திங்கள், 24 செப்டம்பர், 2018

வெளியே ஒலிக்கட்டும் மனதின் குரல்: 3 (Let's speak out)

அன்னையும், பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறார் ஓளவையார். தாய், தந்தைக்கு மரியாதை தருவதில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் நாம் நன்கு அறிவோம். அது போலவே பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை கல்வியிலும், ஒழுக்கத்திலும் வளர்ப்பதற்கு செய்கின்ற தியாகங்களுக்கும் எந்த எல்லையும் இல்லை. சொல்லப்போனால் நம் பெற்றோர்கள் தங்களுக்கென்று வாழ்வதே இல்லை. 

எல்லாம் பிள்ளைகளுக்காகவே என்று உழைக்கும் பெற்றோர்கள் தெரிந்தோ தெரியாமலோ நிறைய எதிர்பார்ப்புகளையும் சேர்த்தே வளர்க்கிறார்கள். தங்களது பிள்ளைகள் எதிர்காலத்தில் கலெக்டர் ஆக வேண்டும்! பெரிய அதிகாரி ஆக வேண்டும் என்று எல்லாப் பெற்றோருக்குமே சில கனவுகள் இருக்கின்றன. பிள்ளைகள் நல்ல நிலைக்கு வரவேண்டும் என்று விரும்புவதும், வாழ்த்துவதும் சரிதான். ஆனால் உன்னை வளர்க்க நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தாரைவார்த்தோம். நீ நாங்கள் விரும்பியபடிதான் உன் வாழ்க்கையை அமைக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது என்பது பிள்ளைகளின் தனித்தன்மைகளை முற்றிலும் அழித்துவிடுகிறது. 

தங்கள் வாழ்வில் எட்ட முடியாதக் கனவுகளை தங்கள் பிள்ளைகள் மேல் சுமத்தி அவர்களைப் பந்தயக்குதிரைகளாக ஓடவிடுவது மிகவும் தவறானது. பிள்ளைகள் என்ன படிக்க வேண்டும், என்ன துறையில் வேலை செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி எந்த வீட்டில் திருமணம் செய்யவேண்டும் என்பது வரை முழுக்க முழுக்க பெற்றோர்களே முடிவு செய்கிறார்கள் அல்லது தங்கள் முடிவுகளை பிள்ளைகளே எடுக்கும் படி மூளைச்சலவை செய்கிறார்கள். ஒருகட்டத்தில் பிள்ளைகள் தங்கள் வாழ்வில் அடைய விரும்பிய இலக்கிலிருந்து முற்றிலும் வேறான ஒரு இடத்தில் நின்றுகொண்டு வாழ்வின் பார்வையாளர்களாக இருந்துகொண்டிருக்கிறார்கள். தங்கள் பிள்ளைகளுக்காவது தாங்கள் விரும்பியபடி நல்லதொரு வாழ்க்கையை அமைத்துக்கொடுக்க தியாகம் செய்யத் தயாராகிவிடுகிறார்கள். இந்தத் தியாகச்சுழற்சியினால் தான் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகள்  பட்டியலில் இந்தியா 133-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. மொத்தம் 156 நாடுகள் பங்கேற்ற இந்த ஐ.நா.வின் ஆய்வில் நம் நட்பு நாடான பாகிஸ்தான் 75 ஆவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.  

ஒன்றும் வேண்டாம்! நீங்கள் தினசரி நாளிதழ் படிக்கும் பழக்கம் உடையவர் என்றாலே நம் நாட்டில் நடக்கும் விநோதங்களுக்கும், முரண்களுக்கும் தலையைப் பிய்த்துக்கொண்டு ஓடிவிடுவிடலாமா என்று நினைப்பீர்கள். வேறு சாதியில் திருமணம் முடித்துவிட்டார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்றப் பிள்ளைகளையே கொல்லும் நிகழ்வுகள் வெறும் விதிவிலக்குகள் தான் என்று சொல்ல முடியாதபடி தினசரி செய்திகளாகிவிட்டன. தர்மபுரி இளவரசன்-திவ்யா, உடுமலைப்பேட்டை சங்கர்-கவுசல்யா என்ற துயரப்பட்டியலின் கண்ணீர் காயும் முன்னே சமீபத்தில் தெலுங்கானாவின் பிரனாய் நாயக்-அமிர்தவர்சினி என்ற இளம் தம்பதியினரும் சேர்ந்திருக்கின்றனர். இந்தியாவில் ஆவணக்கொலைகள் என்று தேடினால் வரும் முடிவுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. கல்வியறிவில் முன்னணியில் உள்ள கேரளா, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் ஆணவக்கொலைகள் அரங்கேறுகின்றன. ஆண்டிற்கு 500க்கும் அதிகமானக் கொலைக் குற்றங்கள் பதிவுசெய்யப்படுகின்றன. வெளியுலகிற்கு தற்கொலைகளாக, விபத்துக்களாக, சந்தேக மரணங்களாக பதிவானக் குற்றங்கள் எத்தனையோ! 

இந்தியாவின் மனசாட்சியை நடுரோட்டில் சிந்தப்படும் இரத்தங்கள் உலுக்கவில்லையா? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் திருமண உரிமையில் தலையிடுவதும், சொந்த சாதியில் திருமணம் செய்ய வற்புறுத்துவதும் சிந்தப்படும் சூடான இளம் இரத்தத்தைக் கண்டும் காணாமல் செல்வதைப் போன்றதுதானே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக