ஞாயிறு, 21 பிப்ரவரி, 2016

எங்கள் அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்! (A LETTER TO HANUMANTHAPPA - 2)

அன்பு சகோதரா ஹனுமந்தப்பா! வணக்கம்!

நீ இறந்து விட்டதாக பத்திரிக்கைகள் சொல்லுகின்றன. நான் அதை நம்பவில்லை. நான் ஏன் அதை நம்ப வேண்டும்? எத்தனையோ மாவீர்ர்களை இந்த உலகம் கண்டிருக்கிறது. அலெக்ஸாண்டர், அக்பர், வீர சிவாஜி, சேர, சோழ, பாண்டியன் இவர்கள் எல்லாம் இன்னும் இறக்காமல் மக்களின் நினைவுகளில் நீங்கா இடம் பிடித்து வாழ்வது போலவே, நீயும், உனது ஆறு நாள் உறைபனி வாழ்வும் இன்னும் பல நூறு ஆண்டுகள் பேசப்படும் என்று நான் நம்புவததால் நீ இறந்துவிட்டாய் என்ற செய்தியை நான் நம்பவில்லை.

சியாச்சின் மலை உச்சி. இந்த இடம் முதன் முதலாக என் கற்பனைக் கண்ணுக்கு எட்டியது, பேராசிரியர் பெர்னாட்ஷா கூறிய போதுதான். அவரது மகனும் அத்தகைய ஓர் இடத்தில் பணியாற்றுவதைப் பற்றி உயர்வாகப் பேசிக்கொண்டிருந்ததாக ஓர் ஞாபகம். அப்போது நான் மதுரை அருளானந்தர் கல்லூரியில் பயின்று கொண்டிருந்தேன். 

மிகவும் சாதாரணமான ஒரு குடும்பத்தில் பிறந்து, தெருவிளக்கில் பாடம் பயின்று, முனைவர் பட்டம் பெற்று, அவர் கல்லூரி பேராசிரியர் ஆகும் வரையிலான அவரது கதைகள் நம்பிக்கையின் ஊற்றுக்கள். மிகவும் எளிமையானவராக, மாணவர்களுக்கு நண்பராக, கனிவோடு பழகுபவர். எனக்குத் தெரிந்து அவர் பெருமை பாராட்டுவதெல்லாம், அவரது மாணவர்களின் வெற்றியைப் பற்றித்தான். குறிப்பாக 'காதல்', 'வழக்கு எண்' போன்ற தமிழகத் திரைப்படங்களின் போக்கினை மாற்றிய படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேல் தனது மாணவன் என்பதை எந்தப் பாடத்திற்கு இடையிலும் நாசூக்காகச் செருகிவிடுவார். இதை இப்போது உனக்குச் சொல்லக் காரணம் அவரும் உன்னைப் பேலவே ஒரு எளிமையானத் தொடக்கம் கொண்டு வலிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். உன்னைப் போலவே நம்பிக்கைக் கொடுப்பவர். உன் தம்பி, தங்கைகள் மாண்புடன் தங்கள் சொந்தக் கால்களில் நிற்க, அவர்களைத் தட்டிக்கொடுக்க நிறைய பெர்னாட்ஷாக்களை உன் தாய்நாடு கொண்டிருக்கிறது. என் சகோதரா நீ அமைதியில் இளைப்பாறு!

இன்னும் உன்னோடு பேச விரும்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக