வெள்ளி, 31 ஜூலை, 2020

இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம்- Part 1

எத்தனை மனிதர்களை வாழ்வில் சந்திக்கின்றோம். அருட்பணியாளர் வாழ்வு தந்த அருங்கொடைகளுள் முதன்மையானதாக இதைத்தான் கருதுகின்றேன். தினசரி இரண்டு, மூன்று நபராவது தங்கள் தனிப்பட்ட வாழ்வின் பலத்தை, பலவீனத்தை, மகிழ்ச்சியை, துக்கத்தை நம்பிக்கையோடு பகிர்ந்துகொள்கிறார்கள். தங்கள் தியாகத்தால், தானத்தால், தன்னம்பிக்கையால், வலிகளையும் புன்னகையுடன் எதிர்கொள்வதால் நம்மைச் சுற்றிலும் நிறைய மாமனிதர்கள் மிகவும் சாதாரணமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பதே ஆச்சர்யமாயிருக்கிறது. 

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு நண்பன் சவுதி அரேபியாவிலிருந்து என்னை நலம் விசாரித்தான். ஒரே ஊர். பள்ளியில் ஒன்றாகப் படித்தோம். ஒரு கட்டத்தில் வெளியூரில் விடுதியில் சேர்த்து படித்தான். ஆண்டிற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறைதான் விடுமுறைக்கு வருவான். ஒவ்வொரு விடுமுறையிலும் முற்றிலும் மாறிய ஒரு ஆளுமையாக அவன் மாறி வருவதைக் கவனித்திருக்கிறேன். உடல் வளர்ச்சி, பேச்சு ஸ்டைல் என்று மிகவும் சாதாரணமாக இருந்தவனிடம் ஒரு பெரிய ஆள் தோரணை வந்துவிட்டது. வேகப்பந்து வீச்சில் எங்கள் ஊரின் நெக்ராவாக அவன் மாறியது தான் என்னை வாவ் என்று சொல்ல வைத்தது. வெளியூர் செல்வது நம் வாழ்வை நிச்சயம் மாற்றும். 

நலம் விசாரித்த தோரணையிலேயே நண்பன் பெந்தகோஸ்து சபையில் ஊறி தேறிவிட்டான் என்று புரிந்துவிட்டது. பெரும்பாலும் வாட்ஸ்அப் குரல் மெசேஜ் மூலம் தான் பேசிக்கொள்வோம். விவிலியத்தின் வாக்கியங்களை அதன் பழைய மொழிபெயர்ப்பில் சரளமாகப் பேசுகிறான். ஆசீர்வாதம், அபிஷேகம், அலங்காரம், வைராக்கியம் போன்ற வார்த்தைகள் அதிகம் பயன்படுத்துகிறான். தான் சிறுவயதில் ஒரு கத்தோலிக்க அருட்பணியாளராக வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும், பின்னர் இறைவனின் திட்டத்தில் தான் திருமண வாழ்விற்கு அழைக்கப்பட்டு, தற்சமயம் ஒரு சபையின் பாஸ்டராக இருந்து சுவிசேஷத்தை அறிவிப்பதாகவும் கூறினான். உண்மையாகவே மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த வாரம் வருடாந்திர ஐந்து நாள் தியானத்தில் இருந்தேன். டவர் சுத்தமாக இல்லாத ஒரு மலைப்பகுதி. திடீரென்று அவனிடமிருந்து ஒரு மெசேஜ். மத்தேயு நற்செய்தி 23,9 இல் இம்மண்ணுலகில் உள்ள எவரையும் தந்தை என நீங்கள் அழைக்க வேண்டாம். ஏனெனில் உங்கள் தந்தை ஒருவரே! அவர் விண்ணுலகில் இருக்கிறார் என்று இயேசு கூறுகிறார். ஆனால் நீங்கள் கத்தோலிக்க மதத்தில் அருட்பணியாளர்களை பாதர் (தந்தை) என்று அழைப்பது ஏன் என்று கேட்டான்.

தியானத்தில் இருப்பதாலும், அங்கு டவர் இல்லாததாலும் பிறகு பதிலளிக்கலாம் என்று இருந்துவிட்டேன். மீண்டும் எங்கோ ஒரு புள்ளியில் போன் சிக்னலைத் தேடிக் கண்டுபிடித்ததும் அவனிடமிருந்து அடுத்த மெசேஜ். பதில் தெரிந்தாலும் சொல்லணும். தெரியலைனாலும் தெரியலைனு சொல்லணும் என்று. நன்றாக கோபம் வந்தது. கோபத்திற்கு காரணம் கேள்வி அல்ல. ஆனால் நான் பார்த்த எல்லா பெந்தகோஸ்து நண்பர்களும் நலம் விசாரித்த மறுநாளே இப்படி ஒரு பார்முலா கேள்வி வஸ்திரத்தை எடுத்து வீசுகிறார்கள். என்ன அவசரம். எங்கே போய்விடப் போகிறோம். மெல்ல மெல்ல பேசலாமே. கடன்காரன் மாதிரி இப்படி கழுத்தைப் பிடித்தால் எப்படி?

உண்மையைச் சொல்லுங்கள்! சொந்தமாக இப்படியெல்லாம் கேள்வி கேட்டு, பதில் கிடைக்கமல் போனதால் தான் நீங்கள் பிற சபைகளுக்குச் சென்றீர்களா? அங்கு உங்களுக்கு கேள்விகளே இல்லையா? சரி! அது உங்கள் தனிப்பட்ட விருப்பம். ஆனால் தங்களிடம் எல்லா விடைகளும் இருக்கின்றது என்று நினைப்பவர்கள் எதற்காக அடுத்தவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்? இப்படி என்னுள் பல கேள்விகள் எழும்புவதால் பெரும்பாலும் மத உயர்வுவாதிகளிடம் விவாதிப்பதில் பலனில்லை என்று சிரித்தே கடந்துவிடுவேன். இறைநம்பிக்கையைப் பற்றி பேசுவது, இறை அனுபவத்தைப் பகிர்ந்து கொள்வது நிச்சயம் சுவாரஸ்யமானதாகவே இருக்கும். ஒருவரை ஒருவர் வளப்படுத்தும். ஆனால் பார்முலா கேள்விகளில் ஒரு மேட்டிமைத்தனம் தொனிக்கிறது. அது நகைக்க வைக்கிறது. 

ஆயினும் இந்த முறை கேள்வி கேட்டது நண்பன். அவனும் ஒரு சபையின் ஆசிரியனாக இருந்து இறைவார்த்தையைப் போதிக்கின்றவன் என்ற முறையில் என் மனதில் தோன்றும் கருத்துக்களை வரிசைப்படுத்த முயற்சிக்கிறேன். நிச்சயம் துல்லியமான விடைகளாக இருக்காது. எனது புரிதல்கள் அவ்வளவுதான்.

1.கத்தோலிக்கர்களாகிய நாங்கள் கடவுள் தம்மை இறைவார்த்தையிலும் (பைபிள்), திருச்சபை மரபிலும் வெளிப்படுத்துகிறார் என்று நம்புகின்றோம். ஆனால் பிற சபையினரைப் பொறுத்த மட்டில் கடவுள் இறைவார்த்தையில் மட்டும் தான் வெளிப்படுத்துகிறார். 

2.ஆகவே நாங்கள் திருச்சபையின் பாரம்பரியத்தை (மரபினை) இறைவெளிப்பாடாக ஏற்றுக்கொள்கிறோம். அதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது சொல்லுங்கள்? கடவுள் எங்களிடம் விவிலித்திற்கு வெளியே, இன்றைய அன்றாட வாழ்வில் மனிதர்களின் மீட்பிற்கு தேவையானவற்றை தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறார். ஒவ்வொரு தனிமனிதருக்கும் வெளிப்படுத்துவதோடு, திருச்சபை முழுவதற்குமாக வெளிப்படுத்துகிறார். அதனை ஆராய்ந்து, அறிந்து அனைத்து இறைமக்களும் பின்பற்றுவதற்கான கோட்பாடுகளாக்கித் தரும் பணியினை பொதுச்சங்கங்கள் செய்கின்றன. கடைசியாக நடைபெற்ற இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தில் (1962-1965) 16 ஏடுகள் வெளியிடப்பட்டன. அதில் இறைவெளிப்பாடு என்னும் நூலினை வாசித்தால் உங்களுக்கு இன்னும் சரியான புரிதல் ஏற்படும் என்று நம்புகிறேன். தமிழிலேயே பைபிள் தமிழ் என்னும் வலைத்தளத்தில் கிடைக்கின்றது.
 
3. திருத்தூதுதர்கள் தூய ஆவியின் ஏவுதலால் தாம் பெற்றுக்கொண்ட இறைவெளிப்பாட்டை வாய்மொழி வழியாகவும் நூல்கள் வழியாகவும் மக்களுக்கு அளித்தனர். எழுதப்பட்ட நூல்கள் இறைவெளிப்பாட்டின் முழுமையைக் கொண்டிருக்கவில்லை. திருச்சபையின் மரபு வழியாகவும் இறைவெளிப்பாடு அருளப்பட்டது. திருநூல்களும் திருமரபும் ஒரே ஊற்றிலிருந்து உருப்பெற்ற காரணத்தால் இவை இரண்டும் தம்மில் நெருங்கிய தொடர்புடையன் இரண்டுமே சமமான வணக்கத்துக்குரியன. இவை இரண்டும் அனைத்து மக்களுக்கும் கடவுளால் கொடுக்கப்பட்ட கொடைகள்; இவற்றிற்கு விளக்கம் தரும் உரிமை திருச்சபை ஆசிரியத்துக்கே உண்டு என்று இறைவெளிப்பாடு நூலின் தமிழ் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் விவிலியப் பேராசிரியர் அருட்பணி. எரோணிமுசு அவர்கள் மிக அழகாக, தெளிவாக குறிப்பிடுகின்றார்.

4. எடுத்துக்காட்டாக அன்னை மரியாளின் விண்ணேற்பு விவிலியத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் கத்தோலிக்கத் திருச்சபை ஆகஸ்டு 15 அன்று அன்னையின் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றது. அய்யோ! விவிலியத்தில் இல்லையே என்று மாரில் அடித்துக்கொண்டு தயவு செய்து வராதீர்கள். புரிந்துகொள்ளுங்கள். விவிலியத்தில் இல்லையென்றால் திருச்சபை மரபில் இருக்கின்றது என்று. அது எங்கே இருக்கிறது என்று வேண்டுமானால் கேளுங்கள்.  உங்களது நம்பிக்கையின் ஊற்று இறைவார்த்தை மட்டுமே! ஆனால் எங்களுக்கு திருச்சபை மரபும் சமமான வணக்கத்துக்குரியது.
 
5. மேற்சொன்ன 4 கருத்துக்களும் ஒரே கருத்தைத்தான் சொல்கின்றது. போதும் என்று நினைக்கிறேன். மேலும் விவிலியத்திற்கு பொருள் கொள்ளும் முறையிலும் பிறசபையினர் கத்தோலிக்க திருச்சயினரிடமிருந்து வேறுபடுகின்றனர். பெரும்பாலும் ஒரு வார்த்தையை அல்லது வசனத்தை மட்டும் வைத்து அப்படியே நேரடி விளக்கம் கொள்கின்றனர். ஆனால் பல்வேறு மொழிகளில், பல்வேறு காலத்தில், பல்வேறு அரசியல், சமூக பின்னணியில் எழுதப்பட்ட ஒரு நூற்தொகுப்பை இன்றைய நமது சூழலை மட்டும் வைத்து நேரடி பொருள் கொள்ளுதல் சரியான, முழுமையான அர்த்தத்தைத் தராது. ஆகவே விவிலய நூல்களின் வரலாறு, பின்னணி பற்றிய அறிவு அவசியமாகின்றது.

6. இப்போது நண்பர் கேட்ட கேள்விக்கு வருவோம். ஏன் கத்தோலிக்க அருட்பணியாளர்கள் பாதர் என்று அழைக்கப்படுகிறார்கள்?
(நேரமாயிடுச்சி! காலையில்  மீதி எழுதுகிறேன். கொஞ்சம் பொறுங்க நண்பா!)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக