ஞாயிறு, 20 மார்ச், 2016

உள்ளத்தனைய...

முற்சார்பு எண்ணங்கள் நம் சிறகுகளில் சுற்றியிருக்கும் சிலந்தி வலையைப் போன்றவை. அவை நம்மை குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடக்கிவிடும். நம் நாட்டில் வயல்களை விட வரப்புகளே அதிகம் என்று எங்கோ கேட்ட ஞாபகம். ஆம்! இந்தியா பல வண்ணங்களைக் கொண்ட வானவில் நாடு என்று நாம் வானளாவ புகழும் அதே நேரத்திலே, ஒவ்வொரு வேறுபாடுகளும் நம்மை அழகு படுத்துவதற்குப் பதிலாக, சில வேளைகளில் பிளவுபடுத்துவதையும் நாம் மறுக்க முடியாது. 

எல்லோரும் ஓர் இனம். எல்லோரும் நம் சகோதரர்கள் என்பதெல்லாம் வெறும் ஏட்டளவிலேயே நின்றுவிடுகின்றன. சில ஏடுகளில் கூட இந்த இணக்கங்கள் இருப்பதில்லை என்பது அனைத்திலும் வெட்கக் கேடு. பிற மாநிலத்தவர்களுக்கு எதிராக, பிற மதத்தவர்களுக்கு எதிராக, குறிப்பாக சாதி, மத, மாநில சிறுபான்மைக் குழுக்களுக்கு  எதிராக மிகவும் சாதாரணமாக இங்கு வெறுப்புக் கருத்துக்களைப் பரப்புவதில் நம் தலைவர்களில் சிலர் கை தேர்ந்தவர்களாக இருக்கின்றனர். 

இதில் வேடிக்கை என்னவென்றால் நம்மவர்கள் வேறு இடங்களில் இரண்டாம் தரமாக நடத்தப்படுவதை வன்மையாகக் கண்டித்து, அத்தகைய மனநிலைக்கு எதிராகப் போராடும் அதே நேரத்தில் நம்மிடையே வாழும் பிறரை நாம் அவ்வாறே நடத்துவதில் இருக்கும் முரண்தான் நம்மை நகைக்க வைக்கிறது. எடுத்துக்காட்டாக மஹாராஷ்டிராவில் சிவசேனாவின் சாம்நா பத்திரிக்கையில் தென்னிந்தியர்களை திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பதிவிற்குப் பதிலடியாக தமிழகத்தில் பால்தாக்ரேயின் உருவப்பொம்மைகளை எரிக்க அறிந்து வைத்திருக்கிறோம். ஆனால் சேலத்தில் செண்டை மேளம் அடிக்க வந்த கேரளக் கலைஞர்களை வாய்க்கு வந்தபடி திட்டி, நிராயுதபாணிகளாக இருந்த அந்த மிகமிகச் சிறு குழுவினரைக் காட்டுமிராண்டித் தனமாகத் திட்டி திருப்பி அனுப்பவும் நாம் தயங்குவதில்லை. அத்தகைய அத்துமீறல் நம் அரசியல் சாசனத்தின் அடிப்படையையே அப்பட்டமாக மீறியச் செயல் என்று எத்த பத்திரிக்கையும் இங்கு செய்தி வெளியிடவில்லை. சிவசேனாவின் பால்தாக்கரேக்கும், நாம் தமிழர் சீமானுக்கும். எச்சி ராசவுக்கும் இன-மத வெறியைப் பரப்புவதில் எந்த வேறுபாடும் தெரியவில்லை. அது தவறு என்றால் இதுவும் தவறுதானே?

மலையாளிகள் என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருக்கிறது சிலரது மலர்ந்த முகத்தை நொடியில் சுருக்கிவிட. ஐந்து பேர் கூடும் இடத்தில் ஏதோ காரணத்தில் மலையாளிகளின் பேச்சு வந்து விட்டால் கொட்டும் வெறுப்பில் நமக்கு வியர்த்துக் கொட்டிவிடுகிறது. ஒவ்வொருவருக்கும் தாங்கள் கேள்விபட்ட, அல்லது தாங்கள் பார்த்த, அல்லது தங்களுக்கு நேர்ந்த ஏதாவது ஒரு நிகழ்வு நிச்சயமாக இருக்கிறது. அல்லது இந்த மாதிரி முக்கியமான விவாதத்தில் தேவைப்படுமே என்று சில நிகழ்வுகளைத் மெனக்கெட்டுத் தெரிந்து மறக்காமல் வைத்துக் கொள்கிறார்கள். 

உலகில் எங்கு சென்றாலும் மலையாளிகளாக இருக்கிறார்களாம். நிலவில் ஆம்ஸ்ட்ராம் கால் வைத்த போது அங்கு ஏற்கனவே ஒரு நாயர் சாயா கடை வைத்திருந்ததாக சில கதைகள் வேறு இருக்கின்றன. ஒரு மலையாளி ஒரு புதிய இடத்தில் குடியேறினால், சில ஆண்டுகளிலேயே அந்த ஊரில் பாதி பேர் மலையாளிகளாகி விடுகின்றனராம். குறிப்பிட்ட ஒரு இடத்தில் ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையைச் சேர்ந்த மலையாளிகள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருப்பார்களேயானால் உடனே அவர்கள் தங்களுக்கென்று ஒரு தனி மறைமாவட்டத்தை உருவாக்கிக் கொள்கிறார்களாம். மலையாளிகள் நிறைய 'டாமினேட்' (அதிகாரம் செலுத்துதல்) செய்கிறார்களாம். மலையாளிகள் இருக்கும் இடத்திலே குழப்பம் தான் மிஞ்சுமாம். மலையாளிகள் தங்களை இந்தியர்கள் என்று சொல்வதில்லையாம். அவர்கள் தங்களை மலையாளிகள் என்றே சொல்கின்றனராம். மலையாளிகள் சாப்பிடுகின்றனராம். மலையாளிகள் உறங்குகின்றனராம். முடியலப்பா! இதில் எது, எதன் அடிப்படையில் தவறு என்று நான் சில இடங்களில் கேட்டுப் பார்த்தேன். அடிபடாதக் குறைதான். அதுமட்டுமல்ல என்னையும் ஒரு மலையாளிதான் என்று குற்றம் சாட்டிவிட்டனர். நாம் பார்க்காத குழப்பமா? நாம் பார்க்காத அதிகார வெறியா? நாம் பார்க்காத இனப்பாசமா? ஏன் இந்த பாசாங்கு போலிப் பரப்புரைகள்? 

உண்மையாகச் சொல்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் போதே ஒரு நண்பர் அலைப்பேசியில் அழைத்தார். இன்று உரோமையில் மலையாளிகள் நடத்திய சிலுவைப்பாதையில் கலந்து கொண்டேன். மிக அருமையாக இருந்தது என்றேன். உடனே அவர் பதற்றம் அடைந்ததை உணர முடிந்தது. அவனுவ கள்ளப் பயலுவ. 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு இப்படி ஏதாவது பண்ணுவதாகச் சொன்னார். எதை 'ஆர்கனைஸ்' பண்ணுவதற்கு என்று கேட்கலாமா என்று நினைத்தேன். நானும் 'கள்ளப்பய' என்று பெயரெடுக்க விரும்பவில்லை என்பதால் கேட்மலே விட்டுவிட்டேன்.

எனக்கு ஒருவரைத் தெரியும். அவரிடம் ஒரு புரிந்து கொள்ளமுடியாத வரம் இருந்தது. அவர் சாலையில் செல்லும் போது எதிரே யார் வந்தாலும் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று சொல்லிவிடுவார். இதோ வருகிறாரே இவர் பிரேசில் காரர் தான் என்று சொல்லிவிட்டு நம் முகத்தைப் பார்ப்பார். நாம் அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் என்று தெரியாமல் முழித்தால், இவர் பிரேசில் காரர் தான் என்று மீண்டும் சொல்வார். அவருக்குத் திருப்தி ஏற்படும் வரை சொல்வார். எல்லா நாட்டினரையும், எல்லா மொழியினரையும் பார்த்த மாத்திரத்திலேயே இனம் பிரித்துச் சொல்லும் திறமை என்றால் சும்மாவா? இதில் மனிதர்கள் மட்டுமல்ல. எல்லாமும் அடங்கும். சன்னலுக்கு வெளியே தூரத்தில் செல்லும் விமானம் எந்த நிறுவனத்தினுடையது என்பதையும், அது எங்கிருந்து எங்கு செல்கிறது என்பதையும் அத்தனை உறுதியாகச் சொல்வார். என்னைப் பொறுத்தமட்டில் அது ஒரு விமானம் என்பது மட்டும் தான் ஓரளவு உண்மை. மனிதர்கள் விஷயத்திலும் அவர்கள் மனிதர்கள் என்பது மட்டும் தான் "ஓரளவு" உண்மை என்று நம்புகிறேன்.

சொல்ல மறந்து விட்டேன். இன்று உரோமையில் 'போக்கா தெல்லா வெரித்தா' என்னும் இடத்தில் தொடங்கி, வெனிஸ் சதுக்கத்தின் வழியாக கொலோசேயம் வரையிலும் ஒரு சிலுவைப்பாதை நிகழ்ச்சியை மலையாளிகள் ஏற்பாடு செய்திருந்தனர். ஒரு நானூறு பேருக்கு குறையாமல் கலந்து கொண்டனர். நமது ஊரில் செய்வது போன்றே தென்னங்குறுத்து ஓலையைக் கையிலே ஏந்தி மிகுந்த பக்தியோடு அவர்கள் அந்த வழிபாட்டினைச் செய்த விதம் உண்மையிலேயே மலைக்கச் செய்துவிட்டது. உரோமையின் மையத்தில் அத்தனை சுற்றுலாப் பயணிகள், வாகனங்கள், இரைச்சல்களுக்கு மத்தியிலும், அருமையான ஒலிபெருக்கி வசதியோடு, அற்புதமான குரலில் பக்திப் பாடல்கள் ஒலிக்க, மக்களின் ஒழுங்கானப் பங்கேற்போடு அசத்தி விட்டார்கள்.

 சீசர் போன்ற உரோமைப் பேரரசர்கள் தங்கள் கோட்டைக் கொத்தளங்களோடு ஆட்சி செய்த இடத்தில், பண்டைய கட்டிடங்களின் இடிபாடுகளை இருபுறமும் கொண்டு, கொலோசேயம் நோக்கிச் செல்லும் ஃபோரி இம்பரியாலி என்னும் சாலையில், 'தாவீதின் மகனுக்கு ஓசான்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி நிரம்பப் பெற்றவரே... இஸ்ராயேலின் பேரரசே! உன்னதங்களிலே ஓசான்னா' என்ற பாடல்களோடு, சிலுவையைத் தூக்கிக் கொண்டு இயேசு போன்று வேடமணிந்த ஒருவர் முன்செல்ல, அவரை நாம் பின்செல்ல, அந்த நிமிடங்கள் தந்த உணர்வுக்கு இணையேதும் இல்லை.

எத்தனை ஆயிரம் பேர் இந்நிகழ்வினை வியப்போடு பார்த்தனர்! புகைப்படங்கள் எடுத்தனர். சிலுவைப் பாதை சிந்தனைகள் வாசிக்கும் போது அத்தனை பேரும் சாலை என்றும் பாராமல், எல்லோரும் பார்க்கிறார்களே என்றும் பாராமல், முழுந்தாளிட்டு செபித்த விதம் நிச்சயமாக சிலரது நம்பிக்கையையாவது பாதித்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஒரு இடத்தில் பதின் பருவ பிள்ளைகள் கலகலப்பாய் பேசிக்கொண்டிருந்தனர். சிந்தனைகள் வாசிக்கப்பட்ட போதும் அவர்கள் அவ்வாறே சத்தமிட்டுக் கொண்டிருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அவர்களாகவே பேசுவதை நிறுத்திக் கொண்டனர். யாராலும் இதனைக் கவனியாது செல்ல முடியவில்லை என்பதே இதன் மிகப் பெரிய வெற்றி. இறுதியில் ஒரு இத்தாலிய அருட்பணியாளர் இந்நிகழ்வினைப் பாராட்டிப் பேசும் போதும் இக்கருத்தையே கூறினார். உரோமையில் 'இந்தியர்கள்' இயேசுவுக்கு சான்று பகர்ந்த நிகழ்வு என்று திரும்பத் திரும்பக் கூறினார். நானும் அப்படித்தான் உணர்ந்தேன். 

4 கருத்துகள்:

  1. "This article informed us to change the difference of opinion among the people and to create the united thoughts in the mind of every individuals to develop the society." - Extremely Good article

    பதிலளிநீக்கு
  2. "This article informed us to change the difference of opinion among the people and to create the united thoughts in the mind of every individuals to develop the society." - Extremely Good article

    பதிலளிநீக்கு
  3. There is no word to express my feedback. It is really applicable to all the people around the world especially for the people who are appreciating divisions. Let all the dividers read this wonderful article!

    பதிலளிநீக்கு
  4. There is no word to express my feedback. It is really applicable to all the people around the world especially for the people who are appreciating divisions. Let all the dividers read this wonderful article!

    பதிலளிநீக்கு