வழக்கமாக எல்லோரும் சொல்வதுதான். நாம் ஏதோவொன்றை நினைத்துக்கொண்டு முகப்புத்தகத்தைத் திறந்தால், அங்கே கவிஞர் மனுஸ் நமக்காக அதே மன ஓட்டத்தை நகலெடுத்து ஒரு கவிதை எழுதி வைத்திருப்பார். அதுபோல கட்டுரையாளர்களிடம் ஒருநாள் யாராவது சொல்வார்கள் என்றால் நானே நம்பியிருக்கமாட்டேன்.
ஆனால் எனக்கு நடந்தது. நேற்று இரவு ஒரு வேகத்தில் ஆசிரியரிடம் ஒரு வாக்குறுதி அளித்துவிட்டேன். எனது ப்ளாக்கில் ஒரு பத்து கட்டுரையாவது எழுதிவிட்டு மீண்டும் வருகிறேன் என்று.
அனாதிகாலத்துக் கனியான ஆப்பிளின் பதினாறாவது (கூடுதல் வகையறா) அலைபேசியை வாங்கி ஏக்கம் தீர்த்த நான் அடைந்த முதல் ஏமாற்றமே தமிழ் டைப்பிங் தான். யமுனாவின் கைகள் பாபுவின் தலைமயிரைக் கோதிக்கொண்டே 'வருஷக்கணக்காக, எத்தனை வருஷம், எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல், பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே?' என்ற கேள்வியின் பரிதாபத்திற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல என் ஏமாற்றம்.
இதற்கு முன் வைத்திருந்த ஒரு ஆண்ட்ராய்டு காரன், சங்க காலத்தமிழில் பேசினாலும் துல்லியமாக டைப் செய்துவிடுவான். கெட்டிக்காரன். அவன் ஏழை என்பதாலேயே அவனை அவமரியாதையாக நடத்தியதைக் குறித்து நேற்றிரவு முதல் முறையாக வருத்தப்பட்டு தூங்கிவிட்டேன்.
காலையில் எழுந்து பார்த்தால் வாட்சப் சேனலில் ஆசிரியர் பராமரிப்புக் கலை கட்டுரையைப் பகிர்ந்து மேக் -கின் உன்னதங்களைப் விதந்தோதியிருந்தார்.
ஆசிரியருக்கு ஒரு கேள்வி. தங்கள் அலைப்பேசியும் ஆப்பிள் தானா? அதில் தமிழில் டைப் செய்வது அல்லது குரல் டைப் செய்வது சிரமமாக இல்லையா? அதற்கு ஒழுங்காக செயல்படாத ஜுபோர்டு (கூகுள் ஆள்) தவிர்த்து வேறு எதாவது நல்ல ஆப்பு இருக்கிறதா?
நான் இன்னும் பாரம்பரியமான பாமினி எழுத்துருவைக் கொண்டு, சன்னல் சுவடிகளில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன்.
எனக்கு அவ்வப்போது தோன்றும் சிந்தனைகளைக் சிதறாமல் கொட்டி வைக்க வாய்ஸ் டைப் உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். ஆப்பிள் போனில் அதை (தமிழில்) செயல்பட வைக்க என்ன ஆப்பு பரிகாரம் செய்யலாம் என்று சொல்லுங்களேன்! புண்ணியமாகப் போகும்.