வியாழன், 1 செப்டம்பர், 2016

விளையும் பயிர்(கள்)

மனிதநேயம் இன்னும் மரித்துப் போகவில்லை என்பதை உலகுக்கு உரத்துச் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது வேதாரண்யம் அருகே நடந்துள்ள இரு நிகழ்வுகள். தாங்களே எளிய, வறுமை நிலையில் இருந்தாலும் சக மாணவர், மாணவியின் துயரம் உணர்ந்து உதவிசெய்து நட்புக்கு மரியாதை செலுத்தியுள்ளனர் பள்ளி மாணவர்கள் சிலர்.

நண்பனுக்காக கழிவறை…
வேதாரண்யம் அருகேயுள்ள தேத்தாகுடி தெற்கு எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சக மாணவருக்கு அதேபள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் கழிவறை கட்டித் தந்துள்ளனர். எஸ்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர் அகத்தியன். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்படுவதால், அகத்தியன் பள்ளிக்கு சரியாக வராததையடுத்து அதேவகுப்பில் படிக்கும் ஹரிஷ், ராகுல், வசிகரன், நவீன்ராஜ் ஆகியோர் அகத்தியனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.
அகத்தியனின் வீட்டில் கழிவறை இல்லாததால் திறந்தவெளியில் காலைக் கடன்களை கழிப்பதும், அதனால் உடல்நிலை பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்ததையடுத்து, இந்த நிலை குறித்து மற்றவர்களிடம் தெரிவித்த மாணவர்கள் நால்வரும் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் ரூ.5,000 நிதி திரட்டினர்.
பள்ளி சென்ற நேரம் போக மீதி நேரத்தில், ஒரு கொத்தனார் உதவியுடன் தாங்களே சித்தாள் வேலையைச் செய்து 3 நாட்களில் கழிவறையை கட்டி முடித்த மாணவர்கள் நால்வரும் அதனை அகத்தியன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

மாணவி சிகிச்சைக்கு உதவி…
வேதாரண்யம் அருகேயுள்ள தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவி திவ்யா, உப்பு நீர் நோயால் பாதிக்கப்பட்டு திருத்துறைப்பூண்டி, தஞ்சை, சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திவ்யாவின் தந்தை செல்வம் இறந்துவிட்டார். தாய் விஜயலட்சுமி, 100 நாள் வேலைக்குச் சென்று, மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோரைக் காப்பாற்றி வருகிறார்.
உப்பு நீரால் பாதிக்கப்பட்ட திவ்யா, சிகிச்சைக்குப் பணமில்லாத நிலையில் கடந்த வாரம் பள்ளிக்கு வருவதைக்கூட நிறுத்திக்கொண்டுவிட்டார். இதையறிந்த, அப்பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் தந்தையை இழந்த மாணவர்கள் மாரீஸ்வரன், அருண்ராஜ் ஆகிய இருவரும் திவ்யாவுக்கு மருத்துவ செலவுக்கு உதவ நினைத்தனர்.
பள்ளித் தலைமையாசிரியர் வசந்தியை அணுகி, திவ்யாவின் நிலைமையை எடுத்துக் கூறினர். அதனையடுத்து தலைமையாசிரியை ரூ.500 வழங்கினார்.
மற்ற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிக ளிடம் நிதிதிரட்டினர். வசூலான மொத்த தொகை ரூ.10,565-ஐ மாணவர்கள் இருவரும் திவ்யாவின் மருத்துவ செலவுக்காக வழங்கினர்.
சக மாணவியின் மருத்துவ செலவுக்காக உதவிய மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மனதாரப் பாராட்டினர். எனினும், மாணவி திவ்யா தொடர் சிகிச்சை பெறவேண்டிய நிலையில் தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி: தமிழ் இந்து நாளிதழ், செப்டம்பர் 1, 2016 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக