செவ்வாய், 20 செப்டம்பர், 2016

ராம்குமார் தற்கொலை செய்யப்பட்டார். உண்மையே உன் விலையென்ன? -1

மனம் முழுக்க கோபம். ஒன்றுமே செய்ய இயலாமல் முடக்கிப் போடும் ஆற்றாமை. கையாலாகாத நிலைகண்டு எரிச்சல். கண்ணகி போல போல எரித்துவிடத்தான் ஆசை. குழந்தை போல அழுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய இயலாமை. பட்டப் பகலில் முழுவதும் பாதுகாக்கப்பட்ட ஓர் சிறை அறையில் ராம்குமார் என்னும் விசாரணைக் கைதி 'தற்கொலை செய்யப்பட்டிருக்கிறார்'. 

கேட்பதற்கு நாதியில்லாமலில்லை. தமிழகமே கேட்கிறது. ஏன் இந்த உலகமே கேட்கிறது என்று வைத்துக் கொள்வோம். போன உயிர்? எனக்கு என் மகன் வேண்டும் என்று கதறும் தாய்க்கும், தந்தைக்கும், உடன்பிறப்புகளுக்கும் இந்த தமிழ்நாட்டு அரசும், சமூகமும் என்ன செய்துவிட முடியும்? 

இவ்வளவு மோசமான நீதி பரிபாலனை இவ்வுலகத்தின் வேறு எந்த சனநாயக நாட்டிலும் நடக்குமா என்று தெரியவில்லை. எத்தனை வழக்குகளில் நீதி என்னும் மழை பொய்த்து மனம் வறண்டு வெடித்துப் போவதென்று தெரியவில்லை. சொத்துக் குவிப்பு வழக்கு, மான் வேட்டை வழக்கு, நடைபாதையில் தூங்கியோர் மீதி கார் ஏற்றி ஒருவர் சாவுக்கும், நான்கு பேர் கை, கால் இழப்புக்கும் காரணமாகிய குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு, 257 பேரை பலிகொண்ட 1993 மும்பை குண்டு வெடிப்பிற்கு துணைபுரிந்த வழக்கு, கேரளாவில் ஓடும் ரெயிலிலிருந்து இளம் பெண் தள்ளிவிடப்பட்டு பின்னர் வன்புணர்வு செய்யப்பட்டு, தண்டவாளக் கற்களால் தலையைச் சிதைத்துக் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கு என்று எல்லவற்றிலும் இந்திய நீதி தேவதை பணத்திற்கும், அதிகாரத்திற்கும் மண்டியிடுபவளாக ஒரு விபச்சாரனினும் கேவலமாக மாறிவிடுகிறாள். எல்லா பித்துவாளிகளையும் வரவேற்க ஒரு சனநாயகக் கூட்டம் கேட்க சகிக்காத குரலெழுப்பிக் காத்திருக்கிறது. மொத்தமாக மறுநாள் கோவிலில் காணிக்கை செலுத்திவிட்டு பத்திரிக்கைக்கு அவர்கள் சிரித்த முகத்துடன் பேட்டி கொடுக்கிறார்கள். செத்துப் போனவனின் இரத்தம் காய்ந்து சில நாட்களிலேயே மறைந்து விடுகிறது. ஊடக வெளிச்சத்தையும் பெறத் தகுதியில்லாமல் இது போல தினசரி எத்தனை வழக்குகளோ? 

ராம்குமார் 'தற்கொலை செய்யப்பட்டதை' 'தி இந்து' தமிழ் இணைய நாளிதழில் வாசித்தேன். கருத்துப் பகிர்வில் ஒரு வாசகர் 'உண்மையே உன் விலையென்ன' என்று கேட்டிருந்தார். அதற்குப் பதிலளித்தவர் 'உயிர்' என்று எழுதியிருந்தார். இயேசு பிலாத்துவிடம் 'உண்மையை எடுத்துரைப்பதே என் பணி' என்று கூறியபோது, பிலாத்து இயேசுவிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்கிறான். அதிகாரப் பசி உண்மையை மறைத்துவிடுகிறது. உண்மை நிராதரவாக சிலுவையில் பலியாகிறது. 

எல்லோரும் செத்து ஒரு நாள் இன்னொரு உலகத்தில் சந்தித்துக் கொண்டால் எந்த முகத்தை வைத்துக் கொண்டு பார்ப்பது பலியாடுகளாக கழுத்தறுபட்டவர்களின் முகத்தை? உண்மையைக் கொன்றது அதிகார வர்க்கம் மட்டுமல்ல. அவர்களுக்குத் துதிபாடும் அடிமைக் கூட்டமும் தான். அவர்கள்தான் எங்களுக்கு பரபாசே வேண்டும் என்று கூச்சலிட்டவர்கள். மக்களுக்குத்தான் நல்ல அரசு அமையும். அடிமைகளுக்கு இரத்த தாகம் கொண்ட அரக்கன்களும், அரக்கிகளுமே போதுமானவர்கள். இப்படித்தான் இருக்கிறது இன்றைய அடிமைத் தமிழகம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக