திங்கள், 20 அக்டோபர், 2025

நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

இது இலையுதிர் காலம்

இல்லையா நண்பர்களே!

உதிர்வன இலைகள் மட்டும்தானா?

இரவுகள் உதிர்கின்றன

உறவுகள் உதிர்கின்றன

பகல்கள் உதிர்கின்றன

பருவங்கள் உதிர்கின்றன

பொய்க்கின்ற நம்பிக்கைகளின்

உதிரிச் சருகுகளானதுதானே

பொக்கிஷமாய் நாம் கருதுமிந்த வாழ்க்கை!


தனித்திருக்கும் ஒருத்தி

அர்த்தம் தேட ஆசைப்படுகிறாள்

இராத்திரிகளின் புழுக்கத்தில் 

நித்திரை கொள்ளாது

நீதி வேண்டுகிறாள்!


காலைப்பூசையில் நீங்கள் கேட்ட

கைம்பெண்ணைப் பற்றித்தான் புலம்புகிறேன்

நீதி பரிபாலனைகள் புரியுமிடத்திலிருப்பவர்கள்

இரக்கமின்றி அவளைப் புறக்கணிக்கிறார்கள்

கேட்காதது போல, பார்க்காதது போல

முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள்

வரலாறு முழுவதும் கேட்டக் கதைதானே!


சமாரியப் பெண்

சாமானியப் பெண்

சிவந்த குருதிப்போக்கினால் 

சங்கடமாகிப் போனப் பெண்

செல்ல மகனை இழந்த விதவைப் பெண்

எல்லாக் கையிருப்பையும் காணிக்கையிட்டப் பெண்

கண்ணீரினால் கழுவி, தலைமுடியால் துடைத்தப் பெண்

நானும் உன்னைத் தீர்ப்பிடவில்லை என்றதும்

விசும்பி அழுது திரும்பிச் சென்ற பெண்

இன்றைய விலையில் தங்கம் போன்ற 

ஒரு தைலத்தைக் கவிழ்த்துப் பூசி அன்புசெய்த பெண்

பாலூட்டிய பெண்

பாலுட்டியவள் பேறுபெற்றவள் என்று சொன்ன பெண்

செவிகொடுத்த பெண்

சேவை செய்த பெண்

சிலுவையின் கொடிய பாதையில் 

அச்சமின்றி அவர் முகம் துடைத்த பெண்

சூரியன் உதிக்கும் முன்னே

கல்லறைக்குக் காணச் சென்ற பெண்

இயேசுவின் வாழ்வில்தான் எத்தனைப் பெண்கள்!



நீதி மறுக்கப்பட்ட பெண்ணொருத்தி

எங்கள் ஊரிலும் இருந்தாள்

அவள் இருந்த ஊரையே எரித்தாள்

அவளும் கைம்பெண்தான்!


கொழுந்து இலைபோன்ற சின்னஞ்சிறுமி

நேற்று பெருநகரம் ஒன்றில் வன்புணரப்பட்டாள்

அவளை எரித்த நெருப்பில்

அந்த நகரம் கொதித்தது

நடந்த சேதாரங்களுக்கு நீதிமன்றங்கள்

ஆதாரங்களைக் கேட்கின்றன

ஏதோவெரு மிருகம் இரத்தவேட்கையோடு

சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருக்கின்றது


ஆதாரங்களைத் தரவேண்டியவர்கள்

கொரோனா விதிமீறிய குற்றத்திற்காக

அப்பாவிகளின் மலக்குடலில்

லத்திகளைச் செலுத்தி தேடிக்கொண்டிருக்கிறார்கள்!


ஊரை எரித்தேனும் நீதியைப் பெற்ற நம் ஊரில்

என் எதிரியைத் தண்டித்து

எனக்கு நீதி வழங்கும் என்ற அபயக்குரல்

நீதியின் பலிபீடங்களைத் 

தொந்தரவு செய்துகொண்டேயிருக்கின்றன!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக