குடியரசு தினம். நம் நாட்டின் அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்து நேற்றுடன் 76 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மக்களாட்சியில் நிறைய குறைபாடுகள் இருக்கின்றன. சட்டங்களும், திட்டங்களும் உருவாகி நடைமுறைக்கு வருவதற்குள் ஒரு ஒளி ஆண்டே முடிந்துவிடும். நத்தை வேக நிர்வாகம், நாடி நரம்பெல்லாம் ஊழலில் திளைக்கும் அதிகாரிகள், சுயநலமே கொள்கையாகக் கொண்ட அரசியல் வாதிகள் என்று ஆயிரம் சங்கடங்கள் இருந்தாலும், மன்னராட்சி, இராணுவ ஆட்சி போன்ற எல்லா சமாச்சாரங்களையும் விட மக்கள் தங்களைத் தாங்களே ஆட்சி செய்யும் மக்களாட்சியே அனைத்திலும் சிறந்தது என்று வரலாறு நமக்கு துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
அரசியலமைப்பு புத்தகமே ஒரு குடியரசு நாட்டின் பைபிள், குரான், அல்லது பகவத் கீதை எல்லாம். மற்ற அனைத்து அதிகாரங்களும் அதற்குக் கட்டுப்பட்டவையே! மக்கள் நினைத்தால் (அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளின் மூலம்) அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வரலாம். ஆனால் மக்களாட்சி முறையையோ, மதசார்பின்மையையோ, கூட்டாட்சி அமைப்பையோ பாராளுமன்றமே நினைத்தாலும் மாற்ற முடியாது. பாராளுமன்றம் கொண்டுவரும் திருத்தங்களை உச்சநீதிமன்றம் மறுபரிசீலனைச் செய்யலாம். அந்த அதிகாரத்தை நீக்கும்படியாக பாராளுமன்றம் சட்டம் கொண்டு வரமுடியாது. அந்த வகையில் மிகவும் 'புனிதத்' தன்மையோடு அணுகி கடைபிடிக்கப் பட வேண்டியது அரசியலமைப்பு நூல்.
உலகிலேயே மிகப்பெரிய மக்களாட்சி நாடு இந்தியா என்பதில் நாம் நிச்சயம் பெருமைப்பட்டுக் கொள்ள முடியும். அந்நியர்களிமிருந்து விடுதலை வாங்கித்தந்த தலைவர்கள், போராட்டங்களில் இன்னல்கள் அனுபவித்த தியாகிகள் அனைவரையும் கரம் கூப்பி வணங்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அவர்கள் செந்நீர் சிந்தி நட்ட மரத்தின் நிழலில்தான் நாம் இன்று இளைப்பாறிக்கொண்டிருக்கிறோம். அத்தியாகிகளுக்கு இணையாகப் போற்றுதலுக்குரியவர்கள் நம் அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அறிஞர் பெருமக்கள். விடுதலைக்குப் பிறகு சூறாவளி சுருட்டிச் சென்ற பருத்திக் காட்டினைப் போலச் சிதறிக் கிடந்தது நம் நாடு. அனத்துத் துண்டுகளையும் பத்திரமாகக் கட்டிச் சேர்த்ததோடு, இன்றளவும் இந்தியர் என்னும் உணர்வை ஊட்டி வளர்ப்பதும் நம் அரசியலமைப்பு நூல்தான்.
காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர், ஜவஹர் லால் நேரு, ராஜேந்திர பிரசாத், படேல், கோகலே போன்ற தலைவர்களை நவீன இந்தியாவின் பெருமைமிகு சிற்பிகளாகக் கருதுகிறேன். எல்லா மாநிலங்களிலும் அவரகளது கனவுகளுக்கு வடிவம் தந்த தலைவர்கள் எண்ணிலடங்காதவர்கள் உண்டு. சூதும் வாதும் செய்தேனும் இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைக்கும் அழிவு சக்திகள் இன்று இந்தியாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் அவல நிலையிலும், இன்னும் வீழாது நம்மைத் தாங்கிக்கொண்டிருப்பது நமது அரசியலமைப்புச் சட்ட நூல்தான். நவீன இந்தியாவிற்கு அடித்தளமிட்ட பெருந்தலைவர்களின் கனவுகளைச் சுமந்து நிற்கும் இப்புனித நூலை நாம் பாதுகாக்க வேண்டும். அத்தகைய தகுதியுடையவர்களிடம் மட்டுமே நம் நாட்டை ஆளும் உரிமையை நாம் தரவேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக