புதன், 22 ஜூலை, 2020

சங்கர்கள் மகிழ்ச்சியாக வாழும் போது நம் நாடு வல்லரசாகும்!


வரும் அக்டோபர் 3 ஆம் நாள் நடைபெறவிருக்கும் திருமண அழைப்பிதழ் தான் இது. மணமகள் ஆல்பா சான் பெர்தினாந்தோ என்னும் தெற்கு இத்தாலியில் இருக்கும் ஒரு கிராமத்துக்காரி. மணமகன் சிதாத். இதே ஊரில் இருந்த ஒரு அகதிகள் முகாமில் இரண்டு ஆண்டுகள் தங்கி இருந்த ஆப்ரிக்காவின் கானா நாட்டு இஸ்லாமிய கறுப்பின இளைஞன். அவன் கடல் வழியாக கரை சேர்ந்தவன் என்பதால் திருமண அட்டையை இவ்வளவு அர்த்தப்பூர்வமாக அச்சிட்டிருக்கிறார்கள்.
ஆல்பா அங்கு இத்தாலிய மொழி பயிற்றுநராக பணியாற்றினாள். சித்தாத் தனது மதத்தின் இரு பிரிவினரிடையே நடைபெற்ற கவலவரத்திலிருந்து தப்பித்து விசைப்படகு மூலம் தாரந்து கடற்கரையில் ஒதுங்கியக் கதையைச் சொன்னான். இருவரும் தங்கள் கதைகளைப் பகிர்ந்து கொண்டனர். ஒருவரை ஒருவர் இரண்டு ஆண்டுகளாகப் பழகி தெரிந்துகொண்டனர். எங்கள் ஆலயத்தில் கடந்த ஒரு ஆண்டாக திருமண பயிற்சி வகுப்பில் இருவருமே கலந்து கொண்டனர். ஆல்பாவும் அவளது குடும்பமும் எங்கள் கோவிலின் அனைத்துப் பணிகளிலும் உடனிருப்பவர்கள். அவளது தாய் பங்கின் ஏழை, எளியோருக்கு உதவும் காரித்தாஸ் அமைப்பின் பொறுப்பாளர். சித்தாத் திருமணத்தின் பொருட்டு மதம் மாறவில்லை. தொடர்ந்து இஸ்லாமியனாகவே இருப்பான். மேலும் அவன் இந்த ஊரில் காலடி வைத்த போது அவனுக்கு உதவியவர்கள் பக்கத்து பங்கின் அருட்பணியாளரும், நண்பர்களுமே என்பதால் திருமணத்தை அந்த ஆலயத்திலேயே நடத்துகின்றனர். அவன் அப்போதுதான் சொந்த வீடு போல உணர்வான் என்பதற்காக இந்த ஏற்பாடு. இப்படி அவன் அந்நியனாக உணர்ந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் விருப்பங்களை முன்னிலைப்படுத்தாது நிறைய காரியங்களைப் பார்த்துப் பார்த்து செய்கிறார்கள்.
சட்டப்படி தகுதியான இரு நபர்களின், சட்டப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்ட சம்மதம் திருமணத்தை உருவாக்குகின்றது. இவ்வளவு தான் திருமணம். ஆல்பாவும், சித்தாத்தும் தங்கள் சம்மதத்தை சட்டப்பூர்வமாக வெளிப்படுத்த அவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை. சாதி, மதம், இனம், நிறம், பொருளாதாரம், சமுதாயம் எதற்கும் எந்த அதிகாரமும் இல்லை. திருமணம் இரு நபர்கள் சம்பந்தப்பட்டது. ஆம்! நீங்கள் வாசித்தது சரிதான். இரு நபர்கள் மட்டுமே சம்பந்தப்பட்டது. இந்த உரிமையைப் பாதுகாக்கும் கடமை அரசுக்கும், நீதித்துறைக்கும் உள்ளது.
மார்ச் 13, 2016 அன்று உடுமலைப்பேட்டையில் மக்கள் நடமாட்டம் நிறைந்த வணிகவளாகத்தின் வாயிலில் பட்டப்பகலில் கூலிப்படையினரால் வெட்டிக்கொல்லப்பட்ட பட்டியலினத்தவரான சங்கரை நாம் இன்னும் மறந்திருக்க மாட்டோம். அவரது மனைவி கவுசல்யா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர்பிழைத்தார். இந்தக் குரூரக்கொலைக்கானத் தெளிவான சிசிடிவி காட்சிகள் இருக்கின்றன. திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தால் வழக்கிலிருந்து கடந்த மாதம் விடுவிக்கப்பட்டுள்ளார். அவரோடு சேர்ந்து தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட இன்னும் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூவரின் தூக்கு ஆயள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. சிறைவாசலில் அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வரவேற்பு கொடுக்கப்பட்டது.
உயிரைக் காக்க உயிரையேப் பணயம் வைத்து அந்நிய நாட்டில் அடைக்கலம் புகுபவர்கள் அகதிகள். ஐக்கிய நாட்டு சபையின் அகதிகள் உடன்பாட்டில் கையொப்பமிட்டிருக்கும் 147 நாடுகளுமே தங்கள் நாட்டில் தஞ்சம் புகும் அகதிகளைப் பராமரிக்கவும், அவர்களது அடிப்படை மனித உரிமைகளான பேச்சு, கருத்து, சமய உரிமைகளைப் பாதுகாக்கவும் கடமைப்பட்டுள்ளன. அவர்கள் தாயகம் திரும்புவது அவர்களது உயிருக்கு ஆபத்து எனக் கருதும் வரையிலும் அவர்களைத் திருப்பி அனுப்ப இயலாது. கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அனைத்திலும் அவர்களுக்கு சிறப்பு இடஒதுக்கீடுகள் வழங்கப்பட வேண்டும்.
ஆல்பாவை சித்தாத் ஊரே கொண்டாட திருமணம் செய்ய முடிந்தால் அதற்கு பெயர் வளர்ந்த நாடு. நடுரோட்டிலே போட்டு வெட்டிக் கொன்னா, கொன்னவன நீதிமன்றம் விடுதலை செஞ்சா, கொலை செஞ்சவன் கைளில் பொன்னாடையும், பூங்கொத்தும் தந்து வரவேற்கப்பட்டால் அப்துல் கலாம் கனவு கண்ட 2020 கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் இன்னும் வரவில்லை என்றுதான் அர்த்தம்.

4 கருத்துகள்: