வெள்ளி, 2 செப்டம்பர், 2011

வேற்றுமையில் ஒற்றுமை (Unity in Diversity in Tamil)

வேற்றுமையில் ஒற்றுமை
   'வெள்ளை நிறத்தொரு பூனை – எங்கள்
வீட்டில் வளருது கண்டீர்
   பிள்ளைகள் பெற்றதப் பூனை: அவை
பேருக்கொரு நிறமாகும்
   சாம்பல் நிறமொருக்குட்டி- கருஞ்
சாந்ர்து நிறமொருக் குட்டி
   பாம்பு நிறமொருக்குட்டி- வெள்ளை
பாலி னிறமொரு குட்டி
   எந்த நிறமிருந்தாலலும் - அவை
யாவும் ஒரு தரமன்றோ?
  இந்த நிறம் சிறிதென்றும் - இஃ
தேற்றமென்றுஞ் சொல்ல லாமோ?

 அவையோர் அனைவருக்கும் தமிழ் வீர வணக்கம்! நான் இங்கு பேச எடுத்துக்கொண்ட தலைப்பு வேற்றுமையில் ஒற்றுமை. 

  நம் நாடு இந்தியா. இந்த ஒரு பெயரைத் தவிர நம் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு விதமான மொழியும், கலாச்சாரமும், பழக்கவழக்கங்களும், பண்பாடும், விழாக்களும், விருந்துகளும் வேறுபட்டு நம் நாட்டை அழகுபடுத்துகின்றன. இதுவே நம் நாட்டின் தனிச்சிறப்பு. உலக நாடுகளின் மத்தியல் நம் இந்தியத் திருநாட்டை தனித்துக் காட்டும் அடையாளமே இங்கு நிலவும் வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்புதான்.

 பிரான்ஸ் என்றால் அது கிறிஸ்தவ நாடு. துருக்கி என்றால் அது இஸ்லாமிய நாடு. ஆனால் இந்தியா என்றால் அதை இந்து நாடு என்றோ, இஸ்லாமிய நாடு என்றே, கிறிஸ்தவ நாடு என்றோ கூறுதல் இயலுமோ? இங்குதான் அனைத்து மதத்தினரும் ஒரு தாயின் பிள்ளைகளாக ஒன்று கூடு வாழ்கின்றனரே!

 இங்கிலாந்து- அது ஆங்கில நாடு
பிரெஞ்சு மொழியில் பேசுபவர்கள் பிரெஞ்சுக் காரர்கள்.
ஜப்பானியர்கள் ஜப்பானிய மொழியில் பேசுகின்றனர். ஆனால் இந்தியாவில் மட்டுமே 1500க்கும் அதிகமான மொழிகள் வழக்கத்தில் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஒவ்வொரு மொழிக்கென்றும் இருக்கும் இலக்கியங்கள் எத்தனை! ஒவ்வொரு இலக்கியமும் சுமந்து நிற்கும் வரலாறுகள் எத்தனை! ஒவ்வொரு வரலாறும் சுட்டிக்காட்டும் கலாச்சரமும், பண்பாடும் எத்தனை எத்தனை!

நாம்  இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதற்கும் எத்தனையோக் காரணங்கள் இருந்தாலும் நம் நாட்டின் தனிச்சிறப்பான வேற்றுiயில் ஒற்றுமை என்னும் பண்புதான் தலையானதாகக் கருதுகிறேன். நம்மிடையே இருக்கும் வேறுபாடுகளே ஒருவர் மற்றவர் மீது ஆர்வமும் அக்கறையும்; செலுத்துவதற்குக் காரணமாய் அமைகின்றன.

 நாம் பேருந்தில் செல்லும் போது பிறமொழி பேசும் நபர்கள் இருந்தால் அவர்களுக்கு உதவி செய்ய நாம் தயாராக இருக்கிறோம். தலையில் தொப்பியும், முகத்தில் அடர்ந்த தாடியும் கொண்ட சீக்கிய நண்பர்களை ஆர்வமாய் பாரக்கிறோம்.

ஏதோ பதினொரு நபர்கள் ஆடிய விளையாட்டாக, சில நாட்களுக்கு முன் நடந்த உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை எடுத்துக்கொள்ள முடியுமா? அதன் வெற்றியால் ஒட்டு மொத்த இந்தியாவே பூரித்துப் போனது.

இப்படி பல் வண்ணம் கொண்ட ஓவியமாக, பலப் பூக்களைக் கொண்ட அழகியத் தோட்டமாக விளங்குவது நம் இந்தியா. இங்கு ஒருவருக்கு வெற்றி என்றால் அனைவருக்கும் வெற்றியே! ஒருவருக்குத் தலைகுனிவு என்றால் அனைவருக்கும் தலைக்குனிவே!

ஏனென்றால் இனத்தால், மொழியால், மதத்தால், இயற்கைச் செல்வங்களைப் பயன்படுத்துவதால் மக்களிடையும், மாநிலங்களுக்கிடையிலேயும் பிளவுகளை ஏற்படுத்தி, பகைமை நெருப்பூட்டி அதில் குளிர்காயத் துடிக்கும் போலி மதவாதிகளிடமும், சுயநல அரசியல் வாதிகளிடமும் நாம் கவனமாக இருத்தல் அவசியம்

'ஒன்று பட்டால் உண்டு வாழ்வு – நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் அனைவர்க்கும் தாழ்வே'
என்னும் பாரதியில் வரிகளை மனத்தில் நிறுத்தி ஒன்று படுவோம் உயர்வடைவோம்.

                                               நன்றி! வணக்கம்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக