வியாழன், 19 மார்ச், 2026

புனித யோசேப்பு பெருவிழா - தத்தெடுத்தல்


புதிய மொழிபெயர்ப்பில் என்ன இருந்தாலும் 'சூசையப்பர்' திருவிழா என்று சொல்லும் போது இன்னும் நெஞ்சுக்கு நெருக்கமாகிவிடுகிறது இந்த நாள். இராமனாதிச்சன்புதூர் சிறுமலர் ஆரம்பபப் பள்ளியில் படிக்கும் போது புதன்கிழமைகளில் சூசையப்பர் தினம் கொண்டாடப்பட்டதாக ஞாபகம். பெரிய வகுப்பு (5-ம் வகுப்பு) மாணவர்கள் 'பெரிய' குளத்திலிருந்து அல்லி மலர்களைப் பறித்து கொண்டுவருவார்கள். கைதேர்ந்த மாணவிகள் அதனை அழகான மாலையாக மாற்றுவார்கள். சிறிய இடைவெளியில் அதன் தண்டினை ஒடித்து நீக்கினால் மாலை தயாராகிவிடும். கலை, கயிறு இன்னபிற காரியங்களுக்கெல்லாம் தேவை இருக்காது. செபம் முடியும் போது 'எங்கள் காவலாம் சூசை தந்தையின், மங்களங்கள் எங்கும் சொல்லி இன்று பாடுவோம்' என்ற பாடலை மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கத்திப்பாடுவோம். அந்தப் பழக்கம் விடவேயில்லை. வீட்டுக்கு போகும் போது இனிப்பு பொங்கல் என்று நினைக்கிறேன். ஏதோவொன்று சாப்பிடத் தருவார்கள். சூசையப்பரோடு நமக்குள்ள முதல் தொடர்பு இதுதான்.

அதன் பிறகு நமது குருமடத்தில் செபமாலை, நவநாள்கள் என எல்லாவற்றிலும் மரியாளுக்குதான் முதலிடம். பக்கத்தில் எங்கேனும் கன்னியர் மடங்களுக்குச் செல்லும் போது முற்றத்துத் தோட்டத்தின் நடுவில் அழகிய சுரூபமாகத்தான் சூசையப்பரைப் பார்க்க முடியும். அங்கு அவர் மகிழ்ச்சியோடு இருப்பது போலத் தோன்றும். இதைத் தவிர சூசையப்பரை இப்படி ஏதாவது விழா நாட்களில் நினைத்துக்கொள்வதோடு சரி. 

ஆனால் இன்று நின்று யோசிக்கும் போது சூசையப்பர் என்னும் 'நேர்மையாளர்' நமக்கு எவ்வளவு பெரிய உந்து சக்தியாக இருக்கமுடியும் என்று தோன்றியது. அதுதான் இந்தக் கட்டுரை.

தத்தெடுத்தல் நற்செயல்தான் என்றாலும் எனக்குத் தெரிந்தமட்டில் ஒரு 'உடனடி' நல்ல உணர்வைத் தருவதில்லை. யாரோ யாரையோ தத்தெடுக்கிறார்கள் என்றால் யாரோ யாரையோ கைவிட்டிருக்கிறார்களே என்ற எண்ணமும் கலந்து விடுவதே காரணமாக இருக்காலாம். ஆனால் அனைத்தையும் கடந்து தத்தெடுத்தல் என்பது தன்னிலே ஒரு மிகப்பெரிய மனிதநேயத்தைக் கொண்டிருக்கின்றது.

சூசையப்பர் இயேசுவின் வளர்ப்புத்தந்தை. மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் மரியாள் தூய ஆவியினால் இயேசுவைக் கருத்தாங்கியிருக்கும் போது, சூசையப்பர் என்னும் நேர்மையாளரின் முன்பு மூன்று வாய்ப்புகள் இருந்தன. முதலாவது மரியாளைச் சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும். விளைவாக அவர் கல்லெறிந்து கொல்லப்படக்கூடும். அவரது 'நேர்மைத்தன்மைக்கு' இதனால் எந்தக் களங்கமும் நேராது. மாறாக சமூகத்தில் அவரது மதிப்பு கூடவே வாய்ப்பிருக்கிறது. இரண்டாவது தான் விரும்பியப் பெண்ணுக்கு கெடுதல் விளைவிக்காமல் மறைவாக விலகி சென்றுவிட வேண்டும். கண்காணாத தொலைவிற்கு. ஒரு ஏமாற்றத்தை கடந்து செல்ல எளியவழி அதுதான்.  சூசையப்பரும் அதையே செய்ய நினைத்தார். ஆனால் அவரை ஏதொவொன்று மிகவும் குழப்பியது.  அவர் மரியாளை நன்கு அறிவார். அவர் தவறு செய்திருக்க வாய்ப்பில்லை என்று அவரது உள்ளுணர்வு சொல்கிறது. ஆனாலும் இந்தச் சூழ்நிலையில் மரியாளை முழு மனதோடு  எப்படி ஏற்றுக்கொள்வது?

உறைந்து போனார் சூசையப்பர். பேச்சு மூச்சற்று போனார் என்று கூட சொல்லலாம். கதியற்றவனுக்கு கதி இறைவன் தானே. அவரது கனவில் இறைவனின் குரலைக் கேட்டார். 'மரியாளை ஏற்றுக்கொள்ளத் தயங்க வேண்டாம். அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்'. அந்தக் குரல் மிகவும் தெளிவானக் குரல். மனிதன் தனித்திருக்கும் போது கேட்கும் குரல் சக்தி வாய்ந்தது. உறைந்து போனவர் உருகத் தொடங்கினார். உயிர் பெற்று எழுந்தார். HE BECAME UNSTOPABLE. தான் இனி என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யத் தொடங்கினார். 

மரியாளை ஏற்றுக்கொண்டார். அவரது திருவயிற்றின் கனியாகிய இயேசுவை ஏற்றுக்கொண்டார். 'மாணிக்கம் இங்கு பாட்சா' ஆகிய மொமன்ட். மரியா இனி என் உயிரின் பாதி. என் அன்பு மனைவி.  ஆம்! ஆனால் எல்லோரையும் போல திருமணம் செய்து, தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று நாங்கள் வாழப்போவதில்லை.

இந்த உலகம் மீட்படைய வேண்டுமென்றால், இங்கு அன்பு தழைக்க வேண்டுமென்றால், மனிதன் சுயநலம் களைந்து, முற்சாற்பு எண்ணங்கள் களைந்து எல்லோரும் சமத்துவத்திலும், சகோதரத்துவத்திலும், சேவை மனப்பான்மையிலும் வளர வேண்டுமென்றால் இங்கு கிறிஸ்து பிறக்க வேண்டும்.  

இந்த இறைத்திட்டத்தில் நான் மரியாளின் பங்காளி. பாதுகாவலர். அதற்கெதிராக யார் வந்தாலும், ஏரோது என்னும் அரசனே வந்தாலும், எகிப்து நாட்டிற்கே தப்பியோட வேண்டியிருந்தாலும், மரியாள் என் மனைவி. இயேசு என் மகன். இருவரையும் நான் பாதுகாப்பேன்.  

பணி சிறப்பானதுதான். ஆனால் அதற்காக எந்த 'சிறப்புரிமையும்' கோரமுடியாது. அந்தப் பணித்திட்டத்தின் முழுவரைவு (Blueprint) எதுவும் தெரியாது. எல்லோரையும் போல கூலிக்கு அன்றாடம் உழைக்க வேண்டும். நோய் நொடி என்றால் கவனிக்க வேண்டும். அன்பு செய்ய வேண்டும். தன் பிள்ளை, தத்துப் பிள்ளை என்ற பேதம் ஏதுமின்றி தந்தை என்னும் நிலைக்கேற்ப முன்மாதிரியாக இருக்க வேண்டும். இவை அனைத்திலும் அசைக்க முடியாத அளவிற்கு ஸ்கோர் செய்தார் சூசையப்பர்.  

கலில் ஜிப்ரானின் புகழ்பெற்ற ஒரு கவிதை நினைவுக்கு வந்ததும் சாட் ஜிபிடி-யில்  தமிழ்பெயர்த்தேன்! 

உங்கள் பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் அல்ல!

அவர்கள் 'வாழ்க்கை' தன்னைத் தேடும்

ஏக்கத்தின் மகன்களும் மகள்களும்!

அவர்கள் உங்களால் வருகின்றனர்;

ஆனால் உங்களிடமிருந்து அல்ல!

அவர்கள் உங்களுடன் இருந்தாலும்,

அவர்கள் உங்களுக்குச் சொந்தமானவர்கள் அல்ல!

நீங்கள் அவர்களுக்கு உங்கள் அன்பை அளிக்கலாம்;

ஆனால் உங்கள் எண்ணங்களை அல்ல!

ஏனெனில் அவர்களுக்கு அவர்களுடைய

சொந்த எண்ணங்கள் உள்ளன.

நீங்கள் அவர்களின் உடல்களுக்கு வீடு கொடுக்கலாம்;  

ஆனால் அவர்களின் ஆன்மாவிற்கு அல்ல!
அவர்களின் ஆன்மா நாளைய வீட்டில் வாழ்கிறது

உங்கள் கனவுகளிலும் கூட செல்ல முடியாத இடத்தில்!

ஆம். இயேசுவை ஏற்றுக்கொள்ளச் சொன்னக் கடவுள், இயேசுவின் பணிவாழ்வைக் குறித்தோ, சிலுவைச் சாவைக் குறித்தோ கனவிலும் சொல்லவில்லை. சூசையும் கேட்கவில்லை. அவர் பேசிய எந்தந் சொல்லும் விவிலியத்தில் இடம்பெறவில்லை. 'மனிதர்கள் பேசுவதே வீணானது. இதில் வீண்பேச்சு வேறு' என்று ஜெயகாந்தன் ஒரு புத்தகத்தில் சொல்கிறார். சூசை ஒரு செயல் முனிவர். கர்ம யோகி.

இயேசு கடவுளை 'அப்பா! தந்தாய்!' என அழைக்கக் கற்றுத்தந்ததிலிருந்தே சூசையப்பரின் சிறப்பினை நாம் உணர்ந்துகொள்ள முடியும்.  

மனைவி குழந்தை பெறும்போதே தாயாகி விடுகிறார். ஆனால் அவரது கணவர் அக்குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் மட்டும் தான் தந்தையாகிறார். 

அக்குழந்தையை தன் கரங்களில் ஏந்தி, பெயரிட்டு, தான் இன்னாரின் மகன் அல்லது மகள் என்று சொல்லிக்கொள்வதில் பெருமை கொள்ளும் படியான செயல்களைச் செய்து, வளர்த்து ஆளாக்கும் போதுதான் உண்மையில் தந்தை பிறக்கிறார். பெற்றெடுத்தல் இயல்பானது. தத்தெடுத்தல் மிகவும் புனிதமானது. இங்கு விரும்புதல், முடிவு செய்தல், பொறுப்பெடுத்தல் என்று நிறைய கடமைகள் இருக்கின்றன. பெற்றும் ஒருவர் தந்தை ஆகாமல் போகலாம். பெறாமலே ஒருவர் தந்தையாகலாம் சூசையப்பரைப் போல!!


1 கருத்து:

  1. மிகவும் ஊக்கமளிக்கும் சிந்தனைகள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு