புதன், 27 மே, 2015

'நண்பர்கள் ஜாக்கிரதை' (Beware! Friends....)


             நண்பனுக்காக உயிரைத் தருவதுதான் மேலான அன்பு என்று விவிலியம் கூறுகிறது. உயிரைத் தருமளவு சிறந்த நண்பர்கள் யார்? அவர்களை எப்படி அடையாளம் காண்பது? திருக்குறள் சில வழிகளைக் காட்டுகிறது. 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்'. ' உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என்பன மனதில் பட்டெனத் தோன்றும் சில எடுத்துக்காட்டுக்கள். அன்பு செய்பவரின் துன்பம் கண்டு கண்ணில் தோன்றும் சிறு துளி கண்ணீரே அன்பிற்கான சான்றுப் பத்திரம் என்று முதல் திருக்குறளும், ஆடை களையும் சமயத்தில் விரைந்து சென்று சரிசெய்யும் கைகளைப் போன்றவனே நண்பன் என்று இரண்டாம் திருக்குறளும் கூறுகின்றன. நட்பைப் பற்றிப் பேசினாலே நம்பிக்கைப் பிறக்கிறது. நம்மோடு இன்னொரு ஆளின் பலமும் சேர்வது போல ஓர் சக்தி பிறக்கிறது. அதுதான் நட்பின் சிறப்பு. இதையெல்லாம் நாமும் நம் வாழ்வில் நிச்சயம் அனுபவித்திருக்கிறோம்.

       வள்ளுவர் தொடங்கி வாட்ஸ் அப் வரையிலும் நட்பின் புகழ் பாடப்படுகிறது. நட்பு சிறப்புதான். ஆனால் நட்பு மட்டுமே சிறப்பு என்பதோ, மூழ்காத ஷிப்பே ஃப்ரண்ட்ஷிப் தான் என்பதோ என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நட்பும் மூழ்கும். நட்பின் நிலைத்தத் தன்மையில் நான் அதிகம் கவனம் செலுத்த விரும்பவில்லை. இன்றைய எனது நட்பு எனக்குச் சிறப்புதான். நாளை அதன் நிலையைப் பற்றி எனக்கு கவலையும் இல்லை. அதன் நாளைய புகழை நான் பாட விரும்பவுமில்லை.
         நண்பர்களை நான் விமர்சிக்க விரும்புகிறேன். நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் அளவுக்கதிகமாக உயர்த்திப் பிடிக்கப்படுகிறார்கள் என்பது எனது கருத்து. தாய், தந்தை, உடன்பிறப்புக்கள், உறவினர்கள், ஏன் சில சமயம் கடவுள் கூட நண்பர்களுக்குப் பிறகுதான் போன்ற கருத்துக்கள் என்னால் சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லா உறவுகளும் முக்கியமானவையே. எல்லா உறவுகளிலும் கூடுதல், குறைகள் இருக்கின்றன. இதற்கு சிறிதும் கூட விதிவிலக்கல்ல நட்பு. நண்பர்களும் மனிதர்களே.

            அவர்கள் சில வேளைகளில் காட்டிக்கொடுக்கிறார்கள். சிலவேளைகளில் துரோகம் செய்கிறார்கள். சில வேளைகளில் ஓட்டம் பிடிக்கிறார்கள். சில வேளைகளில் மறுதலிக்கிறார்கள். சில வேளைகளில் பொறாமைப்படுகிறார்கள். தங்களது வெற்றிகளையும் மறைத்து வைக்கவே விரும்புகிறார்கள். அவர்கள் தீய நண்பர்களல்ல. நல்ல நண்பர்களே! பேதுரு போல அல்லது யூதாசு போல.

            அவர்களுக்கு நல்லது எனத் தோன்றினால் சொல்லிக்கொள்ளாமலே கூட சென்றுவிட அவர்கள் தயங்குவதில்லை. இப்போது போகட்டும். திரும்பி வரும் போது பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தால் உங்களை விட அப்பாவிகள் யாரும் இருக்க முடியாது. அவர்கள் திரும்பி வரும் போது உங்கள் நண்பர்களாகவே வருகிறார்கள். நண்பர்களை உங்களால் தண்டிக்க முடியாது. ஆதலால் நண்பர்களே! 'நண்பர்கள் ஜாக்கிரதை'