ஞாயிறு, 21 டிசம்பர், 2014

அன்பற்ற அன்பு மொழிகள் (Loving Words without Love??)

அன்பற்ற அன்பு மொழிகள்

'உங்கள் வார்த்தைகளைக் கொண்டே நீங்கள் குற்றமற்றவர்களாகக் கருதப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளைக் கொண்டே குற்றவாளிகளாகவும் கருதப்படுவீர்கள்' மத்தேயு 12;:37

'வார்த்தை' என்ற வார்த்தையைப் பற்றி வார்த்தையின் இறைவன் ஓர் அற்புதமானக் கருத்தைதத் தம் சீடர்களுக்கு முன்வைக்கிறார். வெல்லப்பட்ட நாட்டிற்கு  வென்றவன் பொறுப்பு. சொல்லப்பட்ட வார்த்தைக்கு சொன்னவன் பொறுப்பு. நமது சொற்களை நாம் அறிந்து, ஆராய்ந்து பயன்படுத்த வேண்டும் என்பது நமது நலமான வாழ்வுக்கு எவ்வளவு அவசியம் என்பதைச் சற்று சிந்திப்போமா?

தவறான அல்லது தேவையற்ற வார்த்தைப் பிரயோகம் என்பதை இரு சூழ்நி;லைகளில் நாம் பயன்படுத்தக் கூடும். முதலாவது ஒரு செல்லலைச் சொல்லிவிட்டு அய்யோ இக்கடுஞ்சொல்லை சொல்லிவிட்டேனே என்று வருந்தியிருப்போம். இரண்டாவது உண்மையான அன்பும், அக்கறையுமில்லாமல் இன்னொரு நபரின் பணத்தின் பொருட்டோ, அதிகாரத்தின் பொருட்டோ அல்லது வேறு ஏதேனும் ஆதாயம் கருதியோ அவர்களுக்குப் பிரியமான வார்த்தைகளைப் பேசி பின்னர் அதற்கும் வருந்தியிருக்கலாம்.

முந்தையக் காலங்களில் அதிகம் உணர்ச்சிவசப்படும் மனிதர்களை நம் தெருக்களில் பாரக்க முடியும். இன்றைய நமது தெருக்களில் நிலவும் ஒருவித அமைதியைப் பார்க்கும் போது மனிதர்கள் எதற்கும் உணர்ச்சிவயப்படுவதில்லை என்று முடிவவெடுத்து விட்டார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. சண்டைகள் இல்லை. சச்சரவுகள் இல்லை. ஆகவே இன்றைய காலத்தில் கடுஞ் சொல் சொல்லி பின்னர் வருத்தப்படுவோர் குறைவுதான். இப்படடிப்பட்ட வருத்தம் கூட ஒரு கட்டத்தில் சம்பந்தப்பட்ட நபரிடம் 'நண்பா அவசரப்பட்டு இப்படி பேசிவிட்டேன். மனதில் வைத்துக் கொள்ளாதே. இனி இப்படி நிச்சயம் பேசமாட்டேன்' என்று சொல்லிவிட்டால் மீண்டும் பழைய உறவு மலர வாய்ப்பிருக்கிறது.

ஆனால் இரண்டாவதாகச் சுட்டிக் காட்டப்பட்டச் சூழ்நிலையே இன்னும் ஆபத்தானது. உண்மையற்ற பிரிய மொழிகள். உள்ளத்தில் உண்மையல்ல என்று நன்றாகத் தெரிந்தும் சில 'பெரிய' மனிதர்கள்  செய்யும் தவறான செயல்களுக்கும் தப்புத் தாளம் போடுவது மிகவும் ஆபத்தானது. 'உங்களை விட்டால் வேறு யாரு உண்டு! நீங்க செய்தால் சரியாகத்தான் இருக்கும்' என்று போலி மொழிகளை உதிர்த்து விட்டு பின்பு ஒரு நாள் நீங்கள் வருத்தப்படக் கூடும். தொடரும் அவரது அனைத்து அட்டூழியங்களுக்கும் உங்களது அன்பு மொழியை அல்லது ஒரு செயற்கைச் சிரிப்பாலான அனுமதியையேனும் அவர் உங்களிடமிருந்து எதிர்பார்க்கக் கூடும். அப்போது முதல் சூழ்நிலையில் சொன்னது போல 'ஐயா! அன்று தெரியாமல் உங்கள் செயலைப் பாராட்டிவிட்டேன். இனிமேல் இப்படி ஒரு போதும் நான் செய்யப் பொவதில்லை? என்று அவ்வளவு எளிதாக நம்மால் சொல்ல முடியாமல் போய்விடும்.
'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்' என்பது போல அந்த 'பெரிய மனிதரும் ஒருநாள் அழிவைச் சந்திப்பார். துதிபாடி, துதிபாடி அடிமையாய் கழிந்த உங்கள் ஆன்மா அப்போது எந்த ஆதாயமுமின்றி துதிபாட பழகியிருக்கும்

இதற்கு ஒப்பான இன்னொரு எடுத்துக்காட்டைக் கூற வேண்டுமென்றால், தகவல் தொடர்பு யுகத்தில் வாழும் யுவன்களும், யுவதிகளும்; பயன்படுத்தும் அன்பற்ற அன்பு மொழிகள், கனிவற்ற கனிவு மொழிகள், அக்கறையற்ற அக்கறை மொழிகள். அன்பும், கனிவும், அக்கறையும் உண்மையாகவே காட்டப்பட வேண்டிய சமுதாயத்தின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மனிதர்களிடடம் மனசாட்சியற்று காட்டப்படும் மவுன மொழிகள். இத்தனைக்குப் பின்னர் எளிதாக இனித்த வார்த்தைககள் சுமத்தும் பொறுப்புகளை ஏற்க இயலாது அழுத்தும் மனச் சுமைகள். உறவு முறிவுகளும், கசப்புகளும் எஞ்சியிருக்க அதை மறைக்க மீண்டும் முதலிலிருந்தே அன்பற்ற அன்பு மொழிகள் என்ற சுமையின் சுழற்சியில் வாழ்க்கையை வீணடிக்கும் கடவுளின் குழந்தைகள். வார்த்தையில் இருக்கிறது வாழ்வு என்பது புரிகிறதா? வாழ்வு தரும் வார்த்தைகளை மட்டுமே பேசுவதென இன்று முதல் முடிவெடுப்போமா?

வியாழன், 18 டிசம்பர், 2014

கடவுளும், காதலும் (God and Love)


கடவுளும், காதலும்

இரண்டாயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற மக்களின் இதய சிம்மாசனத்தில் அரியணை கொண்டு ஆ;ட்சி செய்யும் ஒப்பற்ற அன்புடைய நம் ஆண்டவர் இயேசுவின் பிறப்பு விழாவிற்காக தயார் செய்யும் காலம் தான் திருவருககை; காலம். சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையின் வேகத்தில் எங்கு செல்கிறோம் என்ற இலக்கும் மறந்து விடலாம். சரியான பாதையில் தான் செல்கிறோமா? என்பதையும் நாம் கவனியாமல் இருந்து விடலாம். சற்று நின்று, இளைப்பாரி, சரிபார்த்து மீண்டும் செல்வதுதானே சரியாக இருக்கும். அவ்வாறு நின்று, பார்த்து, சரிசெய்யும் காலம் தான் இந்த திருவருகைக் காலம்.
திருவருகைக் காலத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அது ஆண்டவருக்காக காத்திருத்தல் என்பதாகும்.

 காத்திருத்தல் என்பது ஓர் அனுபவம். காத்திருத்தலில் பல வகைகள் உண்டு. காதலியில் வருகையை எதிர்பார்த்து பேருந்து நிறுத்தத்தில்  காத்திருக்கும் காதலர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அன்றலரந்த மலர் போல பளிச்சென்றிருக்கும் முகம். பரபரக்கும் கண்கள். அத்துமீறி துடிக்கும் இதயம். எப்போது நிகழும் அந்த ஒளி பொருந்தியவளின் வருகை. பார்த்தால் மட்டும் போதும். இந்த நாள் இனிய நாளாகும் என்ற ஏக்கத்தோடு காத்திருப்பவர்களிடம் கேட்டுப் பாருங்கள். காத்திருத்தல் என்பது அயற்சியான ஒன்றல்ல. அது பரவசமான பொழுது. அது கவலைக்கும், கண்ணீருக்குமான பொழுது அல்ல. மாறாக நம்பிக்கையின் பொழுது. ஒரு வேளை யாரைப் பார்த்து விட்டு இந்த நாளைத் தொடங்கலாம் என்று காத்திருக்கிறோமோ, அந்த நபர், அந்த அன்பான நபர், ஒளி பொருந்திய அந்த நபர் மாலை வரையிலும் தமது தரிசனத்தைத் தரவில்லையென்றால் என்ன நிகழும், அந்த நபர் மீது எரிச்சல் வரும் என்று நினைக்கிறீர்களா? இனியும் அந்த நபருக்காகக் காத்திருத்தல் வீணானது என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் நீங்கள் இன்னும் காதல் வயப்படவில்லை என்று அர்த்தம். ஒன்று செய்யுங்கள். உங்கள் இதயத்தின் நான்கு அறைகளிலும் பட்டாம் பூச்சியைப் பறக்கவிடும் எளிய ஒருவரை நிச்சயம் கடவுள் படைத்து அனுப்பியிருக்கிறார். தேடுங்கள் கண்டடைவீர்கள்.

சொல்ல வந்தகை விட்டுவிட்டு வேறு எதையே பேசுவது போலிருக்கிறதா? இத்தகைய காதல் அனுபவத்தை கடவுளுக்காகக் காத்திருக்கும் அனுபவத்தோடு ஒப்பிட விரும்புகிறேன். இது என்னுடைய விநோதமானக் கண்டுபிடிப்பு அல்ல. உலகின் மூத்த கலாச்சாரங்கள் அனைத்திலுமே கடவுளுக்கும், காதலுக்கும் முடிச்சு போடும் காரியங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர் கொடி சுடர்கொடியினால் திருமாலவனின் திருமுகம் மலர்ந்த அற்புதமான ஒப்புமையெல்லாம் நம் தமிழ் இலக்கியத்தில் உண்டு. 

ஒளிபொருந்திய இறைவனை முகமுகமாய் தரிசிக்கும் ஏக்கம் என்பது ஒவ்வொரு இதயத்திற்கும் உண்டு. தாயைக் காணாது தவிக்கும் பச்சிளம் குழந்தையின் ஏக்கத்தைப் போன்றது அது. அனைத்து மாயைகளையும் களைந்து அவரது பிரசன்னத்தில் கரைந்து போகும் ஏக்கம் எல்லோருக்கும் உண்டு. இந்தத் தேடல் என்பது ஒரு பாராமுகம் காட்டும் கடவுளுக்கானத் தேடல் அல்ல. காணாமல் போனவர் கடவுள் அல்ல. நாம் தாம் காணாமல் போய்விட்டோம். நாமே ஏற்படுத்திக் கொண்ட தேவைகளில் நம்மையே நாம் தொலைத்து விட்டோம். நம்மைக் கண்டடையும் தருணத்தில் கடவுளையும் நாம் கண்டடைவோம். ஏனென்றால் மனுவுறுவானக் கடவுளின் பெயர் 'இம்மானுவேல்'. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்மோடு' என்று விவிலியம் சொல்கிறது.

சனி, 1 நவம்பர், 2014

ஞானம்! (Wisdom)

ஒவ்வொரு மொளனங்களும்
ஏதோவொன்றை பேசிக்கொண்டுதானிருக்கின்றன

ஒவ்வொரு கலகங்களும்
அமைதியையே முன்னிறுத்துகின்றன

ஆலய மணிகளுக்குப் பின்னும்
பாவங்கள் ஓலமிடுகின்றன

அறியாமை என்று விரல் நீட்டும் போது
அது நம்மையே குறிக்கலாம்

பன்மையைக் கற்றுக் கொள்வதே
ஞானம்!

செவ்வாய், 22 ஏப்ரல், 2014

குட்டித் தம்பியும், புது நன்மையும் (First Holy Communion And My Cute Brother)

வீடே கலகலப்பாயிருந்தது. அத்தை, மாமா, பெரியப்பா வீட்டு அண்ணன், சித்தி, பாப்பா என்று யாவரும் வந்து அமர்க்களப்படுத்தியிருந்தார்கள். எனது புதுநன்மை விழாவிற்குத்தான் இத்தனை தடபுடல் ஏற்பாடுகள். இந்தமுறை நானும் எனது செல்ல தம்பியும் சேர்ந்தே புதுநன்மை பெற இருக்கிறோம் என்ற நினைவே எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இத்தோடு பதினேழு முறை இயேசு படத்திற்கு முன் ஓடிச் சென்று மூச்சிறைக்க 'நன்றி இயேசப்பா' என்று சொல்லிவிட்டேன். இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய பத்தாம் திருவிழாவிற்கே எனக்கு புதுநன்னை வழங்க அனைத்து ஏற்பாடுகளும் ஆகியிருந்தது. அப்பொழுதுதான் யாருமே எதிர்பாராத அந்த நிகழ்வு நடந்தது. என்னால் புதுநன்மை பெற முடியவில்லை. மருத்துவ மனைக்கு வந்தா யாரும் புதுநன்மை தருவார்கள்?

அப்பொழுது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். தம்பி மூன்றாம் வகுப்பு. அவனுக்கு என் மேல் ரொம்ப பாசம். எப்போதும் அக்கா! அக்கா! என்று என் பின்னாலேயே ஓடி வருவான். நான், அபி, சுஜி, குமாரி என்று என் வகுப்பு பிள்ளைகளுடன் விளையாடினாலும் அவன் என் கூடவே வருவான். நான் தான் திட்டுவேன். 'டேய் போடா! உன் வகுப்ப பசங்க கூட வெளையாட வேண்டியதுதானே!' என்று பல முறை அவனை விரட்டுவேன். ஆனாலும் அவனுக்கு அக்காதான் உலகம். நான் அம்மா மடியில் படுத்துக்கிடப்பேன். அவன் என் கால்களில் தலை வைத்துக்கொள்வான். அம்மா எனக்கு தலை வாரிக்கொண்டிருப்பாள். அவன் என் முகத்தையே ஒரு குழந்தையைப் போலப் பார்த்துக்கொண்டிருப்பான். இப்படி ஒரு பாசமானத் தம்பி யாருக்குமே கிடைத்திருக்காது என்றுதான் நினைக்கிறேன். இப்போது அவனோடு சேர்ந்து இந்தத் திருவிழாவில் புதுநன்மை வாங்குவதற்காகத்தான் அந்த விபத்து நடந்திருக்கும் என்று நினைக்கிறேன். அந்த வகையில் அந்த விபத்தும் நன்மைக்கே!

ஐந்தாம் வகுப்பு பிள்ளைகள் என்னோடு சேர்த்து பதிநான்கு பேருக்கு புதுநன்னை வழங்க பத்தாம் திருவிழாவிற்கு ஆயர் வருகிறார் என்று ரோஸ்லின் சிஸ்டர் சொன்னது இப்போதும் காதில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. தான் ஆயரை ஒரு முறை பார்த்திருப்பதாகவும், அவர் குண்டாக, தலையில் ஒரு அழகான தொப்பியும், கையில் ஒரு கோலும் வைத்திருப்பார் என்றும் அபி என் காதில் கிசுகிசுத்தாள். மனம் முழுவதும் ஆயர், அவரது தொப்பி, செங்கோல், புதுநன்னை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது. தம்பியும் மிகவும் சந்தோசமாக இருந்தான். ஏழாம் திருநாளுக்கே மாமா எனக்கு வெள்ளை நிற கவுனும், தங்க நிறத்தில் ஒரு அழகான காலணியும் வாங்கி வந்தார்கள். மாமா வீட்டிலிருந்து எல்லாரும் வந்திருந்தார்கள். தாத்தா, பாட்டி, சித்தி,  என்று வீடே கலகலப்பாக இருந்தது. இன்றும் அப்படித்தான் இருக்கிறது. சித்திக்கு அப்போது கல்யாணமே ஆகியிருக்கவில்லை.

எல்லாரும் வந்து என் தலையில் சிலுவை போட்டும், கன்னத்தில் முத்தியும், நிறைய தின்பண்டங்கள் வாங்கி வந்தும் ஒரு குட்டி இளவரசியைப் பார்ப்பது போலவே என்னைப் பார்த்தார்கள். வீடு நிரம்ப விருந்தினர்கள் இருந்தாலும் தம்பி என் பின்னாலேயே வந்து கொண்டிருந்தான். அம்மா பிள்ளை, அப்பா பிள்ளை போல இவன் அக்கா பிள்ளை என்று அம்மா அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். ஒன்பதாம் திருவிழாவிற்கு கேரளாவிலிருந்;து மேளக்காரர்கள் வந்து தங்களது இசைக்கருவிகளை தட்டியும், ஊதியும் சரிபார்த்துக்கொண்டிருந்தது ஒலிப்பெருக்கியில் கேட்டது. தெரு முழுவதும் வண்ண விளக்குகள், மேள வாசிப்புகள் என்று இருந்தாலும் மனதில் நாளை காலை வருகை தரும் ஆயர், தொப்பி, செங்கோல், மற்றும் புதுநன்மை இவைகள் தான் நிரம்பியிருந்தன. அப்போதுதான் அது நடந்தது. தூரத்தில் பெரியப்பா கையில் ஏதே பெரிய பையுடன் வருவதைப் பார்த்ததும் நான் ஓடி சென்று தெருவில் இறங்கியதும், ஏதோ ஒன்று என்னை இடித்துத் தள்ளியதும் மட்டுமே இப்போது ஞாபகத்தில் வருகின்றது. அதன் பிறகு நான் மருத்துவமனையில் தான் கண் திறந்தேன்.

பின்னர் நடந்ததை அம்மா சொல்லிதான் தெரிந்து கொண்டேன். வேகமாக வந்த இருசக்கர  வாகனம் ஒன்று என்னை இடித்துத் தள்ளிவிட்டு நிற்காமலேயே சென்று விட்டது. என் தம்பிதான் வழக்கம் போல என் பின்னாலேயே ஓடி வந்திருக்கிறான். தலையில் அடிபட்டதால் நான் உடனே மயங்கி விழ அவன் தான் கத்தி கதறி எல்லாரிடமும் சொல்ல, திருவிழா இரைச்சலுக்கு மத்தியிலும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் எல்லோரும் உறைந்து விட்டார்கள். அந்த நேரம் பார்த்து அங்கு வந்த பங்குத்தந்தை அவரது காரிலேயே என்னை எடுத்து மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார். தலையில் அடி என்பதான் நிறைய இரத்தம் வெளியெறி கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிவிட்டது. உடனடியாக ஏபி நெகட்டிவ் இரத்தம் தேவைப்படுகிறது. மருத்துவர் அவசரப்படுத்தினாலும் அங்கு என் தம்பியைத் தவிர யாரிடமும் குறிப்பிட்ட அந்த இரத்த வகை இல்லை.

அம்மா பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததால், மாமா தான் என் தம்பியிடம் விசயத்;தை சொல்லியிருக்கிறார். என் தம்பி நிலைமை தெரிந்தும் உடனே இரத்தம் கொடுக்க மறுத்து அழத்தொடங்கிவிட்டான். எல்லாரும் எடுத்துச் சொல்லியும் தம்பி இரத்தம் தர ஒப்புக்கொள்ளவே முப்பது நிமிடங்கள் ஆகிவிட்டது. இரத்தம் செலுத்தப்பட்டதும் நான் ஓரளவுக்கு திடமாகி கண்களைத் திறந்து விட்டேன். தம்பிதான் அசதியில் தூங்கிவிட்டிருந்தான். எனக்கு அடி பலமாக இருந்தாலும் உள்காயமோ, முறிவுகளோ இல்லை என்றும் இரண்டு நாள்களில் வீட்டிற்கு சென்று விடலாம் என்றும் மருத்துவர் சொல்லிய பிறகுதான் எல்லாருக்கும் உயிர் வந்திருக்கிறது. அம்மா தம்பியை மடியில் கிடத்தி இரத்தம் கொடுத்த அவனது கைகளைத் தடவிக்கொடுத்துக் கொண்டிருந்தாள். சற்று நேரத்தில் அவன் கண்களைத் திறந்ததும் அவன் கேட்ட கேள்விதான் இந்தக் கதையையே உங்களிடம் சொல்ல வைத்தது. 'நான் இன்னும் சாகலையா?' ஒரு முறை இரண்டு முறையல்ல பல முறை வியப்போடு அவன் எல்லாரிடமும் கேட்ட கேள்வி இதுதான்: 'நான் இன்னும் சாகலையா?'. இரத்தம் கொடுத்தால் தான் இறந்து விடுவோம் என்றுதான் அவன் முதலில் மறுத்திருக்கிறான். பின்னர், தான் இறந்தர்லும் பரவாயில்லை தான் அதிகம் நேசிக்கும் அக்காவிற்காக, அதாவது எனக்காக, அவன் சாகவும் முடிவு செய்தே இரத்தம் கொடுத்திருக்கிறான்.

நற்கருணை என்பதன் உண்மையான அர்த்தத்தை எனக்கு கற்றுக்கொடுத்த என் செல்லத் தம்பிக்கும் எனக்கும் நாளை புதுநன்மை. நீங்களும் அவசியம் வாருங்கள். 

திங்கள், 24 மார்ச், 2014

மரி'யாள்
யாழ் கொண்டுதானே
இசை மீட்டுவர்!
என்ன ஆயிற்று கடவுளுக்கு?
மரி'யாள்' கொண்டு மீட்டுகிறார்
இயேசு என்னும் இசையை...

கைதேர்ந்த கலைஞன்
விரலுக்கு வீணை அடிமை
கடவுளுக்கு அன்னை மரியாள்!

உயிர் வளி ஊதி
விரல் செய்யும் வித்தையில்
நாத சுர ஜனனம்
கடவுளின் ஆவிக்கு
அஞ்சல்காரனோ கபிரியேல்!

மரிமலர் தரித்த கர்ப்பத்தில்
பனிமலர் பிறந்த அதிசயம்
பாலன் இயேசு!

கனி ஒன்றைத் தாங்கி
கனிவோடு சென்றதோ
பூமரம்!
பகலவனைச் சுமந்து
பணிசெய்யச் சென்றதோ
பனித்துளி!
அன்னை மரியாள்
எலிசபெத்தை சந்திக்கிறார்
ஆண்டவரின் அலைவீச்சில்
சிணுங்கும் அலைபேசியாய்
எலிசபெத் வயிற்றில் யோவான்

பழுத்த இலை
பச்சை இலையை வாழ்த்த
பாடுகிறது பச்சை இலை
படைத்தவனைப் புகழ்ந்து!

இறைவா நீர் போற்றி!
இரவு நேர தடாகம் நான்
நிலவு உம் ஒளி தாங்கி நிற்கிறேன்
இனிவரும் கவிஞரெல்லாம்
இந்தக் குளத்திற்குமன்றோ
பா பாடுவர்

தரைநோக்கும் மொட்டுக்கள்
உம் ஒளிபட்டு மலராகி மகிழ
செருக்கோடு வான் நோக்கும் புற்கள்
உம் வெப்பத்தால் பதராகி போனதுவே!
வாக்கு மாறாத தந்தையே

நீர் வாழிய! வாழியவே!