புதன், 7 செப்டம்பர், 2016

நீங்கள் வேறு நாட்டில் இருக்கும் போது- சில சிந்தனைகள் - 2

இந்தக் கட்டுரை நிச்சயமாக ஒரு ஒட்டு மொத்த சமூகத்தைப் பற்றியப் பார்வையல்ல. அப்படி ஒரு பார்வையை வைத்துக் கொள்வதே தவறு. அதுவும் எதிர்மறையாக என்றால் மிகவும் தவறு. இருப்பினும் நீங்கள் வெளிநாடுகளில் இருக்கும் போது சில தவிர்க்க இயலாத அனுபவங்களைச் சந்திக்க நேரிடும். அப்படி சில அனுபவங்களைப் பொதுமைப் படுத்தி எழுதுகிறேன். அவ்வளவுதான்.!

இத்தாலியில் இருக்கும் போது என்னை மிகவும் கோபப்படுத்தியது இந்தியாவைப் பற்றிய அவர்களின் பார்வை. கோபம் என்றால் சாதாரணக் கோபம் அல்ல. கடுங்கோபம். கிணற்றுக்குள் இருக்கும் தவளைக்கு கிணறுதான் உலகம் என்பது போல, அவர்களுக்கு இத்தாலி மட்டும் தான் உலகம். பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளெல்லாம் பக்கத்துக் கிணறுகள். அவ்வளவுதான். மற்றபடி உலகில் உள்ள அனைத்து நாடுகளும் துன்புறும் நாடுகள். உண்பதற்கும், உடுத்துவதற்கும் எதுவுமில்லாத ஏழை நாடுகள். எவ்வளவு பெரிய மூடத்தனம். கோபத்திற்கு காரணம் இந்த அறியாமை மட்டுமல்ல. அவர்களின் இந்த 'அறிவுசுரங்கத்திற்கு' மேல் கொஞ்சம் அதிகமாக அந்த நாடுகளைப் பற்றி அறிந்து கொள்ள மூர்க்கத்தனமாக மறுக்கிறார்கள்.

முதலில் உங்களைப் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். இரயில் நிலையங்களிலோ, மற்ற பொது இடங்களிலோ ஒரு சிலர் நம்மைப் பார்த்ததும் தங்கள் உடமைகளை பத்திரப்படுத்துகிறார்கள். தங்கள் கைப்பையை கக்கத்திற்குள் இடுக்கிக் கொள்கிறார்கள். நம் கண்களைப் பார்ப்பதை வலுக்கட்டாயமாக மறுத்து பிற 'அழகானக்' காட்சிகளுக்கு கடந்து போகிறார்கள். ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறதென்றால், பலமுறை நம் ஊர்க்காரர்கள்தான் தங்கள் உடமைகள் இரயிலிலோ, பேருந்திலே பறிகொடுத்து வெறும் கையாய் வீடுதிரும்புகிறார்கள். சிலர் தங்கள் மடிக்கணிணி, மூக்குக் கண்ணாடி, களவுச்சீட்டு முதலியவற்றைக் களவுகொடுத்து வீடு திரும்பவும் வழியற்றவர்களாகின்றார்கள். வெளிப்படையாகத் தங்கள் வெறுப்பைக் காட்டிக் கொள்பவர்கள் மிக மிக சொற்பமானவர்கள்தான். அதுவும் உங்களுக்கு எந்தத் தொடர்பும், அறிமுகமும் இல்லாதவர்கள். இதனால் இவை உங்களை அதிகம் பாதிப்பதில்லை. 

தொழில் நிமித்தமாகவோ, அல்லது வேறு நிமித்தங்கள் காரணமாகவோ, உங்களிடம் தொடர்பில் இருக்க வேண்டிய அவசியத்தில் இருப்பவர்கள் இந்த வெறுப்பை வெளிப்படையாக காட்டிக்கொள்வதில்லை. ஆனால் உங்களைப் பார்த்து ஒரு செயற்கையாக வருவித்தச் சிரிப்பும், தங்களுக்குத் தெரிந்த ஒன்றோ இரண்டோ ஆங்கில வார்த்தைகளும் பேசி உங்களை மகிழ்விப்பதாய் நினைத்துக்கொள்வார்கள். உங்களோடு சமத்துவம் பேணிக்கொள்வதாகக் காட்டிக்கொள்வார்கள். அவர்களின் கருணைக்கு அந்த ஆங்கில வார்த்தைகளுக்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது. இது இன்னொரு பார்வை. ஐரோப்பிய நாடுகளுக்கு வெளியே, ஆங்கிலேயர்களால் காலனியாதிக்கத்திற்குட்பட்ட எல்லா நாடுகளிலும் ஆங்கிலம் தான் முதன்மை மொழி என்று எண்ணிக் கொள்கிறார்கள். இதைப் பார்க்கும் இன்னொரு மூன்றாம் நபர், 'ஓ! அவனுக்கு ஆங்கிலம் தெரியுமா?' என்று உயர்வு நவிற்சி செய்யும் போது, உலக அறிவில் பாண்டித்யம் பெற்ற முன்னவர் இவ்வாறு சொல்வார்: 'அவன் இந்தியா காரனாயிற்றே! அங்கே எல்லோரும் ஆங்கிலம் பேசுவார்கள்' என்று. கோபம் வருமா? வராதா?. இது தவறு. நாங்கள் எங்கள் மாநிலத்தின் மொழியைத் தான் பேசுகிறோம். தமிழ் எங்கள் தாய்மொழி. தொன்மையான செம்மொழி என்றெல்லாம் சொல்லத் தொடங்கினால், அதற்குள் அவன் வேறு பேச்சுக்குப் போயிருப்பான். சரியான மடச்சாம்பிராணிகள். ஒரு மண்ணும் தெரியாது. அவனுக்கு தெரியவில்லை என்பதற்காக வருத்தப்பட மாட்டான். தெரிந்து கொள்ளும் அளவுக்கு எந்தச் சிறப்பும் நம்மிடம் இருக்க வாய்ப்பில்லை என்பது அவனது கணிப்பு. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் 'மதர் தெரசாவும், கல்கத்தா சேரியும்' மட்டும் தான். அதே அன்னை பேசிய வங்க மொழி உலகின் 20 கோடி பேரின் தாய் மொழி என்பதும், தாகூர், தஸ்லிமா நஸ்ரின் போன்ற இலக்கியவாதிகள், இசை மேதைகள், எழுத்தாளர்கள் எண்ணற்றோரைப் பெற்றெடுத்த செழித்த மொழி என்பதைப் பற்றிய ஒரு துளி அறிவும் கிடையாது. வங்க மொழியும், மலையாள மொழியும் வெறும் ஆயிரம் ஆண்டு வரலாற்றை மட்டுமே கொண்டிருப்பினும், அம்மொழிகளில் வெளியாகும் சிறுகதைகளும், நாவல்களும் உலகத் தரம் வாய்ந்தவைகளாகும். இந்தியாவின் மொழிப் பன்மைக்கும், இலக்கிய வரலாற்றுப் பன்மைக்கும் முன் உலகத்தில் எந்த நாட்டை ஒப்பிட முடியும்? 

இன்னொரு வகையினர் இருக்கின்றனர். எளிய மக்கள். அவர்களுக்கும் 'படித்த மேதாவிகளுக்கும்' ஒரு ஒற்றுமை என்னவென்றால் இருவருக்குமே இந்தியா என்றால் ஏழை நாடு என்பது மட்டும் தான் தெரியும். எளிய மக்கள் கொஞ்சமேனும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். யாரேனும் உண்மையாகவே கொஞ்சம் ஆர்வம் காட்டினால் தொல்காப்பியம், திருக்குறள், தஞ்சைப் பெரியகோவில், கல்லணை போன்ற பண்டையச் சிறப்புகள் முதல் கூகுள், பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் தலைமைச் செயல்  அதிகாரிகள் தமிழர்கள் என்பது வரையிலும் என்னால் முடிந்த அளவு நம் தவிலை நானே வாசித்துக் கொள்கிறேன். கேட்கச் செவியுள்ளவன் கேட்கட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக