அன்புள்ள எழுத்தாளர் பா.ரா அவர்களுக்கு!
வணக்கம். தங்களது அனைத்து பணிகளும் சிறப்பாக நடைபெற இறைவன் உங்களுக்கு நல்ல உடல், உள்ள நலம் தர வேண்டிக்கொள்கிறேன்.
ஒரு பள்ளிக்கூடம். ஒரு கண்டிப்பான தலைமையாசிரியர். காலை மாணாக்கர் கூடுகையின் போது, கூச்ச சுவாபமுள்ள ஒரு மாணவனின் பெயரை கூப்பிட்டு 'முன்னாடி வா!' என்று சொன்னால் எப்படி உணர்வான்? அப்படி ஒரு உணர்வை கடந்த 5 ஆம் தியதி தங்களது வாட்சப் வாய்க்காலில் எனது பெயரைக் கண்டதும் உணர்ந்தேன். 'ஆன்டனி ப்ரான்சிஸ், நான் மண்டையைப் பிய்த்துக்கொள்ளும் விதத்தில் பதிலளிப்-பாராவுக்குக் கேள்விகள் அனுப்பவும். (ஆனால் திங்கள்தான் பதிலளிப்பேன்.)'
எத்தனை முறை அதை வாசித்தேன் என்று தெரியவில்லை. என்னை யாரும் இந்த அளவிற்கு வியக்க வைத்ததில்;லை. அம்மாவின் அளவுகடந்த அன்பைக் குறிந்து வியத்திருக்கிறேன். கலைஞரின் பன்முக ஆற்றலை, திறனை, உழைப்பைக் குறித்து வியந்திருக்கிறேன். ஆனால் இந்த வாட்சப் வசதியால் தான் உங்களைப் போன்ற மிகவும் தனித்துவமான மாபெரும் ஆளுமையோடு இவ்வளவு நெருக்கமாக உணர முடிகிறது.
ஏற்கனவே உங்களிடம் சமயம், இறைநம்பிக்கை குறித்தெல்லாம் கேள்விகள் கேட்டிருக்கிறேன். அவ்வளவு எழுத்துப்பணிகளுக்கு மத்தியிலும் பதில் வராத கேள்விகளே இல்லை. உங்களது நேரத்தை வீணடிக்கிறேனோ நினைத்திருக்கிறேன். ஆனால் நீங்களோ ஜெயமோகன் அவர்களின் சோத்துக்கணக்கு கதையில் வரும் கெத்தேல் சாகிப் போல கொடுத்துக்கொண்டேயிருக்கிறீர்கள். நாங்கள் பெற்றுக்கொண்டேயிருக்கிறோம். அறிவையும், ஆளுமையையும் கற்றுக்கொண்டிருக்கிறோம். 'அன்னமிட்ட கை என்கிறார்களே, அந்திமக் கணம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை என்கிறார்களே. தாயத்துகட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும், மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட இந்த கரடிக்கரமல்லவா என் தாயின் கை?' என்ற அக்கதையின் இளைஞனாக என்னை உணர்கிறேன்.
பக்தி மார்க்கம், கர்ம மார்க்கம் என்ற இரு மார்க்கங்களில் ஒருவர் இறைவனை அல்லது மகிழ்ச்சியை அடையலாம் என்ற தத்துவத்தைப் படித்திருக்கிறேன். நீங்கள் ஒரு கர்ம மார்க்கத்தின் மிகச் சிறந்த பிரதிநிதி. விளைவுகளைப் பற்றி (போற்றல், தூற்றல், லைக், டிஸ்லைக்) எந்த அக்கறையும் இன்றி, செயல் ஒன்றே என்று ஒன்றிப்போகும் பாங்கு எங்களுக்கும் கொஞ்சம் அமையட்டும்.
அன்பிற்கு நன்றி!
ஆன்றனி பிரான்சிஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக