வியாழன், 9 நவம்பர், 2023

பொதுக்காலத்தின் 32 -ஆம் ஞாயிறு திருப்பலி முன்னுரை

ஆண்டின் பொதுக்காலத்தின் 32 -ஆம் ஞாயிறு திருப்பலியை ஒரு குடும்பமாக இணைந்து கொண்டாட வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் ............. சார்பாக அன்புடன் வரவேற்று மகிழ்கின்றேன். 

திருவழிபாட்டு ஆண்டின் நிறைவை நோக்கி பயணிக்கும் நமக்கு, இன்றைய நாளில் தரப்பட்டுள்ள இறைவார்த்தைகள் நிறைவுகாலத்தையும், இறைமகன் இயேசுவின் இரண்டாம் வருகையையும் முன்னறிவிக்கும் விதமாகவே அமைந்துள்ளன.

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை இழிவானதாகும் என்னும் பொருளில், 

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு

என்கிறார் திருவள்ளுவர். 

துயரங்களைச் சந்தித்த மனிதர்கள் ஞானத்தைக் கண்டுகொள்வார்கள் என்பது பரவலான நம்பிக்கை. ஆனால் இரண்டு உலகப்போர்களைக் கடந்து வந்த பின்பும், பிரச்சனைகளுக்கு போர் தான் தீர்வு என்று நம்புவது நாடுகளின் ஞானமின்மையைக் காட்டுகின்றது.

செயற்கை நுண்ணறிவு யுகத்திலும், மனிதர்களுக்கு கொரோனா என்னும் ஒரு நுண்ணியிர் பேரச்சத்தைக் காட்டிவிட்டது. ஆயினும் மனிதர்கள் சுயநலத்திலும், வெறுப்பிலும், தற்பெருமையிலும் மூழ்கிக் கிடப்பது தனிமனிதர்களின் ஞானமின்மையைக் காட்டுகின்றது.  

இந்தச் சூழ்நிலையில்தான் விளக்கு ஒளி தர எண்ணெய் எந்த அளவிற்கு அவசியமோ, அது போல மனிதர்கள் ஞானத்தின் ஒளியில் தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும் என்பதை இன்றைய வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. 

சிலுவையில் தன்னைக் கையளித்ததினால், நம்மை முடிவில்லாத மரணத்திலிருந்து மீட்ட, இறைமகன் இயேசுவின் ஞானத்தை வேண்டி இத்திருப்பலியில் பக்தியுடன் இணைவோம். இறையாசீர் பெறுவோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக