டது. எத்தனை கவித்துவமானத் தருணங்களை இப்படி வீணடித்தேனோ?

கடந்த ஆகஸ்டு மாதம் 26 ஆம் தியதியோடு இத்தாலிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. எங்கள் சபையின் தலைமை இல்லத்தில், எங்கள் சபையின் சக அருட்பணியாளர்களோடு தங்கியிருப்பதால் புதிய சூழ்நிலைக்கேற்றவாறு என்னைத் தகவமைப்பது அவ்வளவு கடினமாக இருக்கவில்லை.

சில புதிய நண்பர்கள் அறிமுகமானார்கள். சில பழைய நண்பர்கள் நட்பு வட்டத்திலிருந்து விடுபட்டார்கள். மரங்களில் இலைகள் உதிர்வதும், பின்னர் தளிர்ப்பதும் மிகவும் இயல்பாக இருக்கிறது. மனித மனங்களுக்கு மட்டும் கொஞ்சம் காலம் தேவைப்படுகிறது. வேறு ஒன்றும் அதற்கு தேவைப்படவில்லை. அதில் வருத்தப்படவும் எதுவுமில்லை. அழகாகத்தான் சொல்லியிருக்கிறார்கள் ஒட்டி ஒட்டாமல் இரு என்று. தண்ணீர் வந்து போனத் தடங்களைக்  கூட அனுமதிப்பதில்லை தாமரை இலைகள். அது தண்ணீரின் பிழையுமில்லை. இலையின் பிழையும் இல்லை. நம் வாழ்வில் எதிர்வரும் எல்லேருக்குமான நியதியும் அதுதான். மலர்வதை மட்டும் மறந்து விட வேண்டாம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் நிறத்தால், இனத்தால், மொழியால் வேறுபட்டாலும் சில அடிப்படையான காரியங்களில் அச்சு அசலாக ஒரே மாதிரி எதிர்வினையாற்றுகிறார்கள். வேறுபடுத்துபவற்றைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல், அந்தப் பொதுவானப் புள்ளியைப் புரிந்து கொண்டு அந்தத் தளத்தில் உங்களை வைத்துக் கொண்டால் எந்த இடத்திலும், எந்த மனிதர்கள் மத்தியிலும் எளிதாக பழகிவிடலாம். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. இன்பம், துன்பம் இந்த இரண்டும் எல்லோருக்கும் பொதுவானது. இவற்றைத் தருவிக்கும் காரணிகள்தான் ஒவ்வொரு சமூகத்தின் அரசியல், பொருளாதராம், பழக்கவழக்கம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. நம் ஊர் பொருளாதாரப் பின்னணியில் ஞாயிற்றுக்  கிழமை சாயங்காலம் வட்டிப்பணம் கட்டவேண்டுமே என்ற கவலை. வளர்ந்த நாடுகளில் சனிக்கிழமை சாயங்காலம் நண்பர்களோடு ஊர்சுற்ற காசு வேண்டுமே என்ற கவலை. இதெல்லாம் ஒரு கவலையா என்று நாம் நினைப்போம். ஆம்! அவர்களைப் பொறுத்தமட்டில் அது கவலைதான்.

வளர்ந்த நாடுகளுக்கும் நமக்குமான மிக முக்கியமான வித்தியாசமாக நான் பார்ப்பது ஒன்றுதான். இங்கு நீங்கள் எங்கு சென்றாலும் குடிநீர், போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் தரமாகக் கிடைக்கின்றன. இதில் நகரம், மாநகரம், குக்கிராமம் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கிறது. குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு அவர்கள் யாரையும் நாடாமல் சுயமாக வாழ்வதற்குத் தேவையான ஓய்வூதியமும், நோய்வாய்ப்பட்டால் ஒரு காசு செலவில்லாமல் உயர்தரமான மருத்துவமும் கிடைக்கிறது. ஆயினும் நம்மைப் போலவே அவர்களும் கவலைப்படுகிறார்கள். பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே! பிள்ளைகளின் திருமணம் ஒரு ஆறுமாதம் கூட நிலைக்கவில்லையே! அதிகமாக வெயில் அடிக்கிறதே! அல்லது அதிகமாக குளிர் அடிக்கிறதே என்று கவலைப்படுவதற்கு இவர்களிடமும் நிறைய இருக்கின்றன.

நிறைய காரியங்களில் இந்த மக்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். ஏற்றத் தாழ்வுகள் அதிகமில்லாத ஓரளவு சமூக சமநிலையை நாடு முழுவதும் கொண்டு வந்துவிட்டார்கள். மக்களின் உயிர் பாதுகாப்புக்கு எதை வேண்டுமானாலும் அடமானம் வைப்பார்கள். சாலைகளில் பாதசாரிகள்தான் எஜமானர்கள். மற்றவர்கள் நின்றுதான் செல்ல வேண்டும். ஹார்ன் அடிப்பதில்லை. எவ்வளவு மெதுவாக செல்ல வேண்டியிருப்பினும் பொறுமையாக ஒருவர் பின் ஒருவராக செல்வது என்று மிகவும் நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள். சாலை விதிகளை மதிப்பதில் நாம் இன்னும் பூஜ்யத்திலேயே நின்று கொண்டிருக்கிறோம். சாலை விதிகளை மதிப்பது என்பது சக மனிதர்களை, அவர்களின் விலைமதிப்பற்ற உயிரை, அவர்களின் குடும்பங்களை, பிள்ளைகளை, ஏன் ஒட்டு மொத்த சமுதாயத்தையே மதிப்பது என்பதை நாம் இன்னும் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.

பொது இடத்தில் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்கிறார்கள். நாம் நம் வீட்டின் வரவேற்பரையில் எச்சில் கழிப்பதோ, சாப்பாட்டு அறையில் சிறுநீர் கழிப்பதோ, பூஜை அறையில் குப்பை கொட்டுவதோ கிடையாது. ஆனால் பொது இடத்தில் எந்த உறுத்தலுமின்றி அவற்றைச் செய்கிறோம். இவர்கள் பொது இடங்களையும் தங்கள் வீடு போல போலவே பாவிக்கிறார்கள். எந்த கூச்சமுமின்றி ஒருவர் ஒருவரின் கைகளைப் பிடித்துக் கொள்கிறார்கள். முத்தமிட்டுக் கொள்கிறார்கள். யோசித்துப் பார்த்தால் நாம் மிக இயல்பான அன்பின் வெளிப்பாடுகளுக்கு தேவையற்றுக் கூச்சப்பட்டுக் கொள்கிறோம். திரை மறைவான பல அசிங்கங்களைக் கூச்சமின்றிக் கடந்து செல்கிறோம்.

குப்பை மேலாண்மை பற்றி பள்ளி மாணவர்களுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் பொது இடங்களைப் பேண வேண்டிய விழிப்புணர்வை பொது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் வெளிநாட்டுக்காரனிடமிருந்து நம் மானத்தையும், டெங்கு, சிக்குன் குனியாக்களிடமிருந்து நம் மக்களையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். குப்பைகளை முறையாக சேகரித்தல், எடுத்துச் செல்லுதல், மறுசுழற்சி செய்தல் போன்றவற்றில் நமது உட்கட்டமைப்பு வசதிகள் எந்த நவீனத்தையும் எட்டவில்லை என்பதும் மிகவும் உண்மை. நாடு முழுவதும் ஐ.டி. துறைகள் வந்து பளபளப்பைக் கூட்டிவிட்டாலும், குப்பை சேகரிக்க இன்னும் துடைப்பமும், தூப்புக்காரியும் தான் என்றால் இதுதான் இந்தியாவின் முகம். 

இங்கே காவலர்கள் உங்களைப் பரிசோதிக்க வேண்டுமென்றாலும் 'தயவுசெய்து உங்கள் அடையாள அட்டையை நான் பார்க்க முடியுமா?' என்று மிகவும் அழகாக கேட்பார்கள். ஏதாவது சான்றிதழ்கள், இலவச சலுகைகள் என்று அரசு அலுவலகங்களுக்குச் சென்றாலும் உங்களுக்கு சிரமம் தந்து விடாமல் எளிதாக காரியத்தை முடித்துவிட மிகுந்த சிரத்தை எடுப்பார்கள். அரிதினும் அரிதாக, ஒருவேளை வாய்ப்பே இல்லாத பட்சத்தில் கூட 'மிகவும் வருந்துகிறோம். குறிப்பிட்ட நிபந்தனைகளை நிறைவு செய்து வாருங்கள். உடனே தந்துவிடுகிறோம்' என்று கூறுவார்கள். நம் ஊரில் பத்து ருபாய் விலை பெறாத இலவச வேட்டி, சேலை தருவார்கள். அதைத் தர வேண்டிய அலுவலர் தன் வீட்டிலிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தருவதைப் போல நடந்து கொள்வதைப் பார்க்கும் போது நாம் யாரை நொந்து கொள்வது என்று தெரியவில்லை.

உலகமே பெருமைப்படத்தக்க ஏராளம் விசயங்கள் நம்மிடம் இருக்கின்றன. இப்போது நன்றாக தூக்கம் வருகின்றபடியினால் மீதியை நாளைத் தொடர்கிறேன்.

வியாழன், 1 செப்டம்பர், 2016

விளையும் பயிர்(கள்)

மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

நண்பனுக்காக கழிவறை…
வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.
அகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.
பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி சிகிச்சைக்கு உதவி…
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.
உப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.
மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.
சக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமிழ் இந்து நாளிதழ், செப்டம்பர் 1, 2016