வெள்ளி, 10 மார்ச், 2017

தவக்காலம் முதல்வாரம் வெள்ளி

இன்றைய நற்செய்தி : மத்தேயு 5:20-26

20 மறைநூல் அறிஞர், பரிசேயர் ஆகியோரின் நெறியைவிட உங்கள் நெறி சிறந்திருக்கட்டும். இல்லையெனில், நீங்கள் விண்ணரசுக்குள் புக முடியாது என உங்களுக்குச் சொல்கிறேன்.

21 'கொலை செய்யாதே; கொலை செய்கிறவர் எவரும் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர்' என்று முற்காலத்தவர்க்குக் கூறப்பட்டிருப்பதைக் கேள்விப் பட்டிருக்கிறீர்கள்.

22 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; 'தம் சகோதரர் சகோதரிகளிடம் சினங்கொள்கிறவர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவார்; தம் சகோதரரையோ சகோதரியையோ 'முட்டாளே' என்பவர் தலைமைச் சங்கத் தீர்ப்புக்கு ஆளாவார்; 'அறிவிலியே' என்பவர் எரிநரகத்துக்கு ஆளாவார்.

23 ஆகையால் நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால்,

24 அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.

25 உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்துக்குக் கூட்டிச் செல்லும் போது வழியிலேயே அவருடன் விரைவாக உடன்பாடு செய்துகொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் எதிரி நடுவரிடம் உங்களை ஒப்படைப்பார். நடுவர் காவலரிடம் ஒப்படைக்க, நீங்கள் சிறையில் அடைக்கப்படுவீர்கள்.

26 கடைசிக் காசு வரை திருப்பிச் செலுத்தாமல் அங்கிருந்து வெளியேற மாட்டீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன்.

சிந்தனை:

வியாழன், 9 மார்ச், 2017

தவக்காலம் முதல் வாரம் வியாழன்

இன்றைய நற்செய்தி : மத்தேயு 7:7-12

7 கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்.

8 ஏனெனில், கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டுவோருக்குத் திறக்கப்படும்.

9 உங்களுள் எவராவது ஒருவர் அப்பத்தைக் கேட்கும் தம் பிள்ளைக்குக் கல்லைக் கொடுப்பாரா?

10 அல்லது, பிள்ளை மீன் கேட்டால் பாம்பைக் கொடுப்பாரா?

11 தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணுலகில் உள்ள உங்கள் தந்தை தம்மிடம் கேட்போருக்கு இன்னும் மிகுதியாக நன்மைகள் அளிப்பார் அல்லவா!

12 ஆகையால் பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள். இறைவாக்குகளும் திருச்சட்டமும் கூறுவது இதுவே.


சிந்தனை:

கேட்க வேண்டும். சிறிதாக அல்லாமல் பெரிதாக! எதைக் கேட்கலாம்? இறைவன் தன்னையேத் தருவதற்குத் தயாராக இருக்கும் போது அவரையல்லாமல் எதைக் கேட்டாலும் சரியல்ல தானே? இறைவா எங்களோடு தங்கும்! தேடுவதற்கான ஆர்வத்தையும், தட்டுவதற்கான ஆற்றலையும் இழந்து இன்னும் இந்த வாழ்க்கையில் ஏதேனும் மிச்சம் இருக்கிறதா? என்று சோர்ந்து போகும் உள்ளங்களில் தங்கும் ஆண்டவரே! இந்த நொடி நான் வாழ்கிறேன் என்றால் அதுவே உமது கொடை என்னும் நன்றியுணர்வும், செயல்படும் உள்ளமும் தந்து வழிநடத்தும் இறைவா! உம் பாதம் சரணம்!

புதன், 8 பிப்ரவரி, 2017

பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

தற்செயலாக பழைய கோப்புகளைக் கணிணியில் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு பழைய மறையுரைச் சிக்கியது. திருச்சி திருச்சிலுவை மகளிர் கல்லூரியில் 36 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெறும் இரண்டு பேராசிரியைகளுக்காக நன்றித் திருப்பலி ஒப்புக்கொடுக்க என்னை அழைத்திருந்தனர். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுதான். இருந்தாலும் இந்த எழுத்து நம் வலைப்பூவில் பகிரத்தக்கதே என்ற எண்ணம் தோன்றியது. வாசித்துப்பாருங்கள்... உங்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு ஆசிரியரை மனதில் நினைத்துக்கொண்டு! 

பேராசிரியைகள் ஓய்விற்கான திருப்பலி மறையுரை
போராசிரியைகள்: திருமதி பியூலா மோசஸ், திருமதி ஜோஸ்பின் லீலா
வாசகங்கள்: யோசுவா 23:2-9, திருத்தூதர் பணிகள் 20:17-24, யோவான் 13:31-35

கிறிஸ்து இயேசுவில் மிகவும் அன்பிற்குரியவர்களே! இன்றைய விழா நாயகர்களாக வீற்றிருக்கும் பேராசிரியைகள் இருவருக்கும் எனது செபம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

'மொழியாய் முதிர்ந்தது ஒலி,
கவியாய் முதிரந்தது மொழி,
என்னவாய் முதிரும் கவி?' 
என்று கவிஞர் வைரமுத்து ஒரு கவிதையிலே வினா எழுப்புகிறார். என்ன அர்த்தம்? ஒலியின் உச்சம் மொழி. மொழியின் உச்சம் கவி. அப்படியென்றால் கவியின் உச்சம் என்ன? இப்போதைக்கு கவிதான் மொழியின் உச்சமாக இருக்கும் பட்சத்தில் 36 வருடங்கள், 34 வருடங்கள் என்று பணியின் உச்சத்தை எட்டியிருக்கும் பேராசிரியப் பெருமக்களுக்கு என் எளிய பரிசு இக்கவி!

மந்தையில் இரண்டு ஆடுகள்
புற்களை மேயும் சாதராரண ஆடுகளல்ல
பூக்களை உருவாக்கிய சாதனை ஆடுகள்

கண்மை காலத்தில் பணியேற்று
கடவுள் துகள் காலத்தில் விடைபெறுகிறார்கள்
சகாப்தங்கள் பல பார்த்த சாதனையாளர்கள்

'எமர்ஜென்சி' இவர்களை உள்ளே தள்ளியது
'எலெக்ஷன்' இவர்களை வெளியேற்றுகிறது
கல்வி தியாகிகள்

வானொலி பிள்ளைக்கும்
வாக்மேன் பிள்ளைக்கும் 
வரலாறு படைக்க வழிகாட்டியவர்கள்
வழி நெடுக வலி பார்த்தவர்கள்

நாம் கற்கையில் 
அவர்கள் நிற்கிறார்கள்
வாழ்வில் வளமாகி நாம் நிற்கையிலும்
அவர்கள் கற்கிறார்கள்

வளாகத்தில் நிழற்பரப்பும்
விளாக மரங்கள்
இவர்களுக்கு விதையிலேயே அறிமுகம்!
வகுப்பறையில் கற்பித்தாலும்
எத்தனை தேசங்களில் பரவியதோ
இவர்கள் கற்பித்தலின் வாசனை

எத்தனை ஆசிரியர்களுக்கு
பதியமிட்டதோ இவர்களது வகுப்பறை
இவர்கள் இருவரும்
பக்கக்கன்றுகளுக்கு  உயிரூட்டிய தலை வாழைகள்

எத்தனை வீடுகளில்
விளக்கேற்றியிருக்கும்
இவர்கள் கை பிடித்து கற்பித்த
வளை கரங்கள்
வாழ்க நீவீர்! பல்லாண்டு பாரினில் புகழோடு!

அன்பிற்குரியவர்களே! கடவுள் எப்படி இருக்கிறார் தெரியுமா?
-சின்னக்குறிப்பிடத்தில் படித்திருப்பீர்கள். தாமாக இருக்கிறார். தொடக்கமும் முடிவும் இல்லாமல் இருக்கிறார் என்று.
-சைவ மதத்தை பின்பற்றும் தொண்டர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் சிதம்பரத்திலே நடராசராக நடனமாடிக்கொண்டிருக்கிறார் என்று. நடனம் என்பது கடவுளின் இயக்கத்தை குறிக்கிறது.
-வைணவ மதத்தைப் பின்பற்றும் அன்பர்களைக் கேட்டால் சொல்வார்கள். கடவுள் ஸ்ரீரங்கத்திலே பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கிறார் என்று. பள்ளிகொண்டிருத்தல் என்பது சயன நிலை. அதாவது உறக்க நிலை.

ஒரே கடவுள் ஒரே நேரத்தில் இயக்கமாகவும் இருக்கிறார். ஓய்வு என்னும் உறக்கமாகவும் இருக்கிறார். பணியும் ஓய்வும் வேறு வேறானதல்ல. இரண்டும் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும், சார்ந்தும் பிரிக்க இயலாததுமாய் இருக்கின்றது. எனவே இங்கு நடைபெறும் நிகழ்வானது உங்கள் பணியின் முடக்கமல்ல. இன்னொரு பணியின் தொடக்கமேயாகும்.
பணியும், ஓய்வும் மாறி, மாறி வந்தாலும் ஒன்று மட்டும் மாறாதது என்று நம்மால் உறுதிபடக் கூறமுடியும். அது என்ன தெரியுமா? தேனினுமினிய இயேசுவின் நாமம்.

விவிலியத்திலே இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் என்ன? 'இதோ கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அவருக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவீர்'. இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பது பொருள். 

அவர் நம்மோடு இருப்பதால் தான் அவரைப் பற்றிய நினைவுகள் நம் நெஞ்சை விட்டு நீங்குவதில்லை. 
நம்முடைய வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்களில், பாவிகளோடும், சீடர்களோடும் சேர்ந்து உணவுண்டு மகிழ்ந்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சவால்களை சந்தித்த தருணங்களில் வாழ்வு முழுவதுமே சவால்களை சந்தித்த  இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சாதனைகள் புரிந்த துருணங்களில் 'இவரே என் அன்பாரந்த மகன். இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்' என்று தந்தையால் பாராட்டப்பெற்ற இயேசு நம்மோடு இருக்கின்றார்.
நம்முடைய வாழ்வில் நாம் சரிந்து விழுந்து கடுந்துயருள்ள வேளைகளில் 'என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கை நெகிழ்ந்தீர்!' என்று சிலுவையிலே கதறிய இயேசு நம்மோடு இருக்கின்றார்.
துன்பங்கள் கடந்து பின் வாழ்வு ஒளிபெறுவதை உணர்ந்து கடவுளன்பை நாம் சுவைத்த தருணங்களில் உயிர்த இயேசு நம்மோடு இருக்கின்றார்.

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதுதான் விவிலியம் முழுவதுமே நமக்கு உணர்த்தும் பாடம். திருப்பாடல் 121 இல் அதன் ஆசிரியர் ஒரு வினா எழுப்புகிறார்.

'மலைகளை நோக்கி என் கண்களை உயர்த்துகிறேன்!. எங்கிருந்து எனக்கு உதவி வரும்? என்று. பின் அவரே பதிலளிக்கிறார்
'விண்ணையும் மண்ணையும் உண்டாக்கிய ஆண்டவரிடமிருந்தே எனக்கு உதவி வரும். அவர் உம் கால் இடறாதபடி பார்த்துக் கொள்வார்; உம்மைக் காக்கும் அவர் உறங்கிவிடமாட்டார். இதோ! இஸ்ரயேலைக் காக்கின்றவர் கண்ணயர்வதுமில்லை; உறங்குவதும் இல்லை. ஆண்டவரே உம்மைக் காக்கின்றார்; அவர் உம் வலப்பக்கத்தில் உள்ளார்; அவரே உமக்கு நிழல் ஆவார்! பகலில் கதிரவன் உம்மைத் தாக்காது; இரவில் நிலாவும் உம்மைத் தீண்டாது. ஆண்டவர் உம்மை எல்லாத் தீமையினின்றும் பாதுகாப்பார்; அவர் உம் உயிரைக் காத்திடுவார். நீர் போகும்போதும் உள்ளே வரும்போதும் இப்போதும் எப்போதும் ஆண்டவர் உம்மைக் காத்தருள்வார்.'

கடவுள் நம்மோடு இருக்கிறார் என்று உணர்ந்து துணிவோடு வாழ்வை எதிர்கொண்டவர்கள் தான் விவிலிய மாமனிதர்களாகிய ஆபிரகாம், மோசே, இன்றைய முதல் வாசகத்தில் நாம் கேட்ட யோசுவா, சாமுவேல், தாவீது போன்றவர்களெல்லாம்.

நீங்கள் பிறந்ததிலிருந்து பணியேற்ற நாள் வரையிலும், நீங்கள் பணியேற்ற நாளிலிருந்து பணி உச்சமடைந்த இந்த நாள் வரையிலும் உங்களோடு இருந்த அதே கடவுள் தான் இனிவரும் காலமும் உங்களோடு இருப்பார் என்பதை உணர்த்தவே இந்த விழா!

வாசன் ஐ கேர் விளம்பரத்திலே வரும் ஓர் அருமையான வசனம் 'நாங்க இருக்கோம்'
இது நாள் வரையிலும் இந்தக் கல்லூரியிலே கற்பித்தாலாக இருக்கட்டும், வழிகாட்டுதலாக இருக்கட்டும், நாட்டு நலப்பணித்திட்டமாக இருக்கட்டும், துறைத் தலைவர் பணியாக இருக்கட்டும் இன்னும் கல்லூரியின் பல்வேறு விழாக்களாக இருக்கட்டும் 'நாங்க இருக்கோம்' என்று முன்வந்து உழைத்து, உழைத்து தங்களையே உருக்கி உருக்கி எத்தனையோ மாணவியரின் வாழ்வைச் செதுக்கியிருக்கும் பேராசிரியர்களைப் பார்த்து நாம் கூற வேண்டிய தருணம் இது:    'நாங்க இருக்கோம்'. 

வெறும் வார்த்தைகளால் அல்ல: 'நான் உங்களிடையே அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்' என்று இயேசு கூறிய அன்புக் கட்டளையை வாழ்வாக்குவதன் மூலம் நாம் இயேசுவின் சீடர்கள் என்று தொர்ந்து உலகிற்கு எடுத்துரைப்போம். 

நமது அன்பானது சாதி, மத, இன, நிற, பாலின வேறுபாடுகளைக் கடந்து அனைவரும் கடவுளின் பிள்ளைகள் என்ற புரிதலை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டியும், இன்று பணி உச்சமடைந்து ஓய்வின் மூலம் மிச்சப்பணியாற்ற கல்லூரி என்னும் எல்லைகளைக் கடந்து செல்லும் இரு போரசிரியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கடவுள் இடமும், வலமும் இருந்து பாதுகாத்து, பராமரிக்க வேண்டியும் அவர்கள் மனதிலே நினைத்து வைத்திருக்கின்ற காரியங்கள் நிறைவேற வேண்டியும் இத்திருப்பலியிலே தொடர்ந்து செபிப்போம்.

சனி, 21 ஜனவரி, 2017

ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக

இத்தாலியின் தலைநகர் ரோமில், வத்திக்கான் புனித பேதுரு சதுக்கத்தின் அருகாமையில் உள்ள புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் இன்று 19-1-2017 மதியம் 3 மணியளவில் தமிழ் உணர்வாளர்கள் பெருமளவு கூடினர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்றும், பீட்டா அமைப்பு தடைசெய்யப்பட வேண்டும் என்றும் உணர்ச்சி பொங்க கோஷங்களை எழுப்பினர். தமிழகம் முழுவதும் நடைபெறும் இளைஞர்களின் எழுச்சிப் போராட்டத்தில் ரோம் நகரில் வாழும் தமிழர்களும் அதே இனமான உணர்வோடு கலந்து கொண்டனர்.

மத்திய அரசின் தமிழர் விரோத அரசியலையும், பண்பாட்டு அழிப்பு முயற்சியினையும் வன்மையாகக் கண்டித்தனர். நல்ல பயனுள்ள பறக்கும் சாலை, புல்லட் ரயில் போன்ற உட்கட்டமைப்புத் திட்டங்களெல்லாம் வடமாநிலங்களுக்கும், பேராபத்தான அணுஉலை,  மீத்தேன் வாயுத்திட்டம் போன்றவையெல்லாம் தமிழகத்திற்கும் ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டினர். வீட்டில் பிள்ளையாக, ஊருக்கு சாமியாக, விவசாயிகளின் தோழனாகத் திகழும் நாட்டுக் காளை மாட்டினங்களை முற்றிலும் அழிக்க நினைக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சதிவலைக்குள் தமிழகத்தைச் சிக்கவைப்பதோடு, அவர்களின் வீர வரலாற்றுச் சிறப்பின் தனிப்பெறும் அடையாளமான ஏறுதழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ய சந்தர்ப்பம் தேடும் மத்திய அரசின் குரலையே உச்சநீதிமன்றமும் எதிரொலிப்பது முற்றிலும் பாரபட்சமான, இனவெறிப் பார்வையே அன்றி வேறெதுவும் இல்லை என்று அவர்கள் கூறினர்.

இன்று தமிழகம் முழுவதும் போராட்ட உணர்வோடு வீதிக்கு வந்திருக்கும் இளைஞர்களின் கூட்டத்தைப் பார்க்கும் போது இது வெறும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டம் மட்டுமல்ல. இது தொடர்ந்து புறக்கணிக்கப்படும், வஞ்சிக்கப்படும் ஒரு இனத்தின் எழுச்சிப் போராட்டம் என்பது தெரிகிறது. இவர்கள் அரசியல்வாதிகளாலோ, அல்லது சினிமாக்காரர்களாலோத் தூண்டப்பட்டவர்கள் அல்ல. மாறாக அவர்களையும் வீதிக்கு இழுத்து வந்து போராட்டக் குரலெழுப்ப வைத்திருக்கின்றனர். இதுவே நம் இளைஞர்களின் முதல் வெற்றிதான். இது ஒரு புதிய அரசியலுக்கானத் தொடக்கமாக இருக்க வேண்டும். தமிழகத்தின் பண்பாட்டையும், வரலாற்றையும் அழிக்க நினைக்கும் எதிரிகளுக்கு முதுகு சொறிந்து விடும் எட்டப்பர்கள் நம்மை ஆட்சி செய்தது போதும். உண்மையாகவே தமிழையும், தமிழர்களையும் புதிய உட்சங்களுக்கு வழிநடத்தும் நல்ல தலைவர்கள் இந்த இளைஞர் திரளிலிருந்து உருவாக வேண்டும் என்பதே ரோம் வாழ் தமிழர்களாகிய எங்களின் ஏக்கமும் ஆகும். போராட்டத்தில் ஈடுபடும் அனைவரோடும் உணர்வுப்பூர்வமாக நாங்களும் ஒன்றித்திருக்கிறோம். அவர்களை மனதாரப் பாராட்டுகிறோம். இவ்வாறு ரோம் புனித பேதுரு கல்லூரி வளாகத்தில் ஜல்லிக்கட்டுக் ஆதரவாக ஒன்றிணைந்த தமிழ் உணர்வாளர்கள் கூறினர்.

சனி, 8 அக்டோபர், 2016

கதை முடிந்தது

சிறு வயதில் சில கொடூரமானக் கனவுகளைக் கண்டு நடு இரவில் விழித்திருக்கிறேன். குறிப்பாக எங்கள் ஊரில் பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவரை நான் கொலை செய்துவிட்டு போலீஸ் என்னைத் தேட ஆரம்பிக்கும் போது விழித்துக் கொள்வேன். அப்போது பயத்தில் உடம்பு விறைத்து கட்டை போல படுத்திருப்பேன். பக்கத்தில் படுத்திருக்கும் அம்மாவைக் கூப்பிட மூளை கட்டளை கொடுக்கும். ஆனால் தொண்டைக்குள் பயம் பந்து போல அடைத்துக் கொண்டு குரலை வரவிடாது. ஒரு உண்டியலில் காசு போடும் துளை அளவுதான் வாய் திறக்கும். எவ்வளவு முயன்றும் அதற்கு மேல் எதுவும் இயலாது. கை கால்களை ஒரு இம்மி கூட அசைக்க முடியாது. கனவில் கண்டது உண்மை என்றும், உண்மையிலேயே நான் அந்த மனிதரைக் கொன்றுவிட்டேன் என்றும், போலீஸ் என்னைத் தேடுகிறது என்றும் நினைத்து பயத்திலேயே மயங்கி காலையில் தான் இயல்பு நிலைக்குத் திரும்புவேன். கை, கால்களை அசைத்துப் பார்த்துக் கொள்வேன். வாய் திறந்து பேசியப் பிறகுதான் எதுவுமே நடக்கவில்லை, எல்லாமே கனவு என்பதை நம்புவேன். அப்படி ஒரு கனவு சமீபத்தில் வந்தது.

அன்று நள்ளிரவில் நாய்கள் குரைக்கும் சத்தம் அதிகமாக இருந்தது. யாரோ டப் டப்பென்று கதவைத் தட்டினார்கள். நாய்கள் எப்படி கதவைத்தட்டும்? கதவை உடைத்துவிடுவது போலத் தட்டினார்கள். நடுவீட்டில் படுத்திருந்த அப்பா கதவைத் திறக்கவும், பசித்த மிருகங்களைப் போன்று வெறிபிடித்த போலீஸகாரர்கள் வீட்டிற்குள் நுழைந்தார்கள். கெட்ட கனவுகள் மட்டும் சீக்கிரம் பலித்துவிடுமோ? வீட்டின் பின்புறம் கறிவேப்பிலை மரத்திற்குப் பின்னால் குனிந்து நான் பதுங்க, கழனிப் பானைக் கவிழ்ந்து என்னைக் காட்டிக் கொடுத்தது. ஒரு கொக்கைப் பிடிப்பதைப் போலத் தூக்கி தரதரவென்று இழுத்தார்கள். வண்டியில் தூக்கிப் போடுவதற்குள் என் கழுத்தை அறுத்துவிட்டார்கள். நெஞ்சை நனைத்தச் சூடான இரத்தத்தில் என் சட்டை தொப்பென்று ஒட்டிக்கொண்டது. தொட்டுப்பார்த்ததும் பிசுபிசுத்து கைகளில் வேகமாகக் காய்கிறது இரத்தம். நான் ஒரு கனவுதானேக் கண்டேன். அதற்கு எதற்குத் தண்டனை என்றேன். ஒருவர் தனது கை மூட்டினைக் கொண்டு என் கன்னத்தில் ஓங்கி இடித்துக் கொண்டே ஒரு பத்திரிக்கைச் செய்தியைக் காட்டினார். எங்கோ ஒரு பெண்ணை இதே மாதிரி ஒரு அதிகாலையில் வாயிலேயே வெட்டி சாய்த்துவிட்டதாகக் கூறினார். 

ஆம்! இந்தப் பெண்ணைப் பார்த்திருக்கிறேன். ஆனால் அதிகம் பழக்கமில்லை. எனக்கு எதுவும் தெரியாது என்றேன். அடுத்த இடியில் இரண்டு பற்கள் உடைந்து கன்னத்துச் சதையைக் கிழித்து வாயிலிருந்தும் இரத்தம் ஒழுகியது. வண்டியில் சிந்திக்கிடந்த இரத்தத்தின் மேலேயே முகம் குப்புற விழுந்துவிட்டேன். ஒரு போலீஸ்காரர் பேண்டு ஜிப்பைக் கழற்றி என் மேல் ஒன்றுக்குவிட்டார். ஒரு வழியாக இந்தக் கேஸ் முடிந்துவிட்டது என்றார். இந்த நாய் இப்போது செத்துவிடக்கூடாது. வேற மாதிரி பார்த்துக்கொள்ளலாம் என்று சொல்லிக் கொண்டே பூட்ஸ் காலால் இடுப்பில் ஓங்கி மிதித்தார். மூச்சு அடைத்துவிட்டது. 'அய்யோ! வலிக்கிறது' என்று மனதுக்குள் கத்தினேன். ஆனால் குரல் வரவில்லை. அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் கண் விழிக்கையில் நான் மட்டும் தான் குற்றவாளி என்று ஏதோவொரு உயரதிகாரி பேட்டி கொடுத்திருந்ததைப் பத்திரிக்கையில் பார்த்தேன்.

அதன் பிறகு சிறையில் தினமும் இரண்டு மூன்று பேர் வந்து பூட்ஸ் காலோடு நெஞ்சில் ஏறி வாயில் இரத்தம் கொப்பளிக்கும் வரை மிதித்துவிட்டு நாங்கள் சொல்வது போல நடந்து கொண்டால் உயிர் பிழைப்பாய். இல்லையேல் மண்டை உடைந்து மூளைச் சிதறிச் சாவாய்! என்று கெட்டவார்த்தையால் திட்டினர். ஒருவர் மிதிக்கும் போது மற்றவர் லத்தியால் அடிப்பார். பாம்பு நெளியும் போது, கொத்திவிடுமோ என்ற பயத்தில் அடிக்கும் ஆவேசத்துடன் மூச்சு வாங்க வாங்க அடிப்பார். கால் கரண்டையில் கடைசியாக விழுந்த அடியில் நடு மூளையில் கீறல் விட்டது போன்றக் கடுமையான வலி. 

என்ன நடக்கிறது என்பதை ஊகிக்கும் முன்னரே கதையில் பாதிக்கும் மேல் முடிந்துவிட்டது. தவறான முகவரியில் தபால் வந்தது போல ஆள் தெரியாமல் தன் பிள்ளையைப் போலீஸ் பிடித்துவிட்டது என்றும் உண்மை தெரிந்ததும், 'மன்னிக்க வேண்டும் தெரியாமல் தப்பு நடந்துடுச்சு' என்று சொல்லி உயர் போலீஸ் அதிகாரி வந்து பிள்ளையை ஒப்படைப்பார் என்று வெள்ளாந்தியாய் நம்பிக்கொண்டிருந்தனர் என் பெற்றோர்.

ஊரில் யாராவது சாகும் போது என் கை, கால்களைப் பிடித்துப்பார்த்துக் கொண்டு நண்பர்களிடம் சொல்வேன். 'எப்படித்தான் சாகிறார்களோ மனிதர்கள்!' என்று. நான் சாக இன்னும் நூற்றிருபது ஆண்டுகளாவது ஆகும் என்று நினைத்துக் கொள்வேன். அந்த பயில்வான் போன்ற வெள்ளைப் போலீஸ்காரர் ஒரு மதம் கொண்ட யானையைப் போல மர்ம உறுப்புக்கும் கொஞ்சம் மேலே அடிவயிற்றில் ஓங்கி மிதித்த போது தான் நான் முதன் முதலாக செத்துவிடுவேனோ என்று பயந்தேன். மூச்சுவிட்டே ஆக வேண்டும். ஆனால் முடியவில்லை. மிதித்த மிதியில் உள்ளே சென்ற வயிறு ஒட்டிக் கொண்டது. இப்படி சிறிது சிறிதாக நிறையச் செத்தேன்.

அந்தக் கொலையை நான் தான், நான் மட்டும் தான் செய்தேன் என்று சொன்னால் விட்டுவிடுவதாகச் சொன்னார்கள். அடிக்கு பயந்து நான் அப்படித்தான் சொல்வேன் என்ற நம்பிக்கையில்தான் இதுவரை என்னை விட்டு வைத்திருந்தார்கள். கனவில் அந்தப் பலசரக்குக் கடைக் காரரைத் தவிர்த்து நான் யாரையும் கொலை செய்யவில்லை. முகநூலில் நண்பனின் நண்பனின் நண்பியைக் கூட நண்பியாக்கும் வயது ஆர்வத்தில்தான் அந்தப் பெண் என் நண்பியானாள். அதற்கு மேல் அந்த மாநகரத்துப் பெண்ணுக்கும் எனக்கும் எந்த பழக்கமும் இல்லை. 'நான் கொலை செய்யவில்லை. என்னை விட்டுவிடுங்கள்' என்று அழுதேன். ஓங்கி முகத்திலே மிதிக்க உதடு கிழிந்தது.

ஒப்புக்கொள்கிறாயா என்று மீண்டும் கேட்டனர். எனக்குக் காதில் விழுந்தது. பதில் சொல்ல உடம்பில் தெம்பு இல்லை. விழுந்து விடுவேன் என்று நினைத்தேன். இதுவரை அடிக்காமல் அறையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு போலீஸ் அதிகாரி விரக்தியின் உச்சத்தில் ஓடிவந்து என் இரு தொடைகளும் இணையும் இடத்தில் ஒரு உதை உதைத்தார். புறமண்டை பட்டென்று சுவரில் அடிக்க தரையில் முகம் குப்புற விழுந்தேன். பூமி அந்த அறையையும் பிடித்துக் கொண்டு சுற்றுவது போல இருந்தது. அதன் பிறகு நான் எதையும் பார்க்கவில்லை. எதையும் கேட்கவில்லை. ஓ! சாவது என்றால் இதுதானா? இப்படி தெரிந்திருந்தால் எப்போதோ செத்திருப்பேன். இந்த மிருகங்களின் பிடியிலிருந்து மறைந்து நான் எங்கோ ஒரு இருட்டுக்குள் பயணிக்கத் தொடங்கினேன்.

நாளை பத்திரிக்கையில் நான் என்னையேக் கொன்றுவிட்டதாகச் செய்திகள் வரும். தொலைக்காட்சிகளில் விவாதங்கள் சூடு பறக்கும். ஆளுங்கட்சி, நடுநிலையினர் என்னும் மாறுவேட ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, சாதிக் கட்சி, என்று எல்லோரும் கருத்து சொல்லிவிட்டு டி.வி காரன் தரும் பயணப்படியை வாங்கிவிட்டு வீடுகளுக்குச் செல்வர். பிறகு எல்லோருமாக யாரோ ஒருத்திக்காக மண் சோறு தின்னப் புறப்பட்டுபோவார்கள். ஒருவன் 'கதை முடிந்தது' என்று ஒரு கதை எழுதி தனது ப்ளாக்கில் போடுவான். கதை முடிந்தது.